172. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்- அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களைப் பார்க்கவுமாட்டான்" என்றும் இடம்பெற்றுள்ளது.- அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர்(தாம் அம்மூவரும்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு:
ஒருவர், வனாந்தரத்தில் தேவைக்கு அதிகமாகத் தண்ணீரை வைத்திருந்தும், வழிப்போக்கனுக்கு வழங்காமல் அதைத் தடுப்பவர் ஆவார்.
இன்னொருவர், அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும்போது) தமது வியாபாரப்பொருளை ஒருவரிடம் விற்பதற்காகத் தாம் இன்ன விலை கொடுத்து அப்பொருளை வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அவரை நம்பவும் வைத்துவிட்டவர் ஆவார். ஆனால், உண்மை(யான விலை) வேறொன்றாக இருக்கும்.
மற்றொருவர், ஆட்சித் தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தவர் ஆவார். ஆட்சித் தலைவரிடமிருந்து ஆதாயம் கிடைத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்துகொள்வார். கிடைக்காவிட்டால் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறிரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் இன்னொருவரிடம் ஒரு பொருளுக்கு (இன்னின்னவாறு) விலை கூறினார்" என்று (சிறிது வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
174. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உள்ளது. ஒருவர், அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் (பொய்) சத்தியம் செய்தவர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸின் தொடர்ச்சி மேற்கண்ட (173ஆவது) ஹதீஸிலுள்ளதைப் போன்றே வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 47 தற்கொலை செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது; எந்தப் பொருளால் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலமே அவர் நரகத்தில் வேதனை செய்யப்படுவார்; (இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்த) முஸ்லிமைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக்கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக்கொண்டேயிருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
176. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்த்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருளின் மூலம் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது.
இதை அந்த மரத்தினடியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது. ஓர் இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதற்குச் சமம். இவ்வுலகில் எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ, அதன் மூலமே மறுமை நாளில் அவர் வேதனை செய்யப்படுவார். யார் (தனது செல்வத்தை) அதிகமாக்கிக் கொள்வதற்காகப் பொய்வாதம் புரிகிறாரோ அவருக்கு அல்லாஹ் குறைவையே (இழப்பையே) அதிகப்படுத்துவான். யார் (நீதிபதி முன் அளிக்கும்) பிரமாண வாக்குமூலத்தின்போது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ (அவர் தம்மீது கோபம் கொண்ட நிலையிலேயே அல்லாஹ்வைச் சந்திப்பார்).
இதை ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
177. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ அதன் மூலமே அல்லாஹ் அவரை நரக நெருப்பில் வேதனை செய்வான்.
இதை ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸிலேயே மேற்கண்டவாறு இடம் பெற்றுள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், "யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருள் மூலம் ஒருவர் தம்மைத்தாமே அறுத்துக்(கொண்டு தற்கொலை செய்து) கொள்கிறாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் அறுக்கப்படுவார்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
178. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹுனைன் போரில் கலந்து கொண்டோம்.அப்(போரின்)போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடன்) இருந்த முஸ்லிம் என்று கருதப்பட்ட ஒருவரைப் பற்றி "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த நபர் கடுமையாகப் போரிட்டார். அதனால் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன. அப்போது (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் யாரைப் பற்றி "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று சொன்னீர்களோ அவர் இன்றைய தினம் கடுமையாகப் போரிட்டு இறந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "அவர் நரகத்திற்குத்தான்" என்றார்கள். உடனே முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை) சந்தேகப்படும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். நிலைமை இவ்வாறிருக்க, "அந்த மனிதர் (போரில்) இறக்கவில்லை. அவருக்குக் கடுமையான காயம்தான் ஏற்பட்டது" என்று கூறப்பட்டது. பின்னர் இரவு வந்தபோது அவரால் வலி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ் மிகவும் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதரும் ஆவேன் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்றார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் "(துன்பங்களை எல்லா நிலைகளிலும் சகித்துக்கொண்டு அடிபணிந்து வாழ்ந்த) முஸ்லிமான மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழைவார். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமும் வலுவூட்டுகிறான்" என்று மக்களிடையே அறிவிப்புச் செய்யுமாறு கூறினார்கள். அவ்வாறே பிலால் (ரலி) அவர்கள் மக்களிடையே அறிவிப்புச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
179. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபரில்) சந்தித்துப் போரிட்டனர். (ஒருநாள் போர் முடிந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் படையினரிடமும், எதிர் அணியினர் தம் படையினரிடமும் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ("குஸ்மான்" என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் இருந்தார். அவர் (எதிரிகளின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (மற்றும் பிரிந்து செல்லாத) எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார். "இன்று இவரைப் போன்று நம்மில் வேறு யாரும் தேவையான அளவிற்கு (நிறைவாகப்) போரிடவில்லை" என்று மக்கள் பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று (அந்த வீரரைப் பற்றிக்) கூறினார்கள். உடனே மக்களில் ஒருவர், "நான் அவருடன் தொடர்ந்து செல்லப் போகிறேன்" என்று கூறிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார்.
அந்த வீரர் நிற்கும்போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்துசென்றால் அவருடன் இவரும் விரைந்துசென்றார். இந்நிலையில் அவ்வீரர் (போரில்) கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி தனது வாளின் கீழ்முனையை பூமியில் (நட்டு) வைத்து, அதன் (கூரான) மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையே வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை சாய்த்துக்கொண்டு தன்னை மாய்த்துக்கொண்டார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதிகூறுகின்றேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே, நான் "அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு" என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்துப் பின்தொடர்ந்தேன்.) அவர் (ஒரு கட்டத்தில் எதிரிகளால்) மிகக் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தனது வாளின் கீழ்முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது சாய்த்துக்கொண்டு தன்னையே மாய்த்துக்கொண்டார்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். அவ்வாறே ஒரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
180. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உங்களுக்கு முன்னிருந்த (பனூ இஸ்ராயீல்) மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரைத் தொல்லைபடுத்தியபோது (பொறுமை இழந்த) அவர் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்துபோனார். உங்கள் இறைவன் "(என் அடியான் அவசரப்பட்டு தன்னை அழித்துக் கொண்டதால்) அவன்மீது நான் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டேன்" என்று கூறினான்.
(இதை ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷைபான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)
பிறகு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் (பஸ்ராவிலுள்ள) பள்ளிவாசலை நோக்கித் தமது கையை நீட்டியவாறு, "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸைத் தாம் செவியுற்றதாக இந்தப் பள்ளிவாசலில் வைத்துத்தான் எனக்கு அறிவித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
181. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் (இந்த நபிமொழியை பஸ்ராவிலுள்ள) இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். (அவர்கள் அறிவித்ததிலிருந்து அதை) நாம் மறக்கவில்லை; ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைத்திருப்பார்களோ என்ற அச்சமும் நமக்கு இல்லை. ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரின் உடலில் கொப்புளம் கிளம்பியது" என்று தொடங்கி (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 48 (பங்கிடப்படாத போர்ச்செல்வம் போன்ற பொதுச் சொத்துகளை) கையாடல் செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இறைநம்பிக்கை கொண்டவரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்.
182. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)" என்றார்கள்.
பிறகு (என்னிடம்) "கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, "இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!" என்றார்கள். அவ்வாறே நானும் சென்று, "அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று (மக்களிடையே) அறிவித்தேன்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
183. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின்போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாகப் பெறவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனா அருகிலுள்ள) "வாதீ(அல்குரா)" எனுமிடத்தை நோக்கி நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய (மித்அம் என்றழைக்கப்படும்) ஓர் அடிமையும் இருந்தார். அவரை "பனுள்ளுபைப்" குலத்திலுள்ள ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அவர் "ரிஃபாஆ பின் ஸைத்" என்று அழைக்கப் பட்டார்.
நாங்கள் அந்த (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!" என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒரு மனிதர் "ஒரு செருப்பு வாரை" அல்லது "இரண்டு செருப்பு வார்களை"க் கொண்டு வந்து "(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) "நரகத்தின் செருப்பு வார்" அல்லது "நரகத்தின் இரு செருப்பு வார்கள்" ஆகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 49 "தற்கொலை செய்துகொண்டவர் இறைமறுப்பாளர் (காஃபிர்) அல்லர்" என்பதற்கான ஆதாரம்.
184. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குக் கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும்போது எதிரிகளிடமிருந்து உங்களைத்) தற்காத்துக்கொள்ள உறுதியான கோட்டை கொத்தளம் தங்களுக்கு வேண்டுமா? (அத்தகைய கோட்டை தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ளது)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. (அந்த வாய்ப்பை மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததே அதற்குக் காரணமாகும். நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்றபோது நபி (ஸல்) அவர்களிடம் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவிற்குச் சென்றபோது) மதீனாவின் தட்பவெப்பநிலை அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டுவிட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்துத் தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்துவிட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். அவரிடம், "உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் நபி (ஸல்) அவர்களிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்" என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள், "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?" என்று கேட்டார்கள். "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்கமாட்டோம்" என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் சொன்னார்.
துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 50 மறுமை நாள் நெருங்கும்போது ஒரு காற்று வீசும்; எவருடைய உள்ளத்தில் சிறிதளவு இறைநம்பிக்கை இருக்குமோ அவ(ரது உயி)ரை அது கைப்பற்றும்.
185. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாள் நெருங்கும்போது) யமன் நாட்டி(ன் திசையி)லிருந்து பட்டைவிட மென்மையான ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். எவரது உள்ளத்தில் "கடுகளவு" அல்லது "அணுவளவு" இறைநம்பிக்கை உள்ளதோ அவ(ரது உயி)ரை அது கைப்பற்றிக் கொள்ளும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூஅல்கமா அல்ஃபர்வீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கடுகளவு" என்றும் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அணுவளவு" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 51 குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரியும்படி வந்துள்ள தூண்டுதல்.
186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 52 இறைநம்பிக்கையாளர் தமது (நற்)செயல் அழிந்துவிடுமோ என அஞ்சுதல்.
187. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!" எனும் இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்ற பின் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்து விட்டார்கள். "நான் நரகவாசிகளில் ஒருவன்" என்று கூறிக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வராமல் (வீட்டிலேயே) அடைந்துகிடந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் (ஸாபித் குறித்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம், "அபூ அம்ர்! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "அவர் என் பக்கத்து வீட்டுக்காரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள் ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.
அப்போது ஸாபித் (ரலி) அவர்கள், "இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான், நரகவாசிகளில் ஒருவன்தான்" என்று கூறினார்கள். இதை சஅத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
188. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்கள் அன்சாரிகளின் பேச்சாளராக இருந்தார். இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்றபோது..." என்று தொடங்கி மற்றவை மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆனால், அதில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பேதும் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உங்கள் குரல்களை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் எனும் (49:2ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது..." என்று ஹதீஸ் தொடங்குகிறது. அந்த ஹதீஸிலும் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை. அதில் "எங்களிடையே நடமாடிய ஒரு சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் (ரலி) அவர்களைக் கருதிவந்தோம்" என்று (அனஸ் (ரலி) அவர்கள்) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 53 அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காக ஒருவர் (மறுமையில்) தண்டிக்கப்படுவாரா?
189. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காகத் தண்டிக்கப்படுவோமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் (இணைந்து தொடர்ந்து) நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப் படமாட்டார். யார் (இஸ்லாத்தில் நுழைந்த பிறகு "இறைமறுப்பு" எனும்) தீமை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகவும் இஸ்லாத்தில் (நுழைந்த பிறகு) செய்த தவறுகளுக்காகவும் (மறுமையில்) தண்டிக்கப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
190. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "யார் இஸ்லாத்தில் (நுழைந்து தொடர்ந்து) நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றுக்காக தண்டிக்கப்படமாட்டார். யார் இஸ்லாத்தில் (நுழைந்த பிறகு "இறைமறுப்பு" எனும்) தீமை புரிகிறாரோ அவர் (இஸ்லாத்தைத் தழுவுவதற்கு) முன் செய்த தவறுகளுக்காகவும் (இஸ்லாத்தை ஏற்ற பின் செய்த இந்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
191. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1