92. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் கிழக்குத் திசையில் (பாரசீக அக்னி ஆராதனையாளர்களிடையே) காணப்படும்.இறைநம்பிக்கை ஹிஜாஸ்வாசிகளிடையே காணப்படும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம்:22 இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது; இறைநம்பிக்கையாளர்களை நேசிப்பதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே; சலாத்தை பரப்புவது அந்த நேசம் ஏற்படக் காரணமாக அமையும்.
93. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
94. மேற்கண்ட ஹதீஸைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). அவர்கள், “என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது“ என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம்:23 மார்க்கம் (தீன்) என்பதே ”””நலம் நாடுவது” தான்.
95. தமீமுத் தாரீ (ரலி) அவர்கல் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது“ தான் என்று கூறினார்கள்.நாங்கள்,யாருக்கு (நலம் நாடுவது)?“ என்று கேட்டோம்.நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்“ என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ்ஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்களிடம் “அம்ர் அவர்கள் கஅகாஃ அவர்களிடலிருந்தும்,அவர் உங்கள் தந்தை அபூஸாலிஹ் அவர்களிடமிருந்தும் இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள்“ என்றேன்.அதற்கு சுஹைல் “எனக்கும் என் தந்தைக்கும் இடையே வேறொருவர் அறிவிப்பாளராக இருப்பதை நான் விரும்பவில்லை“ என்று கூறியதுடன், “என் தந்தை யாரிடமிருந்து இந்த ஹதீஸைக் கேட்டார்களோ அவரிடமிருந்தே நானும் கேட்டேன்.அவர் எனக்கு ஷாமில் (சிரியாவில்) நண்பராக இருந்தார் “என்றும் கூறினார்கள்.பின்னர் அந்த நண்பரான அதா பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாகவே சுஹைல் அறிவித்தார்.
அத்தியாயம் : 1
96. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
97. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தொழுகையைக் கடைப்பிடிப்பதாகவும்,ஸகாத் வழங்குவதாகவும்,ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.
இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
98. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் நான் முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நலம் நாடுவதாக உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.
இதை ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
99. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களிடம் நான் (அவர்களின் கட்டளையைச்) செவியேற்று (அதற்குக்) கீழ்படிவதாக உறுதிமொழி அளித்தேன்.அப்போது “என்னால் இயன்ற விஷயங்களில்” “ என்று சேர்த்துக் கூறும்படி எனக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.மேலும்,ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நனமை நாடுவேன் என்றும் உறுதிமொழி அளித்தேன்.
இதை ஷஅபீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம்:24 பாவங்களால் இறைநம்பிக்கை குறைகிறது;பாவத்தில் ஈடுபட்டுள்ளவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று கூறுவது,நிறைவான இறைநம்பிக்கை அவனிடம் இல்லை என்ற கருத்தில்தான்.
100. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்.திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.(மது அருந்துகின்றவன்)மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மக்களுக்கு அறிவித்துவந்தார்கள்.பிறகு “மேற்கண்ட குற்றங்களுடன் பின்வரும் குற்றத்தையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் சேர்த்துக் கூறிவந்தார்கள் “என்று கூறுவார்கள்:மக்களின் மதிப்பு மிக்க செல்வத்தை அவர்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
101. இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.
அதில் (ஹதீஸில் இடம்பெற்றுள்ள மூன்று விஷயங்களுடன்) “மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிப்பவன் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிப்பதில்லை “என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.” “மக்களின் மதிப்பு மிக்க செல்வம்“ எனும் வாசகத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து சயீத் பின் முஸய்யப் (ரஹ்),அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்(ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள இதைப் போன்ற ஹதீஸில் “கொள்ளையடித்தல்“ தொடர்பான தகவலைத் தவிர மற்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 1
102. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் கொள்ளையடித்தல் பற்றி இடம்பெற்றுள்ளது. “மதிப்பு மிக்க செல்வத்தை“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
103. மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
மற்றோர் அறிவிப்பில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களது மேற்கண்ட ஹதீஸைப் போன்ற எல்லாம் இடம்பெற்றுள்ளது.
ஆயினும் அல்அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்),ஸஃப்வான் பின் சுலைம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்க (கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்) “ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
ஹம்மான் பின் முஅப்பிஹ் (ரஹ்) அவர்கல் தமது அறிவிப்பில் “ இறைநம்பிக்கையாளர்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் அதை கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான் “என்று அறிவித்துள்ளார்கள்.மேலும், “மோசடி செய்பவன் செய்யும் போது அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை.(இவற்றிலிருந்து விலகிக் கொள்ளுமாறு) உங்களை நான் எச்சரிக்கிறேன்;உங்களை எச்சரிக்கிறேன்” “ என்றும் (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கல் என) அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
104. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரியும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்.(திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.(மது அருந்துகின்றவன்) மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான்.மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரல் பின்னர்தான் ஏற்படுகிறது.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
105. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம்:25 நயவஞ்சகனின் குணங்கள்.
106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார்.எவரிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டுவிடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
பேசினால் பொய் சொல்வதும்,ஒப்பந்தம் செய்து கொண்டால் (நம்பிக்கை) மோசடி செய்வதும்,வாக்களித்தால் மாறுசெய்வதும்,வழக்காடினால் நேர்மை தவறுவது தான் அவை (நான்கும்).
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இவற்றில் ஏதேனும் ஒரு குணம் அவரிடம் இருந்தால் நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவரிடம் இருக்கிறது“ என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்:அவன் பேசும்போது பொய் உரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று குணங்கள் நயவஞ்சகனின் அடையாளங்களில் அடங்கும்: பேசும்போது பொய் உரைப்பதும்,வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வதும், நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வதும்தான் அவை (மூன்றும்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
109. மேற்கண்ட அறிவிப்பாளர் தொடர் வழியாகவே யஹ்யா பின் முஹம்மத் (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.
அதில் நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்...அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் சரியே“ என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
110. வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 26 தம் சகோதர முஸ்லிமை நோக்கி “இறைமறுப்பாளனே!“ (காஃபிர்) என்று அழைத்தவரது இறைநம்பிக்கையின் நிலை.
111. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை “இறைமறுப்பாளர்“ (காஃபிர்) என்று கூறினால் நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்,
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து "இறைமறுப்பாளனே!" ("காஃபிரே!") என்று அழைக்கின்றாரோ நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அவர் சொன்ன சொல் அவரை நோக்கியே திரும்புகிறது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1