3165. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களில் ஒருவரான உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களது பேரீச்சந் தோப்பிற்குச் சென்றார்கள். "இந்தப் பேரீச்ச மரங்களை நட்டவர் யார்? முஸ்லிமா, அல்லது இறைமறுப்பாளரா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஒரு முஸ்லிம்தான் (நட்டுவைத்தார்)" என்று கூறினர்.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 22
பாடம் : 3 சேதமடைந்த பழங்களுக்கான கிரயத்தைத் தள்ளுபடி செய்தல்.
3166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ உன் சகோதரரிடம் (உனது மரத்திலுள்ள) பழங்களை விற்றுவிட, (அவர் பழங்களைப் பறிப்பதற்கு முன்) அவற்றுக்குச் சேதம் ஏதும் ஏற்பட்டால், அவரிடமிருந்து (கிரயம்) எதையும் பெறுவதற்கு உனக்கு அனுமதி இல்லை;எந்த உரிமையுமின்றி உன் சகோதரரின் பொருளை நீ எந்த அடிப்படையில் எடுத்துக்கொள்ள முடியும்?
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3167. ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், மரத்திலுள்ள பேரீச்சங்கனிகள் பக்குவம் அடையாதவரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் "பக்குவமடைதல் என்றால் என்ன?" என்று கேட்டோம். "அது சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அடைவதாகும்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால், நீ எந்த அடிப்படையில் உன் சகோதரரின் பொருளை எடுத்துக்கொள்ள முடியும் சொல்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "பக்குவமடைதல் என்றால் என்ன?" என்று கேட்டார்கள். "அது சிவப்பு நிறத்தை அடைவதாகும்" என்றார்கள். மேலும், "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால், உன் சகோதரரின் பொருள் எந்த அடிப்படையில் உனக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆகும்?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 22
3168. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ் அம்மரங்களில் கனிகளைத் தராவிட்டால், எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர், தம் சகோதரரின் பொருளை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக்கொள்வார்?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அத்தியாயம் : 22
3169. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், சேதமடைந்த பழங்களுக்கான கிரயத்தைத் தள்ளுபடி செய்துவிடுமாறு உத்தரவிட்டார்கள். - இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 4 (சிரமப்படுவோரின்) கடனைத் தள்ளுபடி செய்வது விரும்பத்தக்கதாகும்.
3170. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருக்குத் தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3171. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே சச்சரவிட்டுக்கொள்ளும் (இருவரின்) சப்தத்தைக் கேட்டார்கள். அவ்விருவரின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் தள்ளுபடி செய்யுமாறும் மென்மையாக நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (அவ்வாறு) செய்யமாட்டேன்" என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, "நல்லறத்தைச் செய்யமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொன்னவர் எங்கே?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்" என்று கூறினார்.
அத்தியாயம் : 22
3172. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். அப்போது (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. எங்கள் குரலைத் தமது வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டுவந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி என்னை "கஅபே!" என்று அழைத்தார்கள்.
நான், "இதோ வந்தேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, "பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு" என்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். "அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று நான் கூற, (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்களைப் பார்த்து) "நீங்கள் எழுந்து சென்று அவரது (மீதி) கடனை அடையுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3173. மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "எனக்கு இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் எனக்குப் பணம் தர வேண்டியிருந்தது. எனவே, அவரைச் சந்தித்து அவரை (நகரவிடாமல்) பிடித்துக் கொண்டேன். எங்கள் குரல்கள் உயரும் அளவிற்கு நாங்கள் பேசிக்கொண்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் "கஅபே!" என்று என்னை அழைத்து, பாதிக்கடனைத் தள்ளுபடி செய்துவிடு என்பதைப் போன்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். ஆகவே, அவர் தர வேண்டியிருந்த கடனில் பாதியை மட்டும் பெற்றுக்கொண்டு, மீதிப்பாதியை (தள்ளுபடி செய்து)விட்டேன்.
அத்தியாயம் : 22
பாடம் : 5 ஒரு பொருளை (கடனாக) வாங்கியவர் திவாலாகிவிட்ட நிலையில், அவரிடம் அப்பொருள் இருப்பதைக் கண்டால் விற்றவர் அதைத் திரும்பப் பெற உரிமை உண்டு.
3174. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், திவாலாகிவிட்ட ஒரு மனிதரிடம் (ஏற்கெனவே தாம் கடனாக விற்ற) தமது பொருள் அப்படியே இருப்பதைக் காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள அவருக்கே அதிக உரிமை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எந்த மனிதர் திவாலானவர் என அறிவிக்கப்பட்டு விட்டாரோ..." என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 22
3175. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திவாலாகிவிட்ட மனிதரிடம் ஏற்கெனவே விற்கப்பட்ட பொருள் பயன்படுத்தப்படாமல் அப்படியே காணப்பெற்றால், அது அதை விற்ற அதன் உரிமையாளருக்கே உரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3176. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், திவாலான ஒரு மனிதரிடம் (தாம் ஏற்கெனவே கடனாக விற்ற) தமது பொருளை அப்படியே காண்பாராயின்,அவரே அதற்கு அதிக உரிமை உடையவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவரே மற்ற கடன்காரர்களை விட அதிக உரிமை உடையவர் ஆவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3177. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் (தாம் ஏற்கெனவே கடனாக விற்ற) தமது விற்பனைச் சரக்கை அப்படியே காண்பாராயின், (மற்றவர்களைவிட) அவரே அதற்கு அதிக உரிமை உடையவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 6 கடனை அடைக்கச் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு.
3178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம், "நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கிறீரா?" என்று கேட்டார்கள்.அதற்கு அந்த மனிதர் "இல்லை" என்றார். வானவர்கள் "நன்கு நினைவு படுத்திப்பார்" என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) "நான் மக்களுக்குக் கடன் கொடுத்து வந்தேன். அப்போது (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கும்படியும், வசதியுடையோருக்கு (அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் ஏற்பட்டால்) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு வந்தேன்" என்று கூறினார். அல்லாஹ், "அந்த மனிதரின் குற்றங்குறைகளை கண்டு கொள்ளாமல் (மன்னித்து)விடுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்.
இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3179. ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களான) ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "(முந்தைய காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர் (இறந்த பின்) தம் இறைவனைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இறைவன், "நீ (ஏதேனும்) நற்செயல் புரிந்திருக்கிறாயா?" என்று கேட்டான். அவர் "எந்த நல்லறமும் செய்ய வில்லை. எனினும், நான் பொருளாதார வசதியுடைய ஒரு மனிதனாக இருந்தேன். எனவே, (மக்களுக்கு நான் கொடுத்துவந்த) பணத்தை (திருப்பித் தருமாறு) மக்களிடம் கோருவேன். அப்போது (என்னிடமிருந்து கடன் வாங்கியவர் கொடுக்கும், அவரால்) இயன்ற தொகையைப் பெற்றுக்கொள்வேன்; இயலாத தொகையைத் தள்ளுபடி செய்துவிடுவேன்" என்று கூறினார்.
உடனே இறைவன், "என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்"என்றார்கள். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3180. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம், "நீ என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். காசு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்" என்று கூறினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அப்போது அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 22
3181. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், "உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?" என்று கேட்டான். (அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.) அதற்கு அந்த அடியார், "இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்து கொள்வேன்: சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்" என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ், "இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்.
(ஹுதைஃபா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களும், "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நாங்கள் செவியுற்றோம்" என்று கூறினர்.
அத்தியாயம் : 22
3182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதர் (இறந்த பின்) விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் (அவரது வினைச்சீட்டில்) எந்த நற்செயலும் காணப்படவில்லை. எனினும், அவர் மக்களுடன் கலந்துறவாடுபவராய் இருந்தார். அவர் வசதியுடையவராக இருந்தார். தம் பணியாட்களிடம், சிரமப்படுவோரின் கடனைத் தள்ளுபடி செய்துவிடுமாறு கூறிவந்தார். அல்லாஹ், "இ(வ்வாறு தள்ளுபடி செய்வ)தற்கு அவரை விட நாமே மிகவும் தகுதியுடையோர். (எனவே,)அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்.-இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் சென்ற)தம் ஊழியரிடம், "(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீர் சென்றால் (அவரைக் கண்டுகொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து)விடு. அல்லாஹ்வும் நம்மை(க் கண்டுகொள்ளாமல்) மன்னித்துவிடக்கூடும்" என்று சொல்லி வந்தார். அவர் (இறந்த பின்) அல்லாஹ்வைச் சந்தித்தபோது (அவருடைய பிழைகளைப் பொறுத்து) அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3184. அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், "நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்" என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?" என்று கேட்டார்கள். அவர் "அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்" என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22