3400. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்தியம் செய்யச் சொன்னவரின் எண்ணப்படியே சத்தியம் அமையும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
பாடம் : 5 (சத்தியத்தின்போது) "இன்ஷா அல்லாஹ்" கூறுதல்.
3401. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தனர். (ஒரு நாள்) அவர்கள், "நான் இன்றிரவு அவர்கள் அனைவரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் கர்ப்பமுற்று, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்" என்று கூறினார்கள். (அவ்வாறே சென்று தாம்பத்தியத்தில் ஈடுபட்டார்கள்.) ஆனால், துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும்கூட (ஒரு தோளுடைய) அரை மனிதனையே பெற்றெடுத்தார்.
சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" ("அல்லாஹ் நாடினால்" அவ்வாறு பெற்றெடுப்பர்) என்று கூறியிருந்தால், அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3402. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒரு முறை) இறைத்தூதர் சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள் "நான் இன்றிரவு (என்னுடைய) எழுபது துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்" என்று கூறினார்கள். அப்போது சுலைமான் நபியின் "தோழர் ஒருவர்" அல்லது "வானவர் ஒருவர்" "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்,அவ்வாறு பெற்றெடுப்பார்கள்) என்று சொல்லுங்கள்" என சுலைமான் (அலை) அவர்களிடம் கூறினார்.
சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூற மறந்துவிட்டார்கள். அதனால் அவர்களுடைய துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு தோளுடைய அரைக் குழந்தையையே பெற்றெடுத்தார்.
சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" (அல்லாஹ் நாடினால்) என்று கூறியிருந்தால் தமது சத்தியத்தை அடையாமல் இருந்திருக்கமாட்டார்கள்; தமது தேவையைப் பூர்த்தி செய்திருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3403. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) (ஒரு முறை) சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள், "நான் இன்றிரவு (என்னுடைய) எழுபது துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள்" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எனச் சொல்லுங்கள்" என்று கூறப்பட்டது.
ஆனால், அவர்கள் அவ்வாறு கூறாமல் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்தார்கள். அவர்களுடைய துணைவியரில் எவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை; ஒரே ஒருவரைத் தவிர. அந்த ஒருவரும் (ஒரு தோளுடைய) அரை மனிதரையே பெற்றெடுத்தார். சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறியிருந்தால் தமது சத்தியத்தை அடையாமல் இருந்திருக்கமாட்டார்கள்; தமது தேவையைப் பூர்த்தி செய்திருப்பார்கள்.
அத்தியாயம் : 27
3404. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒரு முறை) சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள், "நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அவர்களுடைய தோழர் ஒருவர், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எனச் சொல்லுங்கள்" என்றார். சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாமல், தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்தார்கள். அவர்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு தோளுடைய (அரை) மனிதரையே பெற்றெடுத்தார்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறியிருந்தால், (அவர்கள் ஒவ்வொருவரும் வீரர்களைப் பெற்றெடுத்து) அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் குதிரை வீரர்களாக அறப்போர் புரிந்திருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (வீர) மகனைக் கருக்கொண்டிருப்பார்கள்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
பாடம் : 6 தடை செய்யப்படாத ஒன்றாகவே இருந்தாலும், குடும்பத்தாரைப் பாதிக்கும் வகையில் ஒருவர் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருக்கலாகாது.
3405. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இதுவும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பதானது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவர்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிட அல்லாஹ்விடம் பெரிய பாவமாகும்.
அத்தியாயம் : 27
பாடம் : 7 இறைமறுப்பாளரின் நேர்த்திக்கடனும் அவர் இஸ்லாத்தை ஏற்ற பின் அந்த விஷயத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறையும்.
3406. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! "மஸ்ஜிதுல் ஹராம்" புனிதப் பள்ளிவாசலில் ஓர் இரவு "இஃதிகாஃப்" வழிபாடு மேற்கொள்வதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ந்துகொண்டேன். (இப்போது அதை நிறைவேற்றலமா?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூஉசாமா (ரஹ்) மற்றும் அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "ஓர் இரவு இஃதிகாஃப்" என்று இடம்பெற்றுள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு பகல் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ந்துகொண்டார்கள்" என்று காணப்படுகிறது. ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ஒரு பகல் என்றோ ஓர் இரவு என்றோ குறிப்பு இல்லை. (இஃதிகாஃப் இருப்பதாக நேர்ந்துகொண்டார்கள் என்று பொதுவாகவே இடம் பெற்றுள்ளது.)
அத்தியாயம் : 27
3407. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தாயிஃப்” போரிலிருந்து திரும்பிய பின் "அல்ஜிஃரானா" எனும் இடத்திலிருந்தபோது அவர்களிடம் (என் தந்தை) உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) "மஸ்ஜிதுல் ஹராம்" புனிதப் பள்ளிவாசலில் ஒரு நாள் "இஃதிகாஃப்" இருப்பதாக நான் நேர்ந்துகொண்டேன். அது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சென்று ஒரு நாள் "இஃதிகாஃப்" இருப்பீராக!" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு (ஹுனைன் போர்ச் செல்வத்தின்) ஐந்தில் ஒரு பாகம் (கும்ஸ்) நிதியிலிருந்து ஓர் அடிமைப் பெண்ணைக் கொடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்தபோது அக்கைதிகள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்துவிட்டார்கள்" என்று கூறிய சப்தத்தை உமர் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள், "என்ன இது?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்து விட்டார்கள்" என்று கூறினர். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "அப்துல்லாஹ்! அந்த அடிமைப் பெண்ணிடம் சென்று அவளது வழியில் அவளை விட்டுவிடு" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் "ஹுனைன்" போரிலிருந்து திரும்பியபோது, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் அறியாமைக் காலத்தில் ஒரு பகல் "இஃதிகாஃப்" இருப்பதாக நேர்ந்துகொண்டிருந்ததைப் பற்றி வினவினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில் பின்வருமாறு ஹதீஸ் ஆரம்பமாகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்ஜிஃரானா" எனுமிடத்திலிருந்து நிறைவேற்றிய உம்ரா பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் முன்னிலையில் பேசப்பட்டது.
அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், (அதைப் பற்றி அறியாதிருந்த காரணத்தால்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்ஜிஃரானா"விலிருந்து உம்ரா செய்யவில்லை" என்று விடையளித்தார்கள். மேலும், "உமர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் ஓர் இரவு "இஃதிகாஃப்" மேற்கொள்வதாக நேர்ந்துகொண்டிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "ஒரு பகல் "இஃதிகாஃப்" இருப்பதாக நேர்ந்திருந்தார்கள்" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
பாடம் : 8 அடிமைகளுடனான நல்லுறவும் அடிமையின் கன்னத்தில் அறைந்துவிட்டவர் செய்ய வேண்டிய பரிகாரமும்.
3408. ஸாதான் அபீஉமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தம் அடிமையை விடுதலை செய்திருந்தார்கள். பின்னர் தரையிலிருந்து ஒரு குச்சியை, அல்லது வேறு ஏதோ ஒரு பொருளை எடுத்துக்காட்டி, "இதற்குச் சமமான நற்பலன்கூட இ(ந்த அடிமையை விடுதலை செய்த)தில் எனக்குக் கிடைக்காது. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் தம் அடிமையை அறைந்துவிட்டால், அல்லது அடித்துவிட்டால், அவரை விடுதலை செய்து விடுவதே அதற்குரிய பரிகாரமாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 27
3409. ஸாதான் அபீஉமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் அடிமை ஒருவரை அழைத்து, அவரது முதுகில் ஏற்பட்டிருந்த வடுவைப் பார்த்தார்கள். அவரிடம், "வலிக்கும்படி அடித்து விட்டேனா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள், "நீ விடுதலை செய்யப்பட்டவன் ஆவாய்" என்று கூறிவிட்டார்கள். பிறகு தரையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துக்காட்டி, இதன் எடைக்குச் சமமான நன்மைகூட எனக்கு இதில் கிடைக்காது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒருவர் தம்முடைய அடிமையை அவர் செய்யாத குற்றத்திற்காகத் தண்டித்துவிட்டால், அல்லது அறைந்துவிட்டால் அவரை விடுதலை செய்துவிடுவதே அதற்குரிய பரிகாரமாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவர் செய்யாத குற்றத்திற்காகத் தண்டித்துவிட்டால்" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒருவர் தம் அடிமையை அறைந்துவிட்டால்" என்றே இடம்பெற்றுள்ளது. "அவர் செய்யாத குற்றத்திற்காக" எனும் குறிப்பு அதில் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
3410. முஆவியா பின் சுவைத் பின் முகர்ரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் எங்களுடைய அடிமை ஒருவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு ஓடிவிட்டேன். பிறகு "லுஹர்" தொழுகைக்கு சற்று நேரத்திற்கு முன்னர் வந்து என் தந்தைக்குப் பின்னால் நின்று தொழுதேன். என் தந்தை அந்த அடிமையையும் என்னையும் அழைத்து, "இவனிடமிருந்து நீ பழி தீர்த்துக்கொள்" என்று (அடிமையிடம்) கூறினார்கள். ஆனால், அந்த அடிமை என்னை மன்னித்துவிட்டார்.
பிறகு என் தந்தை (சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள்) கூறினார்கள்: பனூ முகர்ரின் குடும்பத்தாராகிய எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரே ஓர் அடிமைப் பெண் மட்டுமே இருந்தாள். எங்களில் ஒருவர் அவளது கன்னத்தில் அறைந்துவிட்டார். இத்தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், "அவளை விடுதலை செய்துவிடுங்கள்" என்று கூறினார்கள். எங்கள் குடும்பத்தார், "இவளைத் தவிர வேறு வேலைக்காரிகள் எங்களிடம் இல்லை" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவளிடமே அவர்கள் வேலை வாங்கிக் கொள்ளட்டும்! அவளிடம் அவர்களுடைய தேவை முடிந்ததும் அவளது வழியில் அவளை (சுதந்திரமாக) விட்டுவிடட்டும்!" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3411. ஹிலால் பின் யசாஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு முதியவர் அவசரப்பட்டு தம் அடிமைப் பெண்ணின் முகத்தில் அறைந்துவிட்டார். அவரிடம் சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள், "அடிப்பதற்கு அவளது மென்மையான முகம்தான் கிடைத்ததா? பனூ முகர்ரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களில் நானும் ஒருவன் ஆவேன். எங்களிடம் ஒரே ஓர் அடிமைப் பெண் மட்டுமே இருந்தாள். அவளை எங்களது குடும்பத்துச் சிறியவர் ஒருவர் அடித்துவிட்டார். அப்போது அவளை விடுதலை செய்துவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு ஹிலால் பின் யசாஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது:
நாங்கள் நுஅமான் பின் முகர்ரின் (ரலி) அவர்களின் சகோதரர் சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்களது வீட்டில் துணி வியாபாரம் செய்துவந்தோம். (ஒரு நாள்) ஓர் அடிமைப் பெண் வந்து எங்களில் ஒருவரிடம் ஏதோ ஒரு (கடுமையான) வார்த்தையைக் கூறினாள். உடனே அவர் அவளது கன்னத்தில் அறைந்துவிட்டார். இதைக் கண்டு சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 27
3412. சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னுடைய அடிமைப் பெண்ணின் முகத்தில் ஒருவர் அறைந்துவிட்டார். அப்போது அவரிடம் நான், "முகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது உனக்குத் தெரியாதா?" என்று கேட்டேன். பிறகு "நான் ஏழு சகோதரர்களில் ஒருவனாயிருந்தேன். எங்களிடம் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருந்தார். எங்களில் ஒருவர் அவரை அவரது முகத்தில் அறைந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை விடுதலை செய்துவிடுமாறு உத்தர விட்டார்கள்" என்று நான் கூறினேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
என்னிடம் முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் "உங்கள் பெயரென்ன?" என்று கேட்டார்கள். "ஷுஅபா" என்றேன். பின்னர் அபூஷுஅபா அல்இராக்கீ (ரஹ்) அவர்கள் தமக்கு இந்த ஹதீஸை அறிவித்ததாகக் கூறி, இதைத் தெரிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3413. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ அல்பத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் அடிமையைச் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் யாரோ, "நினைவிருக்கட்டும், அபூமஸ்ஊத்!" என்று கூறியதைக் கேட்டேன். அப்போது நான் கோபத்தில் இருந்ததால், அந்தக் குரலை (நன்கு) விளங்கிக்கொள்ளவில்லை. அவர் என்னை நெருங்கி வந்தபோது (பார்த்தால்) அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் "நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! நினைவிருக்கட்டும். அபூ மஸ்ஊத்!" என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக் கீழே போட்டேன். அப்போது அவர்கள் "நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது" என்று சொன்னார்கள். நான், "இதன் பின்னர் ஒருபோதும் நான் எந்த அடிமையையும் அடிக்கமாட்டேன்" என (உறுதி) மொழிந்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அதைக் கேட்டவுடன் அவர்கள்மீது கொண்ட அச்சத்தால் எனது கையிலிருந்த சாட்டை கீழே விழுந்துவிட்டது" என அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3414. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, "அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது" என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்" என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்" அல்லது "நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 27
3415. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அவர், "அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்" என்றார். நான் (தொடர்ந்து) அவரை அடிக்கலானேன். உடனே அவர், (எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதரைக் கண்டு) "நான் அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்றார். உடனே அவரை நான் விட்டு விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இவரைத் தண்டிப்பதற்கு) இவர்மீது உனக்குள்ள ஆற்றலைவிட (உன்னைத் தண்டிப்பதற்கு) அல்லாஹ் உன்மீது அதிக ஆற்றல் படைத்தவன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன். அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
பாடம் : 9 ஒருவர் தம் அடிமை விபசாரம் புரிந்து விட்டதாக அவதூறு கூறுவதற்கு வந்துள்ள கண்டனம்.
3416. அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (நிரபராதியான) தம் அடிமைமீது விபசாரம் புரிந்துவிட்டதாக அவதூறு கூறுகிறாரோ, அவருக்கு மறுமை நாளில் (சாட்டையடி) தண்டனை வழங்கப்படும்; அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(மனந்திருந்தி பாவமன்னிப்புக் கோரினாலே போதும்; பாவமன்னிப்புக் கிட்டும் எனும் நற்செய்தியுடன் வந்த) "தவ்பா"வின் நபி அபுல்காசிம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 27
பாடம் : 10 ஒருவர் தம் அடிமைக்குத் தாம் உண்பதிலிருந்து உணவளிப்பதும், தாம் அணிவதிலிருந்து ஆடையளிப்பதும், அவனது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவனைச் சிரமப்படுத்தாமலிருப்பதும்.
3417. மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) "ரபதா" எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், "அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?" என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:
எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப்பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, "அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்று சொன்னார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்று கூறிவிட்டு, "(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 27
3418. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) மற்றும் அபூமுஆவியா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்பதற்குப் பின் "நான் வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக்கால கட்டத்திலுமா (அறியாமைக்காலக் கலாசாரம் கொண்டவனாய் உள்ளேன்)?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்று கூறினார்கள் என அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (இன்னும் சற்றுக் கூடுதலாக) "ஆம். நீர் வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்த காலக்கட்டத்திலும் (அறியாமைக் காலக் கலாசாரம் கொண்டவராய் இருக்கின்றீர்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவரது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்திவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) அவரை விற்றுவிடட்டும்" என்று இடம்பெற்றுள்ளது. ஸுஹைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அப்பணியில் அவருக்கு ஒத்துழைக்கட்டும்" என இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பு, "அவரது சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்தாதீர்கள்" என்பதோடு முடிவடைந்துவிடுகிறது. "அவரை விற்றுவிடட்டும்" என்பதோ, "அவருக்கு ஒத்துழைக்கட்டும்" என்பதோ அவரது அறிவிப்பில் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 27
3419. மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள்மீது ஒரு மேலங்கியும் அவர்களுடைய அடிமை யின் மீது அதே மாதிரியான மேலங்கியும் இருப்பதைக் கண்டேன். நான் அது குறித்து அவர் களிடம் வினவியபோது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு (அடிமை) மனிதரை ஏசும் போது, அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். (அடிமைகளான) அவர்கள் உங்கள் சகோதரர்களும் ஊழியர்களும் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவர்களது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அப்பணியில் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழையுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27