5199. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது (நூற்றுக்கு ஒன்று குறைவான) பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் நுழைவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 3 இறைவனிடம் பிரார்த்திக்கும்போது வலியுறுத்திக் கேட்க வேண்டும். "நீ நினைத்தால் வழங்குவாயாக!" என்று கேட்கலாகாது.
5200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரார்த்தித்தால் பிரார்த்தனையில் (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். "இறைவா! நீ நினைத்தால் எனக்கு வழங்குவாயாக!" என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில்,இறைவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரார்த்தித்தால், "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!" என்று கேட்க வேண்டாம். மாறாக, (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5202. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! நீ நினைத்தால் எனக்குக் கருணை புரிவாயாக!" என்று கேட்க வேண்டாம். (மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். ஏனெனில், இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 4 ஒருவர் தமக்கு நேர்ந்த துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்புவது வெறுக்கத்தக்கதாகும்.
5203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!" என்று கேட்கட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "தம்மைத் தாக்கிவிட்ட துன்பத்தின் காரணத்தால்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 48
5204. நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அனஸ் (ரலி) அவர்கள், "உங்களில் யாரும் மரணத்தை விரும்பவேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிராவிட்டால், இறப்பை நான் விரும்பியிருப்பேன்" என்று கூறினார்கள்.
நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோது, (அவர்களுடைய தந்தை) அனஸ் (ரலி) அவர்கள் உயிரோடு இருந்தார்கள்.
அத்தியாயம் : 48
5205. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றோம். அவர்கள் (கடும் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காக) தமது வயிற்றில் ஏழுமுறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் "மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால், மரணத்தை வேண்டி நான் பிரார்த்தித்திருப்பேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5206. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வருவதற்கு முன்பே அதை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒருவர் இறந்துவிட்டால்,அவரது (நற்)செயல் நின்றுவிடுகிறது. இறைநம்பிக்கையாளருக்கு அவரது ஆயுள் நன்மையையே அதிகமாக்கும்.
அத்தியாயம் : 48
பாடம் : 5 யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
5207. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5208. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று சொன்னார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறைமறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும்போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்" என்று (விளக்கம்) சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5209. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான். (ஆனால்,) மரணமோ அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்பே நிகழ்ந்துவிடுகிறது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5210. ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(இதைக் கேட்ட) நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் போன்று இருந்தால் நாங்கள் (அனைவரும்) அழிந்தோம்" என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று யாருக்குப் பொருந்துகிறதோ அவர் (உண்மையில்) அழிந்தவர்தான். அது என்ன (ஹதீஸ்)?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று கூறினார்கள். எங்களில் மரணத்தை வெறுக்காதவர் யாருமில்லையே?" என்று சொன்னேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறத்தான் செய்தார்கள். ஆனால்,இதன் விளக்கம் நீங்கள் நினைப்பதைப் போன்றில்லை. பார்வை நிலை குத்தி, மூச்சிறைத்து, ரோமக்கால்கள் சிலிர்த்து நின்று, கைவிரல்கள் மடங்கிக் கொள்ளும் (மரண)வேளையில், யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" (என்பதே அதற்கு விளக்கம்) என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5211. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 6 இறைவனை நினைவுகூரல் (திக்ர்), பிரார்த்தனை (துஆ), இறைவனை நெருங்குதல் ஆகியவற்றின் சிறப்பு.
5212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்து கொள்வேன். அவன் என்னிடம் பிரார்த்திக்கும்போது அவனுடன் நான் இருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5213. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான்:
என் அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 48
5214. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன். அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவு கூர்ந்தால் நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோரிடையே அவன் நினைவுகூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடையே அவனை நான் நினைவுகூருவேன்.
அவன் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5215. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன்.
யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச்செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் அவருக்கு உண்டு. அல்லது நான் அதை விடக் கூடுதலாகவும் (அவருக்கு) வழங்குவேன்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 7 இம்மையிலேயே தண்டனையை விரைவாக வழங்கிவிடுமாறு பிரார்த்திப்பது வெறுக்கத்தக்கதாகும்.
5216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்" என்று கூறினார்.
அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) "அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) "உன்னால் அதைத் தாங்க முடியாது". அல்லது "உன்னால் அதற்கு இயலாது" என்று கூறிவிட்டு, நீ "இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!" என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.
பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 48
5217. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒருவரை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று மாறிவிட்டிருந்தார்.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதில், "இறைவனின் வேதனையைத் தாங்க உனக்குச் சக்தி இல்லை" என்று கூறியதாகக் காணப்படுகிறது. "பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 8 இறைவனை நினைவுகூரும் அவைகளின் சிறப்பு.
5218. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்துகொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறுசிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் -அவர்களை நன்கறிந்திருந்தும்- "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், "பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக்கொண்டும் இருக்கின்றனர்" என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?" என்று (தனக்குத் தெரியாதது போலக்)கேட்கிறான். வானவர்கள், "அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்"
என்பார்கள். அதற்கு இறைவன், "அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?" என்று கேட்பான்.
அதற்கு வானவர்கள், "இல்லை, இறைவா!" என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின், என் சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?" என்று கூறுவான்.
மேலும், "உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்" என்றும் வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் எதிலிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?" என்று கேட்பான். அதற்கு வானவர்கள், "உன் நரகத்திலிருந்து, இறைவா!" என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், "அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?" என்று கேட்பான். வானவர்கள், "இல்லை" என்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?" என்று கூறுவான்.
மேலும், "அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்" என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், "அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கிவிட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து அவர்களை நான் காப்பாற்றிவிட்டேன்" என்று கூறுவான்.
அப்போது வானவர்கள், "இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்துகொண்டான்" என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், "அவனையும் நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48