788. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா... (என்று தொடங்கும் 87ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையில் அதைவிடப் பெரிய(அத்தியாயத்)தை ஓதுவார்கள்.
அத்தியாயம் : 4
789. அபூபர்ஸா நள்லா பின் உபைதா அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்.
- அபூபர்ஸா நள்லா பின் உபைதா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்.
அத்தியாயம் : 4
790. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் வல்முர்சலாத்தி உர்ஃபன் எனும் (77ஆவது) அத்தியாயத்தை ஓதினேன். அதைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள், என்னருமை மகனே! இந்த அத்தியாயத்தை ஓதிக்காட்டி (ஒன்றை) நீ எனக்கு நினைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் கடைசியாக அவர்களிடமிருந்து செவியுற்றதாகும் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், சாலிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்கள் எங்களுக்குத் (தலைமையேற்றுத்) தொழுவிக்க வில்லை என்று (உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
791. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர் எனும் (56ஆவது) அத்தியாயத்தை ஓதியதை நான் செவியுற்றேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 36 இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல்.
792. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் வத்தீனி வஸ் ஸைத்தூனி எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 4
793. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள் வத்தீனி வஸ்ஸைத்தூனி எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 4
794. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் வத்தீனி வஸ்ஸைத்தூனி எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதியதை நான் கேட்டேன். அவர்களைவிட அழகிய குரலில் வேறு யாரும் ஓதி நான் கேட்டதில்லை.
அத்தியாயம் : 4
795. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு (தம் கூட்டத்தாரிடம்) திரும்பிச் சென்று (நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுத தொழுகையை மீண்டும்) தம் கூட்டத்தாருக்குத் தொழுவிப்பார்கள்.
ஒரு நாள் இரவில் முஆத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுது விட்டுத் தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு (அதே இஷாவை)த் தொழுவித்தார்கள்.அதில் (பெரிய அத்தியாயமான) அல்பகராஎனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகி சலாம் கொடுத்தார். பின்னர் தனியாகத் தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். மக்கள் அவரிடம், இன்னாரே, நீர் நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிவிட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (நான் நயவஞ்சகன் அல்லன்). நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது குறித்து) தெரிவிப்பேன் எனக் கூறினார்.
அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பகல் வேளைகளில் வேலைவெட்டிகளில் ஈடுபடுகின்றவர்கள். நாங்கள் ஒட்டகங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் பின் ஜபல் அவர்கள் (நேற்றிரவு) உங்களுடன் இஷாத் தொழுதுவிட்டு வந்து (எங்களுக்குத் தொழுவித்தார். அதில் பெரிய அத்தியாயமான) அல்பகரா அத்தியாயத்தை ஓதலானார். (எனவேதான் விலகிச் சென்று தனியாகத் தொழுதேன்) என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா? என்று கேட்டுவிட்டு, (நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் போது சற்று சிறிய அத்தியாயமான) இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக; இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், (நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) வஷ்ஷம்ஸி வ ளுஹாஹா, வள்ளுஹா வல்லைலி, வல்லைலி இதா யஃக்ஷா, சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா ஆகிய (முறையே 91, 93,92,87ஆவது) அத்தியாயங்களை ஓதுவிராக என்று கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்தார்களே? என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், (ஆம்) இது போன்றுதான் (அறிவித்தார்கள்) என்றார்கள்.
அத்தியாயம் : 4
796. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் அல்அன்சாரி (ரலி) அவர்கள் தம் தோழர்க(ளான எங்க)ளுக்கு (ஒரு நாள்) இஷாத் தொழுகை தொழுவித்தபோது (நீளமான அத்தியாயத்தை ஓதித் தொழுகையை) நீட்டினார். உடனே எங்களில் ஒருவர் விலகிச் சென்று தனியாகத் தொழுதார். இதுபற்றி முஆத் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்) என்று முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியபோது அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று முஆத் (ரலி) அவர்கள் கூறியதைத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஆத்! நீர் குழப்பவாதியாக இருக்க விரும்புகின்றீரா? நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும்போது வஷ்ஷம்ஸி வ ளுஹாஹா (91),சப்பிஹிஸ்ம ரப்பிக்க (87), இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க (96), வல்லைலி இதா யஃக்ஷா (92) ஆகிய(வற்றைப் போன்ற சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
797. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரவின்) இறுதித் தொழுகையான இஷாவைத் தொழுவார்கள். பிறகு தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அதே தொழுகையை அவர்களுக்குத் தொழுவிப்பார்கள்.
அத்தியாயம் : 4
798. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழுவார்கள். பிறகு தம் கூட்டத்தாரின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு (அதே தொழுகையை)த் தொழுவிப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 37 தொழுகையைச் சுருக்கமாக அதே நேரத்தில் நிறைவாகத் தொழுவிக்குமாறு இமாம்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை.
799. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இன்னார் தொழுகையை நீண்ட நேரம் எங்களுக்குத் தொழுவிப்பதால் சுப்ஹுத் தொழுகை(யின் ஜமாஅத்து)க்குச் செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன் என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைக்குக் கோபமடைந்ததைவிடக் கடுமையாக வேறு எந்தச் சொற்பொழிவின் போதும் கோபமடைந்து அவர்களை நான் கண்டதில்லை. பிறகு அவர்கள், மக்களே! உங்களில் வெறுப்பூட்டும் சிலர் உள்ளனர். ஆகவே, உங்களில் எவர் மக்களுக்குத் தொழுவிக்கின்றாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில்,அவருக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும் அலுவல் உடையவர்களும் உள்ளனர் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
800. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுவித்தால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், அ(வருக்குப் பின்னால் தொழுப)வர்களில் சிறுவர்களும் முதியவர்களும் பலவீனர்களும் நோயாளிகளும் உள்ளனர். அவர் தனியாகத் தொழுதால் தாம் விரும்பியவாறு தொழுதுகொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
801. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மக்களுக்காகத் தொழுவிக்க நின்றால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில்,அவர்களிடையே முதியவர்களும் பலவீனர்களும் உள்ளனர். அவர் தனியாகத் தொழ நின்றால் தாம் விரும்பிய அளவுக்கு நீட்டித் தொழுதுகொள்ளட்டும்.
அத்தியாயம் : 4
802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், மக்களிடையே பலவீனர்களும் நோயாளிகளும் அலுவலுடையோரும் உள்ளனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் நோயாளிகள் என்பதற்கு பதிலாக முதியவர்கள் எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
803. உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், நீங்கள் உங்கள் கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவியுங்கள் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என் உள்ளத்தில் (பெருமை) ஏதும் ஏற்பட்டுவிடுவதை நான் அஞ்சுகிறேன் என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அருகில் வாருங்கள்! என்று என்னை அழைத்து, என்னைத் தமக்கு முன்னால் அமரவைத்தார்கள். பிறகு தமது கரத்தை என் நெஞ்சில் மார்புகளுக்கிடையே வைத்தார்கள். பிறகு திரும்புங்கள் என்றார்கள். (நான் திரும்பியதும்) தமது கரத்தை என் தோள்களுக்கிடையே முதுகில் வைத்தார்கள். பிறகு நீங்கள் உங்கள் கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவியுங்கள். எவர் ஒரு கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கிறாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், அவர்களிடையே முதியவர்கள் உள்ளனர்; அவர்களிடையே நோயாளிகளும் பலவீனர்களும் அலுவலுடையோரும் உள்ளனர். உங்களில் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர் தாம் விரும்பியபடி தொழுதுகொள்ளட்டும் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
804. உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு இறுதியாகச் செய்த உபதேசம், நீங்கள் ஒரு சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தால் அவர்களுக்கு (சிரமம் ஏற்பட்டு விடாமல்) சுருக்கமாகத் தொழுவியுங்கள் என்பதேயாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
805. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே நேரத்தில் ஏதொன்றும் விடுபடாமல்) நிறைவாகவும் தொழுவிப்பார்கள்.
இதை அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
806. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை மிகச்சுருக்கமாகவும்(அதே நேரத்தில்) நிறைவாகவும் தொழுவிப்பவர்களாய் இருந்தார்கள்.
இதை கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
807. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட மிகச்சுருக்கமாகவும் (அதே சமயம்) முழுமையாகவும் தொழுவிக்கக்கூடிய வேறு எந்த இமாமுக்குப் பின்னாலும் ஒருபோதும் நான் தொழுததில்லை.
இதை ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநிம்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4