768. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ்,மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அந்த அறிவிப்பிலும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் என்பது வரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
769. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருக்கவில்லை. அவர்களுடன் நான் இருந்திருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அத்தியாயம் : 4
770. அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்களும் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்? என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 34 லுஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல்.
771. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தும்போது லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தையும் (அதனுடன் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓர் அத்தியாயம் என) இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்கள் காதில் விழும் அளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். லுஹ்ர் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீளமாகவும், இரண்டாவது ரக்அத்தில் (அதைவிடக்) குறைவாகவும் ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
772. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தையும் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்கள் காதில் விழும் அளவுக்கு (சப்தமிட்டு) ஓதுவார்கள். பிந்திய இரு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை (மட்டுமே) ஓதுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
773. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகளில் எவ்வளவு நேரம் நிலையில் நின்றார்கள் என்பதை நாங்கள் மதிப்பிட்டுவந்தோம்:
லுஹ்ர் தொழுகையின் முன்னிரு ரக்அத்களில் (முப்பது வசனங்களைக் கொண்ட) அலிஃப், லாம், மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயம் ஓதும் அளவுக்கும், அதன் பின்னிரு ரக்அத்களில் அதில் பாதியளவுக்கும் நிற்பார்கள். அஸ்ர் தொழுகையின் முன்னிரு ரக்அத்களில் லுஹ்ர் தொழுகையின் பின்னிரு ரக்அத்கள் அளவுக்கும்,அதன் பின்னிரு ரக்அத்களில் அதில் பாதியளவுக்கும் நிற்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அலிஃப், லாம், மீம் தன்ஸீல் என்பதற்கு பதிலாக முப்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு (நிற்பார்கள்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
774. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் தலா முப்பது வசனங்கள் அளவும், அதன் பிந்திய இரு ரக்அத்களில் அதில் பாதி அல்லது பதினைந்து வசனங்கள் அளவும் ஓதுவார்கள். அஸ்ர் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் தலா பதினைந்து வசனங்கள் அளவும், அதன் பிந்திய இரு ரக்அத்களில் அதில் பாதியளவும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 4
775. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கூஃபாவாசிகள் (தம் ஆளுநரான அபூ இஸ்ஹாக்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் புகார் கூறினர். சஅத் அவர்கள் தொழுவிப்பது குறித்து அவர்கள் (குறை) கூறினர். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பித் தம்மிடம் வருமாறு கூறினார்கள். அவ்வாறே சஅத் (ரலி) அவர்களும் வந்தார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் தொழுகை தொடர்பாக மக்கள் கூறிய குற்றச்சாட்டை எடுத்துரைத்தார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே அவர்களுக்குத் தொழுவித்து வருகிறேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பிந்திய இரு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,அபூஇஸ்ஹாக்! உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
776. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், (கூஃபா நகர) மக்கள், தொழுகை நடத்துவது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர் (இது குறித்து நீங்கள் என்ன விளக்கம் கூறுகிறீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், நானோ (தொழுகையின்) முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக் காட்டிய முறையைப் பின்பற்றுவதில் எந்தக் குறையும் நான் செய்யவில்லை என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அல்லது உங்களைப் பற்றி எனது எண்ணமும் அதுவே என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
777. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் கிராமவாசிகள் எனக்குத் தொழுகையைக் கற்றுத்தருகிறார்களா? என்று (சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கேட்டதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
778. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) லுஹ்ர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது ஒருவர் பகீஉல் ஃகர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றி, அங்கத் தூய்மை செய்துவிட்டுத் திரும்பிவந்து விடுவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்திலேயே இருந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் (முதல் ரக்அத்தில்) நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதிவந்ததே இதற்குக் காரணம்.
அத்தியாயம் : 4
779. கஸ்ஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களைச் சுற்றி நிறையப் பேர் குழுமியிருந்தனர். மக்கள் அனைவரும் கலைந்து சென்றதும் நான், (இதோ) இவர்கள் உங்களிடம் கேட்டதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கமாட்டேன். நான் உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றிக் கேட்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், (நபியவர்களின் முழு நிறைவான தொழுகையைப் போன்று உங்களால் தொழ இயலாது என்பதால்) இது தொடர்பாகக் கேட்பதில் உங்களுக்குப் பயன் இல்லை என்று கூறினார்கள். நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) லுஹர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது எங்களில் ஒருவர் பகீஉல் ஃகர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றுவார். பிறகு தமது இல்லத்திற்குச் சென்று அங்கத் தூய்மை செய்துவிட்டுப் பள்ளிவாசலுக்குத் திரும்பிவருவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்திலேயே இருந்து கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 35 சுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல்.
780. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அல்முஃமினூன்(எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதலானார்கள். அதில் மூசா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பற்றிய (23:45ஆவது) வசனம் அல்லது ஈசா (அலை) அவர்களைப் பற்றிய (23:50ஆவது) வசனம் வந்ததும் (இந்த இடத்தில் அறிவிப்பாளர் முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள். அல்லது மற்ற அறிவிப்பாளர்கள் அன்னார் சொன்ன வார்த்தை குறித்து வேறுபடுகிறார்கள்.) நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டுவிட்டது. உடனே (அவர்களால் தொடர்ந்து ஓத முடியாமல்) ருகூஉச் செய்துவிட்டார்கள். அந்தத் தொழுகையில் நானும் கலந்துகொண்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அத்தோடு நிறுத்திக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்துவிட்டார்கள் என்று காணப்படுகிறது.
மேலும் இந்த அறிவிப்பில், (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களது பெயரில் இப்னுல் ஆஸ் என்பது இடம்பெறவில்லை. (ஆகவே, இந்த அப்துல்லாஹ் நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் அல்லர்.)
அத்தியாயம் : 4
781. அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் பின்வாங்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக எனும் (81:17ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
782. குத்பா பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் தொழுதேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்போது) எங்களுக்குத் தொழுவித்தார்கள். (அத்தொழுகையில்) காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்று தொடங்கும் 50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் வந்நக்ல பாசிகா(த்)தின் எனும் (10ஆவது) வசனத்தை அன்னார் ஓதியபோது, நானும் அதைத் திரும்ப ஓதலானேன்; ஆனால், அவர்கள் ஓதிய(தன் பொருள் என்னவென்ப)து எனக்குப் புரியவில்லை.
அத்தியாயம் : 4
783. குத்பா பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்) எனும் (50:10ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள காஃப் அத்தியாய)த்தை ஓதுவதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
784. ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரர் (குத்பா பின் மாலிக்-ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களுடன் சுப்ஹுத் தொழுகை தொழுதேன். முதல் ரக்அத்தில் நபி (ஸல்) அவர்கள் கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்) எனும் (50:10ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள காஃப் அத்தியாய)த்தை (ஓதினார்கள்) என்று கூறினார்கள். சில வேளைகளில், காஃப் எனும் (50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 4
785. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஆரம்பக் காலத்தில்) ஃபஜ்ர் தொழுகையில் காஃப் வல்குர்ஆனில் மஜீத் எனும் (50ஆவது) அத்தியாயத்தை ஓதிவந்தார்கள். அதற்குப் பின்னர் அவர்களது தொழுகை சுருக்கமாகவே அமைந்தது.
அத்தியாயம் : 4
786. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் தொழுகை குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாகவே தொழுவிப்பார்கள்; இதோ இவர்கள் தொழுவிப்பதைப் போன்று (நீளமாகத்) தொழுவிக்கமாட்டார்கள் என்று கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்று தொடங்கும் 50ஆவது அத்தியாயம்) போன்றதை ஓதுவார்கள் என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
787. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் வல்லைலி இதா யஃக்ஷா (என்று தொடங்கும் 92ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அஸ்ர் தொழுகையில் அது போன்றதையும் சுப்ஹுத் தொழுகையில் அதைவிடப் பெரிய (அத்தியாயத்)தையும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 4