1913. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போரின்போது (எதிரிகளான) "ஹவாஸின்" குலத்தாரும் "கத்ஃபான்" குலத்தாரும் தம் குழந்தை குட்டிகளுடனும் கால்நடைகளுடனும் (இஸ்லாமியப் படையினரை) நோக்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் (அறப்) போராளிகள் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்கள் (அனைவரும் எதிரிகளின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல்) நபி (ஸல்) அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் இருமுறை அழைப்பு விடுத்தார்கள்; அவ்விரண்டுக்குமிடையே வேறெதுவும் பேசாமல் (தொடர்ச்சியாக) அழைத்தார்கள். தமது வலப்பக்கம் திரும்பி "அன்சாரிகளே!" என்று அழைக்க, அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்" என்று கூறினர். பிறகு தம் இடப்பக்கம் திரும்பி, "அன்சாரிகளே!" என்று அழைத்தார்கள். அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்" என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது இருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, "நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன்" என்று சொன்னார்கள். பிறகு (அந்தப் போரில் ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்த) இணைவைப்பாளர்கள் தோல்வி கண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமான போர்ச்செல்வங்களைப் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப் பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை.
ஆகவே, அன்சாரிகள் (சிலர்), "கடுமையான பிரச்சினை என்றால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். போர்ச் செல்வங்களோ மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன" என்று (மனக்குறையுடன்) பேசிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, "அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்டார்கள். அவர்கள் (அதை ஒப்புக்கொள்வதைப் போன்று) மௌனமாயிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?" என்று கேட்டார்கள். அன்சாரிகள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (அதையே) விரும்புகிறோம்" என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களெல்லாம் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் ஒரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்), "அபூஹம்ஸா! (இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது) தாங்கள் அங்கு இருந்தீர்களா?" என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்?" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1914. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மக்காவை வெற்றிகொண்டோம். பின்னர் ஹுனைனை நோக்கிப் போருக்காகப் புறப்பட்டோம். அப்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் நான் பார்த்தவற்றிலேயே மிக அழகான முறையில் அணிவகுத்து வந்தனர். முதலில் குதிரைப் படைகள் நிறுத்தப்பட்டன. பிறகு காலாட்படையினரும் அதற்குப் பின் பெண்கள் அணியும் நிறுத்தப்பட்டது. பிறகு ஆடுகளும் பின்னர் இதர கால்நடைகளும் நிறுத்தப்பட்டன. அப்போது (எங்கள் அணியில்) அதிகமான வீரர்கள் இருந்தனர்; நாங்கள் ஆறாயிரம் பேர் இருந்தோம். எங்கள் சாலையோரக் குதிரைப்படைக்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் (தளபதியாக) இருந்தார்கள். எங்கள் குதிரைப்படை எங்கள் முதுகுக்குப் பின்னால் திரும்பலாயிற்று. சிறிது நேரமே கழிந்திருக்கும்; அதற்குள் அவை எங்கள் (களத்திலிருந்து) விலகிச் செல்லத்தொடங்கின. எங்கள் (அணியிலிருந்த) கிராமவாசிகளும் நாங்கள் அறிந்த வேறு சிலரும் வெருண்டோடலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஹாஜிர்களே, முஹாஜிர்களே" என்று அழைத்தார்கள். பின்னர் "அன்சாரிகளே, அன்சாரிகளே" என்று அழைத்தார்கள்.
-இது என் தந்தையின் சகோதரர்கள் (அல்லது என் கூட்டத்தார்) அறிவித்த தகவலாகும்-
அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் அழைப்புக்குக் கீழ்படிந்தோம்" என்று கூறி(முன்னே வந்து எதிரிகளுடன் போரிடலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முன்னேறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்றபோது, அல்லாஹ் எங்கள் எதிரிகளை தோல்வியுறச்செய்தான். (எதிரிகள் விட்டுச் சென்ற) அந்த(ப் போர்)ச் செல்வங்களை நாங்கள் கைப்பற்றினோம். பின்னர் தாயிஃப் (நகர மக்களை) நோக்கி நடந்து அவர்களை நாற்பது இரவுகள் முற்றுகையிட்டோம். பிறகு மக்காவிற்குத் திரும்பி வந்து (அங்கு) தங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களில்) ஒருவருக்கு நூறு ஒட்டகங்கள் (போர்ப் பரிசாக) வழங்கலானார்கள்.
மற்ற விவரங்கள் முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1915. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போர்ச்செல்வங்களிலிருந்து) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி), ஸஃப்வான் பின் உமய்யா (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (பின் பத்ர்-ரலி) மற்றும் அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகியோருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி) அவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கொடுத்தார்கள். அப்போது அப்பாஸ் பின் மிர்தாஸ் ரலி) அவர்கள் பின்வருமாறு கவி பாடினார்கள்:
எனது பங்கையும்
(என் குதிரை) உபைதின் பங்கையும்
உயைனாவுக்கும் அக்ரஉக்குமிடையே
பங்கிடுகிறீரா?
சபைகளில் மிர்தாஸை மிஞ்சுபவர்களாக
பத்ருமில்லை; ஹாபிஸும் இல்லை.
அவ்விருவரையும்விட
நான் குறைந்தவனுமில்லை.
யாரை இன்று நீர் தாழ்த்திவிட்டீரோ
அவர் உயர்த்தப்படப்போவதில்லை.
அப்போது அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை முழுமையாக்கி (வழங்கி)னார்கள்.
அத்தியாயம் : 12
1916. மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், "அல்கமா பின் உலாஸா (ரலி) அவர்களுக்கும் நூறு ஒட்டகங்கள் வழங்கினார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்கமா பின் உலாஸா (ரலி) அவர்களைப் பற்றியோ ஸஃப்வான் பின் உமய்யா (ரலி) அவர்களைப் பற்றியோ குறிப்பு இல்லை. மேலும், மேற்கண்ட கவிதையும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 12
1917. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் வெற்றி கண்டபோது, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கு (மட்டும்) அவற்றைக் கொடுத்தார்கள். (அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை.) அந்த மக்களுக்குக் கிடைத்ததைப் போன்று தமக்கும் கிடைக்கவேண்டுமென அன்சாரிகள் விரும்புகின்றார்கள் என்ற செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, அன்சாரிகளிடையே (அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக) உரையாற்றினார்கள்.
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, "அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் கண்டேன்; அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கவில்லையா? நீங்கள் (இனவாதம் பேசி) பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (தமது வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை ஒவ்வொன்றாக நபியவர்கள் சொல்லும்போதெல்லாம்) "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரிகள்" என்று அன்சாரிகள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறிருக்க, எனக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா?" என்று கேட்க, அன்சாரிகள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப்பெரும் உபகாரிகள்" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்களும் விரும்பினால் இன்னின்னவாறு இன்னின்ன நேரத்தில் நடந்தது என்று (நீங்கள் எனக்குச் செய்த உதவிகளையும் பட்டியலிட்டுக்) கூறலாம்" என்று சில விஷயங்களைச் சொல்லிக்காட்டினார்கள்.
-அந்த விஷயங்கள் எவையெவை என்பதைத் தாம் மனனமிடவில்லை என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.-
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ள) இந்த மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டுசெல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைவனின் தூதரையே (என்னையே) கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அன்சாரி(களாகிய நீங்)கள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் போன்றவர்கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது) மட்டும் நடந்திராவிட்டால், நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் நடந்து சென்றால், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும்தான் செல்வேன். (அன்சாரிகளாகிய) நீங்கள் விரைவில் (ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும் "ஹவ்ளுல் கவ்ஸர்" எனும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை பொறுமையுடன் இருங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1918. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போரின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்துப் போர்ச்செல்வங்களிலிருந்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன்-ரலி) அவர்களுக்கும் அதைப் போன்றே (நூறு ஒட்டகங்கள்) கொடுத்தார்கள். அரபுகளில் முக்கியமானவர்கள் சிலருக்கும் கொடுத்தார்கள். அன்றையதினம் அவர்களுக்கெல்லாம் பங்கீட்டில் முன்னுரிமை அளித்தார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பங்கீட்டில் நீதி வழங்கப்படவில்லை; அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை" என்று சொன்னார். உடனே நான், "இதை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்" என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் சென்று அவர் சொன்னதைத் தெரிவித்தேன். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் சிவப்புச்சாயம் போல் மாறிவிட்டது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறுயார் தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கு கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், (அதைச்) சகித்துக் கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
நான் "உறுதியாக! இனிமேல் எந்தச் செய்தியையும் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லமாட்டேன்" என்று சொன்னேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1919. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச்செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒரு மனிதர், "இது இறைவனின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்" என்று சொன்னார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர் கூறியதை இரகசியமாகச் சொன்னேன். இதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கோபப்பட்டார்கள்; (கோபத்தால்) அவர்களின் முகம் சிவந்துவிட்டது. அதை அவர்களிடம் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று நான் எண்ணினேன். பிறகு அவர்கள் "(இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆயினும்,அவர்கள் சகித்துக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 47 காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும்.
1920. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் "ஜிஃரானா" எனுமிடத்தில் ஒரு மனிதர் வந்தார். பிலால் (ரலி) அவர்களது ஆடையில் வெள்ளி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அள்ளி மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த மனிதர், "முஹம்மதே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்து கொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் நான் நஷ்டமடைந்துவிட்டேன்; இழப்பிற்குள்ளாகிவிட்டேன்" என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "என்னை விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் தலையைக் கொய்துவிடுகிறேன்" என்று சொன்னார்கள். அதற்கு "அல்லாஹ் காப்பாற்றுவானாக! நான் என் தோழர்களையே கொலை செய்கிறேன் என்று மக்கள் பேசுவார்கள். இதோ இவரும் இவருடைய தோழர்களும் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழியைத் தாண்டி (உள்ளத்திற்குள்) செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் போர்ச்செல்வங்களைப் பங்கிட்டார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 12
1921. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ (ரலி) மற்றும் பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அல்கைர் அத்தாயீ (ரலி) ஆகியோரே அந்நால்வரும்.
இதைக் கண்ட குறைஷி (முஸ்லிம்)கள் கோபமடைந்தனர். "நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்; எங்களை விட்டுவிடுகிறீர்களே!" என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தைத் தழுவியுள்ள) அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்" என்று கூறினார்கள்.
அப்போது அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் தடித்திருந்த, கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்திருந்த, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் வந்து, "முஹம்மதே! அல்லாஹ்விற்கு அஞ்சுவீராக!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானே (அல்லாஹ்விற்கு) மாறுசெய்தால் வேறெவர்தாம் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவ(ர்களைப் படைத்த இறைவ)ன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த மக்களில் ஒருவர் அவரைக் கொல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். (அனுமதி கேட்டவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்றே கருதப்படுகிறது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(வ்வாறு என்னிடம் பேசிய அ)ந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஆத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1922. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை யமனிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா பின் உலாஸா (ரலி); அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி).
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தாம்" என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன" என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த,அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?" என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்" என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், "எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறினார்கள்.
பின்னர் திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்" என்று கூறினார்கள். "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று கூறியதாகவும் நான் எண்ணுகிறேன்.
அத்தியாயம் : 12
1923. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(அல்கமா பின் உலாஸாவா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைலா என்ற ஐயப்பாடின்றி) அல்கமா பின் உலாஸா என்றே இடம்பெற்றுள்ளது. ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) அவர்களது பெயர் காணப்படவில்லை. மேலும் ("நெற்றி புடைத்த" என்பதைக் குறிக்க) "நாத்திஉல் ஜப்ஹா" எனும் சொற்றொடரே இடம்பெற்றுள்ளது. "நாஷிஸுல் ஜப்ஹா" எனும் சொற்றொடர் இல்லை.
மேலும், இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் வாள்" (என்று சொல்லப்பட்ட) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டு, "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக, அநாயசமாக ஓதுவார்கள்" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மேலும், "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் உமாரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1924. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தங்கக்கட்டியை நால்வரிடையே பங்கிட்டார்கள்: ஸைத் அல்கைர் (ரலி),அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (ரலி) மற்றும் அல்கமா பின் உலாஸா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) (ஆகியோரே அந்நால்வரும்)" என்று இடம்பெற்றுள்ளது.
மேலும், ("நெற்றி புடைத்த" என்பதைக் குறிக்க) "நாஷிஜுல் ஜப்ஹா" எனும் சொற்றொடரே இந்த அறிவிப்பிலும் ஆளப்பட்டுள்ளது.
இதில், "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர்" என்பதும் இடம்பெற்றுள்ளது. "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் (பூண்டோடு) அழித்துவிடுவேன்" எனும் குறிப்பு இந்த அறிவிப்பில் இல்லை.
அத்தியாயம் : 12
1925. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் அதாஉ பின் யசார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று "ஹரூரிய்யா"க்கள் (காரிஜிய்யாக்கள்) குறித்துக் கேட்டோம். "அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?" என்று வினவினோம். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "ஹரூரிய்யா"க்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், (பின்வருமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்:
இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் புறப்படுவர். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்தச் சமுதாயத்தைவிட்டும்" என்று கூறாததைக் கவனத்தில் கொள்க.) அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையை நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள். அவர்கள் (அதிகமாகக்) குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அம்பெய்தவர் (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனையையும், (அம்பில்) அதன் முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும் நாணையும் பார்ப்பார். (அவற்றில் அடையாளம் எதையும் காணமாட்டார்.) அம்பின் முனையில் நாணைப் பொருத்தும் இடத்தில் இரத்தம் படிந்துள்ளதா என்றுகூட அவர் சந்தேகப்படுவார்.
அத்தியாயம் : 12
1926. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("ஹவாஸின்") போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களின் அருகே நாங்கள் இருந்தோம். அப்போது "பனூ தமீம்" குலத்தைச் சேர்ந்த "துல்குவைஸிரா" எனும் மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நான் இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடுவேன்" என்று பதிலளித்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது விவகாரத்தில் எனக்கு அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களது நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டையை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான இரத்தக்குறி எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப் படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டு விட்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்புநிற மனிதராவார். அவருடைய இரு கை புஜங்களில் ஒன்று "பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்" அல்லது "துடிக்கும் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்". அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று சொன்னார்கள்.
நான் இந்த நபிமொழியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போர் புரிந்தார்கள்.அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அடையாளம் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன் என்றும் உறுதி கூறுகின்றேன்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1927. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரில் தோன்றவிருக்கின்ற ஒரு கூட்டத்தாரைப் பற்றிக் கூறுகையில், "அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள். மொட்டை போடுவ(தை பக்தி மார்க்கமாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் அவர்களின் அடையாளமாகும். "அவர்கள் தாம் படைப்பினங்களிலேயே தீயவர்கள்" அல்லது "படைப்பினங்களில் தீயவர்களில் உள்ளவர்களாவர்". இரண்டு பிரிவினர்களில் உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரிவினர் அவர்களை அழிப்பார்கள்" என்று கூறினார்கள். பிறகு அவர்களுக்கு உதாரணமாக ஒரு மனிதரைக் குறிப்பிட்டார்கள். "ஒருவர் வேட்டைப் பிராணியை நோக்கி அம்பை எய்துவிட்டு, அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (பிராணியின் உடலைத் துளைத்துவிட்டதற்கான) எந்த அடையாளத்தையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் அடிப்பாகக் குச்சியைப் பார்பபார். அதிலும் (பிராணியை வீழ்த்திவிட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் முனையில் நாணைப் பொருத்தப் பயன்படும் இடத்தைப் பார்ப்பார். அதிலும் (பிராணியைத் தாக்கி விட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார்" என்று கூறினார்கள்.
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இராக்வாசிகளே! நீங்கள்தாம் அவர்களைக் கொன்றொழித்தீர்கள்.
அத்தியாயம் : 12
1928. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1929. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தார் இரு பிரிவினராகி நிற்கும்போது, அவர்களிடையேயிருந்து (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். அவ்விரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் ஒரு சாரார் அவர்களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக்கொள்வர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1930. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் பிரிவினரே அவர்களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக் கொள்வர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1931. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரைப் பற்றி, பிரிவினை ஏற்படும் வேளையில் அவர்கள் தோன்றுவார்கள். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் பிரிவினரே அவர்களைக் கொன்றொழிப்பார்கள்" என்று குறிப்பிட்டதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 48 காரிஜிய்யாக்களைக் கொல்லுமாறு வந்துள்ள தூண்டல்.
1932. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது அவர்கள் சொல்லாததைப் புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் (ராஜதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. ஏனெனில்,) போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச்சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். குர்ஆனை ஓதுவார்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (இஸ்லாமிய ஆட்சியாளர்களே!) அவர்களை நீங்கள் எங்கு சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு, அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 12