703. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவருடன் நீங்கள் முரண்படாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்(து ருகூஉச் செய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறினால்,நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று கூறுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தாச் செய்யுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தே தொழுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 20 (தொழுகையில்) தக்பீர் கூறுவதிலும் பிற செயல்களிலும் இமாமை முந்தலாகாது.
704. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (தொழுகை முறையை)க் கற்றுக் கொடுத்தார்கள். (அப்போது) நீங்கள் இமாமை முந்தாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள். அவர் ருகூஉச் செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அவர் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பில் இமாமுக்கு முன்பாக நீங்கள் தலையை உயர்த்தாதீர்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
705. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் கூறினார்கள்:
இமாம் என்பவர் கேடயமே ஆவார். எனவே, அவர் உட்கார்நது தொழுதால் நீங்களும்
உட்கார்ந்தே தொழுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று கூறுங்கள். பூமியில் உள்ளோரின் (இந்த துதிச்) சொல் வானிலுள்ளோரின் (துதிச்) சொல்லுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
706. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்(து ருகூஉச்செய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 21 இமாமுக்கு நோய், பயணம் உள்ளிட்ட காரணம் ஏதேனும் ஏற்பட்டால் மக்களுக்குத் தொழுவிக்கத் தமக்கு பதிலாக மற்றொருவரை நியமிப்பதும், நின்று தொழ முடியாத காரணத்தால் அமர்ந்து தொழுதுகொண்டிருக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் நிற்பதற்கு சக்தி பெற்றிருந்தால் அவர் நின்றே தொழ வேண்டும்; உட்கார்ந்து தொழும் இமாமைப் பின்பற்றித் தொழுகின்றவர் உட்கார்ந்தே தொழ வேண்டும் எனும் சட்டம் நிற்பதற்குச் சக்தி உள்ளவர் விஷயத்தில் மாற்றப்பட்டுவிட்டது என்பதும்.
707. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (கூறுகிறேன்) என்று சொல்லிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானது. அந்த (இஷா) நேரத்தில் மக்கள் தொழுது விட்டனரா? என்று நபியவர்கள் கேட்டார்கள். நாங்கள், இல்லை, அல்லாஹ்வின் தூதரே! மக்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். ஆனால், (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது மக்கள் தொழுது விட்டனரா? என்று கேட்டார்கள். நாங்கள், இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!என்று சொன்னோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்றார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் குளித்துவிட்டு எழ முற்பட்டார்கள். ஆனால், (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்தபோது, மக்கள் தொழுதுவிட்டனரா? என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள், இல்லை;அவர்கள் உங்களை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! என்றோம்.
-அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள் என்று சொன்னார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (அன்னார் இளகிய மனமுடையவராக இருந்தார்கள்) உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள் என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், இதற்கு நீங்கள்தாம் (என்னைவிடத்) தகுதியுடையவர் என்று கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நோய் சற்றுக் குறைந்திருப்பதைக் கண்டபோது இரண்டு பேருக்கிடையே (கைத்தாங்கலாக) லுஹர் தொழுகைக்காகப் புறப்பட்டுவந்தார்கள். (அவ்விருவரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்கள்.)அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கப் பார்த்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்துவந்த அவர்கள்) இருவரிடமும், என்னை அபூபக்ர் அவர்களுக்குப் பக்கத்தில் உட்காரவையுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து தொழ, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்று தொழுதார்கள். மக்கள் அபூபக்ரைப் பின்பற்றித் தொழலானார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியதை நான் உங்களிடம் எடுத்துரைக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆகட்டும் (சொல்லுங்கள்) என்றார்கள். ஆகவே,நான் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும், அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த மற்றொரு மனிதரின் பெயரை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், அவர்தாம் அலீ (ரலி) என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
708. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்தபோதுதான் முதலில் அவர்களுக்கு உடல் நலம் குன்றியது. அப்போது எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒரு கையை ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் (தோள்)மீதும் மற்றொரு கையை மற்றொரு மனிதரின் (தோள்)மீதும் வைத்து(த் தொங்கி)க்கொண்டு, தம் கால்கள் பூமியில் இழுபட (எனது வீட்டிற்கு)ப் புறப்பட்டுவந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த மற்றொரு மனிதர் யார் தெரியுமா? அவர்தாம் அலீ (ரலி) என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
709. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகி வேதனை அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே தொங்கியபடி (எனது வீட்டிற்கு)ப் புறப்பட்டு வந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த மற்றொரு மனிதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் இல்லை (தெரியாது) என்று பதிலளித்தேன். அதற்கு அவர் அலீ (ரலி) என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
710. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறச் சொன்னார்கள்.) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேறு ஒருவரை தொழுவிக்க ஏற்பாடு செய்யும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய இறப்பு)க்குப் பின் அவர்களுடைய இடத்தில் (இமாமாக) நிற்கும் எவரையும் மக்கள் நேசிப்பார்கள் என்று என் மனதில் தோன்றவில்லை; மாறாக, அவர்களது இடத்தில் யார் வந்தாலும் அவரை ஒரு துர்குறியாகவே மக்கள் கருதுவார்கள் என்பதால்தான் திரும்பத் திரும்ப (அவ்வாறு) நான் வலியுறுத்தினேன். அந்தப் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களிடமிருந்து மாற்றி (வேறு யாரிடமாவது ஒப்படைத்து)விட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
அத்தியாயம் : 4
711. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிகிச்சைக்காக) எனது இல்லத்துக்கு வந்தபோது அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறுங்கள்! என்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் இளகிய மனமுடையவர்; அவர் குர்ஆனை ஓதினால் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே,அபூபக்ர் (ரலி) அவர்களை விடுத்து மற்றொரு மனிதருக்கு நீங்கள் கட்டளையிட்டால் நன்றாக இருக்குமே! என்று கூறினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இடத்தில் முதன் முதலாக நிற்பவரை மக்கள் துர்குறியாகக் கருதுவதை நான் விரும்பாததே இவ்வாறு நான் கூறியதற்குக் காரணமாகும். இரண்டு அல்லது மூன்று முறை நான் அதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினேன். ஆனால் நபியவர்கள், அபூபக்ர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் (நபி) யூசுஃப் (அலை) அவர்களுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
712. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாயிருந்தபோது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக பிலால் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்! என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்றவர்; (தொழுகைக்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுது கொண்டிருப்பார்கள்.) அவர்களால் (சப்தமிட்டு ஓதி) மக்கள் கேட்கும்படி செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று சொன்னேன். அப்போது அபூபக்ரிடம் சொல்லுங்கள்; அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும் என்று (மீண்டும்) நபியவர்கள் சொன்னார்கள். உடனே நான் (மற்றொரு துணைவியாரான) ஹஃப்ஸாவிடம் அபூபக்ர் (ரலி) வேகமாகத் துக்கப்படுகின்றவர்; உங்களது இடத்தில் அவர் நின்றால் அவரால் மக்களுக்குக் கேட்கும்படி செய்ய முடியாது; உமர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால் என்ன?என்று நபியவர்களிடம் கூறுங்கள் என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே சொன்னார். அதற்கு (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். மக்களுக்குத் தொழுவிக்கும்படி அபூபக்ரிடம் சொல்லுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். அவ்வாறே மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தங்களுக்குத் தொழுவிக்குமாறு கூறினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்டார்கள். உடனே எழுந்து இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி தம் கால்கள் பூமியில் இழுபடப் புறப்பட்டார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்க ஆரம்பித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றுகொண்டு தொழலானார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ரும், அபூபக்ர் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
713. மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது... என்று இடம்பெற்றுள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு முஸ்ஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைத்துவரப்பட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்தத் தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக சப்தமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கவாட்டிலிருந்துகொண்டு மக்களுக்குக் கேட்கும் விதமாக (தக்பீர்) கூறிக்கொண்டிருந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
714. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். இதனிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குச் சற்று உடல்நலம் தேறியிருப்பதை உணர்ந்தார்கள். எனவே, அவர்கள் (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுமிடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் நிற்கும் இடத்திலேயே நில்லுங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நேராக அவர்களது பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழ, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
715. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். இவ்வாறிருக்க, (ஒரு) திங்கள் கிழமை அன்று மக்கள் தொழுகை வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது) அறையின் திரைச் சீலையை விலக்கி, நின்றுகொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் குர்ஆன் பிரதியின் தாளைப் போன்று (பொலிவுடன்) இருந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து (மகிழ்ச்சியோடு) புன்னகைத்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்ததைக் கண்டு மகிழ்ச்சியால் தொழுகையிலிருக்கும் போதே (இன்ப) அதிர்ச்சியடைந்தோம். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் நகர்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்டு வரப்போகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி உங்கள் தொழுகையை நிறைவுசெய்யுங்கள் என்று தமது கையால் சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அறைக்குள்) நுழைந்து திரைச் சீலையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
716. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள் கிழமையன்று (தமது அறையின்) திரைச் சீலையை விலக்கியபோது நான் அவர்களைப் பார்த்ததுதான் இறுதியாக நான் பார்த்ததாகும் என்று இடம்பெற்றுள்ளது.
(இதற்கு முந்தைய) ஸாலிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பே நிறைவானதும் நிரப்பமானதுமாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
717. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறுதியாக எங்களுக்கு அமர்ந்து தொழுவித்துவிட்டுப் போனதிலிருந்து) மூன்று நாட்கள் அவர்கள் வெளியில் வரவில்லை. (மூன்றாம் நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த முன்சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது அறையின்) திரைச் சீலையைப் பிடித்து உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் எங்களுக்குத் தெரிந்தபோது (நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். எந்த அளவிற்கென்றால்) எங்களுக்குக் காட்சியளித்த அவர்களது முகத்தை விடவும் மகிழ்வூட்டுகின்ற எந்தக் காட்சியையும் நாங்கள் கண்டதில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தொழுகையைத் தொடர) முன்னே செல்லுமாறு தமது கரத்தால் சைகை செய்தார்கள். பிறகு இறக்கும்வரை நபி (ஸல்) அவர்களை எங்களால் பார்க்க முடியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
718. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டு அவர்களது நோய் கடுமையானபோது, அபூபக்ரை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்! என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் இளகிய மனமுடையவர்; (தொழுகைக்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுது கொண்டிருப்பார்கள்.) அவர்களால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ரிடம் சொல்லுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்! (பெண்களாகிய) நீங்கள் நபி யூசுஃப் (அலை) அவர்களுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 22 இமாம் வருவது தாமதமானால் மக்கள் தங்களுக்குத் தொழுவிக்க மற்றொருவரை முன்னிறுத்தலாம்.ஆனால், அவரை முன்னிறுத்துவதால் குழப்பம் உண்டாகுமோ என்ற அச்சம் ஏற்படாதிருக்க வேண்டும்.
719. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குபா பகுதியிலிருந்த பனூ அம்ர் குலத்தாரிடையே தகராறு ஏற்பட்ட செய்தி வந்ததையொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த) பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர்களிடம் சென்றார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிடவே, தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, (நபியவர்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதால்) நீங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்கிறீர்களா, நான் இகாமத் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சரி என்று கூறிவிட்டு, மக்களுக்குத் தொழுவித்தார்கள்.மக்கள் தொழுகையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக்கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உணர்த்த) கை தட்டினார்கள்.(பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.) மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே (முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள் என்று சைகை செய்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை இதற்குப் பணித்தமைக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்; பிறகு (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுவித்தார்கள். பின்னர் (தொழுது முடித்து) திரும்பியதும் அபூபக்ரே! நான் உங்களை அங்கேயே நிற்குமாறு பணித்தும்கூட நீங்கள் அங்கேயே நிற்காமலிருந்ததற்குக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அபூக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு (இந்த) அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), நீங்கள் ஏன் (இந்த அளவு) அதிகமாகக் கை தட்டினீர்கள்? ஒருவருக்குத் தமது தொழுகையில் ஏதேனும் தோன்றினால் (அதை உணர்த்துவதற்காக) அவர் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூறட்டும்! ஏனெனில், அவர் அவ்வாறு கூறும் போது அவர்பால் கவனம் செலுத்தப்படும். கை தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
720. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு (நெஞ்சைத் திருப்பாமல் அப்படியே) பின்வாக்கில் நகர்ந்துவந்து வரிசையில் நின்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
721. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள். தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை வரிசைகளை விலக்கிக் கொண்டு முன்வரிசைக்கு அருகில் வந்து நின்றார்கள் என்றும், அபூபக்ர் (ரலி) அவர்கள் (திரும்பாமல் அப்படியே) பின்வாக்கில் நகர்ந்தார்கள் என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
722. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக ஒதுக்குப் புறத்திற்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நான் ஒரு (தண்ணீர்)பாத்திரத்தை எடுத்துச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தேவையை முடித்துவிட்டு) என்னிடம் திரும்பி வந்தபோது பாத்திரத்திலிருந்த தண்ணீரை அவர்களுடைய கைகளில் ஊற்றினேன். அவர்கள் (மணிக்கட்டுவரை) மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் முகத்தைக் கழுவினார்கள். பிறகு (முழங்கைவரைக் கழுவுவதற்காகத்) தமது நீளங்கியை முழங்கைகளிலிருந்து வெளியிலெடுக்க முயன்றார்கள். நீளங்கியின் கைப் பகுதி இறுக்கமாக இருந்த காரணத்தால் தம் கைகளை நீளங்கியில் நுழைத்து நீளங்கியின் கீழேயிருந்து கைகளை வெளியில் எடுத்தார்கள். பிறகு கைகைளை மூட்டுவரை கழுவினார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக) இரு காலுறைகள்மீதும் ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். பின்னர் (பள்ளிவாசலை நோக்கிச்) சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். அப்போது மக்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைத் தொழுவிக்கச் சொல்லி (அவர்களுக்குப் பின்னால் நின்று) தொழுதுகொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அந்தத் தொழுகையின்) இரு ரக்அத்களில் ஒரு ரக்அத்தான் கிடைத்தது. எனவே, கிடைத்த அந்த இறுதி ரக்அத்தை மக்களுடன் சேர்ந்து தொழுதார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (தொழுகையை முடிப்பதற்காக) சலாம் கொடுத்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, (எஞ்சிய ஒரு ரக்அத்தைத் தொழுது) தமது தொழுகையை நிறைவு செய்தார்கள். இ(வ்வாறு நபியவர்களை முந்திக் கொண்டு தாங்கள் தொழுத)து, முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஆகவே, அவர்கள் பல முறை தஸ்பீஹ் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின் மக்களைப் பார்த்து, நீங்கள் செய்தது நல்லதுதான் அல்லது நீங்கள் செய்தது சரிதான் என்று குறித்த நேரத்தில் மக்கள் தொழுததைப் பாராட்டும் வகையில் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (நபி (ஸல்) அவர்கள் வந்ததும்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைப் பின்னுக்கு கொண்டுவர நான் நினைத்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் (தொழுவிக்கட்டும்)! என்று கூறினார்கள் என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4