5416. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "ஒரு மரத்தைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள். அதன் நிலை இறைநம்பிக்கையாளருக்கு ஒப்பானதாகும்" என்று சொன்னார்கள். மக்கள், காட்டு மரங்களில் ஒன்றை நினைத்தனர். என் மனத்தில் அது பேரீச்ச மரம்தான் என்று தோன்றியது. அது பேரீச்ச மரம்தான் என்று சொல்ல நான் விரும்பினேன்.
ஆயினும், அங்கு வயதில் மூத்தவர்கள் இருந்ததால் நான் சொல்வதற்கு அஞ்சினேன். மக்கள் (பேசாமல்) வாய் மூடி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது பேரீச்ச மரம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகக் காணப்படுகிறது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் மதீனாவரை சென்றேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் கூறியதை நான் கேட்கவில்லை. ஒரேயொரு ஹதீஸை மட்டும் அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டு வரப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், "ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்" அல்லது "(அவரைப்) போன்றிருக்கும்" ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும் என்று சொன்னார்கள்.
அப்போது என் மனத்தில், "அது பேரீச்ச மரம்தான்" என்று தோன்றியது. அபூபக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் எதையும் பேசவோ, சொல்லவோ விரும்பவில்லை. பின்னர் (என் மனத்தில் தோன்றியதை நான் சொல்லாமலிருந்துவிட்டது குறித்து என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் சொன்ன போது), "நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 16 மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவர்களிடையே ஷைத்தான் பிளவை உருவாக்குகிறான்; அவன் தன் படைகளை அனுப்புகிறான் என்பதும், ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தானிய) கூட்டாளி ஒருவன் இருக்கிறான் என்பதும்.
5417. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்டா)ன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5418. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸின் சிம்மாசனம் கடலின் மீது அமைந்துள்ளது. அவன் (அங்கிருந்தே) தன் படைகளை அனுப்பி, மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரியவன் ஆவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்" என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை" என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, "நீதான் சரி(யான ஆள்)" என்று (பாராட்டிக்) கூறுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 50
5420. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷைத்தான்(களின் தலைவன்), தன் பட்டாளங்களை அனுப்பிவைக்கிறான். அவர்கள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5421. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை" என்று கூறினார்கள். அப்போது, "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "என்னுடனும்தான். ஆயினும் அல்லாஹ்,அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஜின்களிலுள்ள (ஷைத்தான்) கூட்டாளியொருவனும் வானவர்களிலுள்ள கூட்டாளியொருவரும் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5422. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, "ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். "ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?" என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "ஆம்" என்றார்கள். நான், "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும்,என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 17 எவரும் தமது நற்செயலால் (மட்டும்) சொர்க்கத்தில் நுழைந்துவிடுவதில்லை. மாறாக, அல்லாஹ்வின் கருணையால்தான் நுழைவார்.
5423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றாது (மாறாக,அல்லாஹ்வின் தனிப்பெருங்கருணையே காப்பாற்றும்)" என்று சொன்னார்கள். ஒரு மனிதர், "தங்களையுமா காப்பாற்றாது, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான் காப்பாற்றாது; அல்லாஹ் (தன்) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறிவிட்டு, "எனவே (வழிபாடுகள், நல்லறங்கள் ஆகியவற்றில் எல்லை மீறிவிடாமல்) நடுநிலையோடு செயல்படுங்கள்"என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ் தனது பேரருளாலும் தனிக்கருணையாலும் (அரவணைத்துக் கொண்டால் தவிர)" என்று காணப்படுகிறது. அதில், "எனவே, நடுநிலையோடு செயல்படுங்கள்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
5424. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்திற்குள் நுழைவிக்காது" என்று சொன்னார்கள். அப்போது, "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும்தான்;என் இறைவன் (தனது) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 50
5425. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றப் போவதில்லை" என்று சொன்னார்கள். "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "என்னையும்தான்;அல்லாஹ் தனது மன்னிப்பாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள், "என்னையும் தான்; அல்லாஹ் தனது மன்னிப்பாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறியபோது தமது கையைத் தமது தலையை நோக்கிச் சுட்டிக்காட்டி சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 50
5426. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றப் போவதில்லை" என்று சொன்னார்கள். "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 50
5427. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது" என்று கூறினார்கள். மக்கள், "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் தனது தனிக்கருணையாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
5428. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுநிலையோடு (நற்)செயல் புரியுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக (நற்)செயல் புரியுங்கள். அறிந்துகொள்ளுங்கள்: உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது"என்று சொன்னார்கள். மக்கள், "தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றுவதில்லை), அல்லாஹ்வின் தூதரே?"என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது தனிக் கருணையாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
- ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நற்செய்தி பெறுங்கள்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5429. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்திலும் நுழைவிக்காது; நரகத்திலிருந்தும் காப்பாற்றாது. என்னையும் சேர்த்துத் தான்; அல்லாஹ்வின் பேரருள் (எனக்குக்) கிடைத்தால் தவிர.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
அத்தியாயம் : 50
5430. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறிவந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுநிலையாக (நற்)செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாகச் செயலாற்றுங்கள். நற்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது" என்று கூறினார்கள்.
மக்கள், "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர. அறிந்துகொள்ளுங்கள்! நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நற்செய்தி பெறுங்கள்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
பாடம் : 18 நற்செயல்களை அதிகமாகச் செய்வதும் வழிபாடுகளில் கூடுதல் ஈடுபாடு காட்டுவதும்.
5431. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். அவர்களிடம், "இந்த அளவுக்கு நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்கவேண்டாமா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 50
5432. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுதார்கள். மக்கள், "தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே (பிறகு ஏன் தாங்கள் இந்த அளவுக்குச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5433. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது தம் கால்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்குத் தொழுவார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்படிச் செய்கிறீர்களே! தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்டனவே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 19 அறிவுரை வழங்குவதில் நடுநிலைப் போக்கு.
5434. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீட்டுவாசலில் அவர்களை எதிர் பார்த்துக் காத்திருந்தோம். அப்போது யஸீத் பின் முஆவியா அந்நகஈ (ரஹ்) எங்களைக் கடந்து சென்றார். அவரிடம், "நாங்கள் இங்கிருப்பதைப் பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அறிவியுங்கள்" என்று சொன்னோம்.
அவர் உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்குள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வெளியே வந்து, "நீங்கள் இங்கு இருக்கும் விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. (இருந்தாலும்,) நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடுவேனோ எனும் அச்சம்தான் உங்களிடையே வரவிடாமல் என்னைத் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கிவந்தார்கள். (இதுவே உங்களிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5435. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு (ஹதீஸ் அறிவித்து) அறிவுரை வழங்கிவந்தார்கள். இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர், "அபூஅப்திர் ரஹ்மானே! தங்களின் ஹதீஸ் அறிவிப்பை நாங்கள் நேசிக்கிறோம்; ஆசிக்கிறோம். தாங்கள் ஒவ்வொரு தினமும் எங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்" என்று கூறினார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடுவேனோ எனும் அச்சம்தான் உங்களுக்கு (நாள்தோறும்) ஹதீஸ் அறிவிக்க விடாமல் என்னைத் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கிவந்தார்கள். (இதுவே உங்களிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50