3973. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சில குர்பானிப் பிராணிகளை என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்த பின்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக்குட்டி ஒன்று எஞ்சியது. அது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, "அதை நீரே (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("தம் தோழர்களுக்கு" என்பதைக் குறிக்க "அலா அஸ்ஹாபிஹி"என்பதற்குப் பதிலாக) "அலா ஸஹாபத்திஹி" எனும் சொற்றொடர் (மூலத்தில்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3974. உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (எனது பங்காக) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு தான் எனக்குக் கிடைத்தது" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (அறுத்து) நீர் குர்பானி கொடுப்பீராக!" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 35
பாடம் : 3 குர்பானிப் பிராணியை அறுக்கும் பொறுப்பை வேறெவரிடமும் ஒப்படைக்காமல் நேரடியாகத் தாமே (தமது கையால்) அறுத்துக் குர்பானி கொடுப்பதும் பிராணியை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரும் தக்பீரும் கூறுவதும் விரும்பத்தக்கவை ஆகும்.
3975. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் ("பிஸ்மில்லாஹ்") கூறினார்கள். தக்பீரும் ("அல்லாஹு அக்பர்") சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.
அத்தியாயம் : 35
3976. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்ததையும் அல்லாஹ்வின் பெயர் கூறி, தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்ததையும் நான் பார்த்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது: நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம் "நீங்கள் இதை அனஸ் (ரலி) அவர்களிடம் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வின் பெயரால்,அல்லாஹ் பெரியவன்) என்று கூறியதையும் நான் பார்த்தேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3977. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள்,வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! அந்தக் கத்தியை எடு" என்றார்கள். பிறகு "அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு" என்றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) "பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்" (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)" என்று கூறி, அதை அறுத்தார்கள்.
அத்தியாயம் : 35
பாடம் : 4 பல், நகம் மற்றும் எலும்பு ஆகியவை தவிர இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் வேறு எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்கலாம்.
3978. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! (ஒட்டகங்களை அறுக்கக் கத்திகளைப் பயன்படுத்திவிட்டால்) நாளை (கூரிய) கத்திகள் இல்லாத நிலையில் நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(பிராணி சாவதற்கு முன்பாகக் கூர்மையான ஏதேனும் ஒரு பொருளால்) "விரைவாக அறுத்துவிடுங்கள்" அல்லது "உயிரிழக்கச் செய்துவிடுங்கள்". இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் எதைக் கொண்டும் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால், அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் (அறுத்தல்) கூடாது. (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பு இனமாகும். நகங்களோ (இறைமறுப்பாளர்களான) அபிசீனியர்களின் கத்திகளாகும்" என்று கூறினார்கள்.
(அந்தப் போரில்) எங்களுக்குச் சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச்செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து, அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3979. மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் "திஹாமா" பகுதியிலுள்ள "துல்ஹுலைஃபா" வில் இருந்தோம். அப்போது நாங்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) சில ஆடுகளையும் ஒட்டகங்களையும் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்து)ப் பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி) விட்டார்கள்.
(இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள் பாத்திரங்களைக் கவிழ்த்துவிடும்படி உத்தரவிட, அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்(டு அவற்றிலிருந்த இறைச்சிகள் வெளியே கொட்டப்பட்)டன. பிறகு பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கி (பங்கிடலா)னார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 35
3980. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஒட்டகங்களை அறுக்க வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால்) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே! ஆகவே, (கூர்மையான) மூங்கில் கழியால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?" என்று கேட்டோம். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
"அப்போது (போர்ச் செல்வமாக நாங்கள் பெற்ற) ஒட்டகங்களிலிருந்து ஒன்று மிரண்டு ஓடியது. நாங்கள் அம்பெய்து அதை (ஓடவிடாமல்) தடுத்து நிறுத்தினோம்" என்றும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "எங்களிடம் (கூரான) வாட்கள் இல்லாத நிலையில் (நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே!) நாங்கள் (கூரான) மூங்கில் கழியால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?" என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3981. மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இன்று ஒட்டகங்களை அறுக்க வாட்களைப் பயன்படுத்திவிட்டால்) நாளை எங்களிடம் (கூரான) வாட்கள் இல்லாத நிலையில் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே!"என்று கேட்டேன் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில் "மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்து)ப் பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 35
பாடம் : 5 இஸ்லாத்தின் ஆரம்பத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என விதிக்கப்பெற்றிருந்த தடையும், பின்னர் அது மாற்றப்பட்டு எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் சேமித்துவைக்கலாம் என்ற (புதிய) அனுமதி வந்த விவரமும்.
3982. அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். (தமது உரையில்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் நமது குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3983. அபூஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டுள்ளேன். பிறகு (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடனும் தொழுதிருக்கிறேன். அலீ (ரலி) அவர்கள் உரையாற்றுவதற்கு முன் எங்களுக்குப் பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள்.
பிறகு மக்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று நாட்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்தார்கள். எனவே, (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சிகளை) உண்ணாதீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3984. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரும் தமது குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ண வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3985. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சி உண்ணப்படுவதைத் தடைசெய்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள், குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ணமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3986. அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே. ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதனால் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3987. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் என (முதலில்) தடை விதித்தார்கள். பின்னர் (அந்தத் தடையை நீக்கி) "நீங்களும் உண்ணலாம். பயணத்திலும் எடுத்துச் செல்லலாம். சேமித்தும்வைக்கலாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3988. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணாமல் இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இப்போது நீங்கள் உண்ணலாம்;சேமித்தும்வைக்கலாம்" என்று கூறி, எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் "நாங்கள் மதீனா வரும்வரை (சேமித்துவைத்தோம்)" என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 35
3989. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்காமல் இருந்துவந்தோம். பின்னர் அதை (மூன்று நாட்களுக்கு மேல்) பயண உணவாக எடுத்துச் சென்று, அதை உண்ணுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 35
3990. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மதீனாவுக்குச் செல்லும்போது, குர்பானிப் பிராணியின் இறைச்சியைப் பயண உணவாக எடுத்துச் செல்வோம்.
அத்தியாயம் : 35
3991. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "மதீனாவாசிகளே! குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ணாதீர்கள்" என்று கூறினார்கள்.
அப்போது மதீனாவாசிகள், தங்களுக்குக் குழந்தை குட்டிகளும் (இன்பம் துன்பங்களில் பங்கெடுக்கும்) உதவியாளர்களும் ஊழியர்களும் இருப்பதாக(வும் அவர்களுக்குக் கொடுப்பதற்கு இறைச்சி வேண்டும் எனவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்களும் உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்தும் வையுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னுல் முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சேமித்தும் வையுங்கள்" என்பதைக் குறிக்க "இஹ்பிஸூ" அல்லது "இத்தகிரூ" என்று ஐயப்பாட்டுடன் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களே அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3992. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஓர் ஆண்டில்) "உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்" என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 35