பாடம் : 14 சிரமமான சூழ்நிலைகளிலும் முழுமையாக அங்கத் தூய்மை செய்வதன் சிறப்பு.
421. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கட்டுப்பாடு பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை. மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இவைதாம் கட்டுப்பாடுகளாகும்; இவைதாம் கட்டுப்பாடுகளாகும் என்று இரு முறை (அல்லாஹ்வின் தூதர்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 15 பல் துலக்குதல்.
422. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லது என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின்போதும் பல் துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
423. ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பல் துலக்குவது என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 2
424. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல் துலக்குவார்கள்.
இதை ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
425. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது பல் துலக்கும் குச்சியின் முனை அவர்களின் வாயில் இருந்தது (அவர்கள் பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள்).
அத்தியாயம் : 2
426. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை (தஹஜ்ஜுது)க்காக எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தமது வாயைத் தேய்ப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்தால்... என ஹதீஸ் தொடங்குகிறது; இரவுத் தொழுகைக்காக எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 2
427. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தம் வாயைத் தேய்ப்பார்கள்.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
428. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப்பகுதியில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்று வானத்தைப் பார்த்தார்கள்.
பிறகு திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும்... என்று தொடங்கி நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக என்பதுவரை இந்தக் குர்ஆன் வசனங்களை (3:190,191)ஓதினார்கள். பின்னர் வீட்டிற்குள் திரும்பிவந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். பின்னர் சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். பிறகு எழுந்து (வீட்டிற்கு) வெளியே சென்று வானத்தைப் பார்த்தபடி இந்த (3:190,191) வசனங்களை (மீண்டும்) ஓதினார்கள். பிறகு திரும்பி வந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பின்னர் நின்று தொழுதார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 16 இயற்கை மரபுகள்.
429. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
இயற்கை மரபுகள் ஐந்தாகும் அல்லது ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (-இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும். (அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களை(ந்திடச் சவரக் கத்தியைப் பயன்படுத்து)வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களை(ந்து கொள்வதற்காகச் சவரக்கத்தியைப் பயன்படுத்து)வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றிக்கொள்வது ஆகியவைதாம் அவை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
431. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
432. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
433. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 2
434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
435. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். அக்னி ஆராதகர் (மஜூசி)களுக்கு மாறு செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.
குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மலஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் எனவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அறிவிப்பாளர் ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள், தம் தந்தை அபூஸாயிதா (ரஹ்) அவர்கள்தாம் அந்த பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன் எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 17 கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல்.
437. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார் (போலும்) என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. (இணைவைப்பாளர்கள்தாம் அவ்வாறு கேட்டனர்.)
அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மைதான்); மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மலஜலம் கழித்த பின்) வலக்கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக்குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்,கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் இணைவைப்பாளர்கள் (சார்பாக ஒருவர்) உங்கள் தோழர் (நபி (ஸல்) அவர்கள்) உங்களுக்கு மலஜலம் கழிக்கும் முறையைக்கூட கற்றுத்தருவதாக நான் கருதுகிறேன் என்று கூறின(ô)ர். அதற்கு நான் ஆம்(உண்மைதான்);எங்களில் ஒருவர் வலக் கரத்தால் துப்புரவு செய்யக்கூடாதென்றும் (மலஜலம் கழிக்கும்போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாதென்றும், கெட்டிச்சாணம், எலும்புகள் ஆகியவற்றை (துப்புரவு செய்வதற்காக)ப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார்கள் என்றேன்.
அத்தியாயம் : 2
438. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மலஜலம் கழித்த பின்) எலும்பாலோ கெட்டிச் சாணத்தாலோ துடைத்துத் துப்புரவு செய்யப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 2
439. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்;அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை வாசித்துக் காட்டி, இதை அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
440. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2