2258. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக் கூடியவையாகும். அவை புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். (நீர்க்)காகம், பருந்து, வெறிநாய், தேள், எலி ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2259. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளே "இஹ்ராம்" கட்டிய நிலையில் ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமேதும் இல்லை. எலி, தேள், (நீர்க்)காகம், பருந்து, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு அபீ உமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "புனித இடங்களில்" என (பன்மையாக) வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக்கூடியவை ஆகும். அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. தேள், (நீர்க்)காகம், பருந்து, எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2261. ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் "எலி, தேள், பருந்து, வெறிநாய், (நீர்க்)காகம் ஆகியவற்றைக் கொல்ல "உத்தரவிடப்பட்டது" அல்லது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்" என்று என்னிடம் தெரிவித்தார்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2262. ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராம் கட்டிய ஒருவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் "வெறிநாய், எலி, தேள், பருந்து, (நீர்க்)காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுவந்தார்கள்" என்று என்னிடம் கூறினார்" என்றார்கள்.
இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2263. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இஹ்ராம்" கட்டியிருக்கும் ஒருவர் ஐந்து உயிரினங்களைக் கொல்வது குற்றமாகாது. (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2264. அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், "இஹ்ராம் கட்டியவர் எந்த உயிரினங்களைக் கொல்ல அனுமதி உண்டு என்பது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் என்ன கூறினார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: "நபி (ஸல்) அவர்கள் ஐந்து உயிரினங்களை ஒருவர் கொன்றுவிட்டாலும் அதைக் கொன்றதற்காக அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை; (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் ஒருவரது அறிவிப்பில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. (பின்வரும் ஹதீஸில்) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்களும் இப்னு ஜுரைஜ் போன்றே அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2265. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஐந்து உயிரினங்களில் ஒன்றைப் புனித (ஹரம்) எல்லைக்குள் கொன்றாலும் எந்தக் குற்றமுமில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2266. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்களை ஒருவர் இஹ்ராம் கட்டிய நிலையில் கொன்றுவிட்டாலும் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. தேள், எலி,வெறி நாய், (நீர்க்)காகம், பருந்து ஆகியவைதாம் அவை.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படும் வாசகமே இங்கு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 10 இஹ்ராம் கட்டியவர்,தமது தலையில் பாதிப்பு ஏதும் இருந்தால் தலை (முடி)யை மழித்துக்கொள்ளலாம்;அதற்காகப் பரிகாரம் அவசியமாகும் என்பதும், பரிகாரத்தின் அளவும்.
2267. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா உடன்பாடு நடந்த காலகட்டத்தில் (உம்ராவிற்காக நான் "இஹ்ராம்" கட்டியிருந்த போது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது (கற்)பாத்திரத்தின் கீழே நெருப்பை மூட்டி (சமைத்து)க் கொண்டிருந்தேன். (அப்போது எனது தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்று கூறினேன். அதற்கு, "உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு! (இதுவே "இஹ்ராம்" கட்டிய நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மூன்று நோன்பு நோற்றல், ஆறு ஏழைகளுக்கு உணவளித்தல், குர்பானி கொடுத்தல் ஆகிய இம்மூன்றில்) எதை முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2268. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது பலியிட வேண்டும்" எனும் இந்த (2:196 ஆவது) வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது.
நான் (ஹுதைபியா நேரத்தில் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் "அருகில் வா!" என்றார்கள். நான் அருகில் சென்றேன். "இன்னும் நெருங்கி வா!" என்றார்கள். நான் இன்னும் நெருங்கினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், (தலைமுடியை மழித்துவிட்டு) அதற்குப் பரிகாரமாக (மூன்று) நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது (என்னால்) இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2269. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா பயணத்தில்) என் அருகில் (வந்து) நின்றார்கள். அப்போது எனது தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அவ்வாறாயின் நீ உனது தலையை மழித்துக்கொள்"என்றார்கள். இதையடுத்து "உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தால் (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்" எனும் இந்த (2:196ஆவது) வசனம் என் தொடர்பாக அருளப்பெற்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு ஒரு "ஃபரக்" அளவு தர்மம் செய். அல்லது உன்னால் இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு!" என்று சொன்னார்கள்.40
அத்தியாயம் : 15
2270. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (உம்ராவிற்குச் சென்றபோது) மக்காவிற்குள் நுழைவதற்கு முன் "இஹ்ராம்" கட்டியவனாக ஹுதைபியாவில் ஒரு பாத்திரத்தின் கீழ் தீ மூட்டி (சமைத்து)க் கொண்டிருந்தேன். (எனது தலையிலிருந்த) பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது என்னைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "உன் தலையிலுள்ள இப்பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீ உனது தலையை மழித்துக்கொள். (அதற்குப் பரிகாரமாக) ஒரு "ஃபரக்" உணவை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி. (ஒரு "ஃபரக்" என்பது மூன்று "ஸாஉ"கள் அளவாகும்.) அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2271. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னிடம், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உனது தலையை மழித்துக்கொள். பிறகு ஓர் ஆட்டை அறுத்துப் பலியிடு. அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது மூன்று "ஸாஉ" பேரீச்சம் பழத்தை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி!" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2272. அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகில் (கூஃபா) பள்ளிவாசலில் அமர்ந்தேன். அவர்களிடம், "..அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவேண்டும். அல்லது பலியிட வேண்டும" எனும் இந்த (2:196ஆவது) வசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள், "இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. எனது தலையில் பிணி ஏற்பட்டிருந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். எனது தலையிலிருந்த பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "உனக்கு ஓர் ஆடு கிடைக்குமா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அப்போதுதான் இந்த (2:196ஆவது) வசனம் அருளப் பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை "ஸாஉ" உணவு வீதம், ஆறு ஏழைகளுக்கு உணவளி" என்று சொன்னார்கள். ஆகவே, இந்த வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பெற்றது. ஆனால், அதன் சட்டம் உங்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2273. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹுதைபியாவின்போது) "இஹ்ராம்" கட்டியவனாக நபி (ஸல்) அவர்களுடன் (உம்ராவிற்காகச்) சென்றேன். அப்போது எனது தலையிலும் தாடியிலும் பேன்கள் நிறைந்து விட்டன. இத்தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் (என்னை அழைத்து வருமாறு) என்னிடம் நபியவர்கள் ஆளனுப்பினார்கள்; நாவிதரையும் அழைத்தார்கள். அவர் (வந்து) எனது தலையை மழித்தார். பிறகு "உன்னிடம் ஏதேனும் குர்பானிப் பிராணி உண்டா?" என்று என்னிடம் கேட்டார்கள். நான், "எனக்கு அதற்கான வசதி இல்லை" என்றேன். அவ்வாறாயின், மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு ஒரு "ஸாஉ"வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளி" என்று கூறினார்கள். வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,)அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்" எனும் (2:196ஆவது) வசனத்தைக் குறிப்பாக என் தொடர்பாக அருளினான். பின்னர் முஸ்லிம்கள் அனைவருக்கும் (அதன் சட்டம்) பொதுவானதாக அமைந்தது.
அத்தியாயம் : 15
பாடம் : 11 "இஹ்ராம்" கட்டியவர் குருதி உறிஞ்சி எடுப்பது செல்லும்.
2274. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த நிலையில் (தமக்கேற்பட்டிருந்த ஒற்றைத் தலைவலியின் காரணத்தால்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2275. அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் தமது தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 12 "இஹ்ராம்" கட்டியவர் தம் கண்களுக்கு மருந்திடலாம்.
2276. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் "அல்மலல்" எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் "அர்ரவ்ஹா" எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகிவிட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது,இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2277. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்போது அவர்கள் கண்ணில் அஞ்சனம் (சுருமா) இட்டுக்கொள்ள விரும்பினார்கள். இதை அறிந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவிட்டு, கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அவருக்கு உத்தர விட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (கண்வலி எற்பட்டோருக்கு) அவ்வாறு செய் தார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றும் அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 15