5175. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
பாடம் : 7 வாழ்நாள், வாழ்வாதாரம் உள்ளிட்டவை முன்பே விதியில் எழுதப்பட்டிருப்பதை விடக் கூடவோ குறையவோ செய்யாது.
5176. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், "இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட நாட்கள் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ (ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும் குறிக்கப்பட்டுவிட்ட (வாழ்)நாட்களையும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒருபோதும் கொண்டுவந்துவிடவுமாட்டான்; அவற்றில் எதையும்,அதற்குரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்தவுமாட்டான். நரக நெருப்பின் வேதனையிலிருந்தோ, அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்தோ உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் குரங்குகள் பற்றி பேசப்பட்டது. - பன்றிகளாக உருமாற்றப்பட்ட (பனூ இஸ்ராயீல் சமுதாயத்த)வர்கள் பற்றியும் பேசப்பட்டது என்று அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை. குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இப்னு பிஷ்ர் (ரஹ்) அவர்கள் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பிலும், வகீஉ (ரஹ்) அவர்கள் இடம்பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்பிலும் "நரகநெருப்பின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் (உன்னைக் காக்கும்படி நீ கேட்டிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும்)" என்றே காணப்படுகிறது.
அத்தியாயம் : 46
5177. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், "இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட காலம் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!"என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளுக்காகவும் (வரையறுக்கப்பட்டுவிட்ட) காலடிகளுக்காகவும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரங்களுக்காகவும் நீ அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே கொண்டுவரமாட்டான்;அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தவுமாட்டான். அல்லாஹ்விடம் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் காக்கும்படி நீ வேண்டியிருந்தால் உனக்கு நன்றாயிருந்திருக்கும்" என்றார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (தற்போதுள்ள) குரங்குகளும் பன்றிகளும் உருமாற்றப்பட்ட (பனூ இஸ்ராயீல் சமுதாயத்த)வர்களில் உள்ளவையோ?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், எந்த ஒரு சமுதாயத்தையும் அழித்துவிட்டு அல்லது வேதனைப்படுத்திவிட்டு, அவர்களுக்குச் சந்ததியினரை ஏற்படுத்துவதில்லை. குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "சென்றடையும் காலடிகளுக்காகவும்" என்று காணப்படுகிறது. சுலைமான் பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதற்குரிய நேரத்திற்கு முன்பே, அதாவது அது நிகழ்வதற்கு முன்பே என்று சிலர் அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 46
பாடம் : 8 வலிமையை உருவாக்கிக்கொள்ளும்படியும், தளர்ச்சியைக் கைவிடும்படியும், இறைவனிடம் உதவி தேடும்படியும்,விதியை இறைவனிடமே ஒப்படைத்து விடும்படியும் வந்துள்ள கட்டளை.
5178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.
உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!" என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.
மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்" என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்பதைச் சுட்டும்) "லவ்" எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 46

பாடம் : 1 குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வது தடை செய்யப்பட்டதாகும் என்பதும், அவ்வாறு பின்தொடர்பவர்கள் குறித்து வந்துள்ள எச்சரிக்கையும், குர்ஆனில் கருத்து முரண்பாடு கொள்வதற்கு வந்துள்ள தடையும்.
5179. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபியே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் (பொருள்) உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கும் வேறுசில வசனங்களும் (அதில்) உள்ளன. யாருடைய உள்ளத்தில் கோளாறு உள்ளதோ அவர்கள், வேதத்தில் பல பொருள்களுக்கு இடமளிப்பவற்றையே பின்தொடர்வர். குழப்பம் செய்ய விரும்பியும், அவற்றுக்கு (சுயமாக) விளக்கம் அளிக்க விரும்பியுமே (அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்).
ஆனால், அவற்றின் (மெய்ப்)பொருளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியார். கல்வியில் தேர்ந்தவர்கள், நாங்கள் அவற்றை நம்புகிறோம்; (அவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே" என்று கூறுவர். அறிவுடையோர் தவிர (வேறு யாரும் இதை) உணர்வதில்லை" (3:7) எனும் இறை வசனத்தை ஓதிவிட்டு, "பல பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வோரை நீங்கள் கண்டால், அவர்கள்தான் (இந்த வசனத்தில்) அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ஆட்கள் (என்பதை அறிந்து),அவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 47
5180. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்" என்று சொன்னார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் ரபாஹ் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் அபூ இம்ரான் அல்ஜவ்னீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 47
5181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) முரண்பாடு தோன்றினால் (அந்த இடத்தைவிட்டு) எழுந்துவிடுங்கள்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47
5182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். முரண்பாடு தோன்றினால் எழுந்துவிடுங்கள்.- இதை ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூஇம்ரான் அல்ஜவ்னீ (ரஹ்) அவர்கள், நாங்கள் கூஃபாவில் இளைஞர்களாக இருந்த போது எங்களிடம் ஜுன்தப் (ரலி) அவர்கள், மேற்கண்டவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 47
பாடம் : 2 கடுமையாகச் சச்சரவு செய்பவன்.
5183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கோபத்துக்குரியவன், (உண்மையை மறுத்துப் பொய்மையை நிலைநாட்ட) கடுமையாகச் சச்சரவு செய்பவன் ஆவான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47
பாடம் : 3 யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றல்.
5184. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ("நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்" என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு யாரை?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 47
பாடம் : 4 எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்.
5185. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்" என்று மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 47
பாடம் : 5 இறுதிக் காலத்தில் கல்வி அகற்றப்படுவதும் கைப்பற்றப்படுவதும் அறியாமையும் குழப்பங்களும் வெளிப்படுவதும்.
5186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைத்துவிடுவதும் மது (அதிகமாக) அருந்தப் படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் (யுக)முடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47
5187. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்ட ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்குப் பின்னர் வேறெவரும் அவர்களிடமிருந்து அதைக் கேட்டு உங்களுக்கு அறிவிக்கமுடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும் விபசாரம் பரவலாக நடைபெறுவதும் மது (அதிகமாக) அருந்தப்படுவதும் (குடும்பத்தில்) ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருக்கும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை குறைந்து) போய், பெண்கள் அதிகமாக ஆவதும் யுகமுடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்.
இதை கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பிஷ்ர் மற்றும் அப்தா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "எனக்குப் பின்னர் வேறெவரும் உங்களுக்கு அறிவிக்காத நபிமொழி ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டுள்ளேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 47
5188. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் இருவரும், "மறுமை நாளுக்கு முன் ஒரு காலகட்டம் வரும். அப்போது கல்வி அகற்றப்பட்டுவிடும்; அறியாமை நிலவும்; "ஹர்ஜ்" பெருகிவிடும். "ஹர்ஜ்" என்பது கொலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இரு அறிவிப்புகளில் "நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறினர்" என்று அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்கள் வழியாக மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூவாயில் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூ மூசா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 47
5189. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இறுதிக் காலத்தில்) காலம் சுருங்கிவிடும்; கல்வி கைப்பற்றப்பட்டுவிடும்; குழப்பங்கள் வெளிப்படும்; (பேராசையின் விளைவாக மக்களின் மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும்; "ஹர்ஜ்" பெருகிவிடும்" என்று சொன்னார்கள்.
"மக்கள், "ஹர்ஜ்" என்றால் என்ன?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொலை" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "காலம் சுருங்கிவிடும்; கல்வி கைப்பற்றப்பட்டுவிடும்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 47
5190. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "காலம் சுருங்கிவிடும்; கல்வி குறைந்துவிடும்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே தொடருகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "கருமித்தனம் உருவாக்கப்படும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 47
5191. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், மக்களி(ன் மனங்களி)லிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துக்கொள்ள மாட்டான். மாறாக,கல்விமான்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் ஒரு கல்வியாளரைக்கூட அவன் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவில்லாமலேயே அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதிமூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உமர் பின் அலீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு ஓர் ஆண்டுக்குப் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை நான் சந்தித்தபோது, அவர்களிடம் அந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அப்போதும் அவர்கள் முன்பு போன்றே (எந்த மாற்றமுமின்றி) அந்த ஹதீஸை அறிவித்தார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 47
5192. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! (நபித்தோழர்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நம்மைக் கடந்து ஹஜ்ஜுக்குச் செல்லவிருக்கிறார்கள் என எனக்குச் செய்தி வந்துள்ளது. எனவே, அவரைச் சந்தித்து அவரிடம் (மார்க்க விளக்கங்களைக்) கே(ட்டுத் தெரிந்துகொ)ள். ஏனெனில், அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான கல்வியறிவைப் பெற்றுள்ளார்"என்று கூறினார்கள்.
ஆகவே, நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவர் கூறி வந்த பல்வேறு செய்திகள் குறித்துக் கேட்டேன். அவற்றில் பின்வரும் செய்தியும் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மனிதர்களி(ன் மனங்களி)லிருந்து ஒரேயடியாகக் கல்வியைப் பறித்துக்கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களது கல்வியுடன் கைப்பற்றிக்கொள்வான். பின்னர் மக்களிடையே அறிவீனர்களான தலைவர்களையே அல்லாஹ் விட்டுவைப்பான். அவர்கள் அறிவின்றியே மக்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன்மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.
பிறகு நான் இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் பாரதூரமாகக் கருதி அதை மறுத்தார்கள். "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் பின் அம்ர் உன்னிடம் சொன்னாரா?" என்று கேட்டார்கள்.
அடுத்த ஆண்டு ஆனபோதும் என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்துள்ளார்கள். அவரைச் சந்தித்துப் பேச்சுக் கொடுத்து முன்பு உன்னிடம் அவர் சொன்ன கல்வி தொடர்பான அந்த ஹதீஸைப் பற்றி அவரிடம் கேள்" என்றார்கள். அவ்வாறே நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் கேட்டேன். முதல் முறை என்னிடம் அறிவித்ததைப் போன்றே (எந்த மாற்றமுமின்றி அந்த ஆண்டிலும்) என்னிடம் அறிவித்தார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தபோது அவர்கள், "அவர் உண்மையே கூறியிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்; சிறிதும் கூட்டவோ குறைக்கவோ செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன்"என்றார்கள்.
அத்தியாயம் : 47
பாடம் : 6 ஒருவர் (மார்க்கத்தில்) நல்ல அல்லது கெட்ட நடைமுறையை உருவாக்குவதும், நல்வழி அல்லது தீய வழிக்கு (மக்களை) அழைப்பதும்.
5193. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கம்பளியாடை அணிந்த கிராமவாசிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களது வறியநிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டிருந்தது. ஆகவே, (அவர்களுக்குத்) தானதர்மம் செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைத் தூண்டினார்கள். மக்கள் (தர்மம் செய்வதில்) தயக்கம் காட்டினர். அ(தன் அடையாளமான)து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் தென்பட்டது.
பிறகு அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை நிறைய வெள்ளியுடன் வந்தார். பிறகு மற்றொருவர் (தர்மத்தைக்கொண்டு) வந்தார். பிறகு ஒவ்வொருவராக (தம்மிடமிருந்த பொருள்களுடன்) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.
யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீயநடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது தானதர்மம் செய்யும்படி (மக்களைத்) தூண்டினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஓர் அடியார் நல்ல நடைமுறையொன்றை உருவாக்கி அவருக்குப்பின் அது செயல் படுத்தப்பட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 47
5194. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 47