2358. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நபி (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்தார்கள்; அவர்களுடன் நாங்களும் "தமத்துஉ" செய்தோம்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2359. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தமத்துஉ" முறை ஹஜ் பற்றிய வசனம் (2:196) இறைவேதத்தில் அருளப்பெற்றது. அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். "தமத்துஉ" முறை ஹஜ் பற்றிய அந்த வசனத்தைக் காலாவதியாக்கக்கூடிய வேறெந்த வசனமும் பின்னர் அருளப்பெறவு மில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவுமில்லை. பின்னர் ஒரு மனிதர் (மட்டும்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.
அத்தியாயம் : 15
2360. மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால், அதில் "அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. "நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 24 ஹஜ்ஜுடன் உம்ராவையும் செய்து பயனடைந்தவர் (முத்தமத்திஉ), அதற்காகப் பலிப்பிராணியை அறுப்பது கடமையாகும்; பலிப்பிராணி இல்லாதவர் ஹஜ் நாட்களில் மூன்று நோன்புகளும் வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்பது அவசியமாகும்.
2361. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது உம்ராவுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.அவர்கள் பலிப்பிராணியை (ஹஜ்ஜில்) அறுத்துப் பலியிட்டார்கள். (மதீனாவாசிகள் "இஹ்ராம்" கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவில் இருந்தே தம்முடன் பலிப்பிராணியை நபியவர்கள் கொண்டுவந்தார்கள். முதலில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறி, பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமாக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். மக்களில் சிலர் பலிப்பிராணியை அறுத்துப் பலியிடுபவர்களாக இருந்தனர். (அதற்காக) அவர்கள் பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவந்திருந்தனர். வேறுசிலரோ அறுத்துப் பலியிடுபவர்களாக இருக்கவில்லை. (ஏனெனில், அவர்கள் தம்முடன் பலிப்பிராணியை கொண்டு வந்திருக்கவில்லை.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும், மக்களிடம் "உங்களில் பலிப் பிராணியைக் கொண்டுவந்தவர்கள்,தமது ஹஜ்ஜை நிறைவு செய்யாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது. பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இறை யில்லம் கஅபாவையும், ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றி வந்துவிட்டு, தமது தலைமுடியை குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும். பின்னர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி அறுத்துப் பலியிடட்டும். பலிப்பிராணி கிடைக்காதவர்கள், ஹஜ்ஜின் நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை முடித்து) தமது வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்றுக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் (கஅபாவை ஏழு முறை) சுற்றிவந்து விட்டு, முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டிப் பதிக்கப்பெற்றுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழில் மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக நடந்தும், நான்கு சுற்றுகள் மெதுவாக நடந்தும் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள். இறையில்லத்தைச் சுற்றி முடித்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் சலாம் கொடுத்துவிட்டு நேராக ஸஃபாவுக்குச் சென்று, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஏழு தடவைச் சுற்றி (சயீ) வந்தார்கள்.
பிறகு ஹஜ்ஜை முடிக்கும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருந்தார்கள். துல்ஹஜ் பத்தாவது நாள் (யவ்முந் நஹ்ர்) அன்று தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.
மக்களில் பலிப்பிராணியைக் கொண்டுவந்து அறுத்துப் பலியிட்டவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்தனர்.
அத்தியாயம் : 15
2362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராவுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியதைப் பற்றிய மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 25 ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர் (முஃப்ரித்) இஹ்ராமிலிருந்து விடுபடுகின்ற நேரததில்தான் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து "இஹ்ராம்"கட்டியவரும் (காரின்) இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
2363. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருக்கும்போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். மேலும், எனது பலிப் பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து அந்தப் பிராணியை) பலியிடாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமிலிருக்கிறீர்களே?" என்று நான் கேட்டேன் என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 15
2364. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருக்கும் போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் எனது பலிப்பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். மேலும், நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். ஆகவே, நான் ஹஜ் செய்து முடிக்காத வரை இஹ்ராமிலிருந்து விடு படமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2365. மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மேற்கண்ட ஹதீஸில் (2363) உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2366. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ் ஆண்டில், (தவாஃபும் சயீயும் செய்துவிட்டு) உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு தம் துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், "நீங்கள் ஏன் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். மேலும், எனது பலிப்பிராணிக்கு அடையாள மாலை தொங்க விட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து) எனது பலிப்பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 26 (ஹஜ், உம்ராவை நிறைவேற்ற முடியாமல் எதிரிகளால்) தடுக்கப்பட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம்; ஒரே இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (கிரான்) செய்யலாம் என்பதன் விளக்கம்.
2367. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவில் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் முற்றுகை யிட்டிருந்த) குழப்பமான காலகட்டத்தில் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்கள், "நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், (ஹுதைபியா சம்பவத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்" என்று கூறி விட்டு, உம்ராவிற்காக ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொல்லிப் புறப்பட்டார்கள். "பைதாஉ" எனும் இடம் வந்ததும் தம் தோழர்களை நோக்கி, "(தடுக்கப்படும்போது இஹ்ராமிலிருந்து விடுபடலாம் என்பதில் ஹஜ், உம்ரா ஆகிய) அவையிரண்டும் ஒன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள்.
பிறகு இறையில்லம் கஅபாவிற்கு வந்து, அதை ஏழுமுறை சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; ஸஃபா மற்றும் மர்வா இடையேயும் ஏழு முறை சுற்றி (சயீ) வந்தார்கள். அதைவிடக் கூடுதலாக்கவில்லை. அதுவே (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும்) போதுமானதாகும் என்று கருதினார்கள்; பலிப்பிராணியை அறுத்துப் பலியிடவும் செய்தார்கள்.
அத்தியாயம் : 15
2368. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுடன் போரிடுவதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்காவை) முற்றுகையிட்டிருந்த காலகட்டத்தில், (ஹஜ்ஜுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்களான) அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், "இந்த ஆண்டு நீங்கள் ஹஜ் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடப்போவதில்லை. மக்களிடையே (உள்நாட்டுப்)போர் மூண்டு இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல முடியாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்று கூறினர்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அங்கு செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது, குறைஷி இறைமறுப்பாளர்கள் அவர்களைக் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தவேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன்" என்று கூறிவிட்டு, "நான் உம்ராச் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள். பிறகு புறப்பட்டு "துல்ஹுலைஃபா"விற்குச் சென்றதும் உம்ராவிற்காக ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொன்னார்கள். மேலும், "கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் நான் உம்ராச் செய்து முடிப்பேன். அங்கு செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன்" என்று கூறிவிட்டு, "உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது" எனும் (33:21ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
தொடர்ந்து பயணம் செய்து "பைதாஉ" எனும் இடத்தை அடைந்தபோது, "(ஹஜ், உம்ரா ஆகிய) அவ்விரண்டின் நிலையும் ஒன்றே;உம்ராவிற்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவது, ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவதைப் போன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்று "குதைத்" எனுமிடத்தில் ஒரு பலிப்பிராணியை விலைக்கு வாங்கினார்கள். பிறகு ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தடவை (ஏழுமுறை) கஅபாவையும், (ஏழுமுறை) ஸஃபா மற்றும் மர்வாவுக்குமிடையேயும் சுற்றி (தவாஃப் மற்றும் சயீ) வந்தார்கள். பின்னர் துல்ஹஜ் பத்தாவது நாளன்று ஹஜ்ஜை நிறைவு செய்து, ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை முற்றுகையிட்டிருந்தபோது, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள்" என்று இச்செய்தி துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அதன் இறுதியில், "ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்பவருக்கு ஒரு தவாஃபே போதும்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் என்றும், "(உம்ரா, ஹஜ் ஆகிய) அவ்விரண்டிலிருந்தும் முழுமையாக விடுபடாத வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2369. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜ் முற்றுகையிட்டிருந்த போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர்களிடம், "மக்களிடையே போர்மூளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்" என்று சொல்லப்பட்டது. அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அவ்வாறு நான் தடுக்கப்பட்டால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராச் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறியபடி புறப்பட்டார்கள். "பைதாஉ" எனும் இடத்திற்கு வெளியே வந்ததும், "(தடுக்கப்படும் விஷயத்தில்) ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டின் நிலையும் ஒன்றே. நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். (இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என இடம் பெற்றுள்ளது). மேலும், "குதைத்" எனுமிடத்தில் பலிப்பிராணியை விலைக்கு வாங்கி, அதைத் தம்முடன் கொண்டுசென்றார்கள். பின்னர் புறப்பட்டுச் சென்று ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியாச் சொன்னார்கள்.
மக்காவிற்கு வந்ததும் கஅபாவையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வந்தார்கள். (ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து ஏழு சுற்று கொண்ட ஒரு தவாஃபே செய்தார்கள்.) அதைவிடக் கூடுதலாகச் செய்யவில்லை. (துல்ஹஜ் பத்தாவது நாள்வரை) பலியிடவுமில்லை; தலையை மழிக்கவு மில்லை; முடியைக் குறைக்கவுமில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடவுமில்லை. துல்ஹஜ் பத்தாவது நாள் வந்த பிறகே அறுத்துப் பலியிட்டார்கள்; தலையை மழித்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில் செய்த தவாஃபே ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் போதும் என்று கருதினார்கள். மேலும், "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்" என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2370. மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "அவர்கள் உங்களை இறையில்லத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள்" என்று சொல்லப்பட்டபோது, "அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று செய்வேன்" என்று கூறினார்கள்" என இடம் பெற்றுள்ளது; ஹதீஸின் இறுதியில் "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்"என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்ற குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 27 ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதும் (கிரான்), ஹஜ்ஜை மட்டும் தனியாகச் செய்வதும் (இஃப்ராத்).
2371. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு மட்டும் ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொன்னோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொன்னார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2372. பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றேன்"என்று கூறினார்கள். நான் அ(வ்வாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறிய)தை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டுமே தல்பியாச் சொன்னார்கள்" என்றார்கள். பின்னர் நான் அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள், "நம்மை நீங்கள் சிறுவர்களாகவே எண்ணுகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்" (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் செவியுற்றேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2373. பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், "நாங்கள் ஹஜ்ஜுக்கு (மட்டுமே) தல்பியாச் சொன்னோம்" என்றார்கள். நான் அனஸ் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் "நாங்கள் சிறுவர்களாகவே இருந்தோம் போலும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 28 ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர், மக்காவிற்கு வந்ததும் தவாஃபும் சயீயும் செய்வது அவசியம்.
2374. வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் (ஹஜ்ஜின்போது) அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவருவது சரியா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "ஆம் (சரிதான்)" என்றார்கள். அதற்கு அந்த மனிதர், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நீ அரஃபா செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவராதே!" எனக் கூறுகின்றாரே?" என்று கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் "அரஃபா" செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றினார்கள். நீர் (ஒரு முஸ்லிம்;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர் என்பதில்) உண்மையாளராய் இருந்தால், நீர் கடைப்பிடிப்பதற்குத் தகுதியானது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொல்லா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 15
2375. வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "நான் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவுடன், இறையில்லம் கஅபாவைச் சுற்றி வரலாமா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "(அவ்வாறு கஅபாவைச் சுற்றிவர) உமக்கு என்ன தடை?"என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "இன்ன மனிதரின் புதல்வர் அவ்வாறு (தவாஃப்) செய்வதை வெறுப்பதை நான் கண்டேன். ஆனால், அவரைவிட நீங்களே எங்கள் அன்புக்குரியவர்.(பஸ்ராவின் ஆளுநரான) அவரை உலகம் சோதித்துவிட்டிருக்கிறது" என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "நம்மில் யாரைத்தான்" அல்லது "உங்களில் யாரைத் தான்" இவ்வுலகம் சோதிக்காமல் விட்டது?" என்று கூறிவிட்டுப் பின்னர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவுடன் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடி (சயீ) வந்ததையும் நாங்கள் கண்டோம். நீர் (ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர் என்பதில்) உண்மையாளராய் இருந்தால், அல்லாஹ்வின் நெறியையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் பின்பற்றுவதே இன்ன மனிதரின் வழிமுறையை நீர் பின்பற்றுவதைவிட மிகவும் தகுதியானதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2376. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் உம்ராவிற்காக (மக்கா நகருக்கு) வந்து இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே "சயீ" செய்யவில்லை. இந்நிலையில், அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா? (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபடலாமா?)" என்று கேட்டோம். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 29 (ஹஜ்ஜின்போது) கஅபாவைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே "சயீ" செய்த பின் (ஹஜ் முடியும்வரை) அந்த இஹ்ராமிலேயே நீடிப்பது, (அதாவது) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பது அவசியமாகும்.
2377. முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இராக்வாசிகளில் ஒருவர் என்னிடம், "நீங்கள் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் "ஒருவர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்"கட்டி, (மக்காவிற்கு வந்ததும்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார். இந்நிலையில் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாமா, அல்லது கூடாதா?" என்று கேளுங்கள். உர்வா (ரஹ்) அவர்கள் "இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது" என்று பதிலளித்தால் "விடுபடலாம் என ஒரு மனிதர் கூறுகிறாரே?" என்று கேளுங்கள்" என்றார்.
அவ்வாறே நான் உர்வா (ரஹ்) அவர்களிடம் (சென்று) கேட்டபோது அவர்கள், "ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர் ஹஜ்ஜை முடிக்காமல் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது" என்று விடையளித்தார்கள். நான் "அப்படியானால், விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?" என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "அவர் சொன்னது தவறு" என்றார்கள்.
பின்னர் அந்த மனிதர் என் எதிரே வந்து அ(வர் கூறியனுப்பிய)து பற்றி என்னிடம் கேட்டார். அ(ப்போது உர்வா (ரஹ்) அவர்கள் கூறிய)தை நான் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அந்த மனிதர் என்னிடம், "உர்வா (ரஹ்) அவர்களிடம் "அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக ஒரு மனிதர் தெரிவித்து வந்தாரே? அஸ்மா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் நிலை என்ன? அவர்களும் அவ்வாறு செய்துள்ளனரே?" என்று நீங்கள் கேளுங்கள்" என்றார்.
அவ்வாறே நான் (மீண்டும்) உர்வா (ரஹ்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள் "யார் அவர்?" என்று கேட்டார்கள். நான் "எனக்குத் தெரியாது" என்றேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "அவருக்கு என்ன நேர்ந்தது? என்னிடமே வந்து நேரடியாகக் கேட்க மறுக்கிறாரே? அவர் (மார்க்க விஷயங்களில் பிடிவாதம் காட்டக்கூடிய) ஓர் இராக்வாசி என்றே நான் கருதுகிறேன்" என்றார்கள். நான் "எனக்குத் தெரியாது" என்று (மீண்டும்) சொன்னேன்.
உர்வா (ரஹ்) அவர்கள், "அவர் பொய்யுரைத்துவிட்டார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள்.
பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, அ(பூபக்ர் (ரலி) அவர்கள் செய்த)தைப் போன்றே செய்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றி வருவதையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை.
பின்னர் முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத் தான் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் நடக்க வில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்சாரிகளும் அவ்வாறு செய்வதையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை.
பின்னர் அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்களையே நான் கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னு உமர் (ரலி) அவர்களே இருக்கிறார்கள். அவர்களிடமே மக்கள் கேட்க வேண்டியதுதானே! முன்னோர்களில் எவரும் தம் பாதங்களை (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்) இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா-ரலி), என் சிறிய தாயார் (ஆயிஷா-ரலி) ஆகியோர் (மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.
என் தாயார் (அஸ்மா-ரலி) அவர்கள் என்னிடம், "நானும் என் சகோதரி (ஆயிஷா-ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்ன மனிதரும் உம்ராவிற்குச் சென்றபோது ஹஜருல் அஸ்வதைத் தொட்டதும் (அதாவது தவாஃபும் "சயீ"யும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்" என்று தெரிவித்தார்கள். (எனவே இராக்கைச் சேர்ந்த) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்" என்று உர்வா (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15