பாடம் : 1 சொர்க்கமும் அதிலுள்ள இன்பங்களின் தன்மையும் சொர்க்கவாசிகளின் நிலையும்.
5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5437. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் குர்ஆனிலுள்ள "அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:17) எனும் வசனம் உறுதிப்படுத்துகிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5439. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்"என்று கூறினான். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ் அறிவித்திருப்பது சொற்பமே!
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, "அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:17) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5440. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தேன். அப்போது அவர்கள் சொர்க்கத்தின் நிலை குறித்து பேசினார்கள்" என்று முழுமையாக ஹதீஸை அறிவித்தார்கள்.
பிறகு இறுதியில் "அதில் எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்கள் உள்ளன" என்றும் கூறிவிட்டு, "அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தம் இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப் புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்; நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:16,17) எனும் வசனங்களை ஓதினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 51
பாடம் : 2 சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.
5441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் ஒரு பயணி நூறு வருடங்கள் பயணிப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5442. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்லமாட்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
"சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்துசெல்லும் கட்டான உடலுள்ள பயிற்சியளிக்கப்பட்ட உயர்ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக்கடக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 3 சொர்க்கவாசிகள்மீது இறைவன் தனது உவப்பை அருள்வதும் அதன் பின்னர் ஒருபோதும் அவர்கள்மீது கோபப்படாமல் இருப்பதும்.
5444. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, "சொர்க்கவாசிகளே!" என்று அழைப்பான். அதற்கு அவர்கள், "எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன" என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், "திருப்தி அடைந்தீர்களா?" என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், "உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (கொடைகள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?" என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ், "இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?" என்பான். அவர்கள், "அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?" என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், "உங்கள்மீது என் உவப்பை அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள்மீது நான் கோபப்படமாட்டேன்" என்று கூறுவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 4 சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் (மேல்)அறைகளில் உள்ளவர்களை வானிலுள்ள நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பது.
5445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் மேல்அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) "கிழக்கு அடிவானில், அல்லது மேற்கு அடிவானில் நீங்கள் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று" என்று (கூடுதலாக) அறிவித்ததை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5446. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகள் தமக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை,அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (தகுதியில்) தமக்கும் அவர்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டுதான்) அப்படிப் பார்ப்பார்கள்" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்களின் தங்குமிடங்கள் தானே? மற்றவர்கள் அவற்றை அடைய முடியாதுதானே?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என (முறையாக) ஏற்றுக்கொண்ட மக்களே ஆவர்" என்று பதிலளித்தார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும் தியாகம் செய்ய விரும்புவோர் பற்றிய குறிப்பு.
5447. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போரில் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 6 சொர்க்கத்திலுள்ள சந்தையும் அதில் சொர்க்கவாசிகள் அடைந்துகொள்ளும் அருட்கொடையும் அலங்காரமும்.
5448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!" என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்" என்று கூறுவர்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 7 சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினரின் முகம் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்றிருக்கும் என்பதும்,அவர்களின் இதர தன்மைகளும், அவர்களின் துணைவியர் பற்றிய குறிப்பும்.
5449. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) மக்கள், "சொர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஆண்களா, அல்லது பெண்களா?" என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தனர்; அல்லது விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அபுல்காசிம் (ஸல்) அவர்கள், "சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர்,பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே நுழைபவர்கள்,வானில் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பர். அப்பெண்களின் காலின் எலும்பு மஜ்ஜை அவர்களது (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவர்களது பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். சொர்க்கத்தில் துணைவி இல்லாத எவரும் இருக்கமாட்டார்" என்று கூறவில்லையா?" எனக் கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(ஒரு முறை) ஆண்களும் பெண்களும் "சொர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் யார் இருப்பார்கள்" என்று வழக்காடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கேட்டார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அபுல்காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று அறிவித்தார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 51
5450. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று (அழகாகத்) தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். சொர்க்கத்தில் அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். எச்சில் துப்பவுமாட்டார்கள்.
அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களுடைய துணைவியர் கண்ணழகுக் கன்னியர் (அல்ஹூருல் ஈன்) ஆவர். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணமாகவே அமைந்திருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல படித்தரங்களும் உண்டு.
(சொர்க்கத்தில்) அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சளி துப்பவுமாட்டார்கள். அவர்களின் (தலைவாரும்) சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகில் குச்சியால் எரிக்கப்படும். அவர்களுடைய வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணத்தைப் போன்றிருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களைப் போன்று அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணத்தில் அமைந்திருக்கும்" என்று காணப்படுகிறது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் அனைவரது (உடல்) அமைப்பும் ஒரே மனிதரின் (உடல்) அமைப்பில் இருக்கும்" என்று இடம்பெற்றுள்ளது. அதாவது "அவர்கள் தம் தந்தை (ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் இருப்பார்கள்" என்று இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 8 சொர்க்கம் மற்றும் சொர்க்கவாசிகள் பற்றிய வர்ணனையும் அவர்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதிப்பதும்.
5452. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினரின் முகங்கள் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிக்கும். சொர்க்கத்தில் அவர்கள் சளி உமிழமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். மலஜலம் கழிக்கவுமாட்டார்கள். அவர்களுடைய பாத்திரங்களும் (தலைவாரும்) சீப்புகளும் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களின் வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும்.
அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பர். அவர்களது காலின் எலும்பு மஜ்ஜைகூட (கால்) சதைக்கு அப்பாலிருந்து அவர்களது பேரழகின் காரணத்தால் வெளியே தெரியும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது. எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். (நன்றிக்காக) அவர்கள் காலையும் மாலையும் இறைவனை (தூயவன் என)த் துதிப்பார்கள்.
அத்தியாயம் : 51
5453. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "(அவர்கள் உண்ணும்) உணவின் நிலை என்ன? (அது எப்படி கழிவாக வெளியேறும்?)" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நறுமணமுள்ள) ஏப்பமாகவும் கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும் வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும் வெளியேறும்" என்பதுவரையே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5454. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று, ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில் ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் உண்ணும் அந்த உணவு" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5455. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் இறைவனைப் பெருமைப்படுத்திக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 51