பாடம் : 9 "இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் (எங்களுக்கு) நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!" என்று பிரார்த்திப்பதன் சிறப்பு.
5219. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கத்தாதா (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்துவந்த பிரார்த்தனை எது?" என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்துவந்த பிரார்த்தனை, "அல்லாஹும்ம! ஆத்தினா ஃபித் துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனத்தன் வகினா அதாபந் நார்" (இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் (எங்களுக்கு) நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!") என்பதாகும்" என்று விடையளித்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் ஏதேனும் பிரார்த்தனை செய்ய நாடினால் இந்தப் பிரார்த்தனையையே செய்வார்கள். வேறு பிரார்த்தனைகள் செய்யும்போதும் இதைச் சேர்த்துக் கொள்வார்கள்.
அத்தியாயம் : 48
5220. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரப்பனா! ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனத்தன் வகினா அதாபந் நார்" (எங்கள் இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 10 லாயிலாஹ இல்லல்லாஹ் ("அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை") என்று உறுதிமொழிவது, சுப்ஹானல்லாஹ் ("அல்லாஹ் தூய்மையானவன்") என்று துதிப்பது மற்றும் பிரார்த்திப்பது ஆகியவற்றின் சிறப்பு.
5221. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரிடமிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். அவர் புரிந்த இந்த நற்செயலை விடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான ஒரு) நற்செயல் புரிந்தால் தவிர.
"சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப் படுகின்றன; அவை கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை "சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5223. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் பத்து முறை ஓதுகிறாரோ அவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் நால்வரை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார்.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகிறேன்:)
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களின் இந்த (மவ்கூஃப்) ஹதீஸை எனக்கு அறிவித்த சுலைமான் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதை அறிவித்துள்ளார்கள். அதில் அறிவிப்பாளர் ஷஅபீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்களிடம், "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள். ஆகவே, நான் அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடம் சென்று, "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள்.
ஆகவே, நான் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடம் சென்று, "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து (நான் செவியுற்றேன்)" என்று சொன்னார்கள். (ஆகவே, இது அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களின் சொல்லன்று; நபி (ஸல்) அவர்களின் ஹதீஸாகும்.)
அத்தியாயம் : 48
5224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை ஆகும். (அவை:)
1. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்குஅறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5225. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5226. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் சொல்லிக் கொள்ள எனக்கு ஏதேனும் (துதி) வாக்கியத்தைக் கற்றுத்தாருங்கள்" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு,அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஸீஸில் ஹகீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அல்லாஹ் மிகவும் பெரியவன். அவனைப் பெரியவன் எனப் பெருமைப்படுத்துகிறேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என அதிகமாகப் புகழுகிறேன். அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ் (அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும்) தூய்மையானவன். மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அல்லாஹ்வின் உதவியின்றி யுக்தியுமில்லை; சக்தியுமில்லை.) என்று சொல்வீராக!" என்று கூறினார்கள்.
அதற்கு அந்தக் கிராமவாசி, "இவை என் இறைவனுக்குரியவையாகும். எனக்குரியவை என்ன?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும் மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வர்ஸுக்னீ" என்று சொல்வீராக! என்றார்கள். (பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எனக்குக் கருணை புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக!")
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "வ ஆஃபினீ" (எனக்கு ஆரோக்கியம் வழங்குவாயாக!) என்ற சொல்லும் இந்த ஹதீஸில் உள்ளதா என என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், மூசா அல்ஜுஹனீ அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5227. தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புதிதாக) இஸ்லாத்தைத் தழுவியவருக்கு "அல்லாஹும் மஃக்ஃபிர் லீ வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ" என்று (கூறுமாறு) கற்பித்து வந்தார்கள். (பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக; எனக்குக் கருணை புரிவாயாக; என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதராம் வழங்குவாயாக!)
அத்தியாயம் : 48
5228. தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவினால், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு "அல்லஹும்மஃக்பிர் லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ" எனும் இந்த வாக்கியங்களைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி கட்டளையிடுவார்கள். (பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!)
அத்தியாயம் : 48
5229. தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ" (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக" என்றார்கள்.
இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, "இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 48
5230. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 11 குர்ஆனை ஓதுவதற்கும் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் ஒன்றுகூடுவதன் சிறப்பு.
5231. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிரமப்படுவோருக்கு உதவி செய்வது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5232. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும்போது, அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களைக் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5233. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்திருந்த ஒரு குழுவினரிடம் முஆவியா (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்து, "நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், "அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், "அல்லாஹ்வின்மீது சத்தியமாக! அதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்" என்று கூறினர்.
முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்கள்மீது சந்தேகப்பட்டு நான் உங்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் எவரும் என்னைவிடக் குறைவான ஹதீஸ்களை அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. (நானே மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவன்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) வட்டமாக அமர்ந்திருந்த தம் தோழர்களில் சிலரிடம் வந்து, "நீங்கள் (இங்கு) அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ் எங்களுக்கு இஸ்லாத்திற்கு நேர்வழி காட்டியதற்காகவும், எங்களுக்கு அருட்கொடைகள் புரிந்ததற்காகவும் அவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்திருக்கிறோம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத் தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்குத் தோழர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! உங்கள்மீது சந்தேகம் கொண்டுச் சத்தியமிட்டு உங்களிடம் நான் கேட்கவில்லை. மாறாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையுடன் பேசிக்கொள்கிறான்" என்று தெரிவித்தார் என்றார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 12 பாவமன்னிப்புக் கோருவதும் அதை அதிகமாகச் செய்வதும் விரும்பத்தக்கதாகும்.
5234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
இதை அஃகர்ரு பின் யசார் அல்முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5236. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு (யுகமுடிவுக்கு)முன் யார் பாவமன்னிப்புக் கோரித் திருந்திவிடுகிறாரோ அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 13 மெல்லிய குரலில் இறைவனைத் துதிப்பதே விரும்பத்தக்கதாகும்.
5237. அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது மக்கள் உரத்த குரலில் "அல்லாஹு அக்பர்" (இறைவன் மிகப்பெரியவன்) என்று (தக்பீர்) கூறலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மென்மையாக (மெதுவாக)க் கூறுங்கள். (ஏனெனில்), நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. (மாறாகச்) செவியுறுவோனையும் அருகிலிருப்பவனையுமே அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்" என்று சொன்னார்கள்.
அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்துகொண்டு, "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்று கூறிக் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸே! உங்களுக்குச் சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (அறிவித்துத் தாருங்கள்), அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ""லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்று சொல்லுங்கள்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5238. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு மலைக் கணவாயில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ஒவ்வொரு கணவாயில் ஏறும்போதும் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று (உரத்த குரலில்) அழைக்கலானார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. (எனவே, மெதுவாக அவனை அழையுங்கள்)" என்று சொன்னார்கள்.
பிறகு "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸே" (என்றழைத்து), "சொர்க்கத்தின் கருவூலங்களில் உள்ள ஒரு வார்த்தையை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான் "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அந்த வார்த்தை) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின்போது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 48