152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் அவனைச் சந்திக்கிறாரோ அவர் சொர்க்கம் செல்வார். யார் அவனுக்கு இணைவைத்தவராக அவனைச் சந்திக்கிறாரோ அவர் நரகம் செல்வார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாயிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஜாபிர் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்" என்று (முத்தஸிலாகவு)ம், அபூஅய்யூப் அல்ஃகைலானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது" என்று (முன்கத்திஉ ஆகவு)ம் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
153. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்" என்று நற்செய்தி கூறினார். உடனே நான், "அவர் விபசாரம் செய்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் "விபசாரம் செய்தாலும் திருடினாலும் சரியே" என்று பதிலளித்தார்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
154. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் விழித்திருந்தார்கள். நான் அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை("லா இலாஹ இல்லல்லாஹ்") என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் எந்த அடியாரும் சொர்க்கம் புகுந்தே தீருவார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுந்தே தீருவார்)" என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுந்தே தீருவார்)" என்று சொன்னார்கள்.- இவ்வாறு மூன்று தடவை நடந்தது. நான்காவது தடவை "(அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்.) அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபுல்அஸ்வத் அத்தீலீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அபூதர் (ரலி) அவர்கள் "அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறியபடியே புறப்பட்டுச் சென்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 41 இறைமறுப்பாளர் ஒருவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (கலிமாச்) சொன்னதற்குப் பிறகு அவரைக் கொலை செய்வது கூடாது.
155. மிக்தாத் பின் அம்ர் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னை விட்டு ஓடிப்போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து)கொண்டு, "அல்லாஹ்வுக்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்" என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வேண்டாம்) அவனைக் கொல்லாதே!" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது கையைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னான்!" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
156. மேற்கண்ட ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் அவனைக் கொல்வதற்கு முற்படும் போது அவன் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினான். (இதற்குப் பிறகு அவனை நான் கொல்லலாமா? என்று மிக்தாத் (ரலி) அவர்கள் வினவினார்கள்) என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
157. அதாஉ பின் யஸீத் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்தவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கேற்றவருமான மிக்தாத் பின் அம்ர் பின் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்: இறைமறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன்..." என்று கேட்டார்கள்.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட (155ஆவது) ஹதீஸிலுள்ளதைப் போன்றே உபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
158. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பிரிவொன்றில் அனுப்பி வைத்தார்கள். ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த "ஹுரக்காத்" கூட்டத்தாரிடம் நாங்கள் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம்.) அப்போது நான் ஒருவரைச் சந்தித்தேன். (அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டபோது) அவர், "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னார். நான் (எனது ஈட்டியால்) அவரைத் தாக்கி(க் கொன்று)விட்டேன். ஆனால் அது என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. (திரும்பி வந்தபோது) நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகுமா அவரை நீ கொன்றாய்?" என்று கேட்டார்கள். "ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு சொன்னார், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். "அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?" என்று (கடிந்து) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் (அதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றிராமல்) அன்றைய தினத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்றுகூட ஆசைப்பட்டேன்.
எனவேதான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! எந்த முஸ்லிமுடன் நான் போரிடுவதாக இருந்தாலும் அவருடன் இந்தச் "சின்ன வயிற்றுக்காரர்" -உசாமா- போரிடாதவரை போரிடமாட்டேன்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் (சஅத் (ரலி) அவர்களிடம்), "(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்" (8:39) என்று அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) குழப்பம் முற்றிலும் நீங்கிவிட வேண்டுமென்பதற்காக நாங்கள் போரிட்டோம். ஆனால், நீரும் உம் தோழர்களும் குழப்பம் உருவாக வேண்டுமென்பதற்காகப் போரை விரும்புகிறீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 1
159. உசாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த "ஹுரக்கா" கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச்சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டபோது, அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக்கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றுவிட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம், "உசாமா! அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?" என்று கேட்டார்கள். நான், "அவர் உயிரைப் பாதுகாக்கவே (அவ்வாறு கூறினார்)" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் "அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?" என்று (மீண்டும்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் "(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!)" என்றுகூட ஆசைப்பட்டேன்.
அத்தியாயம் : 1
160. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது காலத்தில் நடந்த சண்டையின் போது ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அஸ்அஸ் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் "எனக்காக உங்களுடைய சகோதரர்களில் சிலரை ஒன்றுகூட்டுங்கள். அவர்களிடம் நான் பேச வேண்டும்" என்று சொல்லி அனுப்பினார்கள். (தம் சகோதரர்களை அழைத்து வருமாறு) அஸ்அஸ் ஒரு தூதுவரை அவர்களிடம் அனுப்பினார். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடியதும் (அவர்களிடம்) மஞ்சள் நிற முக்காட்டு ஆடை ஒன்றை அணிந்து கொண்டு ஜுன்தப் (ரலி) அவர்கள் வந்து "நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை (தொடர்ந்து) பேசுங்கள்" என்று சொன்னார்கள். அதையடுத்து அவர்கள் ஒவ்வொருவராக பேசிக்கொண்டே வந்து ஜுன்தப் (ரலி) அவர்கள் பேச வேண்டிய முறை வந்தபோது அவர்கள் தமது தலையிலிருந்த முக்காட்டை விலக்கிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: நான் உங்களிடம் வரும்போது உங்களுக்கு உங்களுடைய நபியின் செய்தி ஒன்றை அறிவிக்க வேண்டும் என நான் எண்ணியிருக்கவில்லை. (ஆனால், அறிவிக்க வேண்டுமென இப்போது விரும்புகிறேன்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரை நோக்கி முஸ்லிம்களின் படைப் பிரிவொன்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் (அக்கூட்டத்தாரிடம் சென்று) அவர்களை(ப் போர்க்களத்தில்) சந்தித்தனர். அப்போது இணைவைப்பாளர்களில் ஒரு மனிதர் முஸ்லிம்களில் எவரையேனும் தாக்க முற்படும்போதெல்லாம் (குறி தவறாமல்) தாக்கிக் கொலை செய்துகொண்டிந்தார். இந்நிலையில் முஸ்லிம்களில் ஒருவர் (அவர் உசாமா பின் ஸைத் என்றே நாங்கள் பேசிக்கொண்டதுண்டு) அந்த எதிரி அயர்ந்துபோகும் நேரத்திற்காகக் காத்திருந்தார். (அந்த நேரமும் வந்தது.) அந்த மனிதர்மீது இவர் வாளை உயர்த்தியபோது அவர் (தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ உறுதிமொழியை) கூறினார். ஆனால் (அதைப் பொருட்படுத்தாமல்) உசாமா (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கொன்றுவிட்டார்கள். (அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.) அந்த வெற்றியை அறிவிப்பதற்காக ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் அந்தப் போரின் நிலவரம் குறித்து விசாரித்தார்கள். அப்போது அவர் நடந்த நிகழ்ச்சிகளையும் (கொல்லப்பட்ட) அந்த மனிதர் நடந்துகொண்ட விதம் பற்றியும் தெரிவித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை வரவழைத்து அவர்களிடம் "ஏன் அவரைக் கொன்றாய்?" என்று கேட்டார்கள். உசாமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார்.இன்னார் இன்னாரை அவர் கொன்றுவிட்டார் (சிலருடைய பெயரை உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டார்கள்) ஆகவே, நான் அவரைத் தாக்கினேன். அவர் வாளைக் கண்டதும் (பயந்துபோய்) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ உறுதிமொழி) கூறினார்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை நீ கொன்றுவிட்டாயா?" என்று கேட்டார்கள். உசாமா, "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர் ஏற்றுக்கொண்ட ஏகத்துவ உறுதிமொழியான) "லா இலாஹ இல்லல்லாஹ்" மறுமை நாளில் (உனக்கெதிரான சாட்சியாக) வரும்போது நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்கள். இதைவிட அதிகமாக வேறெதையும் கேட்காமல், "லா இலாஹா இல்லல்லாஹ்" மறுமை நாளில் வரும் போது நீ என்ன செய்யப்போகிறாய்?" என்றே (திரும்பத் திரும்ப) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 42 "நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
161. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
162. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக வாளை உருவியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை சலமா பின் அல்அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
163. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 43 "நமக்கு மோசடி செய்தவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 44 (துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்வது, சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்வது, அறியாமைக் கால வழக்கப்படி புலம்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவன், அல்லது சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவன், அல்லது அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகின்றவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு நுமைர், அபூபக்ர் பின் அபீஷைபா ஆகியோரது அறிவிப்பில் "அல்லது" என்பது இடம்பெறவில்லை. "அறைந்துகொள்பவனும் கிழித்துக்கொள்பவனும் புலம்புகின்றவனும்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
166. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ("அல்லது" என்பது இடம்பெறாமல்) "அறைந்துகொள்பவனும் கிழித்துக் கொள்பவனும் புலம்புகின்றவனும்" என்றே காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
167. அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் (தமது) கடுமையான (மரண) வேதனையில் மயக்கமடைந்துவிட்டார்கள். அவர்களது தலை அவர்களுடைய குடும்பப் பெண் ஒருவரின் மடிமீது இருந்தது. அப்போது அவர்களுடைய குடும்பத்துப் பெண்மணி ஒருவர் ஓலமிட்டு அழுதார். அபூமூசா (ரலி) அவர்களால் அப்பெண்ணுக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை.
பிறகு மயக்கம் தெளிந்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரை விட்டுத் தமது பொறுப்பை விலக்கிக்கொண்டார்களோ அவரை விட்டு நானும் என் பொறுப்பை விலக்கிக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக்கொள்ளும் பெண், ஆடையைக் கிழித்துக்கொள்ளும் பெண் ஆகியோரிடமிருந்து தமது பொறுப்பை விலக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
- அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்), அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) மயக்கமடைந்துவிட்டார்கள். அப்போது அவர்களின் துணைவியார் உம்மு அப்தில்லாஹ் சப்தமிட்டு (ஒப்பாரிவைத்து) அழுது கொண்டே (அங்கு) வந்தார். பிறகு மயக்கம் தெளிந்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(துக்கத்தில்) தலையை மழித்துக்கொண்டவர், ஓலமிட்டு அழுதவர், ஆடையைக் கிழித்துக்கொண்டவர் ஆகியோரிடமிருந்து நான் எனது பொறுப்பை விலகிக் கொண்டேன்" (எனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது) என்று கூறியது உனக்குத் தெரியாதா?" என்று அபூமூசா (ரலி) அவர்கள் கேட்டார்கள். இந்த ஹதீஸைத் தம் துணைவியாருக்கு ஏற்கெனவே அபூமூசா (ரலி) அவர்கள் கூறியிருந்தார்கள். (எனவேதான் "உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள்.)
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இயாள் அல்அஷ்அரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் எனது பொறுப்பை விலக்கிக்கொண்டேன்" என்பதற்கு பதிலாக "நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 45 கோள் சொல்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
168. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்கள்) பேசிக்கொள்வதை (ஆட்சியாளர்வரைக் கொண்டுபோய்) கோள் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
169. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்களிடையே நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளர்வரைக் கொண்டு போய்ச் சேர்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் (ஒரு நாள்) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது மக்கள், "இதோ! இவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளர் வரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர்களில் ஒருவர் என்று (ஒருவரைச் சுட்டிக்காட்டி) கூறினர். அந்த மனிதர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
170. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்தார். உடனே ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் "இதோ! இந்த மனிதர் (நாம் பேசிக்கொள்ளும்) பல விஷயங்களை ஆட்சியாளர் வரைக் கொண்டு போய்ச் சொல்கிறார்" என்று கூறப்பட்டது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் அந்த மனிதருக்குக் கேட்கும் விதமாக, "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 46 கீழங்கியை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டுவது,கொடுத்த நன்கொடையைச் சொல்லிக் காட்டுவது, பொய்ச் சத்தியம் செய்து சரக்கை விற்பனை செய்வது ஆகியன வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளன; (இந்த) மூன்று (செயல்களைச் செய்கின்ற) பேர்களிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; துன்பம் தரும் வேதனைதான் அவர்களுக்கு உண்டு.
171. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்: 1. செய்த தருமத்தைச் சொல்லிக் காட்டுபவர். அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்கமாட்டார். 2. பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர். 3. தமது கீழங்கியை (கணுக் காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவர்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(அந்த) மூன்று பேரிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1