833. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது சஜ்தாவில் அல்லாஹும் மஃக்பிர்லீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு, வ அவ்வலஹு வ ஆகிரஹு, வ அலானிய்யத்தஹு வ சிர்ரஹு என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றில் சிறியதையும் பெரியதையும்,ஆரம்பமாகச் செய்ததையும் இறுதியாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மறைமுகமாகச் செய்ததையும் மன்னிப்பாயாக.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
834. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபி ஹம்திக, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ (இறைவா! எங்கள் அதிபதியே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று அதிகமாகக் கூறிவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
835. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்னால் சுப்ஹானக வபி ஹம்திக அஸ்தஃக்ஃபிருக வ அதூபு இலைக்க (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னிடத்தில் பாவமன்னிப்புக்கோரி உன்னிடமே மீளுகிறேன்) என்று அதிகமாகக் கூறிவந்தார்கள். (ஒருநாள்) நான், அல்லாஹ்வின் தூதரே! இந்த வார்த்தைகள் என்ன? இவற்றைத் தாங்கள் புதிதாகக் கூறத் துவங்கியுள்ளீர்களே (என்ன காரணம்)? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது... (என்று தொடங்கும் 110ஆவது) அத்தியாயத்தில் என் சமுதாயத்தார் விஷயத்தில் எனக்கோர் அடையாளம் கூறப்பட்டுள்ளது. அதை நான் காண்பதால் இவற்றைக் கூறிவருகிறேன் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
836. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது... என்று தொடங்கும் (110ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது முதல் ஒவ்வொரு தொழுகையிலும் சுப்ஹானக்க ரப்பீ வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ என்று கூறாமல் அல்லது பிரார்த்திக்காமல் இருந்ததில்லை.
(பொருள்: என் அதிபதியே! உனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!)
அத்தியாயம் : 4
837. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) மிகுதியாக சுப்ஹானல் லாஹி வபி ஹம்திஹி,அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி (அல்லாஹ் மிகத் தூயவன் எனப் புகழ்ந்தவனாய் அவனைத் துதிக்கிறேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்) என்று கூறிவந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி என்று மிகுதியாகக் கூறிவருவதை நான் காண்கிறேன் (இதற்கு என்ன காரணம்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
என் சமுதாயத்தார் தொடர்பாக நான் ஓர் அடையாளத்தைக் காண்பேன் என்றும், அதைக் காணும்போது இந்தத் தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை நான் கண்டுவிட்டேன். (அதுதான் இந்த அத்தியாயமாகும்): அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து, மேலும்,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டங்கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும்போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக; மேலும், அவனிடமே பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரலை ஏற்பவனாக இருக்கிறான் (110:1-3). இதில் வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும்.
அத்தியாயம் : 4
838. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், நீங்கள் ருகூஉவில் என்ன ஓதுவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று ஓதுகிறேன். ஏனெனில், இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருநாள் இரவில் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடினேன். அவர்கள் தம் மற்றத் துணைவியரில் எவரிடமாவது சென்றிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே அவர்களைத் தேடிப் போனேன். (அவர்களை எங்கும் காணாமல்) பின்னர் திரும்பிவந்தேன். அப்போது அவர்கள் (தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள்) ருகூஉவில் அல்லது சஜ்தாவில் சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான், என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் ஓர் எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நீங்கள் மற்றோர் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
839. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர்கள் அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
(பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா!
உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.)
அத்தியாயம் : 4
840. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் என்று கூறுவார்கள்.
(பொருள்: (இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.)
அத்தியாயம் : 4
841. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 43 சஜ்தாவின் சிறப்பும், அதை (அதிகமாகச்) செய்யுமாறு வந்துள்ள தூண்டுதலும்.
842. மஅதான் பின் அபீதல்ஹா அல்யஅமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக சஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள் என்றார்கள்.
பின்னர் நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
அத்தியாயம் : 4
843. ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் (ஏதேனும்) கோருவீராக! என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன் என்றேன். அதற்கு வேறு ஏதேனும் (கோருவீராக!) என்றார்கள். நான் (இல்லை) அதுதான் என்றேன். அதற்கு அவர்கள், அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக! என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 44 சிரவணக்கத்தின்(போது பூமியில் பட வேண்டிய) உறுப்புகளும், தொழும்போது தலைமுடி, ஆடை ஆகியவற்றை(க் கீழே படாமல்) பிடித்துக்கொள்ளல், (ஆண்கள்) தலைமுடியைச் சுருட்டி கொண்டை போட்டுக்கொள்ளல் ஆகியவற்றுக்கு வந்துள்ள தடையும்.
844. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சிர வணக்கம் (சஜ்தா) செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; (சிர வணக்கத்தின்போது தரையில் படாதவாறு) தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கப் பட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபுர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள், மற்றும் நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு (சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்); தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டாமென்று தடை விதிக்கப்பட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
845. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படியும், (எனது) ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) நான் பிடித்துக்கொள்ளக் கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
846. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கவும்பட்டார்கள்.
அத்தியாயம் : 4
847. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு (முழங்)கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். (நெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது) தமது கையால் தமது மூக்கை நோக்கி (மூக்கு உட்பட என்பதைப் போன்று) சைகை செய்தார்கள். நாம் ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நெற்றி-மூக்கு, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். நான் முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக்கொள்ள வேண்டாம் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் அவருடன் ஏழு உறுப்புகள் சிரவணக்கம் செய்கின்றன: அவருடைய முகம்,இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள் மற்றும் இரு பாதங்(களின் நுனி)கள் ஆகியவையே அவை.
இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
849. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யபபட்ட அடிமை குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் தமது தலைமுடியைப் பின்பக்கமாகக் கொண்டையிட்டுத் தொழுதுகொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவர்கள் எழுந்து சென்று அவருடைய கொண்டையை அவிழ்த்து விடலானார்கள். அவர் தொழுது முடித்ததும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் எனது தலைமுடியை அவிழ்த்துவிட்டீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுகின்றவரின் நிலை பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டவாறு தொழுபவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 45 சஜ்தாவில் உள்ளங்கைகளைத் தரையில் வைத்து, விலாப் புறங்களைவிட்டு முழங்கைகளையும் தொடைகளிலிருந்து வயிற்றையும் அகற்றிவைத்து (முறையாக) நடுநிலையோடு சஜ்தாச் செய்வது.
850. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் எவரும் தம் கைகளை நாய் பரப்பி வைப்பதைப் போன்று பரப்பி வைக்க வேண்டாம்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள வலா யப்சுத் எனும் சொற்றொடர்) வலா யத்தபஸ்ஸத் என்று இடம் பெற்றுள்ளது. (இரண்டுக்கும் பொருள்: பரப்பி வைக்க வேண்டாம்.)
அத்தியாயம் : 4
851. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சஜ்தாச் செய்யும்போது உள்ளங்கைகளை (தரையில்) வையுங்கள்; முழங்கைகளை (தரையிலிருந்து) அகற்றி வையுங்கள்.
இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 46 தொழுகை முறை; தொழுகையை எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது?; ருகூஉ, சஜ்தாச் செய்யும் முறை; அவற்றில் நடுநிலையைக் கையாளுவது; நான்கு ரக்அத் தொழுகைகளில் ஒவ்வோர் இரண்டு ரக்அத் முடிந்ததும் அத்தஹிய்யாத் ஓதுவது; இரு சஜ்தாக்களுக்கு மத்தியிலும் முதல் அத்தஹிய்யாத்திலும் அமர்கின்ற முறை ஆகியவை குறித்த மொத்த விவரங்கள்.
852. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கைகளையும் விரித்துவைப்பார்கள்.
அத்தியாயம் : 4