பாடம் : 17 "இஹ்ராம்" கட்டும் முறைகள்; இஃப்ராத், தமத்துஉ, கிரான் ஆகிய மூன்று முறைகளில் ஹஜ் செய்யலாம்; உம்ராவுடன் ஹஜ்ஜை இணைக்கலாம்; ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்தவர் ("காரின்")தம் கிரியைகளிலிருந்து எப்போது விடுபடுவார்?
2298. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக "இஹ்ராம்" கட்டினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரிடம் பலிப்பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும்" என்று சொன்னார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மக்காவிற்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடவு மில்லை.
ஆகவே, இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், "உன் தலை (முடி)யை அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் (இஹ்ராம் கட்டுவதற்காக) "தன்ஈம்" எனும் இடத்திற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு) நான் உம்ராச் செய்தேன். "இது (இந்த உம்ரா) உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பதிலாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர்.
அத்தியாயம் : 15
2299. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் உம்ராச் செய்வதற்காக "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர். ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவிற்காக ("தமத்துஉ") "இஹ்ராம்" கட்டியவர், (உம்ராவை முடித்துவிட்டு) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும். உம்ராவிற்காக ("கிரான்") "இஹ்ராம்" கட்டி, தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருப்பவர் (துல்ஹஜ் பத்தாம் நாளில்) தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டாம். ஹஜ்ஜுக்காக மட்டும் ("இஃப்ராத்") "இஹ்ராம்" கட்டியிருப்பவர் தமது ஹஜ்ஜை முழுமையாக்கட்டும்" என்று கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் வரும்வரை மாதவிடாயுடனேயே நான் இருந்தேன். நானோ உம்ராவிற்காக மட்டுமே "இஹ்ராம்" கட்டியிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிடுமாறும், உம்ராவிற்காக நான் "இஹ்ராம்" கட்டியதை விட்டுவிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன். நான் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை அனுப்பி, எந்த உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலேயே நான் ஹஜ்ஜை அடைந்து கொண்டேனோ அந்த உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2300. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக நான் "இஹ்ராம்" கட்டினேன். நான் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், "தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்" என்று சொன்னார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் இரவை நான் அடைந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக (மட்டும்) "இஹ்ராம்" கட்டியிருந்தேன். (இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது) நான் எவ்வாறு ஹஜ் செய்வது?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உனது தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டுக்கொள். உம்ராவை நிறுத்திவிட்டு, ஹஜ் செய்துகொள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் ஹஜ்ஜை நிறைவேற்றியதும் நபி (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுக்கு (என்னை "தன்ஈமு"க்கு அழைத்துச் செல்லுமாறு) உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமர்த்திக்கொண்டு,நான் நிறுத்திவைத்திருந்த உம்ராவிற்காக "தன்ஈம்" எனும் இடத்தில் "இஹ்ராம்" கட்டச் செய்தார்.
அத்தியாயம் : 15
2301. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (விடைபெறும் ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டோம். அப்போது அவர்கள், "உங்களில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! ஹஜ்ஜுக்கு மட்டும் (தமத்துஉ) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அதற்காக "இஹ்ராம்" கட்டட்டும்! உம்ராவிற்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அதற்காக "இஹ்ராம்" கட்டட்டும்!" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" கூறினார்கள். அவ்வாறே அவர்களுடன் மக்களில் சிலரும் "இஹ்ராம்" கட்டினர். வேறுசிலர் உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டிற்கும் "இஹ்ராம்" கட்டினர். இன்னும் சிலர் உம்ராவிற்கு மட்டும் "இஹ்ராம்" கட்டினர்.
நான் உம்ராவிற்காக மட்டும் "இஹ்ராம்" கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்.
அத்தியாயம் : 15
2302. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் துல்ஹஜ் மாத தலைப்பிறையை எதிர்பார்த்தவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "விடைபெறும்"ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், உம்ராவிற்கு "இஹ்ராம்" கட்டிக்கொள்ளட்டும்; நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால் உம்ராவிற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டியிருப்பேன்" என்று சொன்னார்கள். எனவே, மக்களில் சிலர் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். வேறுசிலர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் உம்ராவிற்காக "இஹ்ராம்"கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்.
நாங்கள் புறப்பட்டு மக்காவை அடைந்ததும் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானோ எனது உம்ராவின் கிரியைகளைச் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ உனது உம்ராவை விட்டுவிட்டு, உனது தலைமுடியை அவிழ்த்து, அதை வாரிக்கொண்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன். அல்லாஹ் எங்கள் ஹஜ்ஜை நிறைவேறச் செய்து (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) "முஹஸ்ஸபி"ல்57 தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமர்த்திக்கொண்டு "தன்ஈம்" நோக்கிச் சென்றார். அங்கிருந்து நான் உம்ராவிற்காக "தல்பியா" கூறினேன். அல்லாஹ் எங்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்ற வாய்ப்பளித்தான்.
(அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இதற்கு (பரிகாரமாக) ஏதேனும் பலியிடலோ தர்மமோ நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை.
அத்தியாயம் : 15
2303. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் (ஹஜ் மாதத்தில் உம்ராச் செய்யக் கூடாது என்று எண்ணியிருந்ததால்) ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், உம்ராவிற்கு "இஹ்ராம்" கட்டிக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2304. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்" என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த அறிவிப்பில், "ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றித்தந்தான்"என அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் "இதற்கு(ப் பரிகாரமாக)ப் பலியிடலோ, தர்மமோ, நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை" என ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2305. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; இன்னும் சிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியிருந்தார்கள். உம்ராவிற்கு மட்டும் "இஹ்ராம்" கட்டியவர்கள் (உம்ராவை முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொண்டார்கள். ஹஜ்ஜுக்கு மட்டுமே "இஹ்ராம்" கட்டியவர்களும் அல்லது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து "இஹ்ராம்" கட்டியவர்களும் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாள் வரும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
அத்தியாயம் : 15
2306. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் "சரிஃப்" எனுமிடத்தில், அல்லது அதற்கு அருகில் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நபி (ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம், "உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள், "இந்த மாதவிடாய் பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளிக்கும்வரை, இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர,ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்" என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2307. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றும் எண்ணத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) "சரிஃப்" எனும் இடத்திற்கு நாங்கள் வந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம் "உன் அழுகைக்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஆண்டு நான் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டு வந்திருக்கக் கூடாது என்று கருதுகிறேன்" என்று கூறினேன். அவர்கள், "உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது போலும்!" என்றார்கள். நான், "ஆம்" என்றேன். அப்போது, "இ(ந்த மாதவிடாயான)து பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கிய ஒன்றாகும். எனவே, நீ தூய்மையாகும்வரை, இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்யும் மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்" என்று சொன்னார்கள்.
நான் மக்காவை அடைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "உங்கள் இஹ்ராமை உம்ராவிற்காக மாற்றறிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். உடனே தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொண்டனர். அப்போது நபி (ஸல்), அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் வசதி படைத்த இன்னும் சிலரிடம் பலிப் பிராணிகள் இருந்தன. (உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிய) அவர்கள் (துல்ஹஜ் எட்டாவது நாளில் மினாவிற்குச்) சென்றபோது ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" கூறினர். "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நான் (மாதவிடாயிலிருந்து) தூய்மையானபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உத்தரவின் பேரில், நான் "தவாஃபுல் இஃபாளா"செய்தேன். பின்னர் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான் "இது என்ன?" என்று கேட்டேன். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காகக் குர்பானி கொடுத்தார்கள் (அதுதான் இந்த இறைச்சி)" என்று கூறினர்.
முஹஸ்ஸபில் தங்கும் (துல்ஹஜ் பதினான்காவது) இரவில் நான், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றிவிட்டுத் திரும்பிச் செல்ல, நானோ ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றிச் செல்கிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் (என்னைத் தன்ஈமுக்கு அழைத்துச் சென்று, அங்கு உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டுமாறு) உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது ஒட்டகத்தில் அமர்த்திக்கொண்டு சென்றார். நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் இளவயதுப் பெண்ணாக இருந்தேன். (ஒட்டகத்தில் அமர்ந்து சென்றபோது) நான் குட்டித்தூக்கம் போடுவேன். அப்போது எனது முகம் (ஒட்டகத்தின் சேணத்திலுள்ள) சாய்வுக் கட்டையில் இடித்துக்கொள்ளும். நாங்கள் இருவரும் தன்ஈமுக்கு வந்து சேர்ந்த போது, அங்கு நான் உம்ராவிற்காக "தல்பியா"கூறினேன். அது, மக்கள் முன்பே நிறைவேற்றிய உம்ராவிற்குப் பகரமாக அமைந்தது.
அத்தியாயம் : 15
2308. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் ஹஜ்ஜுக்காக "தல்பியா" கூறி(ப் புறப்பட்டுச் செல்லலா)னோம். நாங்கள் "சரிஃப்" எனுமிடத்தில் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்), அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் வசதி படைத்த இன்னும் சிலரிடம் பலிப் பிராணிகள் இருந்தன. (உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிய) அவர்கள் (துல்ஹஜ் எட்டாவது நாளில் மினாவிற்குச்) சென்றபோது ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" கூறினர்" எனும் குறிப்பும், "நான் இளவயதுப் பெண்ணாக இருந்தேன். (ஒட்டகத்தில் அமர்ந்து சென்றபோது) நான் குட்டித்தூக்கம் போடுவேன். அப்போது எனது முகம் (ஒட்டகத்தின் சேணத்திலுள்ள) சாய்வுக் கட்டையில் இடித்துக்கொள்ளும்" எனும் குறிப்பும் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 15
2309. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2310. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜுக்கு "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் மாதங்களில், ஹஜ்ஜின் புனிதக் கிரியைகளில், ஹஜ்ஜின் இரவு (பகல்)களில் (பங்கேற்கப்) புறப்பட்டோம். நாங்கள் "சரிஃப்" எனுமிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூடாரத்திலிருந்து புறப்பட்டு) தம் தோழர்களிடம் வந்து, "உங்களில் எவரிடம் பலிப் பிராணி இல்லையோ அவர் தமது இஹ்ராமை உம்ராவிற்காக மாற்றிக்கொள்ள விரும்பினால், அவர் அவ்வாறே செய்துகொள்ளட்டும்; எவரிடம் பலிப்பிராணி உள்ளதோ (அவர் இவ்வாறு செய்ய) வேண்டாம்" என்றார்கள். தம்மிடம் பலிப்பிராணி இல்லாத நபித்தோழர்களில் சிலர் இவ்வாறு செய்தனர். வேறுசிலர் இவ்வாறு செய்யவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் அவர்களுடனிருந்த வசதி படைத்த தோழர்களில் சிலரிடமும் பலிப் பிராணிகள் இருந்தன. (எனவே அவர்களால் உம்ரா மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட முடியவில்லை). இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள்.
அப்போது நான் அழுதுகொண்டிருந்தேன். என்னிடம், "உன் அழுகைக்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "நீங்கள் உங்கள் தோழர்களிடம் பேசியதைச் செவியுற்றேன். உம்ராவைப் பற்றித் தாங்கள் கூறியதையும் நான் கேட்டேன். என்னால் உம்ராச் செய்ய முடியாமல் போய்விட்டதே" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு என்னவாயிற்று?" என்று கேட்டார்கள். "நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதனால் உனக்கு ஒரு பாதிப்புமில்லை. பெண்களில் நீயும் ஒருத்தி. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் விதியாக்கியதை உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ் செய்துகொண்டிரு. அல்லாஹ் உனக்கு உம்ராச் செய்யும் வாய்ப்பையும் தரலாம்" என்று கூறினார்கள்.
ஆகவே, நான் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவில் தங்கியிருந்தபோது, நான் (மாதவிடாயிலிருந்து) தூய்மையானேன். பிறகு நாங்கள் (மினாவிலிருந்து சென்று) இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப் செய்யலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஹஸ்ஸப்" எனுமிடத்தில் தங்கியிருந்தார்கள். (அவர்களிடம் நான் சென்றபோது) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை அழைத்து, "உன் சகோதரியை ஹரமுக்கு வெளியே (தன்ஈமுக்கு) அழைத்துச் செல். அவர் உம்ராவிற்கு "இஹ்ராம்" கட்டி, இறையில்லம் கஅபாவைச் சுற்றட்டும்! (உம்ராச் செய்து முடிக்கட்டும்!) நான் இங்கேயே உங்கள் இருவரையும் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்" என்றார்கள்.
உடனே நாங்கள் புறப்பட்டு (தன்ஈமுக்கு)ச் சென்றோம். நான் (அங்கு) "இஹ்ராம்" கட்டிக் கொண்டு (வந்து) இறையில்லத்தைச் சுற்றி வந்தேன். ஸஃபா மற்றும் மர்வாவில் சுற்றிவந்தேன். பிறகு (உம்ராவை முடித்து) நாங்கள் நடுநிசி நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துசேர்ந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தில் தங்கியிருந்தார்கள். "(உம்ராவை) முடித்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புறப்பட அனுமதியளித்தார்கள்; பின்னர் இறையில்லத்திற்குச் சென்று சுப்ஹுத் தொழுகைக்கு முன் அதைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். பிறகு மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அத்தியாயம் : 15
2311. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் சிலர் ஹஜ் (இஃப்ராது)க்கு மட்டும் "இஹ்ராம்" கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டினர். இன்னும் சிலர் உம்ராச் செய்து முடித்துவிட்டு, ஆசுவாசமாக "ஹஜ்(ஜுத் தமத்து)" செய்வதற்காக "இஹ்ராம்"கட்டினர்.
- காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக வந்தார்கள்... (மற்ற விவரங்கள் மேற் கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.)
அத்தியாயம் : 15
2312. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் துல்கஅதா மாதம் இருபத்தைந்தாவது நாள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவந்தவர் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடி முடித்தவுடன் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடவேண்டும்" என்று கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாவது நாள் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான், "இது என்ன (இறைச்சி)?" என்று கேட்டேன். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக அறுத்துப் பலியிட்டார்கள். (அந்த இறைச்சிதான் இது)" என்று பதிலளிக்கப்பட்டது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்களிடம் எடுத்துக் கூறினேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஹதீஸை, உள்ளது உள்ளபடி அம்ரா உமக்கு அறிவித்துள்ளார்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2313. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் எல்லாரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரு கிரியைகளையும் நிறைவேற்றிவிட்டுத் திரும்புகின்றனர். நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு கிரியையை நிறைவேற்றிவிட்டுத் திரும்புகிறேனே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (சற்றுக்) காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் "தன்ஈமு"க்குச் சென்று, அங்கு உம்ராவிற்காக "தல்பியா" கூறிக்கொள். பிறகு நாளை நாம் இன்னின்ன இடத்தில் சந்திப்போம். ஆனால், உம்ராவிற்கான நற்பலன் (நீ ஏற்றுக்கொண்ட) "உனது சிரமத்திற்கு" அல்லது "உனது பொருட்செலவிற்கு" தக்கவாறுதான் கிட்டும்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2314. அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் காசிம் பின் முஹம்மத் (ரஹ்), இப்ராஹீம் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்) ஆகியோர் வழியாக இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் எது யாருடைய அறிவிப்பு என்று எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 15
2315. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். நாங்கள் மக்கா சென்றடைந்ததும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, பலிப்பிராணியை (தம்முடன்) கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பலிப்பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொண்டனர்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் நான் இறையில்லத்தைச் சுற்றிவரவில்லை. (ஹஜ் முடிந்து) "அல்முஹஸ்ஸப்" எனுமிடத்தில் தங்கும் (துல்ஹஜ் பதினான்காவது) இரவு வந்தபோது, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துத் திரும்புகின்றனர். நான் ஹஜ்ஜை மட்டுமே முடித்து விட்டுத் திரும்புகிறேனே?" என்றேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் மக்கா வந்தடைந்த இரவுகளில் நீ இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின், நீ உன் சகோதரர் (அப்துர் ரஹ்மான்) உடன் "தன்ஈமு"க்குச் சென்று அங்கிருந்து உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி (உம்ராவை நிறைவேற்றி)க்கொள். பிறகு இன்னின்ன இடத்தில் நாம் சந்திப்போம்" என்று கூறினார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நான் உங்களைப் புறப்படவிடாமல் தடுத்துவிடுவேன் என எண்ணுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக), "உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கொடுத்துவிட்டாயே!) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். (அப்படியானால்) பரவாயில்லை நீ புறப்படு!" என்றார்கள்.
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தபோது (உம்ராவை முடித்துத் திரும்பிய) என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் குன்றிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2316. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் எண்ணமோ உம்ராவை நிறைவேற்றும் எண்ணமோ கொள்ளாமல் (பொதுவாக) "தல்பியா" சொன்னவர்களாக (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2317. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள், அல்லது ஐந்தாவது நாள் அன்று (மக்காவிற்கு) வந்தார்கள். அப்போது நானிருந்த இடத்திற்குக் கோபத்துடன் வந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கோபப்படுத்தியவர் யார்? அவரை, அல்லாஹ் நரகத்தில் நுழைவிப்பானாக!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உனக்குத் தெரியுமா? நான் மக்களிடம் (பலிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக்கொள்ளட்டும் என) ஓர் உத்தரவு பிறப்பித்தேன். ஆனால், அவர்களோ தயக்கம் காட்டுகிறார்கள். நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், (என்னுடன்) பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்கமாட்டேன்; இங்கு வந்த பிறகு வாங்கியிருப்பேன்; பின்னர் மக்கள் (தம் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி) இஹ்ராமிலிருந்து விடுபட்டதைப் போன்று நானும் விடுபட்டிருப்பேன்" என்றார்கள்.
(ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் தயக்கம் காட்டுவதைப் போன்றுள்ளது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எண்ணுகிறேன் என இடம் பெற்றுள்ளது.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15