4560. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் "விழிப்பிலும் என்னைக் காண்பார்". அல்லது "விழிப்பில் என்னைக் கண்டவரைப் போன்றவர் ஆவார்". (ஏனெனில்,) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ அவர் நிஜத்தையே நிச்சயமாக கண்டார்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட இரு ஹதீஸ்களும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளன.
அத்தியாயம் : 42
4561. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உறக்கத்தில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். என்ன விஷயம் என்றால், என் உருவில் காட்சியளிக்க ஷைத்தானுக்குத் தகுதியில்லை" என்றும், "உங்களில் ஒருவர் தீய கனவொன்றைக் கண்டால் உறக்கத்தில் தம்முடன் ஷைத்தான் விளையாடியது குறித்து எவரிடமும் தெரிவிக்க வேண்டாம்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4562. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறக்கத்தில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், என்னைப் போன்று காட்சியளிக்க ஷைத்தானுக்குத் தகுதியில்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42
பாடம் : 2 கனவில் ஷைத்தான் தம்மிடம் விளையாடியது குறித்து யாரிடமும் அறிவிக்கலாகாது.
4563. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, "எனது தலை துண்டிக்கப்படுவதைப் போன்றும் நான் அதைப் பின்தொடர்ந்து செல்வதைப் போன்றும் கனவு கண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்டித்துவிட்டு, "கனவில் உம்மிடம் ஷைத்தான் விளையாடியது குறித்து (யாரிடமும்) தெரிவிக்காதே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4564. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது தலை வெட்டப்பட்டு அது உருண்டோடிச் செல்வதைப் போன்றும் அதைப் பின்தொடர்ந்து நான் வேகமாகச் செல்வதைப் போன்றும் கனவு கண்டேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது கனவில் ஷைத்தான் உம்மிடம் விளையாடியது குறித்து நீர் மக்களிடம் தெரிவிக்காதே" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரை நிகழ்த்தியபோது, "உங்களில் ஒருவரது கனவில் ஷைத்தான் அவரிடம் விளையாடியதைப் பற்றி (யாரிடமும்) தெரிவிக்க வேண்டாம்" என்று கூறியதையும் நான் கேட்டேன்.
அத்தியாயம் : 42
4565. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கனவில் எனது தலை துண்டிக்கப்படுவதைப் போன்று நான் கண்டேன்" என்று கூறினார். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு, "உங்களில் ஒருவருடைய கனவில் ஷைத்தான் அவரிடம் விளையாடினால், அதைப் பற்றி அவர் மக்களிடம் தெரிவிக்க வேண்டாம்" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் ஒருவரிடம் கனவில் விளையாடப்பட்டால்" என்று இடம்பெறுகிறது. "ஷைத்தான் விளையாடினால்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 42
பாடம் : 3 கனவுக்கு விளக்கமளித்தல்.
4566. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தம் கைகளைக் காட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு.
அப்போது ஒரு கயிறு வானத்திலிருந்து பூமிவரை வந்து சேர்ந்ததையும் நான் கண்டேன். உடனே (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்றுவிடக் கண்டேன். பிறகு உங்களுக்குப்பின் மற்றொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்று விட்டார்.
பிறகு (மூன்றாவதாக) இன்னொரு மனிதரும் அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொள்ள கயிறு அறுந்துவிட்டது. பிறகு மறுபடியும் அக்கயிறு அவருக்காக இணைக்கப்பட்டபோது, அந்த மனிதர் (அதைப் பற்றிக்கொண்டு) மேலே சென்றுவிட்டார்" என்று சொன்னார்.
அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை விடுங்கள்; இந்தக் கனவுக்கு நான் விளக்கமளிக்கிறேன்" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்" என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அந்த மேகம் "இஸ்லாம்" எனும் மேகமாகும். அதிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த நெய்யும் தேனும் குர்ஆனின் இனிமையும் மென்மையும் ஆகும். மக்கள் (தங்கள் கைகளைக் காட்டி) அதிலிருந்து பிடித்ததானது, குர்ஆனிலிருந்து அதிகம் கற்றவர்களையும் குறைவாகக் கற்றவர்களையும் குறிக்கிறது. வானிலிருந்து பூமிவரை வந்துசேர்ந்த அந்தக் கயிறானது, நீங்கள் இருந்துவருகின்ற சத்திய (மார்க்க)மாகும். அதை நீங்கள் (பின்)பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவுக்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன்மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அவரும் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (முதலில்) அக்கயிறு அறுந்துவிடுகிறது. பிறகு அவருக்காக மீண்டும் அக்கயிறு இணைக்கப்பட்டவுடன் அதைப் பற்றிக்கொண்டு அவரும் உயர்ந்துவிடுகிறார்"என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! சொல்லுங்கள்! (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்" என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இதை) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் இதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (மேற்கண்ட அறிவிப்பு அல்லாத) மற்ற அறிவிப்புகளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாகத் துவங்குகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அதிலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தது..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி), அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் பின்வரும் குறிப்பையும் தெரிவித்துள்ளார்கள்:
மஅமர் (ரஹ்) அவர்கள் சில வேளைகளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் வேறுசில வேளைகளில் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள். அதில் "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் நேற்றிரவு (கனவில்) மேகம் ஒன்றைக் கண்டேன்..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் "உங்களில் எவரேனும் கனவு கண்டிருந்தால் அதை என்னிடம் கூறுங்கள்; அதற்கு நான் விளக்கம் சொல்கிறேன்" என்று கேட்பது வழக்கம். அப்போது ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் மேகமொன்றைக் கண்டேன்..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 42
பாடம் : 4 நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவு.
4567. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒரு நாள் இரவில் கனவு ஒன்றைக் கண்டேன். நாம் (தோழர்) உக்பா பின் ராஃபிஉ அல் அன்சாரீ அவர்களது இல்லத்தில் இருந்தோம். அப்போது நம்மிடம் "ருதப் பின் தாப்" (எனும் உயர்) வகை பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டதைப் போன்றிருந்தது. அதற்கு நான், இம்மையில் நமக்கு கிடைக்கும் உயர்வையும் மறுமையில் கிடைக்கும் நல்ல முடிவையும் நமது மார்க்கம் (பலமான அடித்தளத்தைக் கொண்டு) முழுமையாகிவிட்டது என்பதையும் விளக்கமாகக் கண்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42
4568. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் கனவில் ஒரு குச்சியால் பல் துலக்குவதைப் போன்று கண்டேன். அப்போது (என் அருகிலிருந்த) இரு மனிதர்கள் (அந்தக் குச்சிக்காகப் போட்டியிட்டுக்கொண்டு) என்னை இழுத்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைவிட வயதில் பெரியவராக இருந்தார். அவர்களில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் அந்தக் குச்சியை நான் கொடுத்தேன். அப்போது என்னிடம் "வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை தருவீராக" என்று சொல்லப் பட்டது. ஆகவே, நான் பெரியவரிடம் அந்தக் குச்சியைக் கொடுத்தேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42
4569. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்கா நகரிலிருந்து புலம்பெயர்ந்து பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்தப் பூமி "யமாமா"வாகவோ அல்லது "ஹஜரா"கவோ இருக்கும் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால், நான் கண்ட அந்த நகரம் யஸ்ரிப் - மதீனா- ஆகிவிட்டது. மேலும், அக்கனவில் நான் (என்) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை முறிந்துவிட்டதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது.
பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்ததைவிட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த மறுமலர்ச்சியையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் மீண்டும் ஒன்றுதிரண்டதையும் குறிக்கும்.
மேலும், அக்கனவில் காளை மாடுகள் சிலவற்றை (அறுக்கப்படுவதைப் போன்று) நான் கண்டேன். அல்லாஹ் நன்மையளிப்பவன். (அதாவது "வல்லாஹு கைர்" எனும் சப்தத்தைக் கேட்டேன்.) காளை மாடுகள் என்பது உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பதாகும். நன்மை (கைர்) என்பது (உஹுதுப் போருக்குப்) பின்னர் அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த வாய்மைக்கான பரிசும் (அதாவது கைபர் மற்றும் மக்கா வெற்றிகளும்) ஆகும்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4570. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மகா பொய்யன் முசைலிமா (யமாமாவிலிருந்து) மதீனாவுக்கு வந்தான். அவன், "முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளி(ப்பதாக வாக்குறுதியளி)த்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்" என்று கூறலானான். அவன் தன் சமுதாயமக்கள் பலருடன் மதீனா வந்திருந்தான்.
நபி (ஸல்) அவர்கள், (தம் பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்கள் தம்முடன் இருக்க,அவனை நோக்கி வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களது கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முசைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (வந்து) நின்றுகொண்டு, இந்த(ப் பேரீச்ச மட்டை)த் துண்டை நீ கேட்டால்கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் முடிவு செய்திருப்பதை மீறிச் செல்ல என்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால், அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன். இதோ, இவர்தான் ஸாபித். இவர் என் சார்பாக உனக்குப் பதிலளிப்பார்" என்று சொல்லிவிட்டு,அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள். - இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன்" என்று (முசைலமாவிடம்) சொன்னதைப் பற்றி நான் கேட்டபோது, அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், "நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. அதே கனவில் அவ்விரண்டையும் ஊதிவிடும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதிவிட்டேன். உடனே அவ்விரண்டு (காப்புகளு)ம் பறந்துவிட்டன. எனவே, நான் அவ்விரண்டுக்கும் "எனக்குப்பின் வெளிப் படவிருக்கின்ற மகாபொய்யர்கள் இருவர்" என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் "ஸன்ஆ"வாசியான அன்ஸீ;மற்றொருவன் "யமாமா"வாசியான முசைலிமா" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 42
4571. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன; அவற்றின் (விளக்கம் தெரியாத) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. அப்போது அவ்விரண்டையும் ஊதிவிடும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதிவிட்டேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன. "அவ்விரண்டும் எந்த இரு மகாபொய்யர்களுக்கிடையே நான் இருக்கிறேனோ அவர்களைக் குறிக்கும்" என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்ஸீ என்ற) "ஸன்ஆ"வாசியும் (முசைலிமா என்ற) "யமாமா"வாசியும் ஆவர்.
அத்தியாயம் : 42
4572. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, "உங்களில் யாரேனும் இன்றிரவு கனவு ஏதேனும் கண்டீர்களா?" என்று கேட்பார்கள்.
அத்தியாயம் : 42

பாடம் : 1 நபி (ஸல்) அவர்களின் வமிசாவளியின் சிறப்பும் அவர்கள் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அவர்களுக்கு "கல்" சலாம் சொன்னதும்.
4573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் "கினானா"வைத் தேர்ந்தெடுத்தான்; "கினானா"வின் வழித்தோன்றல்களில் குறைஷியரைத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான்.
இதை வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (சலாம்) சொல்லி வந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு.
4575. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள்.
4576. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் (பாத்திரத்தைக்) கொண்டுவரச் சொன்னபோது, (உட்பகுதி குறுகலான) வாயகன்ற (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்திற்குள் தம் விரல்களை நுழைத்தார்கள்.) மக்கள் அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்யலாயினர். நான் எண்ணிக் கணக்கிட்டுப் பார்த்தேன். அவர்கள் அறுபதிலிருந்து எண்பது பேர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய விரல் களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரப்பதை நான் பார்க்கலானேன்.
அத்தியாயம் : 43
4577. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அங்கத் தூய்மை (உளூ) செய்ய மக்கள் தண்ணீரைத் தேடினர். அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அங்கத் தூய்மை (உளூ) செய்ய சிறிது தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். பிறகு அதிலிருந்து அங்கத் தூய்மை செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரந்து வருவதை நான் கண்டேன். மக்கள் அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தனர். எந்த அளவுக்கென்றால், அவர்களில் கடைசி ஆள்வரை அனைவரும் (அதிலேயே) அங்கத் தூய்மை செய்து முடித்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4578. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் "அஸ்ஸவ்ரா" எனுமிடத்தில் இருந்தார்கள். (அஸ்ஸவ்ரா என்பது மதீனாவின் கடைத்தெருவுக்கும் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கும் அருகில் இருந்த ஓர் இடமாகும்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்வதற்காகப்) பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதில் சிறிது தண்ணீர் இருந்தது. பிறகு அப்பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். அப்போது அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரக்கலாயிற்று. (அங்கிருந்த) நபித்தோழர்கள் அனைவரும் அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தனர்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம் "அபூஹம்ஸா அவர்களே! அவர்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தனர்?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் "சுமார் முந்நூறு பேர் இருந்தனர்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4579. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலுள்ள) "அஸ்ஸவ்ரா" எனுமிடத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் அவர்களின் விரல்களை (முக்கினால் அவற்றை)க்கூட மறைக்காத அளவுக்கு, அல்லது விரல்களை மட்டுமே மறைக்கும் அளவுக்கு (சிறிது) தண்ணீர் இருந்த (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43