பாடம் : 23 தொழுகையில் (இமாமுக்கு ஏற்பட்ட தவறைச் சுட்டிக்காட்ட) ஏதேனும் (செய்ய வேண்டுமெனத்) தோன்றினால் ஆண்கள் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூற வேண்டும்; பெண்கள் கை தட்ட வேண்டும்.
723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும் கைதட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அறிஞர்களில் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தஸ்பீஹ் கூறி, சைகை செய்வார்கள் என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
724. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில், தொழுகையில் எனும் குறிப்பு அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 24 தொழுகையைச் சிறந்த முறையில் (அதன் வழிமுறைகளைப் பேணி) முழுமையாகவும் உள்ளச்சத்துடனும் தொழ வேண்டும் எனும் கட்டளை.
725. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும் (ஒருவரைப் பார்த்து), இன்னாரே, நீங்கள் நல்ல முறையில் தொழக் கூடாதா? தொழுதுகொண்டிருப்பவர் தாம் எப்படித் தொழுகிறோம் என்பதைக் கவனிக்கக் கூடாதா?அவர் தமக்காகத்தானே தொழுகிறார்? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்கு முன்னால் இருப்பவர்களைப் பார்ப்பதைப் போன்றே எனக்குப் பினனால் இருப்பவர்களையும் பார்க்கிறேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) நான் நோக்கும் திசை இதுதான் (இத்திசையில் மட்டுமே நான் பார்க்கிறேன்) என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுடைய ருகூஉம் (குனிதலும்) சஜ்தாவும் (சிரவணக்கமும்) எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக, எனது முதுகுக்குப் பின்னாலும் உங்களை நான் பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
727. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் செம்மையாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்குப் பின்னால் அல்லது என் முதுகுக்குப் பினனால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் உங்களை நான் காண்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
728. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் என் முதுகுக்குப் பின்னால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் உங்களை நான் காண்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 25 இமாமை முந்திக்கொண்டு ருகூஉ மற்றும் சஜ்தா போன்றவற்றைச் செய்யலாகாது.
729. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, மக்களே! நான் (உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் உங்களுடைய) இமாம் ஆவேன். எனவே ,(தொழுகையில்) குனிதல் (ருகூஉ), சிரவணக்கம் (சஜ்தா), நிற்றல்(கியாம்) மற்றும் (சலாம் கொடுத்துத்) திரும்புதல் ஆகியவற்றில் என்னை முந்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களை எனக்கு முன்னாலும் பார்க்கிறேன்;எனக்குப் பின்னாலும் பார்க்கிறேன். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் பார்த்ததை நீங்கள் பார்த்திருந்தால் நிச்சயமாக நீங்கள் குறைவாகவே சிரிப்பீர்கள்; அதிமாக அழுவீர்கள் என்று கூறினார்கள். மக்கள் நீங்கள் எதைப் பார்த்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்,சொர்க்கத்தையும் நரகத்தையும் நான் பார்த்தேன் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
730. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (சலாம் கொடுத்துத்) திரும்புதல் என்பது இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
731. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாமுக்கு முன்னால் தமது தலையை உயர்த்துகின்றவர், அவருடைய தலையைக் கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
732. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் இமாமுக்கு முன்னால் தனது தலையை உயர்த்துகின்றவர், அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாக அல்லாஹ் மாற்றிவிடுவதை அஞ்சாமல் இருக்க முடியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
733. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ரபீஉ பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவருடைய முகத்தைக் கழுதையின் முகமாக அல்லாஹ் மாற்றிவிடுவதை (அவரால் அஞ்சாமல் இருக்க இயலாது) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 26 தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்கு வந்துள்ள தடை.
734. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் அதை நிறுத்திக்கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய பார்வை திரும்பிவராமல் போகட்டும்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் பிரார்த்திக்கும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் அதை நிறுத்திக் கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய பார்வை பறிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 27 தொழுகையில் அடக்கத்தோடு இருக்க வேண்டும்; சலாம் கொடுக்கும்போது கையால் சைகை செய்வதோ கையை உயர்த்துவதோ கூடாது. முன் வரிசையை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும்; வரிசைகளில் (இடைவெளியின்றி) நெருக்கமாகவும் இணைந்தும் நிற்க வேண்டும்.
736. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் நாங்கள் தொழுதுகொண்டிருந்தபோது எங்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அப்போது (நாங்கள் சலாம் கொடுக்கையில் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தோம். இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் உங்களது கைகளைச் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று உயர்த்திக்கொண்டிருக்கிறீர்கள்? தொழுகையில் அடக்கத்தோடு இருங்கள் என்று கூறினார்கள். பிறகு (மற்றொரு முறை) அவர்கள் எங்களிடம் வந்தபோது நாங்கள் வட்ட வட்டமாக (தனித்தனிக் குழுவாக) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், ஏன் (ஓரணியில் இணையாமல்) பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள்? என்று கேட்டார்கள். பிறகு (இன்னொரு முறை) அவர்கள் எங்களிடம் வந்தபோது, அறிந்துகொள்ளுங்கள்! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப்போன்று நீங்கள் அணிவகுத்து நில்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்? என்று கேட்டோம். அதற்கு வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் (இடைவெளி விடாமல்) நெருக்கமாக நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
737. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழு(து சலாம் கொடுக்கு)ம்போது அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் (அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உங்கள் மீது நிலவட்டுமாக, அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உங்கள்மீது நிலவட்டுமாக) என்று கூறி, இரு புறங்களிலும் கையை உயர்த்தி சைகை செய்துவந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் உங்கள் கைகளால் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று சைகை செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்களில் ஒருவர் (அத்தஹிய்யாத் இருப்பில்) தமது கையைத் தொடையின் மீது வைத்துக்கொண்டு, பிறகு தமக்கு வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் அமர்ந்திருக்கும் தம் சகோதரர்மீது சலாம் கூறினால் போதும் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
738. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது நாங்கள் சலாம் கொடு(த்து தொழுகையை முடி)க்கும்போது எங்கள் கைகளால் சைகை செய்தவாறு அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள்மீது சாந்தியுண்டாகட்டும், உங்கள்மீது சாந்தியுண்டாகட்டும்) என்று சலாம் கூறிவந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, ஏன் நீங்கள் உங்கள் கைகளால் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று சைகை செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களில் ஒருவர் சலாம் கொடு(த்து தொழுகையை முடி)க்கும் போது (தமக்கு அருகிலிருக்கும்) தம் தோழரின் பக்கம் திரும்பட்டும்; கையால் சைகை செய்ய வேண்டாம் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 28 தொழுகை வரிசைகளைச் சீராக்கி ஒழுங்குபடுத்துவதும், முதல் வரிசை மற்றும் அடுத்தடுத்த வரிசைகளின் சிறப்பும்,முதல் வரிசையில் நிற்பதற்காக முந்திக் கொண்டு போட்டியிடுவதும், (அறிவில்) சிறந்தோருக்கு முதலிடம் அளித்து அவர்களை இமாமுக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்க வைப்பதும்.
739. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் ஆரம்பத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள்; மேலும், நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும். உங்களில் அறிவிற்சிறந்தவர்கள் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என்று கூறுவார்கள்.
தொடர்ந்து அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், நீங்களோ இன்று (வரிசையில் சீராக நிற்காத காரணத்தால்) கடுமையான கருத்துவேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
740. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் அறிவிற்சிறந்தவர் எனக்கு அருகில் (தொழுகையில் முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள் (அடுத்த வரிசையில்) நிற்கட்டும். (இதை மூன்று முறை கூறினார்கள்.) மேலும், (தொழுகைக்கு ஒன்றுகூடும்போது) கடைத்தெரு(வில் கூச்சலிடுவதைப் போன்று) கூச்சலிடுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
741. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
742. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகை) வரிசைகளை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், நான் எனது முதுகுக்குப் பின்னாலும் உங்களைக் காண்கிறேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4