பாடம் : 1 குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வது தடை செய்யப்பட்டதாகும் என்பதும், அவ்வாறு பின்தொடர்பவர்கள் குறித்து வந்துள்ள எச்சரிக்கையும், குர்ஆனில் கருத்து முரண்பாடு கொள்வதற்கு வந்துள்ள தடையும்.
5179. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபியே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் (பொருள்) உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கும் வேறுசில வசனங்களும் (அதில்) உள்ளன. யாருடைய உள்ளத்தில் கோளாறு உள்ளதோ அவர்கள், வேதத்தில் பல பொருள்களுக்கு இடமளிப்பவற்றையே பின்தொடர்வர். குழப்பம் செய்ய விரும்பியும், அவற்றுக்கு (சுயமாக) விளக்கம் அளிக்க விரும்பியுமே (அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்).
ஆனால், அவற்றின் (மெய்ப்)பொருளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியார். கல்வியில் தேர்ந்தவர்கள், நாங்கள் அவற்றை நம்புகிறோம்; (அவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே" என்று கூறுவர். அறிவுடையோர் தவிர (வேறு யாரும் இதை) உணர்வதில்லை" (3:7) எனும் இறை வசனத்தை ஓதிவிட்டு, "பல பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வோரை நீங்கள் கண்டால், அவர்கள்தான் (இந்த வசனத்தில்) அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ஆட்கள் (என்பதை அறிந்து),அவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 47
5180. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்" என்று சொன்னார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் ரபாஹ் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் அபூ இம்ரான் அல்ஜவ்னீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 47
5181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) முரண்பாடு தோன்றினால் (அந்த இடத்தைவிட்டு) எழுந்துவிடுங்கள்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47
5182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். முரண்பாடு தோன்றினால் எழுந்துவிடுங்கள்.- இதை ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூஇம்ரான் அல்ஜவ்னீ (ரஹ்) அவர்கள், நாங்கள் கூஃபாவில் இளைஞர்களாக இருந்த போது எங்களிடம் ஜுன்தப் (ரலி) அவர்கள், மேற்கண்டவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 47
பாடம் : 2 கடுமையாகச் சச்சரவு செய்பவன்.
5183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கோபத்துக்குரியவன், (உண்மையை மறுத்துப் பொய்மையை நிலைநாட்ட) கடுமையாகச் சச்சரவு செய்பவன் ஆவான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47
பாடம் : 3 யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றல்.
5184. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ("நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்" என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு யாரை?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 47
பாடம் : 4 எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்.
5185. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்" என்று மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 47
பாடம் : 5 இறுதிக் காலத்தில் கல்வி அகற்றப்படுவதும் கைப்பற்றப்படுவதும் அறியாமையும் குழப்பங்களும் வெளிப்படுவதும்.
5186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைத்துவிடுவதும் மது (அதிகமாக) அருந்தப் படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் (யுக)முடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47
5187. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்ட ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்குப் பின்னர் வேறெவரும் அவர்களிடமிருந்து அதைக் கேட்டு உங்களுக்கு அறிவிக்கமுடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும் விபசாரம் பரவலாக நடைபெறுவதும் மது (அதிகமாக) அருந்தப்படுவதும் (குடும்பத்தில்) ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருக்கும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை குறைந்து) போய், பெண்கள் அதிகமாக ஆவதும் யுகமுடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்.
இதை கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பிஷ்ர் மற்றும் அப்தா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "எனக்குப் பின்னர் வேறெவரும் உங்களுக்கு அறிவிக்காத நபிமொழி ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டுள்ளேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 47
5188. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் இருவரும், "மறுமை நாளுக்கு முன் ஒரு காலகட்டம் வரும். அப்போது கல்வி அகற்றப்பட்டுவிடும்; அறியாமை நிலவும்; "ஹர்ஜ்" பெருகிவிடும். "ஹர்ஜ்" என்பது கொலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இரு அறிவிப்புகளில் "நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறினர்" என்று அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்கள் வழியாக மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூவாயில் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூ மூசா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 47
5189. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இறுதிக் காலத்தில்) காலம் சுருங்கிவிடும்; கல்வி கைப்பற்றப்பட்டுவிடும்; குழப்பங்கள் வெளிப்படும்; (பேராசையின் விளைவாக மக்களின் மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும்; "ஹர்ஜ்" பெருகிவிடும்" என்று சொன்னார்கள்.
"மக்கள், "ஹர்ஜ்" என்றால் என்ன?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொலை" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "காலம் சுருங்கிவிடும்; கல்வி கைப்பற்றப்பட்டுவிடும்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 47
5190. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "காலம் சுருங்கிவிடும்; கல்வி குறைந்துவிடும்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே தொடருகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "கருமித்தனம் உருவாக்கப்படும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 47
5191. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், மக்களி(ன் மனங்களி)லிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துக்கொள்ள மாட்டான். மாறாக,கல்விமான்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் ஒரு கல்வியாளரைக்கூட அவன் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவில்லாமலேயே அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதிமூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உமர் பின் அலீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு ஓர் ஆண்டுக்குப் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை நான் சந்தித்தபோது, அவர்களிடம் அந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அப்போதும் அவர்கள் முன்பு போன்றே (எந்த மாற்றமுமின்றி) அந்த ஹதீஸை அறிவித்தார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 47
5192. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! (நபித்தோழர்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நம்மைக் கடந்து ஹஜ்ஜுக்குச் செல்லவிருக்கிறார்கள் என எனக்குச் செய்தி வந்துள்ளது. எனவே, அவரைச் சந்தித்து அவரிடம் (மார்க்க விளக்கங்களைக்) கே(ட்டுத் தெரிந்துகொ)ள். ஏனெனில், அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான கல்வியறிவைப் பெற்றுள்ளார்"என்று கூறினார்கள்.
ஆகவே, நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவர் கூறி வந்த பல்வேறு செய்திகள் குறித்துக் கேட்டேன். அவற்றில் பின்வரும் செய்தியும் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மனிதர்களி(ன் மனங்களி)லிருந்து ஒரேயடியாகக் கல்வியைப் பறித்துக்கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களது கல்வியுடன் கைப்பற்றிக்கொள்வான். பின்னர் மக்களிடையே அறிவீனர்களான தலைவர்களையே அல்லாஹ் விட்டுவைப்பான். அவர்கள் அறிவின்றியே மக்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன்மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.
பிறகு நான் இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் பாரதூரமாகக் கருதி அதை மறுத்தார்கள். "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் பின் அம்ர் உன்னிடம் சொன்னாரா?" என்று கேட்டார்கள்.
அடுத்த ஆண்டு ஆனபோதும் என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்துள்ளார்கள். அவரைச் சந்தித்துப் பேச்சுக் கொடுத்து முன்பு உன்னிடம் அவர் சொன்ன கல்வி தொடர்பான அந்த ஹதீஸைப் பற்றி அவரிடம் கேள்" என்றார்கள். அவ்வாறே நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் கேட்டேன். முதல் முறை என்னிடம் அறிவித்ததைப் போன்றே (எந்த மாற்றமுமின்றி அந்த ஆண்டிலும்) என்னிடம் அறிவித்தார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தபோது அவர்கள், "அவர் உண்மையே கூறியிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்; சிறிதும் கூட்டவோ குறைக்கவோ செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன்"என்றார்கள்.
அத்தியாயம் : 47
பாடம் : 6 ஒருவர் (மார்க்கத்தில்) நல்ல அல்லது கெட்ட நடைமுறையை உருவாக்குவதும், நல்வழி அல்லது தீய வழிக்கு (மக்களை) அழைப்பதும்.
5193. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கம்பளியாடை அணிந்த கிராமவாசிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களது வறியநிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டிருந்தது. ஆகவே, (அவர்களுக்குத்) தானதர்மம் செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைத் தூண்டினார்கள். மக்கள் (தர்மம் செய்வதில்) தயக்கம் காட்டினர். அ(தன் அடையாளமான)து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் தென்பட்டது.
பிறகு அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை நிறைய வெள்ளியுடன் வந்தார். பிறகு மற்றொருவர் (தர்மத்தைக்கொண்டு) வந்தார். பிறகு ஒவ்வொருவராக (தம்மிடமிருந்த பொருள்களுடன்) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.
யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீயநடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது தானதர்மம் செய்யும்படி (மக்களைத்) தூண்டினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஓர் அடியார் நல்ல நடைமுறையொன்றை உருவாக்கி அவருக்குப்பின் அது செயல் படுத்தப்பட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 47
5194. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 47

பாடம் : 1 அல்லாஹ்வை நினைவுகூருமாறு வந்துள்ள தூண்டல்.
5195. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன்.
அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவுகூர்ந்தால், நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோர் மத்தியில் அவன் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடம் அவனை நான் நினைவுகூருவேன். அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலமாகவும் இடமாகவும் விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன். என்னை நோக்கி அவன் நடந்துவந்தால், அவனை நோக்கி நான் ஓடிச்செல்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலம் இடமாக விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு சாண் அளவு என்னை முன்னோக்கி வந்தால் ஒரு முழம் அளவு அவனை நான் முன்னோக்கிச் செல்வேன். ஒரு முழம் அளவு அவன் என்னை முன்னோக்கி வந்தால், (வலம் இடமாக விரிந்த) இரு கை நீட்டளவு அவனை நான் முன்னோக்கிச் செல்வேன். இரு கை நீட்டளவு அவன் என்னை முன்னோக்கி வந்தால், அதைவிட விரைவாக (நெருங்கி) அவனிடம் நான் செல்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5197. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது "ஜும்தான்” எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, "செல்லுங்கள்: இது "ஜும்தான்" மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர்" என்று சொன்னார்கள்.
மக்கள், "தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 2 அல்லாஹ்வின் திருநாமங்களும் அவற்றை மனனமிட்டவரின் சிறப்பும்.
5198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("அவற்றை மனனமிட்டவர்" என்பதைக் குறிக்க "மன் ஹஃபிழஹா" என்பதற்குப் பகரமாக) "மன் அஹ்ஸாஹா" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48