2098. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 23 "அய்யாமுத் தஷ்ரீக்" (துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அய்யாமுத் தஷ்ரீக்" (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
இதை நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுபைஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அறிவிப்பாளர் காலித் அல்ஹத்தா (ரஹ்) அவர்கள், நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது மேற்கண்ட ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். மேலும், ("பருகுவதற்கும்" என்பதற்குப் பின்னால்) "இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாளாகும்" என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2100. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் "அய்யாமுத் தஷ்ரீக்" நாட்களில் அனுப்பி, "இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்; "மினா"வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்" என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 24 வெள்ளிக்கிழமை (ஒரு நாள்) மட்டும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதன்று.
2101. முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்த ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் நான், "வெள்ளிக்கிழமை (ஒரு நாள் மட்டும்) நோன்பு நோற்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு "ஆம், இந்த இல்லத்தின் அதிபதிமீது ஆணையாக!" என்று ஜாபிர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2102. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்கவேண்டாம்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவைமட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 25 "நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்" எனும் (2:184ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம், "உங்களில் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்" எனும் (2:185ஆவது) வசனத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது என்பதன் விளக்கம்.
2104. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நோன்பு நோற்பதற்குச் சக்தி உள்ளவர்கள் (நோன்பு நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்" எனும் இந்த (2:184ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நாடியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள ("உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்"என்ற 2:185ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 13
2105. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ரமளான் மாதத்தில் நாடினால் நோன்பு நோற்போம்; நாடினால் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு, அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளித்து வந்தோம். இறுதியில் (அந்த நடைமுறையை மாற்றுகின்ற) "உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்" எனும் இந்த (2:185ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 13
பாடம் : 26 ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் "களா"ச் செய்தல்.
2106. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அவற்றை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெதிலும் என்னால் (களாவாக) நிறைவேற்றமுடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டதே இதற்குக் காரணம்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடைய தேவைகளைக் கவனிக்க வேண்டி) இருந்ததே காரணம்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் யஹ்யா (ரஹ்) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இருந்த (பணி) நிலையே அதற்குக் காரணம் என நான் எண்ணுகிறேன்" என யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 13
2107. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (அவர்களுடைய துணைவியரான) எங்களில் ஒருவருக்கு ரமளான் நோன்பு தவறிவிடும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருந்ததால்) அதை அவரால் ஷஅபான் மாதம் வராதவரை "களா"ச் செய்ய முடியாது.
அத்தியாயம் : 13
பாடம் : 27 இறந்துபோனவர் சார்பாக (அவர் தவறவிட்ட) நோன்பைக் "களா"ச் செய்வது.
2108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பை நிறைவேற்ற வேண்டிய ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2109. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையிருந்த நிலையில் இறந்துவிட்டார். (அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் மீது கடன் ஏதும் இருந்தால் அதை நீ நிறைவேற்றுவாய் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்" என்றார். "அவ்வாறாயின், நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுதிவாய்ந்தது அல்லாஹ்வின் கடனே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2110. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருமாத நோன்பு கடமையிருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அதை அவர் சார்பாக நான் நிறைவேற்றலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் தாயார்மீது கடனேதும் இருந்தால், அவர் சார்பாக அதை நீ நிறைவேற்றுவாயா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். "அவ்வாறாயின், நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
முஸ்லிம் பின் இம்ரான் அல்பத்தீன் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை எங்களுக்கு அறிவித்த போது, அல்ஹகம் பின் உதைபா (ரஹ்) மற்றும் சலமா பின் குஹைல் (ரஹ்) ஆகிய இருவரும், "இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்ததை நாங்கள் செவியுற்றுள்ளோம். அப்போது அங்கு நாங்களும் அமர்ந்திருந்தோம்" என்று கூறினர்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2111. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார், தம்மீது நேர்ச்சை நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு "உன் தாயார்மீது ஏதேனும் கடனிருந்த நிலையில் அதை நீ நிறைவேற்றினால், அவர் சார்பாக நிறைவேறி விடாதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பெண்மணி, "ஆம்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் தாயார் சார்பாக நோன்பு நோற்றுக்கொள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2112. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப்பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப்பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப்பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது" என்று சொன்னார்கள். அப்பெண்மணி, "என் தாயார்மீது ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக்கொள்" என்றார்கள். அப்பெண்மணி, "என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டதற்கு, "அவருக்காக நீ ஹஜ் செய்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2113. மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(என் தாயார்மீது) இருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று அப்பெண்மணி கேட்டதாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில், "(என் தாயார்மீது) ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்றே இடம்பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "இரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று இடம்பெற்றுள்ளது.
- இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது. அதில் "ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 13
பாடம் : 28 நோன்பு நோற்றிருப்பவர் விருந்துக்கு அழைக்கப்பட்டால் "நான் நோன்பாளி" என்று அவர் சொல்லிவிட வேண்டும்.
2114. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது விருந்துக்கு அழைக்கப்பட்டால் "நான் நோன்பாளி" என்று அவர் கூறிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 29 நோன்பாளி நாவைக் காப்பது.
2115. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றவராகக் காலைப்பொழுதை அடையும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்;அறிவீனமாக நடந்துகொள்ளவேண்டாம். எவரேனும் அவரை ஏசினாலோ அல்லது வம்புக்கு இழுத்தாலோ "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்; நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 30 நோன்பின் மாண்பு.
2116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "ஆதமின் மைந்தனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும். ஆனால், நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என்று கூறினான். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13