2965. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் கணவர் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அவர்கள், அய்யாஷ் பின் அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து "ஸாஉ" பேரீச்சம் பழமும் ஐந்து "ஸாஉ" தொலி நீக்கப்படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார். நான் அவரிடம், "எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான் உங்கள் வீட்டில் "இத்தா" இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ் அவர்கள், "இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)" என்று சொல்லிவிட்டார். உடனே நான் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் உனக்கு எத்தனை தலாக் சொன்னார்?" என்று கேட்டார்கள். நான் "மூன்று (தலாக்)" என்றேன். (அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் இல்லை. நீ உன் தந்தையின் சகோதரர் புதல்வர் இப்னு உம்மி மக்தூம் அவர்களது இல்லத்தில் "இத்தா" இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது (துப்பட்டா) துணியை அவர் அருகில் கழற்றிவைக்கலாம். உன் "இத்தா"க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி" என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில் முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி) ஆகியோரும் அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், "முஆவியா வசதி குறைந்தவர்; ஏழை. அபூஜஹ்மிடம், பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை அடித்து விடுபவர் என்பதைப் போன்று.) மாறாக, நீ உசாமா பின் ஸைதைப் பிடித்துக்கொள்" என்றார்கள்.
அத்தியாயம் : 18
2966. அபூபக்ர் பின் அபில்ஜஹ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று (அவர்களது நிகழ்ச்சி குறித்து) கேட்டோம். அவர், "நான் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அப்போது அவர் நஜ்ரான் போருக்குப் புறப்பட்டார்" என்று கூறினார் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இறுதியில் "எனவே, நான் (அபூஸைத்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னை மேன்மைப் படுத்தினான்; அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னைக் கண்ணியப் படுத்தினான்" என ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2967. அபூபக்ர் பின் அபில்ஜஹ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "என் கணவர் என்னை முற்றாகத் தலாக் சொல்லி, அதை முடிவுக்குக் கொண்டுவந்தார்" என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 18
2968. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்கு (என் கணவர் மூலம் "இத்தா"க் காலத்தில்) உறைவிடத்தையோ ஜீவனாம்சத்தையோ ஏற்படுத்தவில்லை.
அத்தியாயம் : 18
2969. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்களின் புதல்வியைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் அவரை (மூன்று) தலாக் சொல்லி, தம் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். நான் அவர்களை (அவருடைய குடும்பத்தாரை) இது குறித்துக் கண்டித்தேன். அதற்கு அவர்கள், "ஃபாத்திமா பின்த் கைஸ் ("இத்தா"க் காலத்தில் தமது கணவரின் இல்லத்திலிருந்து) வெளியேறினாரே?" என்று கூறினார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இந்த ஹதீஸைக் கூறுவதால் ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 18
2970. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். நான் (என் கணவர் வீட்டில் "இத்தா" மேற்கொண்டால்) அத்துமீறி யாரும் புகுந்துவிடலாம் என அஞ்சுகிறேன்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து இடம் மாறிக்கொள்ள) எனக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் இடமாறி ("இத்தா" மேற்)கொண்டேன்.
அத்தியாயம் : 18
2971. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இதைக் கூறுவதால் -அதாவது (மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண்ணுக்கு) உறைவிடமும் இல்லை;ஜீவனாம்சமும் இல்லை என்று கூறிவருவதால்- ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.23
- உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமுடைய புதல்வியான இன்ன பெண்ணைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் இத்தா இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் செய்தது தவறு" என்றார்கள். நான், "ஃபாத்திமா பின்த் கைஸ், (தான், மற்றோர் இடத்தில் "இத்தா" இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இந்தச் செய்தியைக் கூறிவருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 18
பாடம் : 7 முற்றாக மணவிலக்குச் செய்யப்பட்டுவிட்ட பெண்ணும் கணவன் இறந்துபோன பெண்ணும் "இத்தா"விலிருக்கும்போது தம் தேவைக்காக வெளியே செல்லலாம்.
2972. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா"வில் இருந்தபோது) தமது பேரீச்சமரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக்கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்சமரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக்கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்" என்றார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
பாடம் : 8 கணவன் இறந்துபோன பெண் உள்ளிட்டோர் (கர்ப்பமுற்றிருந்தால் அவர்களது) "இத்தா"க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும்.
2973. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அல்அஸ்ல மிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்புக் கேட்டதைப் பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவராவார்.- "விடைபெறும்" ஹஜ்ஜின்போது சஅத் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். அப்போது சுபைஆ கர்ப்பமுற்றிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ தூய்மையானபோது, பெண் கேட்க வருபவர்களுக்காகத் தன்னை அவர் அலங்கரித்துக்கொண்டார். அப்போது பனூ அப்தித்தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅகக் (ரலி) அவர்கள் சுபைஆவிடம் வந்து, திருமணம் செய்யும் ஆசையில் (பெண் கேட்க வருபவர்களுக்காக) உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய "இத்தா"க் காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் செய்துகொள்ள முடியாது" என்று சொன்னார்கள்.
சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, "நீ பிரசவித்துவிட்டபோதே (மணம் செய்துகொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய்"என்று தீர்ப்பு வழங்கிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்" என உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(கணவன் இறந்த) ஒரு பெண் பிரசவித்தவுடன் -பிரசவ இரத்தப்போக்கு இருக்கும் போதே- (மறு)மணம் செய்துகொள்வதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை; ஆயினும், அவள் தூய்மையடையும்வரை அவளுடைய (புதிய) கணவன் அவளை (தாம்பத்திய உறவுக்காக) நெருங்கக் கூடாது.
அத்தியாயம் : 18
2974. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒன்றுகூடினர். கணவன் இறந்துவிட்ட பெண் ஒரு சில இரவுகளில் பிரசவித்துவிடுவது பற்றி(யும்,அவ்வாறு பிரசவித்துவிட்டால் அவளது "இத்தா" அத்துடன் முடிந்துவிடுமா, இல்லையா என்பது பற்றியும்) அவர்களிருவரும் பேசிக் கொண்டனர்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இரு தவணைகளில் பிந்தியதே அவளது இத்தாவாகும்" என்றார்கள்.அபூசலமா (ரஹ்) அவர்கள், "(பிரசவித்தவுடன்) அவள் (மறுமணம் செய்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாள்" என்று கூறினார்கள்.
இது குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(இந்த விஷயத்தில்) நான் என் சகோதரர் மகன் (அபூசலமா) உடன் (ஒத்து) இருக்கிறேன்" என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் அது குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பணியாளர் குறைப் (ரஹ்) அவர்களை (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அவர் (சென்றுவிட்டுத்) திரும்பிவந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் எனத் தெரிவித்தார்:
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள், தம் கணவர் (சஅத் பின் கவ்லா) இறந்த சில இரவுகளில் குழந்தை பெற்றெடுத்தார். அவர் அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது,அவரை (மறு)மணம் செய்துகொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர் களது அறிவிப்பில், உடனே அவர்கள் (மூவரும்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள் என (பொதுவாக) இடம் பெற்றுள்ளது. குறைபின் பெயரைக் குறிப்பிட வில்லை.
அத்தியாயம் : 18
பாடம் : 9 கணவன் இறந்து "இத்தா"விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்; மற்ற நேரங்களில் மூன்று நாட்கள் தவிர துக்கம் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டதாகும்.
2975. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவருடைய தந்தை அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் (சிரியா நாட்டில்) இறந்த நேரம். (மூன்றாவது நாளில்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறமுள்ள கலவையான நறுமணப்பொருளை, அல்லது வேறொன்றைக் கொண்டுவருமாறு கூறி, அதை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரு கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர" என்று கூறக்கேட்டுள்ளேன். (ஆதலால்தான் இப்போது நறுமணம் பூசினேன்)" என்றார்கள்.
- பின்னர் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவருடைய சகோதரர் இறந்த நேரம். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.
பின்னர், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர" என்று கூறக் கேட்டுள்ளேன்"என்றார்கள்.
- என் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறக் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (இத்தாவிலிருக்கும்) என் மகளின் கண்ணில் வலி ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாங்கள் அஞ்சனம் (சுர்மா) தீட்டிவிடலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று -இரண்டு அல்லது மூன்று முறை- கூறினார்கள். ஒவ்வொரு முறையும் "வேண்டாம்" என்றே கூறினார்கள். பிறகு, "(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) "இத்தா"க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்தாம். (ஆனால்,)அறியாமைக் காலத்தில் உங்களில் (கணவனை இழந்த) ஒரு பெண் (ஒரு வருடம் இத்தா இருப்பாள்.) ஆண்டின் முடிவில் ("இத்தா" நிறைவுற்றதன் அடையாளமாக) ஒட்டகச்சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லையே)" என்றார்கள்.
- ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம், "ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
(அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு, தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்து கொள்வாள். ஒரு வருடம் கழியும்வரை எந்த நறுமணத்தையும் வேறு எதையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று (அவளிடம்) கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்குத் திரண்ட தனது உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அந்த முடை நாற்றத்தால்) சாகாமல் பிழைத்தல் அரிது. பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது (அவளிடம்) ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கெதிரே) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே "இத்தா"முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்ற பொருட்களையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.
மேற்கண்ட மூன்று ஹதீஸ்களையும் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 18
2976. ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது
உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து (இரண்டு நாட்கள் கழிந்து)விட்டபோது,அவர்கள் மஞ்சள் நிறமுடைய ஒரு வகை நறுமணப் பொருளைக் கொண்டுவருமாறு கூறி, அதைத் தமது முன்கையில் தடவிக்கொண்டார்கள். பிறகு "நான் இவ்வாறு செய்வதற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும் (இறந்துபோன ஒருவருக்காக) மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!" என்று கூறக் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸை, ஸைனப் பின்த் அபீ சலமா (ரலி) அவர்கள் தம் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தும், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அல்லது வேறொரு துணைவியாரிடமிருந்தும் அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 18
2977. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். ("இத்தா" வில் இருந்த அவளது கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளது கண் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த பின்) மனைவி அவளுடைய ஆடைகளிலேயே மிக மோசமானதை அணிந்துகொண்டு, அற்பமான ஒரு குடிலுக்குள் ஒரு வருடம் தங்கியிருப்பாள். பின்னர் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய்மீது ஒட்டகச்சாணத்தை அவள் வீசியெறிவாள். பின்னர் அக்குடிலை விட்டும் வெளியேறுவாள். (இஸ்லாம் வந்த பின் இழிவு நிலையுடன்கூடிய ஒரு வருட "இத்தா" என்பது மாறி) நான்கு மாதம் பத்து நாட்கள் (மட்டும் கண்ணியத்துடன் தங்கும் நிலை) ஏற்படவில்லையா?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2978. உம்மு சலமா (ரலி) மற்றும் உம்மு ஹபீபா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் புதல்வியின் கணவர் இறந்து விட்டார். (அவள் தற்போது "இத்தா" இருக்கும் நிலையில்) அவளது கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவளுக்கு நான் அஞ்சனம் தீட்டிவிட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த பின்) மனைவி ஓராண்டு நிறைவடையும்போது ஒட்டகச் சாணத்தை விட்டெறிவாள். (ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடித்து "இத்தா" இருந்துவந்தாள். இந்த அவலம் நீங்கி,) "இத்தா" நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டுமே (என்றாகிவிட்டதே)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2979. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம் தந்தை அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது, உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மூன்றாவது நாளில் மஞ்சள் நிற (நறுமண)ப் பொருளைக் கொண்டு வரச் சொல்லி, அதைத் தம் முன்கைகளிலும் கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். மேலும், "இந்த நறுமணப் பொருளின் தேவையற்றவளாகவே நான் இருந்தேன். (ஆயினும்) நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் (இறந்துபோன ஒருவருக்காக) மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர" என்று சொல்லக் கேட்டேன் (எனவே தான், இப்போது நறுமணம் தடவிக்கொண்டேன்)"என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2980. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட" அல்லது "அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நம்பிக்கை கொண்ட" எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர!
இதை ஹஃப்ஸா (ரலி) அவர்கள், அல்லது ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லது அவ்விருவரும் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2981. மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவள் தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பாள்" என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2982. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்து போன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர!
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2983. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது;கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அந்நாட்களில்) அவள் சாயமிடப்பட்ட ஆடையை அணியமாட்டாள்;நெய்வதற்கு முன் நூலில் சாயமேற்றப்பட்டு, பின்பு நெய்யப்பட்ட ஆடையைத் தவிர! மேலும், அவள் அஞ்சனம் தீட்டிக் கொள்ளமாட்டாள்; நறுமணம் பூசிக்கொள்ளமாட்டாள்; ஆனால் (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்த பின்னர் தவிர! அப்போது "குஸ்த்" மற்றும் "அழ்ஃபார்" ஆகிய ஜாதிக் கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்வாள்.
இதை உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர!" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2984. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் (பெண்களாகிய) நாங்கள் துக்கம் கடைப்பிடிக்கலாகாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அதாவது "இத்தா"வில் இருக்கும்போது) நாங்கள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளக்கூடாது; நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது; சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது (என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது); (பெண்களாகிய) எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து குளித்துத் தூய்மையடையும்போது "குஸ்த்" மற்றும் "அழ்ஃபார்" ஆகிய ஜாதிக் கோஷ்டக் கட்டையால் நறுமணப் புகையிட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அத்தியாயம் : 18