பாடம் : 27 இறந்துபோனவர் சார்பாக (அவர் தவறவிட்ட) நோன்பைக் "களா"ச் செய்வது.
2108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பை நிறைவேற்ற வேண்டிய ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2109. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையிருந்த நிலையில் இறந்துவிட்டார். (அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் மீது கடன் ஏதும் இருந்தால் அதை நீ நிறைவேற்றுவாய் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்" என்றார். "அவ்வாறாயின், நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுதிவாய்ந்தது அல்லாஹ்வின் கடனே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2110. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருமாத நோன்பு கடமையிருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அதை அவர் சார்பாக நான் நிறைவேற்றலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் தாயார்மீது கடனேதும் இருந்தால், அவர் சார்பாக அதை நீ நிறைவேற்றுவாயா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். "அவ்வாறாயின், நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
முஸ்லிம் பின் இம்ரான் அல்பத்தீன் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை எங்களுக்கு அறிவித்த போது, அல்ஹகம் பின் உதைபா (ரஹ்) மற்றும் சலமா பின் குஹைல் (ரஹ்) ஆகிய இருவரும், "இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்ததை நாங்கள் செவியுற்றுள்ளோம். அப்போது அங்கு நாங்களும் அமர்ந்திருந்தோம்" என்று கூறினர்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2111. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார், தம்மீது நேர்ச்சை நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு "உன் தாயார்மீது ஏதேனும் கடனிருந்த நிலையில் அதை நீ நிறைவேற்றினால், அவர் சார்பாக நிறைவேறி விடாதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பெண்மணி, "ஆம்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் தாயார் சார்பாக நோன்பு நோற்றுக்கொள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2112. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப்பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப்பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப்பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது" என்று சொன்னார்கள். அப்பெண்மணி, "என் தாயார்மீது ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக்கொள்" என்றார்கள். அப்பெண்மணி, "என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டதற்கு, "அவருக்காக நீ ஹஜ் செய்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2113. மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(என் தாயார்மீது) இருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று அப்பெண்மணி கேட்டதாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில், "(என் தாயார்மீது) ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்றே இடம்பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "இரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று இடம்பெற்றுள்ளது.
- இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது. அதில் "ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 13
பாடம் : 28 நோன்பு நோற்றிருப்பவர் விருந்துக்கு அழைக்கப்பட்டால் "நான் நோன்பாளி" என்று அவர் சொல்லிவிட வேண்டும்.
2114. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது விருந்துக்கு அழைக்கப்பட்டால் "நான் நோன்பாளி" என்று அவர் கூறிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 29 நோன்பாளி நாவைக் காப்பது.
2115. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றவராகக் காலைப்பொழுதை அடையும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்;அறிவீனமாக நடந்துகொள்ளவேண்டாம். எவரேனும் அவரை ஏசினாலோ அல்லது வம்புக்கு இழுத்தாலோ "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்; நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 30 நோன்பின் மாண்பு.
2116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "ஆதமின் மைந்தனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும். ஆனால், நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என்று கூறினான். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2118. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆதமின் மைந்தனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும்; நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கிழுத்தால் "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறிவிடட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, மறுமை நாளில் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது, நோன்பு துறப்பதை முன்னிட்டு அவர் மகிழ்ச்சியடைகிறார். தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சியடைகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என அல்லாஹ் கூறுகின்றான். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவர் மகிழ்ச்சி அடைவார்; அல்லாஹ்வைச் சந்திக்கும்போதும் மகிழ்ச்சி அடைவார். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூசயீத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், "அவர் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது, அல்லாஹ் அவருக்கு நற்பலன் வழங்குவான்; அவர் மகிழ்ச்சி அடைவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் "ரய்யான்" எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள். "நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் அதன் வழியாக நுழைவார்கள். அவர்களில் இறுதி நபர் நுழைந்ததும் அந்நுழைவாயில் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறெவரும் நுழையமாட்டார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 31 அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச் செல்லும்போது) எந்த வித இடையூறும் கடமைதவறுதலும் ஏற்படாமல் நோன்பு நோற்கச் சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு.
2122. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் புரியச் செல்லும்போது) ஒருநாள் நோன்பு நோற்கும் அடியாரின் முகத்தை, அந்த ஒரு நாளுக்குப் பகரமாக எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு நரகத்திலிருந்து அல்லாஹ் அப்புறப்படுத்தாமல் இருப்பதில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச் செல்லும்) ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்றால், அவரது முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்திவிடுகிறான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 32 கூடுதலான (நஃபில்) நோன்பு நோற்கும் முடிவை நண்பகலுக்கு முன் செய்தாலும் நோன்பு செல்லும். கூடுதலான நோன்பு நோற்றிருப்பவர் எவ்விதக் காரணமுமின்றி நோன்பை (இடையிலே) விட்டுவிடலாம்.
2124. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் (வந்து), "ஆயிஷா! உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் எதுவுமில்லை" என்றேன். உடனே "அவ்வாறாயின் நான் நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னர் "எங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது" (அல்லது "எங்களைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்"). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது, நான் "அல்லாஹ்வின் தூதரே! "நமக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது" (அல்லது "நம்மைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்"). (அந்த அன்பளிப்பிலிருந்து) சிறிதளவைத் தங்களுக்காக நான் எடுத்துவைத்துள்ளேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள் "என்ன அது?" என்று கேட்டார்கள். நான் "(பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும்) "ஹைஸ்" எனும் பலகாரம்" என்று சொன்னேன். "அதைக் கொண்டு வா" என்று அவர்கள் சொன்னார்கள். நான் அதைக் கொண்டுவந்தேன். அவர்கள் உண்டார்கள். பிறகு "நான் இன்று காலையில் நோன்பு நோற்றி(ட எண்ணியி)ருந்தேன்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தல்ஹா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், இ(வ்வாறு நோற்க எண்ணியிருந்த நோன்பை விட்டுவிடுவதான)து, ஒருவர் தமது செல்வத்திலிருந்து தர்மப் பொருளை எடுத்துவைப்பதைப் போன்றதுதான். அவர் நாடினால், (எடுத்து வைத்த) அதை வழங்கலாம்; நாடினால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2125. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை" என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு "ஹைஸ்" எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது" என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்" என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 33 (நோன்பாளி) மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் நோன்பு முறியாது.
2126. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நோன்பு நோற்றுக்கொண்டு மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் நோன்பைத் தொடரட்டும். அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 34 நபி (ஸல்) அவர்கள் ரமளான் அல்லாத மாதத்தில் நோன்பு நோற்றதும், நோன்பே இல்லாமல் எந்த மாதத்தையும் வெறுமையாக விடாமலிருப்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
2127. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த குறிப்பிட்ட மாதத்திலாவது (மாதம் முழுக்க) நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளான் அல்லாத வேறெந்த குறிப்பிட்ட மாதத்திலும் (மாதம் முழுக்க) நோன்பு நோற்றதுமில்லை; ஒரு சில நாட்களாவது நோன்பு நோற்காமல் எந்த மாதத்தையும் (அடியோடு) விட்டதுமில்லை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 13