5698. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்கள்: உமர் (ரலி) அவர்கள் (தற்போது) மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கை வளம் பற்றி நினைவு கூர்ந்தார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான பேரீச்சம் பழம்கூட கிடைக்காத நிலையில் ஒரு நாள் முழுவதும் சுருண்டு கிடப்பதை நான் கண்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5699. அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "நாம் ஏழை முஹாஜிர்கள் இல்லையா?"என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீர் அமைதி காண உமக்கு மனைவி இல்லையா?"என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "ஆம் (இருக்கிறாள்)" என்றார்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "வசிப்பதற்கு உமக்கு வீடு இல்லையா?" என்று கேட்டார்கள். அந்த மனிதர் "ஆம் (இருக்கிறது)" என்றார். "அவ்வாறாயின், நீர் செல்வர்களில் ஒருவராவீர்" என்று கூறினார்கள். அந்த மனிதர் "இத்துடன் என்னிடம் பணியாளர் ஒரு வரும் இருக்கிறார்" என்றார். "அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்" என்றார்கள்.
- அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), "அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப்பொருட்களோ இல்லை" என்று கூறினர்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அதற்கு அவர்கள் (மூவரும்), "அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்"என்று கூறினர்.
அத்தியாயம் : 53
பாடம் : 2 தமக்குத் தாமே அநீதியிழைத்து (அழிவில் சிக்கி)க்கொண்டவர்களின் வசிப்பிடங்களுக்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்.
5700. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தபூக் பயணத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹிஜ்ர்"வாசிகள் (ஸமூத் கூட்டத்தார்) தொடர்பாக, "இறைவனால் வேதனைக்குள்ளாக்கப்பட்ட இந்த மக்களின் இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம். உங்களால் அழ முடியாவிட்டால், அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள். அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5701. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஹிஜ்ர்" பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, "தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு நேர்ந்த அதே சோதனை உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்றஞ்சி, அழுதபடியே தவிர செல்லாதீர்கள்" என்று எங்களிடம் கூறினார்கள். பிறகு தமது வாகனத்தை விரட்டிக் கொண்டு, மிக விரைவாக அந்த இடத்தைக் கடந்துசென்றார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "ஸமூத்" கூட்டத்தாரின் வசிப்பிடமான "ஹிஜ்ர்" பற்றிக் கூறும்போது இதை அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 53
5702. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தபூக் பயணத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஸமூத்" கூட்டத்தார் வாழ்ந்த பகுதியான "ஹிஜ்ர்" பிரதேசத்தில் இறங்கி, அங்கிருந்த கிணறுகளில் நீரிறைத்தார்கள். அதைக் கொண்டு மாவு குழைத்தார்கள்.
அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைத்த நீரைக் கொட்டி விடுமாறும், (அந்தத் தண்ணீரால்) குழைக்கப்பட்ட அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் நபியின்) ஒட்டகம் வந்து நீரருந்திய கிணற்றிலிருந்து நீரிறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், ("கிணறுகளிலிருந்து" என்பதைக் குறிக்க "ஆபார்" என்பதற்குப் பதிலாக) "பிஆர்" என்ற சொல்லும், ("குழைத்தார்கள்" என்பதைக் குறிக்க "அஜனூ" என்பதற்குப் பதிலாக) "இஃதஜனூ" என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 53
பாடம் : 3 விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோருக்கு உதவி புரிதல்.
5703. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார். மேலும், "(இரவெல்லாம்) சோர்ந்து விடாது நின்று வணங்கி, (பகலெல்லாம்) விடாது நோன்பு நோற்றவரைப் போன்றவரும் ஆவார்" (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன் என அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5704. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அநாதையின் காப்பாளரும் -அந்த அநாதை உறவுக்காரராகட்டும் அந்நியராகட்டும்- சொர்க்கத்தில் இப்படி இருப்போம்" என்று சைகை செய்து கூறினார்கள்.
இதை அறிவிக்கும்போது மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் (அவற்றை இணைத்துக் காட்டி) சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 53
பாடம் : 4 பள்ளிவாசல்கள் எழுப்புவதன் சிறப்பு.
5705. உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க்கட்ட எண்ணியபோது, அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் மக்களிடம், "நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ -புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் உவப்பை நாடி (பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ" என்று (ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன் என்று) இடம்பெற்றுள்ளது- அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகிறான்" என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்" என்றார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5706. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க்கட்டத் திட்டமிட்டபோது, அதை மக்கள் வெறுத்தனர்; அதை முன்பிருந்த அமைப்பிலேயே விட்டுவிட வேண்டும் என்று விரும்பினர்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வி(ன் பொருத்தத்தி)ற்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப்போன்ற ஒன்றைக் கட்டுகிறான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 5 ஏழை எளியோருக்கு தானதர்மங்கள் செய்தல்.
5707. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு மனிதர் ஒரு காட்டு நிலத்தில் இருந்த போது, ஒரு மேகத்தினிடையே "இன்ன மனிதரின் தோட்டத்திற்கு நீர் பொழி" என்று ஒரு சப்தம் வருவதைக் கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து, கருங்கற்கள் நிறைந்த ஒரு பகுதியில் மழையைப் பொழிந்தது. அங்கிருந்த நீரோடைகளில் ஒன்றில் அந்த நீர் முழுவதும் ஓடியது. உடனே அந்த மனிதர் அந்த நீர்வழியைத் தொடர்ந்தார்.
அப்போது ஒரு மனிதர் தமது தோட்டத்தில் நின்றுகொண்டு மண்வெட்டியால் தண்ணீரை திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார். அவரிடம், "அல்லாஹ்வின் அடியாரே! உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டார். அவர் "இன்னது" என மேகத்தினிடையே கேட்ட அதே பெயரைச் சொன்னார்.
அப்போது அவர், "அல்லாஹ்வின் அடியாரே! ஏன் என் பெயரைக் கேட்கிறீர்?" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் மேகத்தினிடையே உமது பெயரைக் குறிப்பிட்டு, "இன்ன மனிதரின் தோட்டத்தில் நீரைப்பொழி" என ஒரு சப்தத்தைக் கேட்டேன். அந்த மேகத்தின் நீர்தான் இது. அந்தத் தோட்டத்தி(ன் மூலம் கிடைக்கும் வருவாயி)ல் நீர் என்ன செய்கிறீர்?"என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தோட்டக்காரர், "நீங்கள் சொல்வது உண்மையானால், அதன் விளைச்சலில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தர்மம் செய்கிறேன். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியை நானும் என் மனைவி மக்களும் உண்கிறோம். இன்னொரு மூன்றில் ஒரு பகுதியை மறுபடியும் விவசாயம் செய்கிறேன்" என்று கூறினார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதில் (கிடைக்கும் வருவாயில்) மூன்றில் ஒரு பகுதியை ஏழைகள், யாசகர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குத் தர்மம் செய்கிறேன்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 6 அல்லாஹ் அல்லாதவருக்காக நற்செயல் புரிவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல்.
5708. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால்,அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5709. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிந்தாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிந்தாரோ அவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5710. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர்(கொண்டிருந்த உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமைநாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்.
இதை ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ அல்அலக்கீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஜுன்துப் (ரலி) அவர்கள் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாகத் தெரிவிக்கவில்லை" என்று அறிவிப்பாளர் சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும் அந்தக் கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 7 ஒரே ஒரு வார்த்தைகூட நரகத்தில் தள்ளிவிடும்.
5711. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் (பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) ஒரு வார்த்தை பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5712. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் பின்விளைவை யோசிக்காமல் ஒரு வார்த்தை பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் போய் விழுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
பாடம் : 8 நன்மையை ஏவிக்கொண்டு தாம் அதைச் செய்யாமலும், தீமையைத் தடுத்துக்கொண்டு தாமே அதைச் செய்துகொண்டும் இருப்பவர் அடையும் தண்டனை.
5713. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், "நீங்கள் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று (இந்த அரசியல் குழப்பங்கள் தொடர்பாகப்) பேசக் கூடாதா? (அவர் உங்களுக்கு நெருக்கமானவர் ஆயிற்றே!)" என்று கேட்கப்பட்டது.
அதற்கு உசாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்கள் முன்னிலையில்தான் அவர்களிடம் நான் பேச வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களிடம் அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்கு வித்திடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே அவர்களிடம் பேசுகிறேன். ஏனெனில்,கலகத்திற்கு வித்திட்ட முதல் ஆளாக நானிருக்க விரும்பவில்லை.
மேலும், எனக்கு ஆட்சித்தலைவராக இருக்கும் எவரையும், "மக்களில் நீங்கள்தான் சிறந்தவர்" என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அவ்வாறு நான் சொல்லமாட்டேன்).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். அப்போது அவரது வயிற்றிலுள்ள குடல்கள் முழுவதும் வெளியே வந்துவிடும். அவர் குடலை இழுத்துக்கொண்டு கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப் போன்று சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, "இன்ன மனிதரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியுமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டு, தீமை புரியவேண்டாம் என (அவர்களை)த் தடுத்துக் கொண்டிருக்(கும் நற்பணி செய்திகொண்டிருக்)க வில்லையா?" என்று கேட்பார்கள்.
அதற்கு அந்த மனிதர், "ஆம்; நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரியவேண்டாம் என (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்" என்று கூறுவார்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தோம். அப்போது ஒரு மனிதர், "நீங்கள் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று, அவர் செய்துகொண்டிருப்பதைப் பற்றி பேசாமலிருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 9 மனிதன் திரைமறைவில் செய்த பாவத்தைத் தானே பகிரங்கப்படுத்துவதற்கு வந்துள்ள தடை.
5714. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர! ஓர் அடியான் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் இறைவன் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, "இன்ன மனிதரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்" என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகின்றான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 10 தும்மி "அல்ஹம்து லில்லாஹ்" ("எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே") என்று கூறிய வருக்கு "யர்ஹமுகல்லாஹ்" ("உங்களுக்கு அல்லாஹ் கருணைபுரியட்டும்") என மறுமொழி கூறுவதும், கொட்டாவிவிடுவது அருவருப்பானதாகும் என்பதும்.
5715. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் "யர்ஹமுக்கல்லாஹ்" (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை.
மறுமொழி கூறப்படாதவர், "இன்ன மனிதர் தும்மியபோது தாங்கள் அவருக்கு மறுமொழி கூறினீர்கள். நான் தும்மியபோது தாங்கள் எனக்கு மறுமொழி கூறவில்லையே?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவர் (தும்மியவுடன் "அல்ஹம்து லில்லாஹ்" என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் இறைவனைப் புகழவில்லை (எனவேதான்,அவருக்கு மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5716. அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வி(யும் தம் துணைவியுமான உம்மு குல்ஸூம் அவர்களது) இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நான் தும்மினேன். ஆனால், என் தந்தை எனக்கு மறுமொழி கூறவில்லை. அவர்களின் துணைவியார் தும்மியபோது மறுமொழி கூறினார்கள்.
நான் என் தாயாரிடம் திரும்பிவந்து, நடந்ததை அவரிடம் தெரிவித்தேன். என் தாயாரிடம் அபூமூசா (ரலி) அவர்கள் வந்தபோது, "உங்களுக்கு அருகில் என் பிள்ளை தும்மியபோது நீங்கள் மறுமொழி கூறவில்லை; அவள் தும்மியபோது மட்டும் மறுமொழி கூறியிருக்கிறீர்கள்" என்று கேட்டார்.
அதற்கு (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், "உன் பிள்ளை தும்மியவுடன் "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறவில்லை. எனவேதான், நான் அவருக்கு மறுமொழி பகரவில்லை. ஆனால், அவள் தும்மியவுடன் "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறினாள். எனவேதான், அவளுக்கு நான் மறுமொழி பகர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தும்மி, "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறினால் அவருக்கு நீங்கள் மறுமொழி கூறுங்கள். அவர் "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறாவிட்டால், அவருக்கு நீங்கள் மறுமொழி கூறாதீர்கள்" என்று கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5717. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் தும்மி ("அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறி)னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள். அவரே மற்றொரு முறை தும்மினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த மனிதருக்கு ஜலதோஷம் ஏற்பட்டுள்ளது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53