5718. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொட்டாவி ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது. எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது இயன்ற வரை அவர் (அதைக்) கட்டுப்படுத்திக்கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5719. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5720. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால் தமது கையால் தடுத்துக்கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகிறான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5721. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவி ஏற்பட்டால், தம்மால் முடிந்த வரை (அதைக்) கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகிறான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 11 பல்வேறு (தலைப்பிலான) நபிமொழிகள்.
5722. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்"கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப் பட்டார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 12 எலியும் அது உருமாற்றம் பெற்ற உயிரினம் என்பதும்.
5723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமற்போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே நான் கருதுகிறேன். எலிகளுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால், அவை அந்தப் பாலைக்குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால், அந்தப் பாலை அவை குடித்துவிடுகின்றனவே?
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தபோது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?" என்று வினவினார்கள். நான், "ஆம்" என்றேன். அவ்வாறே அவர்கள் பலமுறை கேட்டார்கள். "நான் "தவ்ராத்"தையா ஓதுகிறேன் (அதிலிருந்து சொல்வதற்கு)?" என்று நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் என்ன ஆனார்கள் என்று நாம் அறியவில்லை" எனக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 53
5724. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், "எலிகள் உருமாற்றம் பெற்ற உயிரினமாகும். அதற்கு அடையாளம் என்னவென்றால்,அவற்றுக்கு முன்பாக ஆடுகளின் பால் வைக்கப்பட்டால், அவை அதைக் குடிக்கின்றன. (ஆனால்,) அவற்றுக்கு (முன்பாக) ஒட்டகங்களின் பால் வைக்கப்பட்டால் அவை அதைச் சுவைப்பதில்லை" என்று சொன்னார்கள்.
அப்போது கஅப் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?" என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வினவினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "பிறகு "தவ்ராத்" வேதமா எனக்கு அருளப்பட்டது?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 53
பாடம் : 13 ஓர் இறைநம்பிக்கையாளர், ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
5725. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 14 இறைநம்பிக்கையாளரின் அனைத்து அம்சங்களும் நன்மையே ஆகும்.
5726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 15 ஒருவர் குழப்பத்திற்கு ஆளாவார் எனும் அச்சம் இருக்குமானால், அவரை அளவு கடந்து புகழ்வது தடை செய்யப்பட்டுள்ளது.
5727. அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.அப்போது நபி (ஸல்) அவர்கள் "உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே" என்று பலமுறை கூறினார்கள்.
பிறகு, "உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்றுகூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.
அத்தியாயம் : 53
5728. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதரைப் பற்றி (புகழ்ந்து) பேசப்பட்டது. அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் இன்னின்ன விஷயத்தில் அந்த மனிதரைவிடச் சிறந்தவர் வேறெவருமில்லை" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான். உம்முடைய தோழரின் கழுத்தைத் துண்டித்துவிட்டீரே!" என்று பலமுறை கூறிவிட்டு, "உங்களில் ஒருவர் தம் தோழரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று மட்டும் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே கூறட்டும். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அப்போது ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் அந்த மனிதரைவிடச் சிறந்தவர் வேறெவருமில்லை" என்று கூறினார்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 53
5729. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்த மனிதரின் முதுகை அழித்துவிட்டீர்களே! அல்லது முறித்துவிட்டீர்களே" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 53
5730. அபூமஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், "அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5731. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசலானார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கிச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து, அவரது முகத்தில் பொடிக்கற்களை அள்ளி வீசலானார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் உடல் பருமனான மனிதராயிருந்தார்கள். (எனவே தான், முழந்தாளிட்டு அமர்ந்தார்கள்.)
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, "உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அளவுக்கதிகமாகப் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களுடைய முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மிக்தாத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 16 வயதில் பெரியவருக்கு முதலில் கொடுப்பது.
5732. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பல்துலக்கும் குச்சியால் பல்துலக்கிக் கொண்டிருந்தேன். அதைப் பெறுவதற்காக இரு மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைவிட வயதில் பெரியவராயிருந்தார். அவர்களில் வயதில் சிறியவருக்கு நான் அந்தக்குச்சியைக் கொடுத்தேன். அப்போது என்னிடம், "முதியவருக்கு முதலில் கொடுங்கள்" என்று சொல்லப்பட்டது. ஆகவே, அதை நான் வயதில் பெரியவராயிருந்தவரிடம் கொடுத்தேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
பாடம் : 17 நபிமொழியை நிறுத்தி நிதானமாக அறிவிப்பதும் நபிமொழியை எழுதி வைத்துக் கொள்வது தொடர்பான விதியும்.
5733. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்கு அருகில் அமர்ந்து கொண்டு) நபிமொழிகளை அறிவிக்கலானார்கள். அப்போது "அறையின் உரிமையாளரே! நான் சொல்வதைக் கேளுங்கள்! அறையின் உரிமையாளரே! நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். தொழுது முடித்ததும் அவர்கள் என்னிடம், "சற்று முன்னர் இவர் அறிவித்த (விதத்)தையும் இவர் கூறியதையும் நீ கேட்க வில்லையா? நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணிவிடுவார். (அந்த அளவுக்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசிவந்தார்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 53
5734. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ" என்று ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 18 தீக்குண்டத்தில் ("அல்உக்தூத்") போடப்பட்டோர், சூனியக்காரன், (வேதக்கார) துறவி, (அற்புதம் நிகழ்த்திய) சிறுவன் ஆகியோர் பற்றிய தகவல்.
5735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னால் (ஒரு காலத்தில்) அரசன் ஒருவன் வாழ்ந்தான். அவனிடம் (குறி சொல்லும்) சூனியக்காரன் ஒருவன் இருந்தான். அந்தச் சூனியக்காரன் முதுமையடைந்த போது அரசனிடம், "நான் முதுமையடைந்துவிட்டேன். (என்னோடு இந்தச் சூனியக் கலை அழிந்துவிடக் கூடாது.) எனவே, சிறுவன் ஒருவனை அனுப்புங்கள். அவனுக்கு நான் சூனியக் கலையை கற்றுத் தருகிறேன்" என்று சொன்னான். அவ்வாறே, அக்கல்வியை அவன் கற்றுத் தருவதற்காகச் சிறுவன் ஒருவனை அவனிடம் அரசன் அனுப்பினான்.
சிறுவன் சூனியக்காரனிடம் செல்லும் வழியில் துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் சென்று அமர்ந்து அவருடைய அறிவுரைகளைச் சிறுவன் கேட்கலானான். அது அவனை ஈர்த்தது; அவன் சூனியக்காரனிடம் செல்லும் போதெல்லாம் அந்தத் துறவியிடம் சென்று அமர்ந்து கொள்வான். பிறகு சூனியக்காரனிடம் (தாமதமாகச்) செல்லும்போது அவனைச் சூனியக் காரன் அடிப்பான். இது பற்றி அச்சிறுவன் துறவியிடம் முறையிட்டான்.
அப்போது அந்தத் துறவி சூனியக்காரனைப் பற்றி நீ அஞ்சினால் அவனிடம், "என் வீட்டார் என்னைத் தடுத்துவிட்டனர் (அதனால் தான் தாமதம்) என்று கூறிவிடு; நீ உன் வீட்டாரைப் பற்றி அஞ்சினால், சூனியக்காரன் என்னைத் தடுத்துவிட்டான் (அதனால்தான் தாமதம்) என்று கூறிவிடு" என்று (யோசனை) கூறினார். அவ்வாறே அச்சிறுவன் செய்துகொண்டிருந்தான்.
இந்நிலையில், (ஒருநாள் அச்சிறுவன் செல்லும்போது) மிகப்பெரிய மிருகம் ஒன்றிடம் அவன் வந்தான்.அது மக்களை(ச்செல்லவிடாமல்) தடுத்துக்கொண்டிருந்தது. அப்போது அச்சிறுவன், "இன்று நான் அந்தச் சூனியக்காரன் சிறந்தவனா? அல்லது அந்தத் துறவி சிறந்தவரா என்று அறியப்போகிறேன்" என்று கூறிவிட்டு, ஒரு கல்லை எடுத்து, "இறைவா! அந்தத் துறவியின் நிலை அந்தச் சூனியக்காரனின் நிலையைவிட உனக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தால், இந்த மிருகத்தைக் கொன்று மக்களைச் செல்லவிடு" என்று கூறி, அந்த மிருகத்தை நோக்கி (கல்லை) எறிந்து, அதைக் கொன்றான். மக்களும் (அச்சமின்றி) நடந்துசென்றனர்.
பிறகு அந்தத் துறவியிடம் சென்று நடந்ததை அவரிடம் தெரிவித்தான். அப்போது அந்தத் துறவி, "அருமை மகனே! நீ இன்று என்னைவிடச் சிறந்தவனாகிவிட்டாய்! உன் தகுதியை நான் இப்போது (கண்கூடாகப்) பார்க்கும் நிலைக்கு நீ வந்துவிட்டாய். இனி நீ சோதனைக் குள்ளாக்கப்படுவாய். அவ்வாறு நீ சோதனைக்குள்ளாக்கப்படும் போது என்னைப் பற்றித் தெரிவிக்காதே" என்று கூறினார்.
அச்சிறுவன் பிறவிக் குருடருக்கும் தொழு நோயாளிகளுக்கும் நிவாரணம் வழங்கினான். இதர நோய்களிலிருந்தும் மக்களுக்கு நிவாரணம் அளித்தான். இதை அரசனின் அவையிலிருந்த ஒருவர் கேள்விப்பட்டார். அவர் (கண்பார்வையற்ற) குருடராக இருந்தார். அவர் ஏராளமான அன்பளிப்புகளுடன் அச்சிறுவனிடம் சென்று, "நீ எனது இந்த நோயைக் குணப்படுத்திவிட்டால், என்னிடமுள்ள இந்தப் பொருட்கள் அனைத்தும் உனக்கே உரியன" என்று கூறினார்.
அதற்கு அச்சிறுவன், "நான் யாருக்கும் நிவாரணமளிப்பதில்லை; அல்லாஹ்வே நிவாரணமளிக்கின்றான். நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் நான் (உங்களுக்காக) அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன். அவன் உங்களுக்கு நிவாரணமளிப்பான்" என்று கூறினான்.
அவ்வாறே அக்குருடர் இறைநம்பிக்கை கொண்டபோது, அவருக்கு அல்லாஹ் நிவாரணமளித்தான். பிறகு அவர் வழக்கம் போல அரசனிடம் சென்று அமர்ந்தபோது அவரிடம் அந்த அரசர், "உமது பார்வையை உமக்குத் திருப்பிக்கொடுத்தவர் யார்?" என்று கேட்டான்.
அவர், "என் இறைவன்" என்று பதிலளித்தார். அதற்கு அரசன், "உனக்கு என் அல்லாத வேறு இறைவன் உண்டா?" என்று கேட்டான். அதற்கு அவர், "என் இறைவனும் உன்னுடைய இறைவனும் அல்லாஹ்தான்" என்று சொன்னார்.
உடனே அவரைப் பிடித்து, அந்தச் சிறுவனைப் பற்றி அவர் சொல்லும்வரை அவரை அரசன் வேதனைப்படுத்திக் கொண்டேயிருந்தான். பிறகு அந்தச் சிறுவன் கொண்டுவரப்பட்டான். அப்போது அரசன், "குழந்தாய்! நீ சூனியக்கலையால் பிறவிக்குருடரையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்தி இன்னின்னவாறு செய்யுமளவுக்குச் சென்றுவிட்டாய்" என்று கூறினான்.
அதற்கு அச்சிறுவன், "நான் யாருக்கும் நிவாரணமளிப்பதில்லை. அல்லாஹ்வே நிவாரணமளிக்கிறான்" என்று கூறினான். பிறகு அச்சிறுவன் அந்தத் துறவியைப் பற்றித் தெரிவிக்கும்வரை அச்சிறுவனையும் அரசன் வேதனைப்படுத்தலானான்.
பிறகு அந்தத் துறவியும் கொண்டுவரப்பட்டார். அவரிடம், "உமது மார்க்கத்திலிருந்து நீர் திரும்பிவிடும்" என்று கூறப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஆகவே, ரம்பம் ஒன்றைக் கொண்டுவரச்சொல்லி, அவரது உச்சந்தலையில் வைத்து, அவரது உடலை இரண்டாகப் பிளந்தான் அரசன். அவர் இரண்டு துண்டாகி விழுந்தார்.
பிறகு அரசனின் அவையில் இருந்த அந்த மனிதர் கொண்டுவரப்பட்டு, "நீ உனது மார்க்கத்திலிருந்து திரும்பிவிடு!" என்று கூறப்பட்டது. அவரும் மறுத்துவிட்டார். எனவே, அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து இரண்டாகப் பிளந்தான் அரசன். அவரும் இரு துண்டுகளாகி விழுந்தார்.
பின்னர் அச்சிறுவன் கொண்டுவரப்பட்டான். அவனிடமும் "நீ உனது மார்க்கத்திலிருந்து திரும்பிவிடு" என்று சொல்லப்பட்டது. அவன் மறுத்துவிட்டான். உடனே அவனைத் தம் ஆட்கள் சிலரிடம் ஒப்படைத்து, "இவனை இன்ன இன்ன மலைக்குக் கொண்டுசெல்லுங்கள். மலை உச்சிக்கு இவனைக் கொண்டு சென்றதும் (அவனிடம் அவனது ஓரிறைக் கொள்கையைக் கைவிடுமாறு கூறுங்கள்.) அவன் தனது மார்க்க்ததிலிருந்து திரும்பிவிட்டால் சரி. இல்லையேல், அவனை மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்" என்று அரசன் கூறினான்.
அவ்வாறே அவர்கள் அச்சிறுவனை மலை உச்சிக்குக் கொண்டுசென்றனர். அப்போது அச்சிறுவன், "இறைவா! நீ நாடிய முறையில் இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று" என்று பிரார்த்தித்தான். அப்போது அந்த மலை குலுங்கியது. அவர்கள் அனைவரும் மலையிலிருந்து கீழே விழுந்து விட்டனர்.
பிறகு அச்சிறுவன் அரசனை நோக்கி நடந்துவந்தான். அவனிடம் அரசன், "உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்?"என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், "அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான்" என்று சொன்னான்.
பிறகு அச்சிறுவனைத் தம் ஆட்களில் வேறு சிலரிடம் ஒப்படைத்து, "இவனை மரக்கலமொன்றில் ஏற்றி,நடுக்கடலுக்குக் கொண்டுசெல்லுங்கள். இவன் தனது (ஏகயிறை) மார்க்கத்திலிருந்து திரும்பிவிட்டால் சரி. இல்லையேல், இவனைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்" என்று அரசன் உத்தரவிட்டான்.
அவ்வாறே அவர்கள் கொண்டுசென்றபோது அச்சிறுவன், "இறைவா! நீ நாடிய முறையில் இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று" என்று பிரார்த்தித்தான். மரக்கலம் அதிலிருந்தவர்களுடன் சேர்ந்து கவிழ்ந்தது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர். பிறகு அச்சிறுவன் (மட்டும்) அரசனை நோக்கி நடந்துவந்தான்.
சிறுவனைக் கண்ட அரசன், "உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்?" என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், "அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான்" என்று கூறிவிட்டு, அரசனைப் பார்த்து, "நான் சொல்கிறபடி நீ நடந்துகொள்ளாத வரை என்னை உம்மால் கொல்ல முடியாது" என்று கூறினான்.
"அது என்ன?" என்று அரசன் கேட்டான். அதற்கு அச்சிறுவன், "நீ மக்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றில் ஒன்றுதிரட்டு. என்னைச் சிலுவையில் அறைந்துவிடு. பிறகு என் அம்புக்கூட்டிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து, வில்லில் பொருத்தி பிறகு, "இச்சிறுவனின் இறைவனான அல்லாஹ்வின் பெயரால்" என்று கூறி, (என்னை நோக்கி) அந்த அம்பைப் பாய்ச்சு. இவ்வாறு நீ செய்தால் உன்னால் என்னைக் கொல்ல முடியும்" என்று கூறினான்.
அவ்வாறே மக்களைத் திறந்த வெளியொன்றில் அரசன் ஒன்றுதிரட்டினான். சிறுவனைச் சிலுவையில் அறைந்தான். பிறகு அச்சிறுவனின் அம்புக்கூட்டிலிருந்து அம்பொன்றை எடுத்து வில்லில் பொருத்தி, "இச்சிறுவனின் இறைவனான அல்லாஹ்வின் பெயரால்" என்று கூறி, அந்தச் சிறுவனை நோக்கி அம்பை எய்தான்.
அந்த அம்பு சிறுவனின் நெற்றிப் பொட்டில் பாய்ந்தது. அச்சிறுவன் அம்பு பாய்ந்த நெற்றிப் பொட்டில் கையை வைத்துக்கொண்டே இறந்துபோனான்.
அதைக் கண்ட மக்கள், "நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம்; நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம், நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினர்.
பிறகு அரசனிடம் வந்து, "(அரசரே!) நீர் எதை அஞ்சிக்கொண்டிருந்தீரோ அதை நேரடியாகப் பார்த்துவிட்டீரா? அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் அஞ்சியது நடந்தேவிட்டது. மக்கள் அனைவரும் (அச்சிறுவனின் இறைவன்மீது) நம்பிக்கை கொண்டுவிட்டனர்" என்று கூறப்பட்டது.
உடனே அந்த அரசன் தெரு முனைகளில் அகழ் தோண்டுமாறு உத்தரவிட்டான். அவ்வாறே தோண்டப்பட்டதும் அதில் நெருப்பு மூட்டினான்.
பிறகு "யார் (தாம் ஏற்றுக்கொண்ட அந்த ஓரிறை) மார்க்கத்திலிருந்து திரும்பி வரவில்லையோ அவர்களை இதில் எரித்துவிடுங்கள்; அல்லது தூக்கிப்போட்டுவிடுங்கள்" என்று உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தனர்.
இறுதியில் ஒரு பெண் வந்தாள். அவளுடன் அவளுடைய குழந்தை ஒன்றும் இருந்தது. அ(ந்தத் தீக்குண்டத்)தில் விழ அவள் தயங்கினாள். அப்போது அந்தக் குழந்தை, "அம்மா! (மனதைத் திடப்படுத்தி) பொறுமையுடன் இரு! ஏனெனில், நீ சத்தியத்தில் இருக்கிறாய்" என்று சொன்னது.
அத்தியாயம் : 53
பாடம் : 19 ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்த நீண்ட ஹதீஸும், அபுல்யசர் (ரலி) அவர்களின் நிகழ்ச்சியும்.
5736. உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தை (வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித்-ரஹ்) அவர்களும் அன்சாரிகளில் குறிப்பிட்ட ஒரு கிளையாரிடம், அவர்கள் இறப்பதற்குமுன் (அவர்களிடமுள்ள நபிமொழிக்) கல்வியைக் கற்றுக்கொள்வதற்காகப் புறப்பட்டோம். நாங்கள் முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபுல்யசர் (ரலி) அவர்களையே சந்தித்தோம்.
அவர்களுடன் அவர்களுடைய அடிமை ஒருவரும் இருந்தார். அவரிடம் பதிவேடுகளில் ஒரு தொகுப்பும் இருந்தது. அபுல்யசர் (ரலி) அவர்களின் உடலில் போர்வை ஒன்றும் "மஆஃபிர்"எனும் ஊரின் ஆடையொன்றும் இருந்தது. (அதைப் போன்றே) அவர்களுடைய அடிமையின் மீதும் போர்வையொன்றும் "மஆஃபிரீ" ஆடையொன்றும் இருந்தது.
அபுல்யசர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, "என் தந்தையின் சகோதரரே! நான் தங்களது முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் காண்கிறேனே?" என்று கேட்டார்கள். அதற்கு அபுல்யசர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம்; "பனூ ஹராம்" குலத்தைச் சேர்ந்த இன்னாரின் புதல்வர் இன்னார் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. (அதை வசூலிப்பதற்காக) நான் சென்று, அவருடைய வீட்டாருக்கு முகமன் (சலாம்) கூறினேன். பிறகு "அவர் இருக்கிறாரா?"என்று கேட்டேன்.வீட்டார், "இல்லை" என்று விடையளித்தனர். அப்போது பருவவயதை நெருங்கி விட்டிருந்த அவருடைய புதல்வர் ஒருவர் வெளியே வந்தார்.
அவரிடம் நான், "உன் தந்தை எங்கே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "உங்களின் குரலைக் கேட்டதும் அவர் என் தாயாரின் கட்டிலுக்கடியில் நுழைந்துகொண்டார்" என்று பதிலளித்தார்.
உடனே நான், "நீர் எங்கே இருக்கிறீர் என்பதை நான் அறிந்துகொண்டேன். வெளியே வாரும்" என்றேன். அவர் வெளியே வந்தார்.
நான், "என்னிடமிருந்து ஒளிந்துகொள்ள என்ன காரணம்?" என்று கேட்டேன். அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (உண்மையைச்) சொல்லிவிடுகிறேன். உங்களிடம் பொய் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களிடம் பேசும்போது பொய் சொல்லிவிடுவேனோ, அல்லது உங்களுக்கு வாக்களித்துவிட்டு மாறுசெய்துவிடுவேனோ என்றுதான் அஞ்சினேன். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் ஆவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நெருக்கடியில் இருக்கிறேன்" என்று கூறினார்.
நான், "அல்லாஹ்வின் மீதாணையாகவா" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்" என்றார். நான் (மீண்டும்) "அல்லாஹ்வின் மீதாணையாகவா?" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்" என்றார். நான் (மறுபடியும்) "அல்லாஹ்வின் மீதாணையாகவா?" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத் தான்" என்று (மூன்றாவது முறையும்) பதிலளித்தார்.
பிறகு அவர் தமது (கடன்) பத்திரத்தைக் கொண்டுவந்தார். அதை நான் எனது கையால் அழித்துவிட்டேன். பிறகு "கடனைச் செலுத்துவதற்கு ஏதேனும் கிடைத்தால் எனக்குரிய கடனைச் செலுத்தி விடுங்கள். இல்லாவிட்டால், (கடனைச் செலுத்தாமலிருக்க) உங்களுக்கு அனுமதி உண்டு" என்று கூறிவிட்டேன்.
பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.
அப்போது நான், "என் தந்தையின் சகோதரரே! நீங்கள் உங்கள் அடிமை அணிந்திருக்கும் போர்வையைப் பெற்றுக்கொண்டு உங்களது "மஆஃபிரீ" ஆடையை அவருக்கு அளித்து விட்டாலோ, அல்லது அவரது "மஆஃபிரீ"ஆடையைப் பெற்றுக்கொண்டு உங்களது போர்வையை அவருக்கு அளித்துவிட்டாலோ உங்களுக்கு ஒரு ஜோடி ஆடையும் அவருக்கு ஒரு ஜோடி ஆடையும் கிடைத்து விடுமே!" என்று கேட்டேன்.
அப்போது அபுல்யசர் (ரலி) அவர்கள் (அன்புடன்) என் தலையைத் தடவிவிட்டு, "இறைவா! இ(ச்சிறு)வருக்கு வளம் புரிவாயாக! என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள் அடிமைகளான) அவர்களுக்கு நீங்கள் உண்பதிலிருந்து உணவளியுங்கள். நீங்கள் உடுத்துவதிலிருந்தே அவர்களுக்கும் உடை கொடுங்கள்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அதை அவர்கள் கூறியபோது, "என் இவ்விரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப்பகுதியில் கையை வைத்து) இதோ இந்த உள்ளம் அதை மனனமிட்டுக் கொண்டது. இவர் மறுமை நாளில் என் நன்மைகளை எடுத்துக் கொள்வதைவிட இவ்வுலகில் பொருட்களை அவருக்கு நான் கொடுப்பது எனக்குச் சுலபமானதே"என்று சொன்னார்கள்.
-பிறகு நாங்கள் (இருவரும்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் தமது பள்ளிவாசலில் ஒரே ஓர் ஆடையை போர்த்திக்கொண்டு தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் மக்களைக் கடந்துசென்று அவர்களுக்கும் "கிப்லா"த் திசைக்குமிடையே அமர்ந்துகொண்டேன்.
அப்போது நான், "அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்! தங்களது மேலாடை தங்களுக்கு அருகில் இருக்கவே,ஒரே ஆடையில் தொழுகிறீர்களே?" என்று கேட்டேன். அப்போது அவர்கள் தம் விரல்களை விரித்து, பின்னர் வில் போன்று வளைத்து, இவ்வாறு என் நெஞ்சில் வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: உம்மைப் போன்ற விவரமில்லாதவர் என்னிடம் வந்து, நான் எப்படிச் செய்கிறேன் என்று பார்த்துவிட்டு, அதைப் போன்றே அவரும் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். (ஒரு முறை) இந்தப் பள்ளிவாசலில் நாங்கள் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.
அப்போது அவர்களது கையில் "இப்னு தாப்" வகை பேரீச்சமரத்தின் பாளை ஒன்று இருந்தது. அப்போது பள்ளிவாசலின் "கிப்லா"த் திசை சுவரில் காறி உமிழப்பட்டிருந்த சளியைக் கண்டார்கள். உடனே அதை அந்தப் பாளையால் சுரண்டிவிட்டார்கள்.
பிறகு எங்களை முன்னோக்கி, "உங்களில் யார் தம்மை இறைவன் புறக்கணிக்க வேண்டும் என விரும்புவார்?" என்று கேட்டார்கள். அதைக் கேட்டு நாங்கள் அஞ்சினோம். பிறகு "உங்களில் யார் தம்மை இறைவன் புறக் கணிக்க வேண்டும் என விரும்புவார்?" என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் (மறுபடியும்) அஞ்சினோம்.
பிறகு, "உங்களில் யார் தம்மை இறைவன் புறக்கணிக்க வேண்டுமென விரும்புவார்?" என (மூன்றாவது முறையாகக்) கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! இல்லை; எங்களில் எவரும் (அதை விரும்பமாட்டார்)" என்று பதிலளித்தோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தொழுவதற்காக நின்றால், வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அவரது முகத்துக்கெதிராக இருக்கின்றான். ஆகவே, அவர் தமது முகத்துக்கெதிரே உமிழ வேண்டாம். வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம். (மாறாக) தமக்கு இடப்பக்கத்தில் இடக் காலுக்குக் கீழே உமிழ்ந்து (மண்ணால் மூடிக்)கொள்ளட்டும். (தம்மையும் அறியாமல்) சளி முந்திவிட்டால் தமது ஆடையில் இவ்வாறு உமிழ்ந்துகொள்ளட்டும்" என்று கூறி, ஆடையின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு சேர்த்துக் கசக்கினார்கள்.
"பிறகு நறுமணக் கலவை ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். உடனே இன்ன குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் எழுந்து, தமது வீட்டாரை நோக்கி விரைந்தார். பிறகு தமது கையில் சிறிது நறுமணக் கலவையுடன் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பெற்று அந்தப் பேரீச்சம் பாளையின் நுனியில் வைத்து, பிறகு சளியின் அடையாளம் தெரிந்த அந்த இடத்தில் அதைத் தோய்த்தார்கள். இதை முன்னிட்டே நீங்கள் உங்கள் பள்ளிவாசல்களில் நறுமணங்களை வைக்கும் வழக்கம் தொடங்கியது.
- (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("ஜுஹைனா" குலத்தாரை நோக்கி) "பத்னு புவாத்" போருக்குச் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஜ்தீ பின் அம்ர் அல்ஜுஹனீ என்பவரைத் தேடினார்கள். அப்(பயணத்தின்)போது ஓர் ஒட்டகத்தில் ஐந்து அல்லது ஆறு அல்லது ஏழு பேர் என முறைவைத்து, ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தோம். (அந்த அளவுக்கு வாகனப் பற்றாக்குறை இருந்தது.)
இந்த நிலையில் அன்சாரிகளில் ஒருவருடைய முறை வந்தபோது, அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்றுவிட்டது. அப்போது அவர் "ஷஃ" என அதை விரட்டிவிட்டு, "உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!" என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?" என்று கேட்டார்கள். "நான்தான், அல்லாஹ்வின் தூதரே!" என்று அந்த அன்சாரி பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வரவேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக்கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)" என்று சொன்னார்கள்.
- (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். ஒரு நாள் மாலை நேரமானபோது நாங்கள் அரபியரின் நீர்நிலையொன்றை நெருங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நமக்கு முன்பே சென்று அங்குள்ள நீர் தொட்டியைச் செப்பனிட்டு, தாமும் நீரருந்தி, நமக்கும் நீர் புகட்டுபவர் யார்?" என்று கேட்டார்கள்.
உடனே நான் எழுந்து, "இந்த மனிதன் (தயாராக இருக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிருடன் செல்பவர் யார்?" என்று கேட்டார்கள். உடனே ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். நாங்கள் அந்தக் கிணற்றை நோக்கி நடந்தோம். கிணற்றில் நீரிறைத்து அந்தத் தொட்டிக்குள் ஒரு வாளி,அல்லது இரு வாளித் தண்ணீரை ஊற்றினோம். பிறகு மண்ணைப் பூசி அந்தத் தொட்டியைச் செப்பனிட்டோம். பிறகு கிணற்றிலிருந்து நீரிறைத்து அந்தத் தொட்டியை நிரப்பினோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களிடம் முதலில் வந்தார்கள். எங்களிடம், "நீங்கள் எனக்கு (இதிலுள்ள நீரைப் பயன்படுத்திக்கொள்ள) அனுமதியளிக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்;அல்லாஹ்வின் தூதரே!" என்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் தலையைத் தொட்டிக்குள் சரித்தார்கள். அது நீரருந்தியது. அதன் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தபோது காலை அகற்றிவைத்து அது சிறுநீர் கழித்தது. பிறகு ஒட்டகத்துடன் திரும்பிச் சென்று அதை மண்டியிட்டுப் படுக்கவைத்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீர் தொட்டிக்கு வந்து, அதிலிருந்து அங்கத்தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு நான் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத்தூய்மை செய்த இடத்தில் அங்கத்தூய்மை செய்தேன். அப்போது (என்னுடனிருந்த) ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். என்மீது போர்வையொன்று இருந்தது. அதன் இரு ஓரங்களையும் பிடித்து தோள்கள்மீது மாற்றிப் போடப்பார்த்தேன். ஆனால், (சிறிதாக இருந்ததால்) அதற்கு வசதிப்படவில்லை. ஆனால், அந்தப் போர்வையில் பல குஞ்சங்கள் இருந்தன. அவற்றை நான் திருப்பிப் போட்டுவிட்டு அதன் இரு ஓரங்களையும் நான் மாற்றிப் போட்டுக்கொண்டேன். பிறகு அந்தப் போர்வையை என் கழுத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்.
பிறகு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து அப்படியே சுற்றிவரச் செய்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.
பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் வந்து அங்கத்தூய்மை செய்துவிட்டுப் பிறகு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரின் கைகளைப் பிடித்து எங்களை (பின் வரிசைக்கு) தள்ளினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அறிந்துகொள்ளாத விதத்தில் என்னை உற்று நோக்கினார்கள். நான் சுதாரித்துக்கொண்டேன். அப்போது "உன் கீழாடையின் நடுப் பகுதியை முடிந்துகொள்" என்று கூறும் விதமாக தமது கையால் சைகை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், "ஜாபிரே!" என்று அழைத்தார்கள். நான், "சொல்லுங்கள்; அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். "(உனது) ஆடை விசாலமானதாயிருந்தால் அதன் இரு ஓரங்களை வலம் இடமாக மாற்றிப் போட்டுக் கொள். அது சிறியதாக இருந்தால் அதை இடுப்பில் (கீழாடையாக) அணிந்துகொள் (தோள்மீது போட வேண்டியதில்லை)" என்றார்கள்.
- (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றோம். அப்போது எங்களில் ஒவ்வொருவருடைய உணவும் நாளொன்றுக்கு ஒரு பேரீச்சம் பழமாகவே இருந்தது. அதை அவர் வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, பிறகு அதைத் தமது ஆடையில் முடிந்து வைத்துக்கொள்வார். (அந்தப் பயணத்தில்) நாங்கள் எங்கள் வில்லால் மரங்களிலிருந்து இலைகளை உதிர்த்து அதைச் சாப்பிட்டோம். எந்த அளவுக்கென்றால், (ஒவ்வாமையால்) எங்கள் வாயெல்லாம் புண்ணாகிவிட்டது.
நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: ஒரு நாள் ஒரு மனிதருக்கு அவரது பங்கு கிடைக்காமல் விடுபட்டுவிட்டது. (பங்கிட்டுத்தருபவர் கொடுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டார். (பசியால் சுருண்டு கிடந்த) அவரைத் தூக்கி நிறுத்தி, "அவருக்குப் பேரீச்சம்பழம் கொடுக்கப் படவில்லை" என நாங்கள் சாட்சியம் கூறிய பிறகே அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் எழுந்து அதைப் பெற்றுக்கொண்டார்.
-நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்று ஒரு விசாலமான பள்ளத்தாக்கில் இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றார்கள். நான் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்கேற்ப (மறைவிடம்) ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அப்படி ஒன்றையும் காணவில்லை.
அப்போது பள்ளத்தாக்கின் ஓரத்தில் இரு மரங்கள் தென்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றில் ஒரு மரத்திற்கு அருகில் சென்று அதன் கிளைகளில் ஒன்றைப் பிடித்து, "அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்குக் கட்டுப்படு" என்று சொன்னார்கள். ஒட்டகவோட்டியின் கட்டளைக்கு மூக்கணாங்கயிறு இடப்பட்ட ஒட்டகம் கட்டுப்படுவதைப் போன்று, அந்தக் கிளை அவர்களுக்குக் கட்டுப்பட்(டு வளைந்து)விட்டது.
பிறகு இன்னொரு மரத்திற்கு அருகில் சென்று, அதன் கிளைகளில் ஒன்றைப் பிடித்து "அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்குக் கட்டுப்படு" என்று சொன்னார்கள். முதல் மரத்தைப் போன்றே அதுவும் கட்டுப்பட்டது. அவ்விரண்டுக்கும் மத்தியில் போய் நின்று கொண்டு இரண்டு கிளைகளையும் சேர்த்தார்கள். அப்போது, "அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்காக ஒன்றிணையுங்கள்" என்று சொன்னார்கள். உடனே அவ்விரண்டும் இணைந்து கொண்டன.
அப்போது நான் அருகிலிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிந்து (இன்னும்) தொலைதூரத்திற்குச் சென்று (சிரமப்பட்டு)விடுவார்களோ என்று அஞ்சினேன். ஆகவே, நான் அங்கிருந்து விரைவாக (திரும்பி) வந்துவிட்டேன். நான் மனதிற்குள் (ஏதோ) பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஓரக்கண்ணால் நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னோக்கி வந்துகொண்டிருந்தார்கள். (இணைந்திருந்த) அவ்விரு மரங்களும் பிரிந்து ஒவ்வொன்றும் (தனித்தனியே) நிமிர்ந்து நின்றன.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் நின்று, (இரு பக்கங்களிலும் இருந்த மண்ணறைகளை நோக்கி) தமது தலையால் இவ்வாறு சைகை செய்தார்கள். (அறிவிப்பாளர் அபூஇஸ்மாயீல் (ரஹ்) அவர்கள் தமது தலையை வலம் இடமாக அசைத்து சைகை செய்து காட்டினார்கள்.)
பிறகு முன்னோக்கி வந்தார்கள். என்னிடம் வந்து சேர்ந்ததும், "ஜாபிரே! நான் நின்ற இடத்தை நீ பார்த்தாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின்,நீ அவ்விரு மரங்களை நோக்கிச் சென்று, அவ்விரு மரங்களிலிருந்தும் தலா ஒரு கிளையை உடைத்துக்கொண்டு வா! நான் நிற்கும் இந்த இடத்திற்கு நீ வந்துசேர்ந்ததும், ஒரு கிளையை உனக்கு வலப் பக்கத்திலும் மற்றொரு கிளையை இடப் பக்கத்திலும் வீசிவிடு" என்று சொன்னார்கள்.
ஆகவே, நான் எழுந்து சென்று கல் ஒன்றை எடுத்து, அதை உடைத்து, அதன் மழுங்கிய பகுதியைத் தீட்டினேன். அது கூர்மையானது. பிறகு அந்த மரங்களை நோக்கிச் சென்று அவ்விரு மரங்களிலிருந்தும் தலா ஒரு கிளையை உடைத்தேன்.
பிறகு அவ்விரு கிளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்து நின்று, ஒரு கிளையை எனக்கு வலப்பக்கத்திலும் மற்றொரு கிளையை எனக்கு இடப்பக்கத்திலும் வீசினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்து, "அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் சொன்னபடியே) செய்துவிட்டேன். எதற்காக (அப்படிச் செய்யச் சொன்னீர்கள்)?" என்று கேட்டேன். அதற்கு "நான் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்துவந்தேன். அவற்றிலுள்ள இருவர் வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆகவே, அவ்விரு கிளைகளும் உலராமல் இருக்கும்வரை அவ்விருவருக்கும் எனது பரிந்துரையின் பேரில் வேதனை இலேசாக்கப்பட வேண்டுமென நான் விரும்பினேன்" என்று கூறினார்கள்.
-பிறகு நாங்கள் படையினரிடம் வந்துசேர்ந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! அங்கத்தூய்மை செய்ய யாரிடமாவது தண்ணீர் இருக்கிறதா என்று கேள்" என்று சொன்னார்கள். உடனே நான், "அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் உண்டா? அங்கத் தூய்மை செய்ய தண்ணீர் உண்டா? அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் உண்டா?" என்று கேட்டேன்.
பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! பயணிகளிடம் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட நான் காணவில்லை" என்றேன். அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தம் தோல் பைகளில் தண்ணீர் ஊற்றிவைத்து,அதைக் குளுமையாக்கி, பேரீச்ச மட்டை ஒன்றில் அதைத் தொங்கவிட்டிருப்பார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீ இன்ன அன்சாரியின் புதல்வர் இன்ன மனிதரிடம் சென்று,அவருடைய தோல் பைகளில் (தண்ணீர்) ஏதேனும் இருக்கிறதா என்று பார்" என்றார்கள். அவ்வாறே நான் சென்று பார்த்தபோது, அவற்றில் ஒரு பையின் வாய்ப் பகுதியில் இருந்த சிறிது தண்ணீரைத் தவிர வேறெதிலும் தண்ணீரை நான் காணவில்லை. அதை நான் சரித்திருந்தால், அதன் காய்ந்த பகுதிகளே அதை உறிஞ்சிவிட்டிருக்கும்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவற்றில் ஒரே ஒரு பையின் வாய்ப் பகுதியில் உள்ள சிறிதளவு தண்ணீரைத் தவிர வேறெதிலும் தண்ணீரை நான் காணவில்லை. அதிலுள்ள தண்ணீரை நான் சரித்தால் அதன் உலர்ந்த பகுதிகளே அதை உறிஞ்சிவிட்டிருக்கும்" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று அதை என்னிடம் கொண்டுவா" என்று சொன்னார்கள். அவ்வாறே அதை நான் கொண்டுவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையில் வாங்கி, ஏதோ கூறலானார்கள். அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு அந்தப் பையைத் தம் கரங்களால் அழுத்திப் பிழிந்தார்கள்.
பிறகு என்னிடம் அதைக் கொடுத்து, "ஜாபிரே! பெரிய பாத்திரம் ஒன்றைக் கொண்டு வருமாறு அறிவிப்புச் செய்" என்றார்கள். உடனே "பயணிகளிடம் உள்ள ஒரு பெரிய பாத்திரத்தை (யாரேனும்) கொண்டுவாருங்கள்" என்று அறிவிப்புச்செய்தேன். பாத்திரம் எடுத்துக்கொண்டு வரப்பட்டபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் இவ்வாறு கையைப் பரப்பி, தம் விரல்களை விரித்தார்கள். பிறகு அந்தப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கையை வைத்தார்கள். "ஜாபிரே! இதைப் பிடித்துக்கொண்டு,அந்தத் தண்ணீரை என் (கை)மீது ஊற்று! அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறு" என்று சொன்னார்கள்.
அவ்வாறே நான் ஊற்றி, "பிஸ்மில்லாஹ்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களினூடே தண்ணீர் பொங்கிவருவதை நான் கண்டேன். பிறகு பாத்திரத்தில் தண்ணீர் பீறிட்டுச் சுழன்றது. இறுதியில் அது நிரம்பியும்விட்டது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! தண்ணீர் தேவையுள்ளோரை அழையுங்கள்" என்று கூறினார்கள். (அவ்வாறே நான் அழைத்தேன்.) மக்கள் வந்து தாகம் தீர நீரருந்தினர். பிறகு நான், "தேவையுள்ளோர் யாரேனும் எஞ்சியுள்ளார்களா?" என்று கேட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிரம்பியிருந்த அந்தப் பாத்திரத்திலிருந்து தமது கையை எடுத்துவிட்டார்கள்.
-மக்கள் ("சீஃபுல் பஹ்ர்" படையினர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்களுக்குப் பசி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு உணவளிக்கக்கூடும்" என்றார்கள். பிறகு நாங்கள் கடலோரத்திற்குச் சென்றோம். அப்போது கடல் அலை எழுந்து (பெரிய கடல்வாழ்) உயிரினம் (திமிங்கலம்) ஒன்றை (கரையில்) போட்டது.
உடனே நாங்கள் அதனருகில் நெருப்பு மூட்டி சமைத்தோம்; பொறித்தோம். வயிறு நிரம்ப உண்டோம். பிறகு நானும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் -ஐந்து பேரை எண்ணிக் குறிப்பிட்டு -அந்த மீனின் கண்ணெலும்புக்குள் நுழைந்தோம். எங்களை யாரும் பார்க்கவில்லை. பிறகு நாங்கள் வெளியே வந்தோம். (அந்த அளவுக்கு அதன் கண்ணெலும்பு பெரியதாக இருந்தது)
பிறகு அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை வில் போல வளைத்து வைத்தோம். பயணிகளிடையே இருந்த மிகப் பெரிய மனிதர் ஒருவரையும், பயணிகளிடையேயிருந்த பெரிய ஒட்டகம் ஒன்றையும், பயணிகளிடையே இருந்த திமிலைப் போர்த்தி மூடும் துணியொன்றையும் கொண்டுவரச்செய்தோம். (அதை அந்த ஒட்டகத்தின் மீது போர்த்தி அந்தப் பெரிய மனிதரை அதிலேற்றிவிட்டோம்.) அவர் அந்த விலா எலும்புக்குக் கீழே தமது தலையைத் தாழ்த்தாமல் நுழைந்து சென்றார் (அந்த அளவுக்கு அதன் எலும்பு பெரியதாக இருந்தது).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 20 நபி (ஸல்) அவர்கள் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்ற செய்தி; இதற்கு "ஒட்டகச் சேணம் பற்றிய செய்தி" ("ஹதீஸுர் ரஹ்ல்") என்றும் கூறப்படுவதுண்டு.
5737. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள், என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம்) அவர்களது வீட்டிற்கு வந்து,அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகச்சேணத்தை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிடம், "இதை என் வீடுவரை சுமந்துவர உங்கள் புதல்வரை என்னுடன் அனுப்புங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
என் தந்தை என்னிடம், "இதைச் சுமந்து வா" என்று சொன்னார்கள். அவ்வாறே அதை நான் சுமந்து சென்றேன். அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அதன் விலையைப் பெற்றுக்கொள்வதற்காக என் தந்தையும் புறப்பட்டுவந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, "அபூபக்ரே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத்) சென்றபோது, இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என்பதை எனக்கு அறிவியுங்கள்?" என்று கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஆம் (அறிவிக்கிறேன்): நாங்கள் (மூன்று நாட்கள் "ஸவ்ர்" குகையில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறி) அந்த இரவு முழுவதும் பயணம் செய்து, (அடுத்த நாளின்) நண்பகல் நேரமும் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. நாங்கள் அங்கு இறங்கினோம்.
நான் அந்தப்பாறையை நோக்கிச் சென்று என் கையால் ஓரிடத்தை, அதன் நிழலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்குவதற்காகச் சமப்படுத்தினேன். பிறகு அந்த இடத்தில் ஒரு தோல் விரிப்பை விரித்தேன். பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்துக்கொள்கிறேன்;நீங்கள் (நிம்மதியாக) உறங்குங்கள்" என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள்.
அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் அந்தப் பாறையை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். நாங்கள் வந்த நோக்கத்துடனேயே அவனும் வந்தான்.
அப்போது அவனை நான் எதிர்கொண்டு, "நீ யாருடைய பணியாள், இளைஞரே?" என்று கேட்டேன். அவன், "இந்த (மக்கா) நகரவாசிகளில் (இன்ன பெயருடைய) ஒரு மனிதரின் பணியாள்" என்று பதிலளித்தான். நான் "உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?" என்று கேட்டேன். அவன் "ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தான்.
"அவ்வாறாயின், எனக்காகப் பால் கற(ந்து கொடு)ப்பாயா?" என்று கேட்டேன். அவன் "ஆம் (கொடுப்பேன்)" என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், "மண், முடி, தூசு ஆகிய வற்றிலிருந்து (ஆட்டின்) மடியை உதறி (சுத்தப்படுத்தி)க்கொள்" என்று சொன்னேன்.
-("பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் இதைக் கூறும்போது தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக்காட்டுவதை நான் கண்டேன்" என அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.)
பிறகு அந்த இடையன் தன்னிடமிருந்த ஒரு மரப்பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் ஒரு தோல் பாத்திரம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நீர் புகட்டவும், அவர்கள் நீர் அருந்தி, அங்கத் தூய்மை செய்யவும் (அது பயன்பட்டது). (அதை நான் என்னுடன் கொண்டுவந்திருந்தேன்.)
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்,) அவர்களிடம் நான் சென்ற நேரமும் அவர்கள் (தூக்கத்திலிருந்து) எழுந்த நேரமும் ஒன்றாக அமைந்துவிட்டது.
நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப்பாத்திரத்திலிருந்த) பாலில் அதன் அடிப்பகுதி குளிரும்வரை (அதன் அடர்த்தி நீங்கும்வரை) ஊற்றினேன். பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பாலைப் பருகுங்கள்" என்று சொன்னேன். நான் திருப்தியடையும்வரை அவர்கள் பருகினார்கள். பிறகு, "(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (வந்துவிட்டது)" என்று சொன்னேன்.
சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களை (மக்கா இணை வைப்பாளர்களில் ஒருவராயிருந்த) சுராக்கா பின் மாலிக் பின்தொடர்ந்து வந்தார்.
நாங்கள் பூமியின் ஓர் இறுகிய பகுதியில் இருந்தோம். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளால்) நாம் பின்தொடரப்படுகிறோம்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று சொன்னார்கள். பிறகு சுராக்காவுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே சுராக்காவுடன் அவரது குதிரை தனது வயிறுவரை பூமியில் புதைந்துவிட்டது.
உடனே சுராக்கா, "நீங்கள் இருவரும் எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டீர்கள் என்று நான் அறிந்துகொண்டேன். ஆகவே,எனக்காக (இந்தத் தண்டனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; உங்களைத் தேடி வருபவர்களை நான் திருப்பி அனுப்பி விடுவேன் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சி" என்று சொன்னார்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அவர் (அந்தத் தண்டனையிலிருந்து) தப்பினார். அப்போதிருந்து அவர் தம்மைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், "உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை" என்று கூறாமல் விடவில்லை. மேலும், (எங்களைத் தேடிவந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பி அனுப்பாமல் அவர் இருக்கவில்லை. அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபூபக்ர் (ரலி) அவர்கள் என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்களிடமிருந்து பதிமூன்று திர்ஹங்களுக்கு ஒட்டகச் சேணமொன்றை விலைக்கு வாங்கினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அவற்றில் உஸ்மான் பின் உமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது:
சுராக்கா (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை) நெருங்கியபோது, அவருக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே அவரது குதிரை வயிறுவரை பூமிக்குள் புதைந்துவிட்டது. சுராக்கா குதிரையிலிருந்து குதித்து, "முஹம்மதே! இது உங்களுடைய வேலைதான் என்று நான் அறிந்துகொண்டேன். (நான் சிக்கிக் கொண்டிருக்கும்) இந்த நிலையிலிருந்து என்னை விடுவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
எனக்குப் பின்னால் (உங்களைத் தேடிவர) இருப்போரிடமிருந்து உங்களை (காட்டிக் கொடுக்காமல்) நான் மறைத்துவிடுவதற்கு உங்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். இதோ எனது அம்புக் கூடு. இதிலிருந்து நீங்கள் (என் வாக்குறுதிக்கு அடையாளமாக) அம்பை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எனது ஒட்டகத்தையும் என் அடிமைகளையும் இன்னின்ன இடத்தில் கடந்து செல்வீர்கள். அப்போது உங்களுக்குத் தேவையானதை அதிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது ஒட்டகத்திலிருந்து எனக்கு எதுவும் தேவை யில்லை" என்று கூறிவிட்டார்கள். - பிறகு நாங்கள் இரவு நேரத்தில் மதீனாவுக்கு வந்தோம். அப்போது மதீனாவாசிகள் அவர்களில் யாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்குவது என்ற விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் பாட்டனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் தாய்மாமன்களான "பனுந் நஜ்ஜார்" குலத்தாரிடம் நான் தங்கிக்கொள்கிறேன். இதன் மூலம் அவர்களைக் கௌரவப்படுத்துகிறேன்" என்று கூறினார்கள்.அப்போது ஆண்களும் பெண்களும் (தம் வீடுகளுக்கு மேலே ஏறி(ப்பார்த்துக் கொண்டிருந்த)னர். சிறுவர்களும் பணியாட்களும் (மதீனாவின்) தெருக்களில் "முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே! முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறிக்கொண்டு (மகிழ்ச்சியுடன்) கலைந்து சென்றனர்..
அத்தியாயம் : 53