3699. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் சிலர் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதிவேகமாக அம்பெடுத்து எய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (வேகவேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை உடைத்து விட்டார்கள். யாரேனும் ஒருவர் அம்புக்கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், "அதை அபூதல்ஹாவிடம் தூக்கிப்போடு" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னாலிருந்து) தலையை உயர்த்தி எதிரிகளை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஓர் அம்பு தங்களைத் தாக்கிவிடலாம். என் மார்பு தங்கள் மார்ப்புக்குக் கீழே இருக்கும் (தாங்கள் எட்டிப் பார்க்காமல் இருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு நேராகக் கேடயம் போன்று இருக்கும்)" என்று சொன்னார்கள்.
(அன்று) நான் அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்களையும் உம்மு சுலைம் (ரலி) அவர்களையும் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டவர்களாகப் பார்த்தேன். அவர்கள் கால் கொலுசுகளைக் கண்டேன். அவர்கள் இருவரும் (தண்ணீர் உள்ள) தோல் பைகளை முதுகின் மீது சுமந்துவந்து, (காயம் பட்டுக்கிடந்த) வீரர்களின் வாயில் ஊற்றுவார்கள். பின்னர் திரும்பிப்போய், தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்து, வீரர்களின் வாயில் ஊற்றுவார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களின் சிற்றுறக்கத்தால் அவர்கள் கரங்களிலிருந்து இரண்டு, அல்லது மூன்று முறை வாள் (நழுவி) விழுந்துவிட்டது.
அத்தியாயம் : 32
பாடம் : 48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்குப் போர்ச் செல்வத்தில் (வீரர்களுக்கான) பங்கு வழங்காமல் சிறிதளவு (ஊக்கத் தொகை) வழங்கப்படும் என்பதும், எதிரிகளின் குழந்தைகளைக் கொல்வதற்கு வந்துள்ள தடையும்.
3700. யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவர் ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்" என்று கூறி (அவருக்குப் பதில் எழுதி)னார்கள்.
நஜ்தா தமது கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்:
இறைவாழ்த்துக்குப் பின்! அறப்போர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் கலந்துகொண்டார்களா?
அவ்வாறு கலந்துகொண்ட பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பங்கு கொடுத்தார்களா? (போரில்) எதிரிகளின் குழந்தைகளைக் கொன்றார்களா? அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தில் முற்றுப்பெறும்? போரில் கைப்பற்றப்படும் செல்வங்களில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதி யாருக்குரியது? இந்த ஐந்து விஷயங்கள் குறித்து எனக்கு அறிவியுங்கள்.
அவருக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதில் எழுதினார்கள்:
நீர் என்னிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்துகொண்டார்களா?” எனக்கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர்ச்செல்வத்திலிருந்து சிறிதளவு அவர்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை.
போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.
மேலும், நீர் "அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறுகிறது?” எனக் கேட்டிருந்தீர்.என் ஆயுளின் (அதிபதி)மீதாணையாக! சிலருக்குத் தாடி கூட முளைத்துவிடும். ஆனால், தமக்குரிய ஒன்றைப் பெறுவதிலும் தமக்குரிய ஒன்றைக் கொடுப்பதிலும் பலவீனத்துடனேயே அவர்கள் இருப்பர். (ஒன்றைப் பெறும்போது) மற்றவர்களைப் போன்று சரியான பொருளைப் பெறுகின்ற பக்குவத்தை ஒருவன் அடைந்துவிட்டால் அவனைவிட்டு அநாதை எனும் பெயர் நீங்கிவிடும்.
மேலும், நீர் என்னிடம் "போர்ச்செல்வத்தில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) யாருக்குரியது?” எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் குடும்பத்தாராகிய) நாங்கள் அது எங்களுக்கே உரியது எனக் கூறிவந்தோம். ஆனால், எங்கள் மக்களே (பனூ உமைய்யா) அதை எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர். (ஆகவே, குமுஸ் நிதி ஆட்சியாளராக வரும் அனைவரின் குடும்பத்தாருக்கும் உரியதாகும்.)
அத்தியாயம் : 32
3701. மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நஜ்தா என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஐந்து விஷயங்கள் குறித்துக் கேட்டு)க் கடிதம் எழுதினார்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். "களிர்” (அலை) அவர்கள், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்து கொண்டதைப் போன்று நீரும் அறிந்தால் தவிர (அது உம்மால் இயலாத காரியமாகும்)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.
ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் "இறைநம்பிக்கையாளரை நீர் பாகுபடுத்தி அறிந்து கொள்ள முடிந்தால் தவிர. அப்போதுதான் இறைமறுப்பாளனைக் கொல்வதற்கும் இறைநம்பிக்கையாளரை விட்டுவிடுவதற்கும் உமக்கு முடியும் (ஆனால்,சிறுவன் பிற்காலத்தில் எப்படி மாறுவான் என்பதை, "களிரை”ப் போன்று அறிந்துகொள்ள உம்மால் முடியாது)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3702. யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாக்களில் ஒருவரான) நஜ்தா பின் ஆமிர் அல்ஹரூரீ என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அடிமைகளும் பெண்களும் போர்ச்செல்வங்கள் பங்கிடப் படும் இடத்திற்கு வந்தால் அவர்களுக்கும் போர்ச்செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா? (எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்லலாமா? அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப் பெறும்? (குமுஸைப் பற்றிக் கூறும் 8:41ஆவது வசனத்திலுள்ள) "உறவினர்கள்” யார் ஆகியவை பற்றி விளக்கம் கேட்டார்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "அவருக்காகப் பதில் கடிதம் எழுது" என்று கூறிவிட்டு, "அவர் முட்டாள்தனமான ஒரு முடிவை எடுத்துவிடுவார் என்ற அச்சம் எனக்கில்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்" என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு எழுதச் சொன்னார்கள்: "நீர் என்னிடம் போர்ச் செல்வம் பங்கிடப்படும் இடத்திற்குப் பெண்களும் அடிமைகளும் வந்தால் அவர்களுக்கும் போர்ச் செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா?" எனக் கேட்டிருந்தீர். போர்ச்செல்வத்தில் அந்த இரு பிரிவினருக்கும் ஏதேனும் (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டால் தவிர (குறிப்பிட்ட) பங்கேதும் இல்லை.
(போரில் எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்வதைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தீர். (போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் அவர்களைக் கொல்ல வேண்டாம். மூசா (அலை) அவர்களின் நண்பர் (களிர்), தாம் கொன்ற சிறுவனைப் பற்றி (இறைவன் மூலம்) அறிந்துகொண்டதைப் போன்று நீரும் அக்குழந்தைகளைப் பற்றி அறிந்தால் தவிர. (அது உம்மால் இயலாது.)
நீர் என்னிடம் அநாதைகளைப் பற்றி "அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறும்?” எனக் கேட்டிருந்தீர். அவன் பருவ வயதை அடைந்து, அவனிடம் பக்குவ நிலை தென்படாத வரை "அநாதை” எனும் பெயர் அவனிடமிருந்து நீங்காது.
மேலும், நீர் என்னிடம் "(8:41ஆவது வசனத்திலுள்ள) "உறவினர்" என்போர் யார்?” எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் உறவினர்களான) நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கூறினோம். ஆனால், அதை எங்கள் மக்கள் மறுத்துவிட்டனர் (எனவே ஆட்சியாளர்களின் உறவினர்களையும் அது குறிக்கும்).
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3703. யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாவான) நஜ்தா பின் ஆமிர் என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு)க் கடிதம் எழுதினார். அவரது கடிதத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாசித்தபோதும் அவருக்குப் பதில் எழுதியபோதும் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! முடைநாற்றத்தில் வீழ்ந்துவிடாமல் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதவுமாட்டேன்; அவரைக் கண்குளிரச் செய்திருக்கவுமாட்டேன்" என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) அவருக்குக் கடிதம் எழுதச் சொன்னார்கள்:
"அல்லாஹ் (8:41ஆவது வசனத்தில்) குறிப்பிட்டுள்ள (குமுஸில்) பங்கு பெறுகின்ற உறவினர்கள் யார்?” என்பது குறித்து நீர் என்னிடம் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களாகிய நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கருதினோம். ஆனால், அதை மக்கள் மறுத்துவிட்டனர்.
நீர் என்னிடம் "ஓர் அநாதைக்கு "அநாதை” எனும் பெயர் எப்போது முற்றுப்பெறும்?” எனக் கேட்டிருந்தீர். அவன் திருமண வயதை அடைந்து, அவனிடம் பக்குவம் தென்பட்டு, அவனது செல்வம் அவனிடம் ஒப்படைக்கப்படும் பருவத்தை அவன் அடையும்போது அவனிடமிருந்து "அநாதை” எனும் பெயர் முற்றுப்பெற்றுவிடும்.
நீர் என்னிடம் "(அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களின் குழந்தைகளில் எதையேனும் கொன்றிருக்கிறார்களா?” என்று கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளின் குழந்தைகள் எதையும் கொன்றதில்லை. நீரும் அவர்களின் குழந்தைகள் எதையும் கொன்றுவிடாதீர்; களிர், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்துகொண்டதை நீரும் அறிந்துகொள்ள முடிந்தால் தவிர. (ஆனால், அது உம்மால் முடியாது.)
மேலும், நீர் என்னிடம் "பெண்களும் அடிமைகளும் போரில் கலந்துகொண்டால் அவர்களுக்கும் போர்ச்செல்வத்தில் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டா?” எனக் கேட்டிருந்தீர். அவர்களுக்கு மக்களின் போர்ச்செல்வங்களிலிருந்து சிறிதளவு (ஊக்கத் தொகையாக) வழங்கப்படுவதைத் தவிர குறிப்பிட்ட அளவு பங்கேதும் அவர்களுக்குக் கிடையாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3704. மேற்கண்ட ஹதீஸின் ஒரு பகுதி மட்டும் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் முழுத் தகவல்களுடன் ஹதீஸ் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3705. உம்மு அத்திய்யா அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். மக்கள் (போரிடச்) சென்ற பிறகு அவர்களின் இருப்பிடங்களில் அவர்களுக்குப் பின்துணையாக இருந்து நான் செயல்படுவேன்; அவர்களுக்காக உணவு சமைப்பேன். போரில் காயமுற்றவர்களுக்கு மருந்திட்டுச் சிகிச்சை செய்வேன். நோயாளிகளைக் கவனித்துக் கொள்வேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 49 நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை.
3706. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக மக்களுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு மழை வேண்டிப் பிரார்த்தித்தார்.
அப்போது நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு மனிதர் மட்டுமே இருந்தார். அப்போது நான் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்தொன்பது" என விடையளித்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று வினவியபோது, "பதினேழு" என்றார்கள். "அவர்கள் கலந்துகொண்ட முதல் போர் எது?" என்று கேட்டதற்கு "தாத்துல் உசைர், அல்லது உஷைர்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3707. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) நாடு துறந்து சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள். "விடைபெறும்” ஹஜ் எனும் அந்த ஹஜ்ஜைத் தவிர வேறெந்த ஹஜ்ஜையும் அவர்கள் செய்யவில்லை.
இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3708. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டேன். நான் பத்ருப் போரிலோ உஹுதுப் போரிலோ கலந்துகொள்ளவில்லை. (அப்போருக்குச் செல்லவிடாமல்) என் தந்தை (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்) என்னைத் தடுத்துவிட்டார்கள்.
(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்டுவிட்ட பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஒருபோதும் எந்தப் போரிலும் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.
அத்தியாயம் : 32
3709. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். அவற்றில் எட்டுப் போர்களில் அவர்கள் (நேரடியாகப்) போரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவற்றில்” எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3710. புரைதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு போர்களில் கலந்து கொண்டேன்.
அத்தியாயம் : 32
3711. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் பங்கேற்று ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (சலமா (ரலி) அவர்கள் கலந்து கொண்ட அறப்போர் மற்றும் படைப்பிரிவு ஆகிய) அவ்விரண்டின் எண்ணிக்கையும் ஏழு என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 50 "தாத்துர் ரிக்காஉ” போர்.
3712. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக (முறை வைத்து) பயணம் செய்தோம். (வாகனம் இல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்து (கொப்புளங்கள் வெடித்து)விட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன.
அப்போது நாங்கள் எங்கள் கால்களில் துண்டுத் துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு துண்டுத் துணிகளை நாங்கள் கால்களில் சுற்றிக் கட்டிக்கொண்டதால் தான் அந்தப் போருக்கு "தாத்துர் ரிக்காஉ”(ஒட்டுத் துணிப் போர்) எனப்பெயர் சூட்டப்பெற்றது.
இதன் அறிவிப்பாளரான அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்த பின் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், தம்மைப் பற்றித் தாமே இவ்வாறு அறிவித்ததை விரும்பவில்லை. தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அவர்கள் விரும்பவில்லை போலும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉசாமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
புரைத் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "அல்லாஹ் அதற்குரிய நற்பலனை அவர்களுக்கு வழங்குவானாக" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது வெறுக்கத்தக்கதாகும்.
3713. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ரை நோக்கி (போருக்கு)ப் புறப்பட்டார்கள். (மதீனாவுக்கு அருகில்) "ஹர்ரத்துல் வபரா” எனும் இடத்தில் அவர்கள் இருந்தபோது அவர்களை ஒரு மனிதர் அணுகினார். அவரது வீரதீரமும் விவேகமும் (மக்களால் பெரிதும்) பேசப்பட்டு வந்தது. அவரைப் பார்த்ததும் நபித்தோழர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, "உம்மைப் பின்பற்றி, உம்முடன் சேர்ந்து (எதிரிகளோடு) போரிட நான் வந்துள்ளேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை” என்றார். "அப்படியானால் நீ திரும்பிச் செல். ஓர் இணைவைப்பாளரிடம் நான் உதவி கோரமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.
பிறகு சிறிது தூரம் சென்று, நாங்கள் "அஷ்ஷஜரா” எனும் இடத்தில் இருந்தபோது, அந்த மனிதர் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, முன்பு கூறியதைப் போன்றே கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறிவிட்டு, "நீ திரும்பிச் சென்றுவிடு. நான் ஓர் இணைவைப்பாளரிடம் உதவி கோர மாட்டேன்" என்று கூறினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டு, "அல்பைதா" எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முன்பு கேட்டதைப் போன்றே "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்" என்றார்.
ஆகவே, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீர் (நம்முடன்) வரலாம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32

பாடம் : 1 மக்கள் அனைவரும் (ஆட்சியதிகாரத்தில்) குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்.
3714. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். அவர்களில் இறைமறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறை மறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3715. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். மக்களில் இறை மறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறைமறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
அத்தியாயம் : 33
3716. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையிலும் தீமையிலும் (இஸ்லாத்திலும், அறியாமைக்காலத்திலும்) மக்கள் அனைவரும் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3717. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3718. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாதவரை இந்த ஆட்சியதிகாரம் முடிவடையாது" என்று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள்.
அப்போது நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை "அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் (என்று கூறினார்கள்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33