பாடம் : 23 (ஈரக் கையால்) முன்தலையின் மீதும் தலைப்பாகையின் மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொள்வது.
461. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னால் (தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் வந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (வாகனத்திலிருந்து இறங்கி) இயற்கைக் கடனை முடித்துக் கொண்டு வந்து, உம்மிடம் தண்ணீர் உள்ளதா? என்று கேட்டார்கள். நான் தண்ணீர் குவளையை அவர்களிடம் எடுத்துச்சென்றேன். அவர்கள் தம்முடைய முன் கைகளையும் முகத்தையும் கழுவினார்கள். பிறகு தமது முழங்கையை வெளியே எடுக்கப்போனபோது சட்டைக் கை குறுகலாக இருந்தது. எனவே, தமது கையை (அவர்கள் அணிந்திருந்த) நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நீளங்கியைத் தோளில் போட்டுக்கொண்டார்கள். பிறகு தமது முழங்கை வரைக் கழுவினார்கள். பின்னர் (ஈரக் கையால்) தமது முன்தலையின் மீதும் தலைப்பாகை மீதும் காலுறைகள்மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள். பிறகு வாகனத்தில் ஏறினார்கள். நானும் ஏறிக்கொண்டேன். நாங்கள் (எங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த) மக்களிடம் வந்துசேர்ந்தோம். அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (இமாமாக இருந்து) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ரக்அத் தொழுது முடித்திருந்தார்கள். (இதற்கிடையே) நபி (ஸல்) அவர்கள் வந்துவிட்டதை உணர்ந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பின்வாங்கப் பார்த்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அங்கேயே நின்று தொழுமாறு) சைகை செய்தார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (எஞ்சிய ரக்அத்தையும்) மக்களுக்குத் தொழுவித்தார்கள். அவர் (தொழுகையின் இறுதியில்) சலாம் கொடுத்ததும் நபி (ஸல்) அவர்களும் நானும் எழுந்து எங்களுக்கு விடுபட்டுப்போயிருந்த ஒரு ரக்அத்தைத் தொழுதோம்.
அத்தியாயம் : 2
462. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஈரக் கையால்) தம் காலுறைகள், முன்தலை மற்றும் தலைப்பாகை ஆகியவற்றின் மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
463. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தபோது (ஈரக் கையால்) தமது முன் தலையின் மீதும் தலைப்பாகைமீதும் காலுறைகள் மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை நான் முஃகீரா (ரலி) அவர்களுடைய புதல்வர் உர்வா (ரஹ்) அவர்களிடம் செவியேற்றேன்.
அத்தியாயம் : 2
464. பிலால் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஈரக் கையால்) தம்முடைய காலுறைகள் மற்றும் தலைப்பாகையின் மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (மேற்கண்டவாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன் என்று பிலால் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 24 காலுறைகள்மீது மஸ்ஹு செய்வதற்கான காலவரம்பு.
465. ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள் என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும்,உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், தமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ர் பின் கைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அன்னாரைப் பாராட்டுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு காணப்படுகிறது:
ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: காலுறைகள்மீது மஸ்ஹு செய்வதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அவர்கள், அலீ அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், என்னைவிட அவர்தாம் இதுகுறித்து நன்கறிந்தவர் என்று கூறினார்கள். ஆகவே, நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மேற்கண்டவாறு அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 25 ஒரே உளூவினால் பல (நேரத்) தொழுகைகளைத் தொழலாம்.
466. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 26 அங்கத் தூய்மை (உளூ) செய்பவரும் மற்றவர்களும் தமது கை அசுத்தம் அடைந்திருக்குமோ என்று சந்தேகப்படும் போது, மும்முறை கையைக் கழுவாமல் பாத்திரத்திற்குள் நுழைப்பது விரும்பத்தக்க செயலன்று.
467. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல் பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (வெளிப்படை யாகவு)ம், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸை மர்ஃபூஉ (நபியவர்கள் கூறியது) எனக் குறிப்பிட்டார்கள் என்றும் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகவே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
468. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் பாத்திரத்திற்குள் கையை இடுவதற்கு முன் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கையைக் கழுவிக்கொள்ளட்டும். ஏனெனில், இரவில் அவரது கை எதில் கிடந்தது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அந்த அனைத்து அறிவிப்புகளிலும் கைகளைக் கழுவுவதற்கு முன் (பாத்திரத்தினுள் இட வேண்டாம்) என்றே (பொதுவாக) வந்துள்ளது.
ஜாபிர் (ரலி), சயீத் பின் முஸய்யப் (ரஹ்), அபூசலமா (ரஹ்), அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்), அபூசாலிஹ் (ரஹ்),அபூரஸீன் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புக்களில்தான் மூன்று முறை கைகளைக் கழுவுவதற்கு முன் (பாத்திரத்தினுள் இடவேண்டாம்) எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 27 (பாத்திரத்தில்) நாய் வாய்வைப்பது தொடர்பான சட்டம்.
469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டி விட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அதை அவர் கொட்டிவிடட்டும் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 2
470. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் (வாய்வைத்துக்) குடித்துவிடுமானால் அந்தப் பாத்திரத்தை அவர் ஏழு முறை கழுவிக்கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
471. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
472. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும்முறை யாதெனில், அதை ஏழு தடவை கழுவுவதாகும்.
அத்தியாயம் : 2
473. அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும் நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள் நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
மற்றவர்களது அறிவிப்பில் விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 2
பாடம் : 28 தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க வந்துள்ள தடை.
474. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
475. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம். பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
476. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீ சிறுநீர் கழிக்காதே! பின்னர் அதில் குளிக்காதே!
அத்தியாயம் : 2
பாடம்: 29 தேங்கி நிற்கும் தண்ணீரில் (பெருந்துடக்கு உள்ளவர்) குளிப்பதற்கு வந்துள்ள தடை.
477. அபுஸ் ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவர் பெருந்துடக்கு உள்ளவராய் இருக்கும்போது தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அப்போது நான், அவர் என்ன செய்ய வேண்டும், அபூஹுரைரா அவர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர் (அதிலிருந்து) தண்ணீரை அள்ளிக் குளிக்க வேண்டும் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
$
அத்தியாயம் : 2
பாடம் : 30 பள்ளிவாசலில் பட்டுவிட்ட சிறுநீர் முதலான அசுத்தங்களைக் கழுவித் துப்புரவு செய்வது கட்டாயமாகும். நிலம் தண்ணீராலேயே தூய்மையாகிவிடும்; அதைத் தோண்ட வேண்டியதில்லை.
478. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கிச் சிலர் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதைச் சிறுநீர் மீது ஊற்றினார்கள்.
அத்தியாயம் : 2
479. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி பள்ளிவாசலின் ஒரு பகுதியில் நின்று சிறுநீர் கழித்தார். அப்போது அவரைப் பார்த்து மக்கள் சப்தமிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் (சிறுநீர் கழித்து) முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். அவ்வாறே (தண்ணீர் கொண்டுவரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
480. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.
பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள்.
அத்தியாயம் : 2