5738. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களிடம், "ஹித்தத்துன் (எங்களை மன்னிப்பாயாக!) என்று கூறிக் கொண்டே அதன் வாசலில் பணிவாக நுழையுங்கள். உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படும்" என்று கூறப்பட்டது.
ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க்கூறி)யதோடு தம் புட்டங்களால் தவழ்ந்தபடி வாசலில் நுழைந்தார்கள். மேலும், (உள்ளே நுழையும்போது) "ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்" (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.
அத்தியாயம் : 54
5739. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேத அறிவிப்பு ("வஹீ") அருளினான். அவர்கள் இறந்த நாட்களில் அருளப்பெற்ற வேதஅறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப்பெற்றதைவிட) அதிகமாக இருந்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5740. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே அருளப்பெற்றிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்" என்று கூறினர்.
உமர் (ரலி) அவர்கள், "அ(ந்த வசனமான)து, எந்த இடத்தில் அருளப்பெற்றது? எந்த நாளில் அருளப்பெற்றது? அது அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அது "அரஃபா" நாளில் அருளப்பெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபா பெருவெளியில் நின்று கொண்டிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன்" (5:3) எனும் இறைவசனம் அருளப்பெற்ற நாள் (சிலரது அறிவிப்பிலுள்ளதைப் போன்று) வெள்ளிக்கிழமையாக இருந்ததா, அல்லது இல்லையா என நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5741. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், "இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன்" (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந்து, அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் அறிந்திருந்தால், அந்நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டாடியிருப்போம்" என்று கூறினர்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அது அருளப்பெற்ற நாளையும் நேரத்தையும் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிந்துள்ளேன். அது "ஜம்உ" உடைய (முஸ்தலிஃபா) இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அரஃபாத்" பெருவெளியில் இருந்தபோது அருளப்பெற்றது" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5742. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூத சமுதாயமாகிய எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்" என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள், "அது எந்த வசனம்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், "இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டுவிட்டேன்" (5:3) எனும் இறைவசனம்தான் (அது) என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள், "அந்த வசனம் எந்த நாளில் அருளப்பெற்றது; எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பதையெல்லாம் நான் அறிவேன். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபாத்" பெருவெளியில் இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 54
5743. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அநாதை(ப்பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாகவோ மும்மூன்றாகவோ நான்கு நான்காகவோ மணந்துகொள்ளுங்கள்" (4:3) எனும் இறைவசனத்தைப் பற்றிக்கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:
என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவரது செல்வத்தில் அவளும் பங்காளியாக இருந்துவருவாள். இந்நிலையில் அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் (மணக்கொடை) விஷயத்தில் நியாயமான முறையில் நடக்காமல், மற்றவர்கள் அவளுக்கு அளிப்பதைப் போன்ற மணக்கொடையை (மஹ்ரை) அளிக்காமல் அவளை மண முடித்துக்கொள்ள விரும்புவார்.
இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மணக்கொடையில் மிக உயர்ந்த மணக்கொடை எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல், அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களை விடுத்து, மற்றப் பெண்களில் தமக்கு விருப்பமான பெண்களை (நான்கு பேர்வரை) மணமுடித்துக்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டது.
இந்த இறைவசனம் அருளப்பெற்ற பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், "(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அவர்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் வழங்காமலேயே அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்புவது பற்றியும், பலவீனமான சிறுவர்கள் பற்றியும் (இவ்)வேதத்தில் உங்களுக்கு ஓதிக்காட்டப் படுகின்ற வசனமும் (உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றது)" (4:127) எனும் இறைவசனத்தை அருளினான்.
"இவ்வேதத்தில் (ஏற்கெனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது" என்பது, (இந்த அத்தியாயத்தில்) இறைவன் குறிப்பிட்ட "அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ மணந்துகொள்ளுங்கள்" (4:3) எனும் இறை வசனத்தையே குறிக்கிறது.
"அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது பற்றியும்" (4:127) எனும் பிந்திய இறை வசனத்தொடர், உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தமது (பராமரிப்பில் இருந்துவரும் அநாதைப் பெண்ணை, அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது, அவளை (மணந்துகொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிக்கும்.
அப்பெண்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்துக்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் நேர்மையான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால்..." (4:3) எனும் இறை வசனத்தைப் பற்றிக் கேட்டேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விளக்கங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஹதீஸின் இறுதியில், ("அப்பெண்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால்” என்பதற்கு முன்னால், "அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும்போது, அவர்களை (மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால்)" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 54
5744. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால்..." (4:3) எனும் வசனம் தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த வசனம், தம்மிடமுள்ள செல்வமுடைய அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும் வாரிசாகவும் இருந்துவரும் மனிதர் தொடர்பாக அருளப்பெற்றது. அவளுக்காக வாதாட அவளைத் தவிர வேறெவரும் இல்லை எனும் நிலையில் அவள் இருப்பாள்.அவளது செல்வத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவளை அவர் மணமுடித்துக் கொடுக்காமலிருப்பார். இதன் மூலம் அவளுக்கு அவர் இன்னல் ஏற்படுத்தி, உறவையும் கெடுத்துவைத்திருப்பார்.
ஆகவேதான், அநாதைப் பெண்(களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த (அதாவது உங்களுக்கு நான் அனுமதித்துள்ள) பெண்களை மணந்துகொள்ளுங்கள். நீங்கள் இன்னல் விளைவிக்கும் இந்த அநாதைப் பெண்களை விட்டுவிடுங்கள் என்று அல்லாஹ் கூறினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5745. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் வழங்காமலேயே அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது பற்றியும், பலவீனமான சிறுவர்கள் பற்றியும் (இவ்)வேதத்தில் உங்களுக்கு ஓதிக்காட்டப்படுகின்ற வசனமும் (உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றது)" (4:127) எனும் இறைவசனம் ஓர் அநாதைப் பெண் தொடர்பாக அருளப்பெற்றது.
அவள் ஒரு மனிதரின் பொறுப்பில், அவரது சொத்தில் பங்காளியாக இருந்துவருவாள். அவளை(த் தாமே மணந்துகொள்ள விரும்பினாலும், அவர் முறையாக இல்லறம் நடத்தமாட்டார். அல்லது) தாமும் மணந்துகொள்ள விரும்பமாட்டார். பிறருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து தமது சொத்தில் பிறர் பங்காளியாவதையும் விரும்பமாட்டார். எனவே, அவளை(தாமும் மணக்காமலும் யாருக்கும் மணமுடித்துக் கொடுக்காமலும்) முடக்கிவைத்திருப்பார். (இத்தகைய நிலையை இறைவன் தடை செய்தான்.)
அத்தியாயம் : 54
5746. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், "(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்..." (4:127)எனும் இறைவசனத்துக்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்:
இந்த வசனம் ஓர் அநாதைப் பெண்ணைப் பற்றியதாகும். அவள் ஒரு மனிதரின் பொறுப்பில் இருந்துவருவாள். அவள் அவருடைய பேரீச்சமரங்கள் உள்ளிட்ட செல்வங்களில் பங்காளியாகக் கூட இருக்கக்கூடும். இந்நிலையில் அவளை அவரே மணமுடித்துக்கொள்ள விரும்புவார்.- மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து அவ(ளுக்குக் கணவனாக வருகின்றவ)னும் தமது சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் வெறுப்பார். எனவே, (எவரையும் மணக்க விடாமல்) அவளை அக்காப்பாளர் முடக்கி வைத்துவந்தார். (அப்போது தான் மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது.)
அத்தியாயம் : 54
5747. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், "ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்" (4:6) எனும் இறை வசனத்துக்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த வசனம் அநாதைகளை நிர்வகித்து, அவர்களின் செல்வத்தைப் பராமரிக்கும் காப்பாளர்கள் தொடர்பாக அருளப்பெற்றது. அவர் ஏழையாக இருந்தால், (தமது உழைப்புக்கான கூலியாக நியாயமான முறையில்) அநாதைகளின் பொருளை அனுபவிக்கலாம்.
அத்தியாயம் : 54
5748. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், "(அநாதைகளைப் பராமரிப்பவர்களில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைத் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்" (4:6) எனும் இறைவசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த வசனம் அநாதைகளின் காப்பாளர் தொடர்பாக அருளப்பெற்றது. அவர் தேவையுடையவராக இருந்தால்,அநாதையின் செல்வத்திலிருந்து அந்த அநாதையின் செல்வத்தின் அளவுக்கேற்ப நியாயமான முறையில் (ஊதியமாக) எடுத்துக்கொள்ளும்படி (அனுமதியளித்து) அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5749. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(பகைவர்கள்) உங்களு(டைய கணவாய்)க்கு மேற்புறமிருந்தும், உங்களு(டைய கணவாய்)க்குக் கீழ்ப்புறமிருந்தும் உங்களிடம் வந்தபோது, பார்வைகள் நிலைகுத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்தபோது..." (33:10) எனும் இறைவசனம் குறிப்பிடும் சம்பவம், அகழ்ப்போர் தினத்தில் நடந்தது.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 54
5750. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்..." (4:128) எனும் இறைவசனம், ஒரு பெண் விஷயத்தில் அருளப்பெற்றது. அவள் ஒரு கணவனின் உறவில் நீண்ட காலம் இருந்துவருவாள். பின்னர் (முதுமை போன்ற காரணத்தால்) அவளை அவர் விவாகரத்துச் செய்து(விட்டு மற்றொருத்தியை மணந்து) கொள்ள விரும்புவார்.
இந்நிலையில் அவள், "என்னை மணவிலக்குச் செய்யாதீர்கள். என்னை (உங்கள் மனைவியாகவே) இருக்க விடுங்கள். என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன்" என்று கூறுவாள். அப்போதுதான் இந்த வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 54
5751. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
"ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்..." (4:128) எனும் இறை வசனம், ஒரு பெண் தொடர்பாக அருளப்பெற்றது. அவள் ஒருவரின் துணைவியாக இருந்துவருவாள். அவளிடம் உறவும் (தனது) குழந்தையும் இருந்துவரும்.- இந்நிலையில் (முதுமை நோய் போன்ற காரணங்களால்) அவளிடம் கணவர் (தாம்பத்திய உறவுக்காக) அதிகமாக வந்துபோகாமல் இருக்கலாம்.
இந்நிலையில், அவர் தன்னை மண விலக்குச் செய்துவிடுவதை விரும்பாமல் அவள், "என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் உங்களுக்கு விட்டுக் கொடுத்துவிடுகிறேன்" என்று கூறிவிடுவாள். (இவ்வாறு விட்டுக் கொடுத்து சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என இவ்வசனம் கூறுகின்றது.)
அத்தியாயம் : 54
5752. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி(அஸ்மாவின்) மகனே! நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி (இறைவனால் 59:10ஆவது வசனத்தில்) கட்டளையிடப்பட்டது. ஆனால்,மக்களோ அவர்களை ஏசிக் கொண்டிருக்கின்றனர்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5753. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம்தான் தண்டனை" (4:93) எனும் இறைவசனம் தொடர்பாக (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா, இல்லையா எனும் விஷயத்தில்) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டனர்.
எனவே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் பயணம் சென்று அது குறித்துக் கேட்டேன். அவர்கள், "இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) அருளப்பெற்ற இறுதி வசனமாகும். பிறகு இதை வேறு (வசனம்) எதுவும் மாற்றி விடவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 54
5754. மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("இதுதான் அருளப்பெற்ற இறுதி வசனமாகும் என்பதைக் குறிக்க") "நஸலத் ஃபீ ஆகிரி மா உன்ஸில" என்று இடம்பெற்றுள்ளது. நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இது இறுதியாக அருளப்பெற்ற வசனங்களில் உள்ளதாகும்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 54
5755. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள், "ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம் தான் தண்டனை. அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்" (4:93) என்று தொடங்கும் இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "இ(ந்த 4:93ஆவது வசனத்தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை" என்று பதிலளித்தார்கள்.
"அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களிடம் பிரார்த்திக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் (சட்டரீதியான) தக்க காரணமின்றி கொல்லமாட்டார்கள்" (25:68) என்று தொடங்கும் இந்த வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இது இணைவைப்போர் தொடர்பாக அருளப்பெற்றது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5756. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களிடம் பிரார்த்திக்கமாட்டார்கள்" என்று தொடங்கி,"அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான்" (25:68,69) என்பது வரையிலான வசனங்கள் மக்காவில் அருளப் பெற்றன.
அப்போது இணைவைப்பாளர்கள், "இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதால் எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் அல்லாஹ்வை விட்டு (வேறு கடவுள்களை நோக்கி)த் திரும்பிவிட்டோம். அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை (சட்டரீதியான) தக்க காரணமின்றி கொலை செய்திருக்கிறோம்.மானக்கேடான செயல்களையும் செய்தோம். (ஆகவே, இனி நாங்கள் இஸ்லாத்தைத் தழுவுவதால் எந்தப் பயனுமில்லை. நமக்கு பாவமன்னிப்புக் கிட்டாது)" என்று கூறினர்.
ஆகவேதான் அல்லாஹ், "மனம்திருந்தி, இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர" (25:70) என்று தொடங்கும் வசனத்தை முழுமையாக அருளினான். ஆனால், யார் இஸ்லாத்தைத் தழுவி, அ(தன் சட்டதிட்டத்)தை அறிந்துகொண்ட பின்பும் கொலை செய்கிறாரோ அவருக்குப் பாவமன்னிப்புக் கிடையாது.
அத்தியாயம் : 54
5757. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்டேன். அவர்கள், "பாவமன்னிப்புக் கிடையாது" என்று சொன்னார்கள். உடனே நான் அவர்களுக்கு "அல்ஃபுர்கான்" (எனும் 25ஆவது) அத்தியாயத்திலுள்ள (68,69 ஆகிய) வசனங்களை ஓதிக்காட்டினேன்.
அதற்கு அவர்கள், "இது மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இதை மதீனாவில் அருளப்பெற்ற மற்றொரு வசனம் மாற்றிவிட்டது என்று கூறிவிட்டு, "ஓர் இறை நம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம்தான் தண்டனை. அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்" (4:93) எனும் இறைவசனமே அது என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54