3420. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமைக்கு உணவும் உடையும் அளிக்கப்பட வேண்டும். அவரது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர் சிரமப்படுத்தப்படக்கூடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு உணவு சமைத்துக் கொண்டுவந்தால், அவரையும் தம்முடன் அமரச் செய்து அவர் உண்ணட்டும். உணவு குறைவானதாக இருந்தால் அதில் ஓரிரு கவளங்களையாவது அவரது கையில் வைக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூத் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"ஓரிரு கவளங்கள்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "உக்லத்தன் அவ் உக்லத்தைனி" என்பதற்கு "லுக்மத்தன் அவ் லுக்மத்தைனி" என்று பொருள். (இரண்டுக்கும் பொருள் ஒன்றே.)
அத்தியாயம் : 27
பாடம் : 11 தன் உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்து, இறைவழிபாட்டையும் அழகுபடச் செய்யும் அடிமைக்குக் கிடைக்கும் நன்மையும் பிரதிபலனும்.
3422. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமை, தம் உரிமையாளருக்கு விசுவாசமாக நடந்து, அல்லாஹ்வையும் நன்முறையில் வழிபடுவாராயின் அவருக்கு இரு முறை(யினாலும்) நன்மை உண்டு.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3423. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்குச் சொந்தமான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு, "அபூஹுரைராவின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்" என்றார்கள்.
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
தம் தாயாரு(க்குச் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்ற அவரு)டனேயே இருந்ததால், தாயார் இறக்கும்வரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் (கூடுதலான) ஹஜ்ஜுக்குக் கூடச் செல்லவில்லை என நமக்குச் செய்தி எட்டியது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுத்தாஹிர் அஹ்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நல்ல அடிமைக்கு" என்று இடம்பெற்றுள்ளது. "ஒருவருக்குச் சொந்தமான" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பற்றிய குறிப்பும் அதற்குப் பின்னுள்ளவையும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
3424. அபூசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் அடிமை அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் தம் உரிமையாளருக்குச் செய்ய வேண்டிய கடமையையும் நிறைவேற்றினால், அவருக்கு இரு நன்மைகள் உண்டு" என்று சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் இந்த ஹதீஸை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது கஅப் (ரலி) அவர்கள், "(மறுமை நாளில்) அவருக்கும் வசதியற்ற இறை நம்பிக்கையாளருக்கும் விசாரணை ஏதுமில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3425. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழிபாட்டிலும் தம் உரிமையாளரின் உறவிலும் செம்மையாகச் செயல்பட்ட நிலையில் மரணிப்பதே ஓர் அடிமைக்கு நன்று; மிகவும் நன்று.
அத்தியாயம் : 27
பாடம் : 12 பலருக்குச் சொந்தமான ஓர் அடிமையில் தமது பங்கை மட்டும் ஒருவர் விடுதலை செய்தல்.
3426. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குரிய பங்கை விடுதலை செய்கிறாரோ, அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு,தம் கூட்டாளிகளுக்கு அவர்களுக்குரிய பங்குகளின் விலையைக் கொடுத்து, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிடவேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (தமது பங்கின்) அளவுக்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3427. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். அவரிடம் (அந்த அளவுக்குச்) செல்வம் இல்லாவிட்டால், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவருக்கு அந்த அடிமையின் விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வமிருந்தால், அவ்வடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு (தமது செல்வத்திலிருந்து அதைச் செலுத்தி அவனை முழுமையாக விடுதலை செய்து)விட வேண்டும். இல்லையெனில்,அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அய்யூப் மற்றும் யஹ்யா பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் மட்டுமே "அவரிடம் அந்த அளவுக்குச் செல்வம் இல்லாவிட்டால், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. மற்றவர்களின் அறிவிப்பில் இக்குறிப்பு காணப்படவில்லை. அவ்விருவரும், "இக்குறிப்பு ஹதீஸிலேயே உள்ளதா, அல்லது அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்களின் கூற்றா என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறினர். இவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பைத் தவிர வேறு எந்த அறிவிப்பிலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
3429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கும் மற்றொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால்,அவ்வடிமையின் (சந்தை) விலையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் மதிப்பிட்டு, வசதியுடையவராக அவர் இருந்தால், (மீதி விலையையும் செலுத்தி) அவனை முழுமையாக விடுதலை செய்துவிட வேண்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3430. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரிடம் அந்த அடிமையின் முழு விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அதன் மூலம் அவர் அவ்வடிமையின் மற்ற பங்குகள் முழுவதையும் விடுதலை செய்துவிட வேண்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3431. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கும் மற்றொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை அவர்களில் ஒருவர் விடுதலை செய்தால், (தம் கூட்டாளிக்குச் சேர வேண்டிய பங்கிற்கும்) அவரே பொறுப்பாளியாவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3432. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரது செல்வத்திலிருந்தே அந்த அடிமை(யின் மீதிப்பங்கும்) விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3433. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரிடம் (போதிய) செல்வம் இருந்தால் அவரது செல்வத்திலிருந்தே அவ்வடிமையின் முழு விடுதலை அமையும். அவரிடம் (போதிய) செல்வம் இல்லையெனில்,அவ்வடிமை(யின் நியாய விலை மதிப்பிடப்பட்டு மீதி பங்குகளின் விலையைத் தருவதற்காக) உழைத்துச் சம்பாதிக்க (அவன்) அனுமதிக்கப்பட வேண்டும். அவனுக்கு அதிகச் சிரமத்தை அளித்து விடக்கூடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3434. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் விடுதலையளிக்காத பங்கிற்காக அந்த அடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவனுக்கு அதிகச் சிரமத்தை அளித்துவிடக் கூடாது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3435. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தமது மரணத் தறுவாயில் தமக்குச் சொந்தமான ஆறு அடிமைகளை விடுதலை செய்துவிட்டார். அந்த அடிமைகளைத் தவிர வேறு செல்வங்கள் எதுவும் அவரிடம் இருக்க வில்லை. (இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது) அந்த அடிமைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து, அவர்களை மூன்றில் ஒரு பாகங்களாகப் பிரித்தார்கள். பின்னர் அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டு, அவர்களில் இருவருக்கு மட்டுமே விடுதலையளித்தார்கள்; நால்வரை அடிமைகளாகவே நீடிக்கச் செய்தார்கள். (இறக்கும் தறுவாயில் ஆறு அடிமைகளையும் விடுதலை செய்த) அந்த மனிதரைப் பற்றிக் கடுமையாக (சாடி)ப் பேசினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3436. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலுள்ள வாசகங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அன்சாரிகளில் ஒருவர் தமது மரணத் தறுவாயில் தமக்குரிய ஆறு அடிமைகளை விடுதலை செய்யுமாறு இறுதிவிருப்பம் தெரிவித்தார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
பாடம் : 13 பின் விடுதலையளிக்கப்பட்ட அடிமையை விற்கலாம்.
3437. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் (தம்) அடிமை ஒருவரைத் தமது இறப்புக்குப் பின் விடுதலை பெற்ற வராவார் (முதப்பர்) என்று அறிவித்திருந்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவுமிருக்கவுமில்லை. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "என்னிடமிருந்து இந்த அடிமையை (விலைக்கு) வாங்குபவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது அந்த அடிமையை நுஐம் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்கள் எண்ணூறு திர்ஹங் களுக்கு (வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கிக் கொண்டார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் அந்த அன்சாரியிடம் ஒப்படைத்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் "அந்த அடிமை (எகிப்து நாட்டு) "கிப்தீ" அடிமையாவார். அவர் கடந்த ஆண்டுதான் இறந்தார்" என்றும் கூறக் கேட்டேன்.
அத்தியாயம் : 27
3438. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவரைத் தமது இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவராவார் (முதப்பர்) என்று அறிவித்திருந்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. (இச்செய்தி அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அடிமையை விற்றார்கள். அவரை இப்னு நஹ்ஹாம் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். அவர் (எகிப்து நாட்டு) "கிப்தீ" அடிமை ஆவார். அவர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கடந்த ஆண்டுதான் இறந்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27

பாடம் : 1 "அல்கஸாமா" சத்தியம்.
3439. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு கைபர் சென்றடைந்தனர். அங்கு ஓரிடத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் அவருடைய (சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
(அம்மூவரில்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் தம்முடன் வந்த (வயதில் பெயரி)வர்களை முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேசப்போனார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெரியவர்களைப் பேசவிடு" என்று சொன்னார்கள். உடனே அப்துர் ரஹ்மான் அமைதியாகிவிட்டார். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவ்விருவருடனும் பேசினார்கள்.
அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்துல்லாஹ் பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் "உங்கள் (உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை" அல்லது "உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை" எடுத்துக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?"என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்று) சத்தியம் செய்து, உங்களிடம் தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கட்டும்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) ஏற்க முடியும்?" என்று கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
அத்தியாயம் : 28