813. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட மிகச் சுருக்கமாக, அதே நேரத்தில் நிறைவாகத் தொழுவிக்கக்கூடிய எவருக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும்) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும் அவ்வாறே) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது ஃபஜ்ர் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறியதும் நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று கூறுவோம். பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். இரு சிரவணக்கங்களுக்கிடையே (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் கூறுவோம்.
அத்தியாயம் : 4
பாடம் : 39 இமாமைப் பின்தொடர்ந்து தொழுவதும், எதையும் அவர் செய்த பின்பே செய்வதும்.
814. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் (அன்னார் பொய் உரைப்பவர் அல்லர்):
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது வந்தோம். அப்போது அவர்கள் குனிந்து (ருகூஉ செய்து) தலையை உயர்த்திவிட்டால் அவர்கள் பூமியில் தமது நெற்றியை வைக்காதவரை (எங்களில்) யாரும் தமது முதுகை (சஜ்தாச் செய்வதற்காக) வளைப்பதை நான் கண்டதில்லை. (அவர்கள் சஜ்தாவுக்குச் சென்ற) பிறகுதான் பின்னாலிருப்பவர்கள் சஜ்தாவுக்குச் செல்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
815. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறிவிட்டால் அவர்கள் சஜ்தாச் செய்யாதவரை எங்களில் யாரும் எங்கள் முதுகை (சஜ்தாவிற்காக) வளைக்கமாட்டோம்; (அவர்கள் சஜ்தாச் செய்த) பிறகுதான் நாங்கள் சஜ்தாச் செய்வோம் என்று பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள். அன்னார் பொய் உரைப்பவர் அல்லர்.
அத்தியாயம் : 4
816. முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி) அவர்கள் (பள்ளிவாசலில்) சொற்பொழிவு மேடையிலிருந்தபடி (பின்வருமாறு) கூறுவதை நான் கேட்டுள்ளேன்:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுவந்தோம். அப்போது அவர்கள் ருகூஉச் செய்த பிறகுதான் நாங்கள் ருகூஉச் செய்வோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறிய பின் அவர்கள் (சஜ்தாவிற்குச் சென்று) தமது நெற்றியை பூமியில் வைப்பதை நாங்கள் பார்க்கும்வரை நாங்கள் நின்றுகொண்டேயிருப்போம். பிறகுதான் அவர்களைப் பின்தொடர்வோம்.
அத்தியாயம் : 4
817. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) இருக்கும்போது அவர்கள் சஜ்தாச் செய்துவிட்டதைப் பார்க்காதவரை எங்களில் எவரும் (சஜ்தாச் செய்வதற்காக) தமது முதுகை வளைக்கமாட்டார்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதில் அவர்கள் சஜ்தாச் செய்து கொண்டிருப்பதை நாங்கள் பார்க்காதவரை என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
818. அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள் ஃபலா உக்ஸிமு பில் குன்னஸில் ஜவாரில் குன்னஸி எனும் வசன(ங்கள் இடம் பெற்றுள்ள 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் முழுமையாக சஜ்தாவிற்குப் போய்ச்சேராதவரை எங்களில் எவரும் தமது முதுகை (சஜ்தாவிற்காக) வளைக்கமாட்டார்.
அத்தியாயம் : 4
பாடம் : 40 ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை.
819. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்திவிட்டால் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
820. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறியதும்), அல்லஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது என்று துதிப்பார்கள்.
(பொருள்: இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
821. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்ததும்), அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித். அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸ(க்)கி என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. இறைவா, பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (வஸக் எனும் சொல்லுக்கு பதிலாக) தரன் எனும் சொல் இடம்பெற்றுள்ளது. யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் தனஸ் எனும் சொல் இடம் பெற்றுள்ளது. (எல்லாவற்றுக்கும் பொருள்: அழுக்கு.)
அத்தியாயம் : 4
822. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும் ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். அஹக்கு மா காலல் அப்து, வ குல்லுனா ல(க்)க அப்துன். அல்லாஹும்ம, லா மானிஅ லிமா அஉதைத்த, வலா முஉத்திய லிமா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் என்று கூறுவார்கள்.
(பொருள்: எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்பும் அளவுக்கு, நீ நாடும் இன்ன பிற பொருள்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள்தாம். அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தது, இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது என்பதேயாகும்.)
அத்தியாயம் : 4
823. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் அல்லாஹும்ம, ரப்பனா, ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மா பய்னஹுமா, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். லா மானிஅ லிமா அஉதைத்த, வ லா முஉத்திய லிமா மனஉத்த, வ லா யனஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா, எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, இன்னும் அவற்றுக்கிடையே உள்ளவை நிரம்ப மற்றும் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது.)
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் வமில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது (மற்றும் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது) என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னால் உள்ளது குறிப்பிடப்படவில்லை.
அத்தியாயம் : 4
பாடம் : 41 ருகூஉ மற்றும் சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓதுவதற்கு வந்துள்ள தடை.
824. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில் உடல் நலிவுற்றிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கி (பள்ளிவாசலுக்குள் நோக்கி)னார்கள். அப்போது மக்கள், அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். (அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களே! நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு முஸ்லிம் காண்கின்ற அலலது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை. அறிந்து கொள்ளுங்கள்: ருகூஉ அல்லது சஜ்தாச் செய்துகொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப்படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
825. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கினார்கள். அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் காரணத்தால் அவர்களது தலையில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அப்போது அவர்கள், இறைவா! (உன் செய்திகளை) நான் (மக்களிடம்) சேர்த்துவிட்டேனா? என்று மும்முறை கூறிவிட்டு, நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு நல்ல அடியார் காண்கின்ற அல்லது அவருக்குக் காட்டப்படுகின்ற (நல்ல) கனவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று சொன்னார்கள்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
826. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ அல்லது சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று எனக்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
827. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ அல்லது சஜ்தாவில் இருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என்னைத் தடுத்தார்கள்.
அத்தியாயம் : 4
828. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ மற்றும் சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என்னைத் தடுத்தார்கள். உங்களையும் தடுத்தார்கள் என்று நான் கூற மாட்டேன்.
அத்தியாயம் : 4
829. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் நேசர் (நபி (ஸல்) அவர்கள்) ருகூஉ அல்லது சஜ்தாச் செய்துகொண்டிருக்கும் போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என்னைத் தடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
830. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ருகூஉச் செய்துகொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓதவேண்டாமென என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றே இடம்பெற்றுள்ளது. சஜ்தாவிலிருக்கும் போது குர்ஆனை ஓதக்கூடாது என்பது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அந்த அறிவிப்பிலும் சஜ்தாவில் குர்ஆனை ஓதலாகாது என்பது பற்றிய குறிப்பு இடம்பெற வில்லை.
அத்தியாயம் : 4
831. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ருகூஉச் செய்துகொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் அலீ (ரலி) அவர்களது பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
பாடம் : 42 ருகூஉவிலும் சஜ்தாவிலும் ஓத வேண்டியவை.
832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4