பாடம் : 54 முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடுகிறது. ஹிஜ்ரத்தும் ஹஜ்ஜும் அவ்வாறுதான்.
192. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?" என்று கேட்டார். உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.
(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.
(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?" என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவிலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன்.
பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
193. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்களில் சிலர், நிறைய கொலைகளைப் புரிந்திருந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். பிறகு (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வோம்)" என்று கூறினர்.
அப்போது, "(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரம் புரிவதில்லை. ஆகவே, யார் இவற்றைச் செய்கிறாரோ அவர் தண்டனை அடைய நேரிடும்" எனும் (25:68ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும், "(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறித் தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணைமீது அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்..." எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 55 இஸ்லாத்தைத் தழுவுதற்கு முன் இறைமறுப்பாளர் ஒருவர் செய்த (நற்)செயலின் நிலையென்ன?
194. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் செய்துவந்த நல்லறங்களைப் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு (நற்பலன்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்" என்று எனக்கு பதிலளித்தார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
195. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் தானதர்மம், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்பலன் ஏதும் உண்டா, கூறுங்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்" என்று பதிலளித்தார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் (நன்மையை நாடி) பல நற்பணிகள் ஆற்றிவந்தேன். (அவற்றுக்கு மறுமையில் எனக்குப் பிரதிபலன் உண்டா?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்(; உமக்கு நற்பலன் உண்டு)" என்று பதிலளித்தார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் செய்துவந்த நற்செயல் எதையும் இஸ்லாத்திலும் செய்யாமல் இருக்கமாட்டேன்" என்று கூறினேன்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
196. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு பயண ஒட்டகங்களை தர்மம் செய்தார்கள்; அவ்வாறே அன்னார் இஸ்லாத்தைத் தழுவிய பிறகும் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள். நூறு பயண ஒட்டகங்களை தர்மம் செய்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறு கேட்டார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 56 இறைநம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும்.
197. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு" எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. மேலும், அவர்கள் "எங்களில் யார்தாம் தமக்குத் தாமே அநீதி இழைக்காதவர்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கின்ற அர்த்தம் இல்லை. உண்மையில் (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் "என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது தான் மாபெரும் அநீதியாகும்" என்று சொன்ன(தாக 31:13ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்ப)துதான் அதற்குப் பொருள் ஆகும்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
198. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 57 தூயவனான அல்லாஹ், அவரவர் ஆற்றலுக்கு ஏற்பவே சுமைகளைத் தருகின்றான்.
199. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன; உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். அவன் நாடியவர்களை மன்னிப்பான்; அவன் நாடியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் உள்ளவன் ஆவான்" எனும் (2:284ஆவது) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்குட்பட்ட தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம் (ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) தங்களுக்கு (மேற்கண்ட) இந்த வசனம் அருளப்பெற்றுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு முந்தைய இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று "செவியுற்றோம்; மாறு செய்தோம்" என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம்.(அவ்வாறு கூறிவிடாதீர்கள். மாறாக,) "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றே கூறுங்கள்" என்றார்கள். அவ்வாறே மக்கள், "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். (எங்களின்) மீட்சியும் உன்னிடமே உள்ளது" என்று கூறினர். மக்கள் இவ்வாறு சொல்லச் சொல்ல அவர்களின் நாவு (இறைவனுக்குப்) பணிந்தது (உள்ளமும்தான்).
அதைத் தொடர்ந்து அல்லாஹ், "(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்). (இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்று சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்டமாட்டோம். "எங்கள் அதிபதியே! நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றும் அவர்கள் வேண்டுகிறார்கள்" எனும் (2:285ஆவது) வசனத்தை அருளினான்.
ஆக, மக்கள் இவ்வாறு செயல்பட்டதையடுத்து அல்லாஹ், ("உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் மறைத்தாலும் உங்களிடம் அல்லாஹ் விசாரணை செய்வான்" எனும்) முந்திய வசனத்(தின் சட்டத்)தை மாற்றி (அதற்கு பதிலாகப்) பின்வரும் வசனத்தை அருளினான்: எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பை அல்லாஹ் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களை தண்டித்து விடாதே! (2:286). "ஆகட்டும்! (அவ்வாறே செய்கிறேன்)" என்றான் அல்லாஹ்.
"எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்திவிடாதே!" அப்போதும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
"எங்கள் சக்திக்கு மீறிய (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள்மீது சுமத்திவிடாதே!" அதற்கும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
"எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்; மறுக்கின்ற கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!" அதற்கும் "சரி! ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
200. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான்" எனும் இந்த (2:284ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று அப்போது ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், "செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்; எங்களை ஒப்படைத்தோம்" (சமிஃனா, வ அதஃனா, வ சல்லம்னா) என்று கூறுங்கள்" என்றார்கள்.
உடனே (மக்களும் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் நம்பிக்கையை ஊட்டினான். மேலும், "அல்லாஹ் எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பைச் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே!) "எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!" (என்று பிரார்த்தியுங்கள்)" எனும் (2:286ஆவது) வசனத் தொடரை அல்லாஹ் அருளினான். (அவ்வாறே மக்கள் பிரார்த்தித்ததும்) அல்லாஹ் "(உங்கள் பிரார்த்தனையை ஏற்று) அவ்வாறே செய்தேன்" என்றான்.
"எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்தாதிருப்பாயாக!" "அவ்வாறே செய்தேன்" என்றான் அல்லாஹ்.
"எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்" அதற்கும் அல்லாஹ் "அவ்வாறே செய்தேன்" என்றான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 58 உள்ளத்தில் தோன்றும் கெட்ட எண்ணங்களும் ஆசைகளும் (செயல் வடிவம் பெற்று) உறுதியாகாவிட்டால் அவற்றை அல்லாஹ் மன்னிக்கிறான்.
201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் (வெளிப்படுத்திப்) பேசாமல், அல்லது அதன்படி செயல்படாமல் இருக்கும்வரை அல்லாஹ் மன்னிக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ், என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் (அதன்படி) செயல்படாமல், அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாமல் இருக்கும்வரை மன்னிக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 59 ஓர் அடியார் நன்மை செய்ய வேண்டும் என எண்ணினாலே அது (நன்மையாகப்) பதிவு செய்யப்படும்; தீமை செய்ய வேண்டும் என எண்ணுவதால் (மட்டும் தீமையாக) அது பதிவு செய்யப்படுவதில்லை.
203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் (நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் வானவர்களிடம்) கூறினான்: என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணிவிட்டாலே அதை நீங்கள் பதிவு செய்துவிடாதீர்கள். தான் எண்ணியபடி அவன் (அந்தத் தீமையை) செயல்படுத்திவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை ஒரு நன்மையாகவே பதிவு செய்யுங்கள். எண்ணியபடி அந்த நன்மையை அவன் செய்து முடித்துவிட்டால் அதைப் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
204. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
205. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து (நபித்தோழர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்குப் பல ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றுதான் (பின்வரும்) இந்த ஹதீஸும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மை செய்ய வேண்டும் என நினைத்தாலே, அவன் அதைச் செய்து முடிக்காவிட்டாலும் ஒரு நன்மையாகவே அதை நான் பதிவு செய்வேன். அதை அவன் செய்து முடித்து விட்டாலோ, அதைப் போன்ற பத்து நன்மைகளாக அதை நான் பதிவு செய்வேன். (அதே நேரத்தில்) அவன் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதைச் செய்யாமல் இருக்கும்வரை நான் மன்னிப்பேன். அவ்வாறு தீமை செய்துவிட்டால் செய்ததற்கொப்ப ஒரு குற்றமாகவே அதை நான் பதிவு செய்வேன்.
தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள், "இறைவா! உன்னுடைய இந்த அடியான் ஒரு தீமையைச் செய்ய விரும்புகின்றானே?" என்று -அந்த அடியானைப் பற்றி அல்லாஹ் நன்கு தெரிந்திருந்தும்- கேட்கின்றனர். அதற்கு அல்லாஹ் அவனைக் கண்காணித்துவாருங்கள்! அவ்வாறு அந்தத் தீமையை அவன் செய்து முடித்துவிட்டால் செய்ததற்கொப்ப ஒரு குற்றமாகவே அதை நீங்கள் பதிவு செய்யுங்கள். எண்ணியபடி அவன் அந்தத் தீமையைச் செய்யாமல் இருந்துவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். ஏனெனில், என் (மீதிருந்த அச்சத்தி)னால்தான் அதை அவன் கைவிட்டான்" என்று கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகுபடுத்திக் கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் அதைப் போன்று பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்குவரை (நன்மை) பதிவு செய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அதற்கொப்ப ஒரு தீமையே (அவர் இறைவனைச் சந்திக்கும்வரை) பதிவு செய்யப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
206. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என(மனத்தில்) எண்ணிவிட்டாலே (அதைச் செய்யா விட்டாலும்) அது ஒரு நன்மையாகவே பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணி, எண்ணிய படி அதை அவர் செய்து முடித்துவிட்டால் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக அது பதிவு செய்யப்படும். (அதே நேரத்தில்) ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் அது (ஒரு குற்றமாகப்) பதியப்படுவதில்லை. எண்ணியபடியே அவர் செய்து முடித்தால் அது (ஒரேயொரு குற்றமாக மட்டுமே) பதிவு செய்யப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
207. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அவற்றை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே (அதைச் செயல்படுத்தாவிட்டாலும்) அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழுமையான நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
அத்தியாயம் : 1
208. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(ஒருவர் தாம் எண்ணியபடி ஒரு தீமையைச் செய்து விட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே அல்லாஹ் எழுதுகிறான்.) அல்லது அதையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (இத்துணை விசாலமான இறையன்புக்குப் பிறகும் ஒருவர் பாவத்தில் மூழ்கி அழிகின்றார் என்றால்,) அல்லாஹ்வின் திட்டப்படி அழியக்கூடியவர் தாம் (அவ்வாறு) அழிந்துபோவார்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 60 இறைநம்பிக்கை தொடர்பாக ஏற்படும் மனக்குழப்பமும் அந்தக் குழப்பத்தை உணர்கின்றவர் சொல்ல வேண்டியதும்.
209. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்கள் உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
210. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
211. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "மனக் குழப்பம்" குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று பதிலளித்தார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1