3070. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் உணவுப் பொருளை நீ விலைக்கு வாங்கினால், அது உன் கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்காதே" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 21
பாடம் : 9 அளவு தெரிந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
3071. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அளவு தெரிந்த பேரீச்சம் பழத்திற்குப் பகரமாக அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ஹதீஸின் இறுதியில் "பேரீச்சம் பழத்திற்கு" எனும் குறிப்பு இல்லை. ("அளவு தெரிந்த பொருளுக்கு" என்று பொதுவாகவே இடம்பெற்றுள்ளது.)
அத்தியாயம் : 21
பாடம் : 10 விற்பவரும் வாங்குபவரும் (வியாபார ஒப்பந்தம் நடக்கும்) இடத்திலிருந்து பிரிவதற்கு முன் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை அவ்விருவருக்கும் உண்டு.
3072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(வியாபார ஒப்பந்தம் நடந்த இடத்திலேயே ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து விட்டதென) முடிவு செய்யப்பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) உரிமை உண்டு.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதினோரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு பேர் தமக்கிடையே வியாபாரம் செய்துகொள்ளும்போது, இருவரும் பிரியாமல் ஒரே இடத்தில் இருக்கும்வரை,அல்லது இருவரில் ஒருவர் மற்றவருக்கு (வியாபாரத்தை உடனே நடைமுறைப்படுத்த) உரிமை அளிக்கும்வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) அவர்களில் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அவ்வாறு இருவரில் ஒருவர் மற்றவருக்கு (வியாபாரத்தை உடனே நடைமுறைப்படுத்த) உரிமை அளித்து, அதன் பேரில் இருவரும் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டால், உடனே வியாபாரம் ஏற்பட்டுவிடும். அவ்வாறே, வியாபார ஒப்பந்தம் ஆன பிறகு,இருவரில் யாரும் வியாபார (ஒப்பந்த)த்தைக் கைவிடாமல் பிரிந்துவிட்டாலும் வியாபாரம் ஏற்பட்டுவிடும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3074. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு பேர் தமக்கிடையே வியாபாரம் செய்துகொள்ளும்போது, அவ்விருவரும் பிரியாமல் இருக்கும்வரை அவர்களில் ஒவ்வொருவருக்கும் (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) உரிமை உண்டு. அல்லது அவர்களின் வியாபாரம் (உடனே நடைமுறைப்படுத்தப்படும் என்ற) முடிவோடு இருக்கலாம். அத்தகைய முடிவோடு இருந்தால், உடனே வியாபாரம் ஏற்பட்டுவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் யஹ்யா பின் அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக (பின் வரும் தகவல்) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருவரிடம் விற்கவோ வாங்கவோ செய்யும்போது, அந்த வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால் எழுந்து சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு, பிறகு அவரிடம் திரும்பிவருவார்கள்.
அத்தியாயம் : 21
3075. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் (அங்கிருந்து) பிரிந்து செல்லாத வரை அவர்களிடையே வியாபாரம் ஏற்படாது; (வியாபார ஒப்பந்தம் நடந்த இடத்திலேயே ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிட்டதென) முடிவு செய்யப்பட்ட வியாபாரத்தைத் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும்.
3076. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்திலிருந்து) பிரியாத வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் வளம் வழங்கப்படும்; இருவரும் பொய் பேசி, குறைகளை மறைத்திருந்தால் அவர்களது வியாபாரத்தில் உள்ள வளம் அகற்றப்படும்.
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் பிறந்தார்கள்; நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
அத்தியாயம் : 21
பாடம் : 12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர்.
3077. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் வியாபாரங்களின்போது ஏமாற்றப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ யாரிடம் வியாபாரம் செய்தாலும் "ஏமாற்றுதல் கூடாது" என்று கூறிவிடு" என்று சொன்னார்கள். எனவே, அவர் விற்கவோ வாங்கவோ செய்யும்போது "ஏமாற்றுதல் கூடாது" என்று கூறிவந்தார்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "எனவே, அவர் விற்கவோ வாங்கவோ செய்யும்போது "ஏமாற்றுதல் கூடாது" என்று கூறிவந்தார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 21
பாடம் : 13 பலன் உறுதிப்படுவதற்கு முன், மரத்திலுள்ள பழங்களை விற்பது கூடாது; (வாங்குபவர் உடனே) அவற்றைப் பறித்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டால் தவிர.
3078. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளின் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3079. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் (உண்பதற்கேற்ப) சிவக்காத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; கதிர்கள் (முற்றி) வெண்ணிறமாகி, அவை பாழாகிவிடும் எனும் அச்சம் விலகாதவரை அவற்றை விற்பதற்கும் தடை விதித்தார்கள் விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3080. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மரத்திலுள்ள) கனிகள், பலன் உறுதிப்படும் நிலையை அடைந்து, அவை பாழாகும் நிலையைக் கடக்காத வரை அவற்றை விற்காதீர்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பலன் உறுதிப்படும் நிலையை அடைதல் என்பது, (உண்பதற்கு ஏற்றவாறு) சிவப்பாகவோ மஞ்சளாகவோ அது மாறுவதைக் குறிக்கும்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை" என்பதுடன் ஹதீஸ் முடிவடைகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "பலன் உறுதிப்படுதல் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதாகும்" என விடையளித்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3082. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மரத்திலுள்ள) பழங்கள், (கனிந்து) நல்ல நிலையை அடையாத வரை அவற்றை விற்க வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தடைவிதித்தார்கள்". அல்லது "எங்களுக்குத் தடைவிதித்தார்கள்".
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3083. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மரத்திலுள்ள) கனிகள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடைவிதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3084. அபுல் பக்த்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், பேரீச்ச மர(த்திலுள்ள பழ)ங்களை விற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணப்படும் பக்குவத்தை அடையும் முன்பும் எடை போடப்படுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்" என்று கூறினார்கள். நான், "(மரத்திலுள்ளதை) எடை போடுதல் எப்படி?" என்று கேட்டேன். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் "(அதன் எடை இவ்வளவு இருக்கும் என) மதிப்பிடப்படுவதற்கு முன்பு" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மரத்திலுள்ள கனிகளை, பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்காதீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3086. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; உலர்ந்த பேரீச்சப்பழத்திற்குப் பதிலாக (உலராத) பச்சைப் பழத்தை விற்பதற்கும் தடைவிதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அராயா" வியாபாரத்தில் அ(வ்வாறு விற்ப)தற்கு அனுமதியளித்தார்கள்.
இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அராயா வியாபாரத்தில் (அவ்வாறு) விற்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்" என்று சில கூடுதலான சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள். உலர்ந்த (கொய்யப்பட்ட) பழங்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழங்களை விற்காதீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் (மொத்தம்) ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 14 உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது; "அராயா"வில் தவிர!
3088. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா" மற்றும் "முஹாகலா" ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.
"முஸாபனா" என்பது, பேரீச்ச மரத்திலுள்ள (உலராத) கனிகளை உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் கனிகளுக்குப் பதிலாக (பண்டமாற்று முறையில்) விற்பதாகும். "முஹாகலா" என்பது, (அறுவடை செய்யப்பட்ட) கோதுமைக் கதிரிலுள்ள (தானியத்)தை விற்பதும் (அறுவடை செய்யப்பட்ட) கோதுமைக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதும் ஆகும்.
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை அவற்றை விற்காதீர்கள்; உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழத்தை விற்காதீர்கள்" என்று சொன்னார்கள்.
மேலும், சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தம் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வருமாறு அறிவித்தார்கள்:
அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) உலராத கனிகளுக்குப் பதிலாக உலர்ந்த அல்லது செங்காயான பேரீச்சங்கனிகளை விற்பதற்கு "அராயா"வில் (மட்டும்) அனுமதியளித்தார்கள்; "அராயா" அல்லாதவற்றில் அனுமதியளிக்கவில்லை.
அத்தியாயம் : 21
3089. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு "அராயா"க்காரர்களுக்கு மட்டும் அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 21