பாடம் : 40 நபி (ஸல்) அவர்கள் (மக்களை) இறைவன்பால் அழைத்ததும் நயவஞ்சகர்கள் அளித்த துன்பங்களைப் பொறுத்ததும்.
3679. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் "ஃபதக்" நகர் குஞ்சம் வைத்த முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணம் செய்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டார்கள். ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள்.
இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. (வழியில்) நபியவர்கள் ஓர் அவையைக் கடந்துசென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள்.
அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள் வாகனப்) பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது, அப்துல்லாஹ் பின் உபை தனது மேல்துண்டால் தனது முகத்தைப் பொத்திக்கொண்டு, "எங்கள்மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்" என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு முகமன் (சலாம்) கூறினார்கள். பிறகு, தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி,அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், "மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிட அழகியது வேறொன்றுமில்லை. ஆனாலும், அதை எங்களுடைய (இத்தகைய) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உமது இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு எடுத்துச் சொல்லும்" என்றார்.
(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், "(ஆம்; அல்லாஹ்வின் தூதரே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்" என்று சொன்னார்கள்.
இதற்கிடையே முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து (தாக்கிக்)கொள்ள முற்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
பின்னர் தமது வாகனத்தில் ஏறி (உடல்நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, "சஅதே! (உங்கள் குலத்தாரான) அபூஹுபாப் -அப்துல்லாஹ் பின் உபை- சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கூறி, "அப்துல்லாஹ் பின் உபை இப்படி இப்படிக் கூறினார்" என்று தெரிவித்தார்கள்.
அதற்கு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அவரை மன்னித்து விட்டுவிடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகரத்தார் அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடிசூட்ட முடிவு செய்திருந்த நிலையில்தான், அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த நபித்துவம் மற்றும் தலைமைத்துவத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய (மார்க்க)த்தின் மூலம் அவர்களின் முடிவை நிராகரித்தபோது, அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்" என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இது அப்துல்லாஹ் தம்மை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்வதற்கு முன்னர் (இறைமறுப்பாளராக இருந்தபோது) நடந்ததாகும்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3680. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் சென்றால் நன்றாயிருக்குமே!" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது.
அப்துல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது, அவர், "தூர விலகிப்போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது" என்று கூறினார்.
அப்போது அன்சாரி(த் தோழர்)களில் ஒருவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்" என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவரது (கஸ்ரஜ்) குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரப்பட்டார்.
அவ்விருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். ஈச்ச மட்டையாலும் கைகளாலும் செருப்பாலும் அடித்துக்கொண்டார்கள்.
அப்போது, "இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தம்மிடையே சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்" (49:9) எனும் வசனம் அவர்கள் குறித்து அருளப்பட்டது எனும் செய்தி எங்களுக்கு எட்டியது.
அத்தியாயம் : 32
பாடம் : 41 அபூஜஹ்ல் கொல்லப்படுதல்.
3681. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பத்ருப் போர்க் களத்தில்) "அபூஜஹ்ல் என்ன ஆனான் எனப் பார்த்து வருபவர் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்துவரச்) சென்றார்கள். அவனை (அன்சாரியான) அஃப்ரா என்பவருடைய இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் (குற்றுயிராக) வீழ்ந்து கிடப்பதைக் கண்டார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, "அபூஜஹ்ல் நீதானே!" என்று கேட்டார்கள். அதற்கு அபூஜஹ்ல், "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக” அல்லது "தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக” ஒருவன் உண்டா?" என்று (தன்னைத்தானே பெருமைப்படுத்திய) அவன் கேட்டான்.
அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "விவசாயக் குடியில் பிறக்காத ஒருவன் (அன்சாரி அல்லாதவன்) என்னைக் கொன்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே!" என அபூஜஹ்ல் கூறினான் என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூஜஹ்ல் என்ன செய்கிறான் என எனக்காக அறிந்துவருபவர் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் குறிப்பும் இதில் இடம்பெறுகிறது.
அத்தியாயம் : 32
பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.
3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு” என அனுமதியளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.
அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.
"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்” பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.
பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.
அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.
அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.
கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.
அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 43 கைபர் போர்.
3683. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, கைபருக்கு அருகில் இரவின் இருட்டு இருக்கவே சுப்ஹுத் தொழுகையை நாங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது) வாகனத்தில் ஏறி (கைபரை நோக்கி)ப் பயணம் செய்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களும் தமது வாகனத்தில் ஏறிப் பயணம் செய்தார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் செல்லும் சாலையில் தமது வாகனத்தை (விரைவாகச்) செலுத்தினார்கள். எனது முழங்கால், (அருகில் வாகனத்தில் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டுக்கொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வேட்டி அவர்களது தொடையிலிருந்து விலகியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையை நான் பார்த்தேன்.
நகருக்குள் நுழைந்தபோது, "அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கி விட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட் டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று மூன்று முறை கூறினார்கள்.
அப்போது (யூத) மக்கள் தம் வேலைகளுக்காகப் புறப்பட்டுவந்தனர். (எங்களைப் பார்த்ததும்), "முஹம்மத் வந்துவிட்டார்" என்று கூறினர். நாங்கள் கைபரைப் போர் செய்தே கைப்பற்றினோம் (சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கைப்பற்றவில்லை).
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "முஹம்மதும் அவருடைய ஐந்து அணிகள் கொண்ட படையும் வந்துவிட்டனர்" என யூதர்கள் சொல்லிக்கொண்டார்கள் என என் சகாக்களில் சிலர் கூறினர்.
அத்தியாயம் : 32
3684. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நாளில் நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனது பாதம், (அருகில் வாகனத்தில் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் கைபர்வாசிகளிடம் சூரியன் உதிக்கும் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் தங்களுடைய கால்நடைகள், கோடரிகள், (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகள் மற்றும் மண் வெட்டிகள் ஆகியவற்றுடன் (வயல்வெளிகளை நோக்கி) வெளியேறி வந்தனர்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்ததும்) "முஹம்மதும் அவருடைய (ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று கூறினார்கள். அவ்வாறே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களைத் தோற்கடித்தான்.
அத்தியாயம் : 32
3685. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபருக்கு வந்தபோது, "நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப்பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3686. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது மக்களில் ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், "உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடமாட்டீர்களா?" என்று கேட்டார்.
ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையை)ப் பாடி அவர்களுடைய ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள்:
இறைவா!
நீ இல்லையென்றால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்.
தர்மமும் செய்திருக்கமாட்டோம்.
தொழுதிருக்கவுமாட்டோம்.
நாங்கள் புரிந்துவிட்ட
பாவங்களுக்காக
எங்களை மன்னிப்பாயாக.
உனக்கே நாங்கள் அர்ப்பணம்.
(போர்முனையில் எதிரியை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக.
எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக. (அறவழியில் செல்ல)
நாங்கள் அழைக்கப்பட்டால்
நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.
எங்களிடம்
மக்கள் (அபயக்) குரல்
எழுப்பினால்
(உதவிக்கு வருவோம்).
என்று பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இந்த ஒட்டகவோட்டி?" என்று கேட்டார்கள். "ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது, "அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அங்கிருந்த மக்களில் ஒருவர், "இறைத்தூதரே! (அவருக்கு வீரமரணமும் அதையடுத்துச் சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா?" என்று கேட்டார்.
பிறகு நாங்கள் கைபருக்குச் சென்று, கைபர்வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்குக் கைபரை வெற்றியாக்கிவிட்டான்"என்று கூறினார்கள். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது என்ன நெருப்பு? எதற்காக இவற்றை மூட்டியிருக்கிறீர்கள்?"என்று கேட்டார்கள். "இறைச்சி சமைப்பதற்காக" என்று மக்கள் விடையளித்தனர். "எந்த இறைச்சி?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "நாட்டுக் கழுதைகளின் இறைச்சி” என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களை உடைத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது ஒருவர், "இறைச்சிகளைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொள்ளலாமா?" என்று கேட்டார். "அப்படியே ஆகட்டும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது, ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. குனிந்து ஒரு யூதனின் காலை அவர்கள் வெட்டப் போனபோது, ஆமிர் அவர்களின் வாளின் மேற்பகுதி அவர்களது முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
(கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது -சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்- அமைதியாக இருந்த என்னைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. (அவர் தமது வாளால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்) என்று மக்கள் கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைச் சொன்னவர் யார்?" என்று கேட்டார் கள். "இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உசைத் பின் ஹுளைர் அல்அன்சாரீ (ரலி) அவர்களுமே இவ்வாறு கூறினர்" என்று நான் பதிலளித்தேன். "இதைச் சொன்னவர் பொய்யுரைத்து விட்டார். நிச்சயமாக ஆமிருக்கு (நற்செயல் புரிந்த நன்மை,அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு" என்று கூறியவாறு, தம் இரு விரல்களையும் இணைத்துக் காட்டினார்கள்.
தொடர்ந்து, "அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபியர் மிகவும் அரிதே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("எங்கள்மீது அமைதியைப் பொழிவாயாக" என்பதைக் குறிக்க "வ அல்கியன் சகீனத்தன் அலைனா” என்பதற்குப் பகரமாக) "வ அல்கீ சகீனத்தன் அலைனா" என்று இடம்பெற்றுள்ளது (பொருள் ஒன்றே).
அத்தியாயம் : 32
3687. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (யூதர்களுடன்) கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருடைய வாள் முனை அவரையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (சிலர்) இது தொடர்பாக (பல விதமாக)ப் பேசிக் கொண்டனர். அவர் (மரணம்) தொடர்பாக சந்தேகம் வெளியிட்டனர். "அவர் தமது ஆயுதத்தாலேயே இறந்துவிட்ட மனிதர்" என்றும், அவருடைய நடவடிக்கைகளில் இன்னும் சிலவற்றைக் குறித்தும் சந்தேகமாகப் பேசினர்.
கைபரிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது (அவர்களிடம்) நான், "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்காகச் சில யாப்பு வகைக் கவிதையைப் பாட எனக்கு அனுமதி அளியுங்கள்" என்று கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "நீ சொல்லவிருப்பதை நான் அறிவேன்" என்று கூறினார்கள். அப்போது நான் பின்வரும் யாப்பு வகைக் கவிதைகளைப் பாடினேன்:
"அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் இல்லாவிட்டால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தர்மமும் செய்திருக்கமாட்டோம்.
தொழுதிருக்கவும் மாட்டோம்"
என்று பாடினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உண்மையுரைத்தாய்" என்று கூறினார்கள். பிறகு நான்,
"எங்கள் மீது
அமைதியைப் பொழிவாயாக.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக.
இணைவைப்பாளர்கள்
எங்கள்மீது வரம்புமீறிவிட்டார்கள்"
என்று பாடினேன்.
நான் பாடி முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை யாத்தவர் யார்?" என்று கேட்டார்கள். நான் "என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்)" என்றேன். "அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக" என்று நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! சிலர், என் சகோதரருக்கு (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர். அவர் தமது ஆயுதத்தாலேயே தற்கொலை செய்துகொண்ட ஒரு மனிதர் என்று கூறுகின்றனர்" என்றேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் துன்பங்களைத் தாங்கி, (இறை வழியில்) அறப்போரும் புரிந்து இறந்தார்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு நான் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவரிடம் (இந்த ஹதீஸைப் பற்றிக்) கேட்டேன். அவரும் தம் தந்தையாரிடமிருந்து இதைப் போன்றே எனக்கு அறிவித்தார்.
ஆயினும், "மக்களில் சிலர் ஆமிருக்காக (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர்" என்று நான் கூறியபோது "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் பொய்யுரைத்துவிட்டனர். அவர் துன்பங்களைத் தாங்கி (இறைவழியில்) அறப்போரும் புரிந்து இறந்தார். அவருக்கு (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு" என்று கூறியபடி, தம் இரு விரல்களை இணைத்துக் காட்டினார்கள்" என்று அவர் கூறினார்.
அத்தியாயம் : 32
பாடம் : 44 "அஹ்ஸாப்" எனும் அகழ்ப் போர்.
3688. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். மண், அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்துவிட்டிருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டு இருந்தார்கள்:
அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் இல்லாவிட்டால், நாங்கள்
நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்
தர்மமும் செய்திருக்கமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்.
எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக! இவர்கள்
(கூட்டுப் படையினர்) எங்களுக்கு
அக்கிரமம் இழைத்துவிட்டனர்.
சில வேளை இவ்வாறு கூறினார்கள்:
இந்தப் பிரமுகர்கள்
எங்களை நிராகரித்துவிட்டனர்.
இவர்கள் எங்களைச்
சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
நாங்கள் இடம் தரமாட்டோம்.
"(நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம் என) இந்த (இறுதி) வாசகத்தை உரத்த குரலில் கூறிக்கொண்டு இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("இவர்கள் எங்களை நிராகரித்து விட்டனர்" என்பதற்குப் பகரமாக) "இவர்கள் எங்கள்மீது எல்லை மீறிவிட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3689. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அகழ் தோண்டிக்கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டும் இருந்தபோது, எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள்,
"இறைவா! மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடி) கூறினார்கள்.
அத்தியாயம் : 32
3690. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),
"இறைவா! மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடி) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3691. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),
"இறைவா! மறுமை வாழ்வே
(நிரந்தரமான) வாழ்வாகும்"
அல்லது "இறைவா!
மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு
வேறெதுவுமில்லை"
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்
அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்
நீ கண்ணியப்படுத்துவாயாக"
என்று (பாடியபடி) கூறினார்கள். "அல்லது" எனும் ஐயப்பாட்டுடன் ஷுஅபா (ரஹ்) அவர்களே அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3692. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அகழ் தோண்டிக்கொண்டு) இருந்த போது பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:
இறைவா!
மறுமையின் நன்மையைத் தவிர
வேறு (நிலையான) நன்மை
எதுவுமில்லை.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ உதவி செய்வாயாக.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உதவி செய்வாயாக" என்பதற்குப் பகரமாக "மன்னிப்பருள்வாயாக" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3693. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போர் நாளில் முஹம்மத் (ஸல்)
அவர்களின் தோழர்கள்,
"நாங்கள் (எத்தகையோர் எனில்)
உயிரோடிருக்கும் காலம்வரை
நாங்கள் "இஸ்லாத்தில் நிலைப்போம்”
அல்லது "அறப்போர் புரிவோம்”
என முஹம்மத் (ஸல்) அவர்களிடம்
உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்"
என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
"இறைவா! மறுமையின் நன்மையே
(நிலையான) நன்மையாகும்.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடியே) சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 45 "தூ கரத்" உள்ளிட்ட போர்கள்.
3694. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுப்பதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். "தூ கரத்” எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்துகொண்டிருந்தன.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன" என்று கூறினார். நான், "அவற்றை யார் பிடித்துச் சென்றனர்?" என்று கேட்டேன். அதற்கு அந்த அடிமை, "ஃகத்ஃபான் குலத்தார்" என்று பதிலளித்தார்.
உடனே நான் உரக்கச் சப்தமிட்டு "உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!” (யா ஸபாஹா!) என்று மதீனாவின் இரு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மூன்று முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று "தூ கரத்” எனும் இடத்தில் அவர்களை அடைந்தேன். அவர்கள் (அங்கிருந்த நீர்நிலையில்) தண்ணீர் புகட்டத் தலைப்பட்டிருந்தனர்.
"அக்வஇன் மகன் நான்! இன்று அற்பர்கள் (அழியும்) நாள்"
என்று பாடியபடி கூறிக்கொண்டே அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் "ரஜ்ஸ்" எனும் யாப்பு வகைக் கவிதையைப் பாடிக்கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன்.
(அவர்களை நான் விரட்டிச் சென்றபோது) அவர்கள் விட்டுவிட்டுப்போன முப்பது சால்வை களை நான் எடுத்துக்கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்து சேர்ந்தனர்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தார் தாகத்துடன் இருந்தபோதும் அவர்களை தண்ணீர் குடிக்கவிடாமல் நான் தடுத்துவிட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச்சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படைப்பிரிவை இப்போதே அனுப்புங்கள்" என்று கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அக்வஉ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்துகொள்" என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவுக்குத்) திரும்பிவந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தமது ஒட்டகத்தின் மீது அமர்த்திக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 32
3695. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவை நோக்கிச் சென்றோம். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கு (தண்ணீர் குறைவாக இருந்ததால் எங்களுடைய) ஐம்பது (குர்பானி) ஆடுகள் நீர் புகட்டப் படாமல் (தாகத்துடன்) இருந்தன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த கிணற்றின் சுற்றுச் சுவர்மீது அமர்ந்துகொண்டு பிரார்த்தித்தார்கள். அல்லது அதனுள் உமிழ்ந்தார்கள். உடனே கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்தது. உடனே நாங்கள் நீர் அருந்தினோம். எங்கள் கால் நடைகளுக்கும் நீர் புகட்டினோம்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த மரத்துக்குக் கீழே உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) வாங்குவதற்காக எங்களை அழைத்தார்கள். மக்கள் அனைவருக்கும் முன்பாக (முதலில்) நானே அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். பிறகு ஒவ்வொருவராக (வந்து) உறுதிமொழி அளித்தனர்.
மக்களில் பாதிப்பேரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழி வாங்கி) இருந்தபோது "சலமா! உறுதிமொழி அளிப்பாயாக!" என்று (என்னிடம்) கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாக தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மீண்டும் (ஒரு முறை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று கூறினார்கள்.
அப்போது என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். எனக்கு "சிறிய தோல் கேடயம் ஒன்றை” அல்லது "தோல் கேடயம் ஒன்றை” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். பிறகு என்னிடம் உறுதிமொழி பெற்றார்கள்.
மக்களில் இறுதி நபரிடம் அவர்கள் (உறுதிமொழி பெற்றுக்கொண்டு) இருந்தபோது, "சலமா! என்னிடம் நீ உறுதிமொழி அளிக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாகவும் மக்களில் பாதிப்பேராகவும் தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
"மீண்டும் (ஒரு தடவை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று சொன்னார்கள். நான் மூன்றாவது தடவையாக உறுதிமொழி அளித்தேன்.
பிறகு என்னிடம், "சலமா! உனக்கு நான் வழங்கிய உனது "சிறிய தோல் கேடயம்” அல்லது "தோல் கேடயம்" எங்கே?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை நான் கண்டேன். எனவே, அதை அவருக்குக் கொடுத்துவிட்டேன்" என்று சொன்னேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். மேலும், "நீர் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரைப் போன்றவர் ஆவீர். அவர் "இறைவா! எனக்காக ஒரு நண்பரைக் கிடைக்கச் செய்வாயாக! அவர் என் உயிரைவிட எனக்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார். (அவரைப் போன்றே நீரும் உம்மைவிட உம் தந்தையின் சகோதரருக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்)" என்று கூறினார்கள்.
பிறகு (மக்கா) இணைவைப்பாளர்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வதாக எங்களுக்குத் தூது விட்டார்கள். இதனால், (நாங்களும் அவர்களும்) ஒருவர் பகுதிக்கு மற்றவர் சென்றுவர முடியும். நாங்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டோம்.
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுக்கு உதவியாளராக இருந்தேன். அவரது குதிரைக்குத் தண்ணீர் புகட்டுவேன். அதைத் துடைத்துத் துப்புரவு செய்வேன். அவருக்கு ஊழியமும் செய்வேன். அவர் தரும் உணவை உண்டுகொள்வேன். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் எனது குடும்பம், சொத்து (சுகங்)கள் அனைத்தையும் விட்டுவிட்டு, நான் நாடு துறந்து (மதீனாவுக்கு) வந்திருந்தேன்.
நாங்களும் மக்காவாசிகளும் சமாதான ஒப்பந்தம் செய்து, எங்களில் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடிக்கொண்டபோது, நான் ஒரு மரத்தை நோக்கி வந்து, அதன் (அடிப்பாகத்தில் இருந்த) முற்களை அகற்றிவிட்டு அதற்குக் கீழே படுத்துக்கொண்டேன்.
அப்போது மக்காவாசிகளான நான்கு இணைவைப்பாளர்கள் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசத் தொடங்கினர். அவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தது. உடனே மற்றொரு மரத்துக்கு நான் மாறிக்கொண்டேன். அந்த நால்வரும் தம் ஆயுதங்களை (அந்த மரத்தில்) தொங்கவிட்டுவிட்டு அவர்களும் படுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், யாரோ ஒருவர் அந்தப் பள்ளத்தாக்கின் கீழேயிருந்து "முஹாஜிர்களுக்கு ஏற்பட்ட நாசமே! (நம் தோழர்) இப்னு ஸுனைம் கொல்லப்பட்டுவிட்டார் (ஒப்பந்த மீறல் நடைபெற்றுவிட்டது)" என்று உரக்க அறிவித்தார். உடனே நான் எனது வாளை உருவிக் கொண்டு, படுத்திருந்த அந்நால்வரைத் தாக்கினேன். அவர்களின் ஆயுதங்களை எடுத்து ஒரே கட்டாக என் கையில் வைத்துக்கொண்டேன்.
பிறகு "முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் தலையைத் தூக்கிப் பார்த்தால் அவரது கண் உள்ள பகுதியிலேயே அடிப்பேன்" என்று கூறினேன்.
பின்னர் அவர்களை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் "அபலாத்” குலத்தைச் சேர்ந்த "மிக்ரஸ்” எனப்படும் ஒரு மனிதரை பிடித்துக்கொண்டு, துணி விரிக்கப்பட்ட குதிரையொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடன் எழுபது இணைவைப்பாளர்களும் இருந்தார்கள்.
அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு "அவர்களை விட்டு விடுங்கள். (ஒப்பந்த மீறல்) குற்றம் அவர்களிடமிருந்தே தொடங்கி மீண்டும் ஏற்பட்டதாக இருக்கட்டும்" என்று கூறி, அவர்களை மன்னித்து விட்டுவிட்டார்கள்.
அல்லாஹ் (இது தொடர்பாகவே), "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களிடமிருந்தும், அவர்கள் கைகளை உங்களிடமிருந்தும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பதை உற்றுநோக்குபவனாக இருக்கின்றான்" (48:24) எனும் வசனத்தை அருளினான்.
பிறகு நாங்கள் மதீனாவை நோக்கித் திரும்பினோம். அப்போது ஓரிடத்தில் நாங்கள் இறங்கித் தங்கினோம். (அந்த இடத்திலிருந்த) எங்களுக்கும் இணைவைப்பாளர்களான "பனூ லஹ்யான்” குலத்தாருக்கும் இடையே ஒரு மலை மட்டுமே இருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(எதிரிகளைக் கண்காணிப்பதற்காக) இன்றிரவு இம்மலைமீது ஏறுபவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உளவாளி போன்று (அவர் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்). அன்றிரவு நான் இரண்டு அல்லது மூன்று முறை அம்மலைமீது ஏறினேன்.
பிறகு நாங்கள் மதீனாவுக்கு வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (பால்) ஒட்டகங்களைத் தம் அடிமையான ரபாஹ் (ரலி) அவர்களுடன் அனுப்பிவைத்தார்கள். அவருடன் நானும் இருந்தேன். தல்ஹா (ரலி) அவர்களின் குதிரையை ஓட்டிக்கொண்டு, ஒட்டகங்களுடன் அந்தக் குதிரைக்கும் தண்ணீர் புகட்டி மேய்ச்சல் நிலத்துக்கு அனுப்புவதற்காக நானும் புறப்பட்டுச் சென்றேன்.
காலையில் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரீ என்பான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்களைத் திடீரெனத் தாக்கி, அவை அனைத்தையும் ஓட்டிச் சென்றுவிட்டான். அவற்றின் மேய்ப்பாளரையும் கொன்றுவிட்டான்.
உடனே நான், "ரபாஹே! (இதோ) இந்தக் குதிரையைப் பிடித்துச் சென்று, தல்ஹா பின் உபை தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சேர்த்துவிடு. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களின் கால்நடைகளை எதிரிகள் தாக்கிக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர் எனத் தெரிவித்துவிடு" என்று கூறினேன்.
பிறகு ஒரு மலையின் உச்சியில் ஏறி மதீனாவை முன்னோக்கி நின்றுகொண்டு, "உதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)" என மூன்று முறை உரத்த குரலில் கூவினேன். பிறகு அந்தக் (கொள்ளைக்) கூட்டத்தைப் பின்தொடர்ந்து சென்று, அவர்கள்மீது அம்பெய்தவனாக விரட்டிச் சென்றேன். அப்போது நான்,
"அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என யாப்புக் கவிதை பாடினேன். பிறகு அவர்களில் ஒருவனை நெருங்கி அவனது ஒட்டகச் சேணத்தின் மீது அம்பெய்தேன். அதன் கூர்முனை சேணத்தில் நுழைந்து அவனது தோளில் பாய்ந்தது. நான்,
"இதோ வாங்கிக்கொள்;
அக்வஇன் மகன் நான்;
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று (பாடியபடி) கூறினேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு அவர்கள்மீது அம்பெய்துகொண்டும் அவர்களின் குதிரைகளை வெட்டி வீழ்த்திக்கொண்டும் நான் இருந்தேன். என்னை நோக்கிக் குதிரை வீரர் எவரேனும் திரும்பி வந்தால், நான் ஏதேனும் மரத்தை நோக்கிச் சென்று அதற்குக் கீழே அமர்ந்துகொண்டு, அவன்மீது அம்பைப் பாய்ச்சினேன். அவனது குதிரையை வெட்டி வீழ்த்தினேன். குறுகிய மலையிடுக்கு தென்பட்டபோது, அதன் இடுக்கில் அவர்கள் நுழைந்து கொண்டனர். நானும் அம்மலை மீதேறிக்கொண்டு, கல்லால் அவர்களை விரட்டியடித்தேன்.
இவ்வாறு (விரட்டியடித்த வண்ணம்) அவர்களை நான் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் அல்லாஹ் படைத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்கள் அனைத்தையும் என் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்துவிட்டேன். அவர்கள் அவற்றை என்னிடமே விட்டுவிட்டு விரைந்துகொண்டிருந்தனர்.
பிறகு மீண்டும் அவர்கள்மீது அம்பெய்த வண்ணம் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் (ஓடிய வேகத்தில்) முப்பது சால்வைகளையும் முப்பது ஈட்டிகளையும் விட்டு விட்டு ஓடினர். அவர்கள் விட்டுச் சென்ற ஒவ்வொரு பொருள்மீதும் அல்லாஹ்வின் தூதரும் அவருடைய தோழர்களும் அறியும் விதத்தில் ஓர் அடையாளக் கல்லை வைத்துக் கொண்டேபோனேன்.
பிறகு ஒரு குறுகலான மலைக் கணவாய்க்கு அவர்கள் சென்றனர். அங்கு பத்ர் அல்ஃபஸாரீ என்பவனின் மகனிடம் அவர்கள் போய்ச்சேர்ந்து, அமர்ந்து காலை உணவை உட்கொள்ளலாயினர். நான் ஒரு மலை உச்சியில் அமர்ந்துகொண்டேன்.
அப்போது அந்த ஃபஸாரீ, "நான் காணும் இந்தக் காட்சிகள் என்ன?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "இதோ இவனிடமிருந்து கடும்துயரத்தை நாங்கள் சந்தித்துவிட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! அதிகாலை இருளிலிருந்து அவன் எங்களை விட்டு விலகவே இல்லை. எங்களை நோக்கி அம்பெய்து எங்கள் கையிலிருந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டான்" என்று கூறினர்.
அதற்கு அந்த ஃபஸாரீ, "உங்களில் நான்கு பேர் அவனை நோக்கிச் செல்லட்டும்" என்று கூறினான்.
அவர்களில் நான்கு பேர் நானிருந்த மலைமீது ஏறினர். அவர்கள் எனது பேச்சைக் கேட்கும் இடத்திற்கு வந்தபோது,நான், "என்னை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
அவர்கள் "இல்லை, நீ யார்?" என்று கேட்டார்கள். "நான் சலமா பின் அல்அக்வஉ. முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் ஒருவரை நான் தேடிப் புறப்பட்டால் அவரை நான் பிடிக்காமல் விடமாட்டேன். (அதே சமயத்தில்) உங்களில் யாரேனும் ஒருவர் என்னைத் தேடிப் புறப்பட்டால் அவரால் என்னைப் பிடிக்க முடியாது" என்று நான் கூறினேன். அவர்களில் ஒருவன், "நானும் (அவ்வாறே) கருதுகிறேன்" என்றான்.
பிறகு அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். நான் அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்கக்கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குதிரைப் படையினர் மரங்களிடையே புகுந்து வருவதை நான் பார்த்தேன். அவர்களில முதல் ஆளாக அக்ரம் அல்அசதீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவருக்குப் பின்னால் அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரைத் தொடர்ந்து மிக்தாத் பின் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
நான் அக்ரம் (ரலி) அவர்களது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டேன். அவர்கள் நால்வரும் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். நான் "அக்ரமே! அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வந்து சேர்வதற்கு முன் (தனியாக வரும்) உம்மை இவர்கள் பிடித்துவிட வேண்டாம்" என்று கூறினேன்.
அதற்கு அக்ரம் (ரலி) அவர்கள், "சலமா! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவராயிருந்தால், சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என நீர் அறிந்திருந்தால் எனக்கும் வீர மரணத்துக்குமிடையே குறுக்கிடாதீர்!" என்று கூறினார்.
ஆகவே, அவரை நான் விட்டுவிட்டேன். அவரும் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரியும் (வாள் முனையில்) சந்தித்துக்கொண்டனர். அக்ரம் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மானின் குதிரையை வெட்டிவிட்டார்கள். அப்துர் ரஹ்மான்,அக்ரம் (ரலி) அவர்கள்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவர்களைக் கொன்றுவிட்டான்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! பிறகு நான் காலால் நடந்தே அவர்களைப் பின்தொடர்ந்தேன். எனக்குப் பின்னால் வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களையோ,அவர்களது (குதிரை கிளப்பிய) புழுதியையோ நான் பார்க்கவில்லை.
இறுதியில் அ(ந்தப் பகை)வர்கள் சூரியன் மறைவதற்கு முன் ஒரு கணவாயை அடைந்தனர். அங்கு ஒரு நீர்நிலை இருந்தது. அதற்கு "தூ கரத்” எனப் பெயர் சொல்லப்பட்டது. அவர்கள் தாகத்துடன் இருந்ததால் அதில் நீர் அருந்தச் சென்றனர். தங்களுக்குப் பின்னால் நான் ஓடி வருவதை அவர்கள் கண்டதும் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் நிலைக்கு அவர்கள் உள்ளாயினர். அவர்கள் ஒரு துளி நீரைக்கூட சுவைக்கவில்லை.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஒரு மலைக் குன்றில் விரைந்து சென்றனர். நான் வேகமாக ஓடி அவர்களில் ஒருவனைச் சென்றடைந்தேன். அவனது தோள் பட்டையிலுள்ள மெல்லிய எலும்பின் மீது,
"இதோ இதை வாங்கிக்கொள்
அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று கூறியவாறு ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அவன், "உன் தாய் உன்னை இழக்கட்டும்! காலையில் வந்த அக்வஆ நீ?" என்று கேட்டான். நான் "ஆம். தனக்குத் தானே பகைவன் ஆகிவிட்டவனே! காலையில் சந்தித்த உன் அக்வஉதான் நான்" என்றேன்.
அக்கூட்டத்தார் ஒரு மலைக் குன்றின் மீது இரு குதிரைகளை விட்டுவிட்டு ஓடி விட்டனர். நான் அவ்விரு குதிரைகளையும் பிடித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓட்டி வந்தேன்.
அப்போது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்கள் தோல் அடுக்குப் பாத்திரம் ஒன்றை என்னிடம் கொண்டுவந்தார். அதில் தண்ணீர் கலந்த பால் சிறிதளவு இருந்தது. இன்னொரு தோல் அடுக்குப் பாத்திரமும் அவரிடம் இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. நான் அங்கத் தூய்மை (உளூ) செய்தேன்; அருந்தினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அக்கூட்டத்தாரை நான் விரட்டியடித்த நீர்நிலை அருகில் அவர்கள் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களையும் அந்த இணைவைப்பாளர்களிடமிருந்து நான் கைப்பற்றிய ஈட்டிகள், சால்வைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்திருந்தார்கள்.
அப்போது பிலால் (ரலி) அவர்கள், அக்கூட்டத்தாரிடமிருந்து நான் விடுவித்த ஒட்டகங்களில் ஒன்றை அறுத்து அதன் ஈரலையும் திமிலையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பொரித்துக்கொண்டிருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் (நம்) மக்களில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து (அழைத்துக்கொண்டு) அக்கூட்டத்தாரைப் பின் தொடர்ந்து செல்கிறேன். அவர்களில் இறப்புச் செய்தி அறிவிக்கக்கூட ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்கள் அனைவரையும் கொன்றுவிடுகிறேன்" என்று கூறினேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அங்கிருந்த நெருப்பின் வெளிச்சத்தில் அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரிந்தன. அப்போது அவர்கள், "சலமா! உன்னால் அதைச் செய்ய முடியும் என நீ கருதுகிறாயா?"என்று கேட்டார்கள். நான் "ஆம் (செய்வேன்), தங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்போது அக்கூட்டத்தார் ஃகத்ஃபான் பகுதியில் விருந்து அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்று (இறையறிவிப்பின் மூலம்) கூறினார்கள்.
அப்போது ஃகத்ஃபான் பகுதியிலிருந்து ஒரு மனிதர் வந்தார். அவர் "அக்கூட்டத்தாருக்காக இன்ன மனிதர் இறைச்சி ஒட்டகமொன்றை அறுத்(து விருந்தளித்)தார். அவர்கள் அந்த ஒட்டகத்தின் தோலை உரித்துக்கொண்டிருந்தபோது (பாலைவன வெளியில்) புழுதி கிளம்புவதைக் கண்டனர். உடனே "அக்(குதிரைப் படைக்) கூட்டம் வந்துவிட்டது” என்று கூறியவாறு வெருண்டோடிவிட்டனர்" என்று கூறினார்.
காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்" என்று (பாராட்டிக்) கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள்.
பிறகு தமது "அள்பா” எனும் ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் என்னை அமரச் செய்து மதீனா நோக்கித் திரும்பினார்கள்.
நாங்கள் வந்துகொண்டிருந்தபோது (ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.) அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். அவரை ஓட்டப்பந்தயத்தில் யாராலும் வெல்ல முடியாது. அவர், "மதீனாவரை என்னுடன் போட்டியிட்டு ஓடுபவர் யார்? போட்டியிட்டு ஓடுபவர் யார்?" என்று திரும்பத் திரும்பக் கூறலானார்.
அவரது குரலைக் கேட்ட நான் (அவரிடம்), "மரியாதைக்குரியவர்களை நீ மதிக்கமாட்டாயா? சிறப்புக்குரியவர்களை நீ அஞ்சமாட்டாயா?" என்று கேட்டேன். அவர் "இல்லை, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாக இருந்தால் தவிர" என்று கூறினார்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை விடுங்கள்; அந்த மனிதரை நான் வெல்கிறேன்" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் விருப்பம்" என்றார்கள்.
நான், "முதலில் நீ ஓடு” என்று கூறிவிட்டு, என் கால்களை உதறிவிட்டு, குதித்து ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது, ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி மூச்சு வாங்கி ஓய்வெடுத்தேன். பிறகு அவருக்குப் பின்னால் ஓடினேன். மறுபடியும் ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது ஓட்டத்தை மட்டுப்படுத்தினேன்.
பிறகு அவரைச் சென்றடைவதற்காக (மேட்டில்) ஏறினேன். அப்போது அவருடைய தோள்களுக்கிடையே அடித்து, "நீ தோற்கடிக்கப்பட்டாய், அல்லாஹ்வின் மீதாணையாக!" என்றேன். அவர், "நானும் (அவ்வாறே) எண்ணுகிறேன்" என்று கூறினார். மதீனாவரை அவருக்கு முன்பாகவே நான் ஓடிவந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு வந்த பின்) நாங்கள் மூன்று இரவுகள் மட்டுமே தங்கியிருந்தோம். (நான்காம் நாள்தான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். அப்(பயணத்தின்)போது, என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) பின்வரும் யாப்புக் கவிதையைப் பாடினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக!
அல்லாஹ் மட்டும் இல்லாவிட்டால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தானதர்மம் செய்திருக்கவுமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்
(இறைவா!) நாங்கள்
உன் கருணையிலிருந்து
தேவையற்றவர்கள் அல்லர்.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக!
எங்கள்மீது
அமைதியைப் பொழிவாயாக!
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "நான் ஆமிர்" என்றார்கள். "உம்முடைய இறைவன் உமக்கு மன்னிப்பருள்வானாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்காக (போரில் தனிப்பட்ட முறையில்) அவரது பெயர் குறிப்பிட்டுப் பாவமன்னிப்பு வேண்டுவார்களேயானால், அவர் (அப்போரில்) வீர மரணம் அடையாமல் இருந்ததில்லை.
ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறு, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிர் (நீண்ட நாள் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களைப் பயனடையச் செய்யக்கூடாதா?" என்று கேட்டார்கள். பிறகு நாங்கள் கைபர் சென்றடைந்ததும் கைபர்வாசிகளின் மன்னன் மர்ஹப் தனது வாளை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே,
"கைபருக்குத் தெரியும்
நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
முழு ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு
கொழுந்துவிட்டு எரியும்போது
(சில நேரம் நான் ஈட்டியெறிவேன்
சில நேரம் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அப்போது என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் முன்னே வந்து,
"கைபருக்குத் தெரியும் நான் ஆமிர் என்று
போர்த் துன்பங்களை எதிர்கொள்ளும்
ஆயுதங்கள் தரித்த சரியான வீரன் என்று"
என்று பாடினார்கள். பிறகு இருவரும் மோதிக்கொண்டனர். அப்போது மர்ஹபின் வாள், ஆமிர் (ரலி) அவர்களின் கேடயத்தைத் தாக்கியது. ஆமிர் (ரலி) அவர்கள் (குனிந்து) அவனது கீழ் பகுதியில் (தமது வாளால்) வெட்டப்போனார்கள். அப்போது அவரது வாள் அவரையே திருப்பித் தாக்கிவிட்டது; அவரது கை நரம்பைத் துண்டித்துவிட்டது. அதிலேயே அவரது இறப்பும் ஏற்பட்டது.
பிறகு நான் புறப்பட்டுச் சென்றேன். அப்போது நபித்தோழர்களில் சிலர் "ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. அவர் தற்கொலை செய்துகொண்டார்" என்று பேசிக் கொண்டிருந்தனர்.
உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டனவா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவ்வாறு) யார் சொன்னது?" என்று கேட்டார்கள். "தங்கள் தோழர்களில் சிலர்" என்று பதிலளித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வாறு சொன்னவர் பொய்யுரைத்துவிட்டார். அவருக்கு அவரது நன்மை இருமுறை கிடைக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு கண்வலியுடன் இருந்த அலீ (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவர) என்னை அனுப்பிவைத்தார்கள்.
(என்னை அனுப்புவதற்கு முன்) "நான் (நாளை) இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்" என்று கூறினார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்று கண் வலியுடனிருந்த அவர்களை அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்தார்கள். அவர்கள் கண் குணமடைந்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களிடம் இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியைக் கொடுத்தார்கள். கைபரின் மன்னன் மர்ஹப் புறப்பட்டு வந்து,
"கைபருக்குத் தெரியும் நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு கொழுந்துவிட்டு எரியும்போது
(சில வேளை நான் ஈட்டியெறிவேன்
சில வேளை நான் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள்,
என் தாயாரால் ஹைதர் (சிங்கம்)
எனப் பெயர் சூட்டப்பட்டவன் நான்
அருவருப்பான தோற்றமுடைய
அடர்வனத்தின் சிங்கம் நான்
சந்தர் எனும் பேரளவையால்
அளப்பதைப் போன்று
அவர்களைத் தாராளமாக அளந்திடுவேன்
(ஏராளமான எதிரிகளை
வெட்டி வீழ்த்துவேன்)"
என்று பாடிக்கொண்டே மர்ஹபின் தலையில் ஓங்கி அடித்து, அவனை வீழ்த்தினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களின் கரங்களாலேயே (கைபரின்) வெற்றியும் கிட்டியது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 46 "அவனே அவர்கள் கைகளை உங்களிடமிருந்து தடுத்தான்" (48:24) எனும் வசனம்.
3696. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) அவர்கள்மீதும் நபித்தோழர்கள்மீதும் திடீர்த் தாக்குதல் தொடுப்பதற்காக "தன்ஈம்” மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கிவந்தனர். அப்போது சரணடைந்த அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிடித்து, (அவர்களை மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்தான்" (48:24) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 32
பாடம் : 47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது.
3697. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம்முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்" என்று கூறினார்கள்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் அதை வைத்துள்ளேன்" என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றியின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)" என்று கூறினார்கள்.
- உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3698. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்சாரிப் பெண்மணிகளும் கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள்; காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்.
அத்தியாயம் : 32