3090. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அராயா"வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு வீட்டுக்காரர்கள் (தோட்ட உரிமையாளர்கள்) எடுத்துக்கொள்ளவும், அவற்றைச் செங்காய்களாக அவர்கள் உட்கொள்ளவும் அனுமதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3091. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அதில் "("அராயா"வின் ஒருமையான) "அரிய்யா" என்பது, (ஏழை) மக்களுக்காக ஒதுக்கப்படும் பேரீச்ச மரங்களாகும். அவற்றிலுள்ள கனிகளை அவர்கள் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்றுக்கொள்வார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3092. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) பேரீச்சங்கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு "அராயா" வியாபாரத்தில் அனுமதியளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அரிய்யா" என்பது, ஒருவர் தம் வீட்டாரின் உணவுக்காக மரத்திலுள்ள செங்காய்களைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு, உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக வாங்குவதாகும்.
அத்தியாயம் : 21
3093. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அராயா"வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு, அவற்றுக்குப் பதிலாக உலர்ந்த கனிகளை அளந்து விற்க அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 21
3094. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குத்துமதிப்பாகக் கணக்கிட்டு எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3095. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அராயா" வியாபாரத்தில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3096. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) உலராத கனிகளை உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்குத் தடை விதித்தார்கள். மேலும், "அது வட்டியாகும்; அதுவே "முஸாபனா" ஆகும்"என்றும் கூறினார்கள். ஆயினும், "அராயா"வில் மட்டும் அதற்கு அனுமதியளித்தார்கள். "அராயா" என்பது, (ஏழைகளுக்கு வழங்கப்பட்ட) ஓரிரு பேரீச்சமரங்களிலுள்ள உலராத கனிகளை வீட்டுக்காரர்கள் (தோட்ட உரிமையாளர்கள்) குத்துமதிப்பாகக் கணக்கிட்டு உலர்ந்த பழங்களுக்குப் பதிலாக எடுத்துக் கொண்டு, அந்தச் செங்காய்களை உண்பதாகும்.
இந்த ஹதீஸை புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் தமது தெருவில் வசித்த (பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த) சில நபித்தோழர்களிடமிருந்து அறிவித்தார்கள். சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் அவர்களில் ஒருவர் ஆவார்கள்.
அத்தியாயம் : 21
3097. புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அராயா"வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள் என நபித்தோழர்கள் கூறினர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3098. புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் தம் தெருவாசிகளான நபித்தோழர்கள் சிலரிடமிருந்து அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "வட்டி" ("ரிபா") என்பதற்குப் பதிலாக "பறித்தல்" ("ஸப்ன்") எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வட்டி" என்றே காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் வாயிலாக மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3099. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) மற்றும் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா"வைத் தடை செய்தார்கள். (அதாவது) மரத்திலுள்ள உலராத கனிகளை உலர்ந்த (பறிக்கப்பட்ட) கனிகளுக்குப் பதிலாக விற்பதைத் தடை செய்தார்கள்; "அராயா"க்காரர்களைத் தவிர. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அராயா"க்காரர்களுக்கு மட்டும் (இந்த வியாபாரம் செய்து கொள்ள) அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3100. யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், "இப்னு அபீஅஹ்மத் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) அவர்கள், பின்வரும் நபிமொழியை உங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். (அந்த ஹதீஸாவது:) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"அராயா" வணிகத்தில், (மரத்திலுள்ள) உலராத பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சங் கனிகளுக்குப் பதிலாக "ஐந்து வஸ்க்குகளுக்கும் குறைவாகவோ" அல்லது "ஐந்து வஸ்க்குகளுக்காகவோ" விற்பனை செய்துகொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
"ஐந்து வஸ்க்குகளுக்குக் குறைவாக, அல்லது ஐந்து வஸ்க்குகளுக்கு" என அறிவிப்பாளர் தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3101. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா" வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். "முஸாபனா" என்பது (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைக் கனிகளை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக் கனிகளுக்குப் பகரமாக விற்பதும் ஆகும்.
அத்தியாயம் : 21
3102. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "முஸாபனா" எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். (அதாவது:) (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களை விற்பதையும், உலர்ந்த அளக்கப்பட்ட திராட்சைக் கனிகளுக்குப் பதிலாக (கொடியிலுள்ள) உலராத திராட்சைக் கனிகளை விற்பதையும், அளக்கப்பட்ட தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குப் பதிலாக (அறுவடை செய்யப்படாத) பயிரிலுள்ள கோதுமையை விற்பதையும் தடை செய்தார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3103. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா" எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். "முஸாபனா"என்பது, (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், (கொடியிலுள்ள) உலராத திராட்சைப் பழங்களை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், மரத்திலுள்ள எந்தக் கனியையும் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதும் ஆகும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3104. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா" எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். "முஸாபனா"என்பது, மரத்தின் மேலுள்ள பேரீச்சங்கனிகளைக் குறிப்பிட்ட அளவைக் கொண்ட (பறிக்கப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். (அவ்வாறு)விற்கும்போது, (அளக்கப்பட்ட) இந்தப் பழங்கள், (மரத்திலுள்ள பழங்களைவிட) அதிகமாக இருந்தால், அந்த அதிகம் எனக்குரியது. குறைவாக இருந்தால் அதற்கு நானே பொறுப்பாளி ஆவேன் என்று (விற்பவர்) கூறுவார்.
அல்லது "(மரத்திலுள்ள) இந்தப் பழங்கள், (அளக்கப்பட்ட கனிகளைவிட) அதிகமாக இருந்தால், அந்த அதிகம் எனக்குரியது. குறைந்துவிட்டால் அந்தக் குறைவுக்கு நானே பொறுப்பாளி ஆவேன்" என்று (வாங்குபவர்) கூறுவார்.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3105. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா" எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். (அதாவது:) ஒருவரது தோட்டத்திலுள்ள பேரீச்ச மரங்களின் (உலராத) கனிகளை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்கும், கொடியிலுள்ள (உலராத) திராட்சைகளை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைகளுக்குப் பதிலாக விற்பதற்கும், கதிர்களிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதற்கும் தடை விதித்தார்கள்; இவை அனைத்துக்குமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 15 கனிகள் உள்ள பேரீச்ச மரத்தை விற்பது.
3106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சமரத்தை யாரேனும் விற்றால் (தற்போதுள்ள) அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனையிட்டிருந்தால் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சமரம் வேரோடு விலைக்கு வாங்கப்பட்டால், (தற்போதுள்ள) அதன் கனிகள் மகரந்தச் சேர்க்கை செய்த(விற்ற)வருக்கே சேரும்; (தமக்கே சேர வேண்டுமென) வாங்கியவர் முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3108. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் பேரீச்சமரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்த அவருக்கே (தற்போதுள்ள) அதன் கனிகள் சேரும்; விலைக்கு வாங்கியவர் (அதன் கனிகள் தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சமரத்தை ஒருவர் விலைக்கு வாங்கினால், (தற்போதுள்ள) அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; விலைக்கு வாங்கியவர் (தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர. (செல்வம் வைத்திருக்கும்) ஓர் அடிமையை ஒருவர் விலைக்கு வாங்கினால், அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே சேரும்; (அச்செல்வம் தமக்கே சேர வேண்டுமென) வாங்கியவர் நிபந்தனை விதித்திருந்தால் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21