1893. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) முதுமையை அடையும்போதும் அவனது இரு குணங்கள் மட்டும் இளமையாகவே இருக்கும்:
1. பொருளாசை. 2. (நீண்ட) ஆயுள்மீதுள்ள ஆசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இன்னும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 39 ஒரு மனிதனுக்கு இரு ஓடைகள் (நிறைய செல்வம்) இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் எதிர்பார்ப்பான்.
1894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். மனிதனின் வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(மேற்கண்டவாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (இந்த வாசகம் அல்லாஹ்விடமிருந்து) அருளப்பெற்ற இறைவசனமா, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்த பொன்மொழியா என்று எனக்குத் தெரியாது" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1895. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், (அதைப் போன்று) மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனது வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அத்தியாயம் : 12
1896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப்போன்ற மற்றொரு நீரோடை தனக்கு இருக்க வேண்டுமென்றே அவன் விரும்புவான். அவனது மனத்தை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா என்று எனக்குத் தெரியாது" என்று (மட்டும்) இடம்பெற்றுள்ளது. (இவ்வாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படவில்லை.
அத்தியாயம் : 12
1897. அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.)
அத்தியாயம் : 12
பாடம் : 40 வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று.
1898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 41 இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல்.
1899. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (சொற்பொழிவு மேடைமீது) நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்க(ளான கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர்வகை)களைத் தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பிறகு (அந்த மனிதரிடம்) "என்ன கேட்டீர்கள்?" என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே, நன்மை தீமையை உருவாக்குமா என்று கேட்டேன்" என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். ஆனால், இ(ந்தக் கவர்ச்சியான)து ஒரு நன்மையா? வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன; (அப்போதுதான் துளிர்விட்ட) பசும் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பசும் புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற்காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொள்கிறது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சாணமிடுகின்றது. அல்லது சிறுநீரை வெளியேற்றுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் மேய்ந்துவிட்டு வந்து) அசைபோடுகின்றது. பிறகு (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கிறது. (அவ்வாறுதான்) யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரகத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக்கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1900. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவன் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்கள் எவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) பூமியின் வளங்கள்(தாம் அவை)" என்று பதிலளித்தார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால் நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் கொண்டுசென்றுவிடுகின்றன; பசுமையான புல்லைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நோக்கி(ப் படுத்துக்கொண்டு) அசைபோடுகின்றது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சிறுநீரையும் வெளியேற்றி சாணமுமிடுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மீண்டும் சென்று மேய்கிறது.
இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் அதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் அதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று இருக்கிறார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1901. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் "எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும் அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட)நாங்கள் அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள். பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.
இந்த (உலகின்) செல்வம் இனிமையும் பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக்கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 42 சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு.
1902. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும், செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்டபோதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்துவிட்டபோது, "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 43 போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.
1903. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1904. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்குப் பசியைத் தணிக்கத் தேவையான உணவை வழங்குவாயாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 44 அருவருப்பாகப் பேசியும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியும் கேட்டவருக்கும் வழங்குவது.
1905. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலருக்குத் தானப்பொருட்களை) பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைவிட இவர்கள் அல்லாத மற்றவர்களே இ(ந்தப் பொருட்களைப் பெறுவ)தற்கு மிகவும் தகுதியுடையவர்கள்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர்கள் அருவருப்பாகப் பேசி, அல்லது என்னைக் கஞ்சன் என்று சொல்லி என்னிடம் கேட்கும் அளவிற்கு என்னைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். ஆனால், நான் கஞ்சன் அல்லன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1906. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரையுள்ள நஜ்ரான் (யமன்) நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை அடைந்து, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்தின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்துவிட்டிருந்ததை நான் கண்டேன். பிறகு அவர், "முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்" என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்கு நன்கொடை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு அந்தக் கிராமவாசி அந்தச் சால்வையை வேகமாக இழுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர்மீது கோபப்படாமல்) தமது நெஞ்சை அந்தக் கிராமவாசிக்கு நேராகத் திருப்பினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் வேகமாக இழுத்தபோது சால்வை (இரண்டாகக்) கிழிந்துவிட்டது. அதன் ஓர் ஓரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்திலேயே இருந்தது" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1907. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("கபா" எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரமா (ரலி) அவர்கள் (என்னிடம்), "அன்பு மகனே! (என்னோடு வா!) நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வோம்" என்று சொல்ல, அவர்களுடன் நான் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) "நீ உள்ளே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா" என்று சொன்னார்கள். நான் அவ்வாறே மக்ரமா (ரலி) அவர்களிடம் வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்ரமா (ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்" என்று சொன்னார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "மக்ரமா திருப்தி அடைந்து விட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1908. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு சில மேலங்கிகள் வந்தன. என்னிடம் என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், "(என்னோடு வா!) நாம் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்" என்று கூறினார்கள். என் தந்தை (நபியவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது குரலைப் புரிந்து கொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக்கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள் "உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்; உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 45 ஒருவரது இறைநம்பிக்கை (ஈமான்) குறித்து அஞ்சப்படும்போது அவருக்கு (பொருளாதார உதவிகள்) வழங்குதல்.
1909. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு குழுவினரிடையே அமர்ந்திருந்தபோது, அக்குழுவினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தர்மப் பொருட்களை) வழங்கினார்கள். ஆனால், அக்குழுவினரில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என நான் அறிவேன்" என்று இரகசியமாகக் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்" என்றார்கள். சிறிதுநேரம் நான் அமைதியாக இருந்தேன். பின்னர், நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்று (மீண்டும்) கூறினேன். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் என்று சொல்" என்றார்கள். சிறிதுநேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் என்று சொல்” நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால்,மற்றொருவர் இவரைவிட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையால் அவர் குற்றமேதும் இழைத்து, அதனால்) அவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சம்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹசன் பின் அலீ அல் ஹுல்வானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சஅத் (ரலி) அவர்கள் இரண்டு முறை அவ்வாறு கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (மூன்று முறை கேட்டு பதிலுரைத்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கழுத்திற்கும் தோளிற்கும் இடையில் அடித்து, "சஅதே! (என்னிடம் வழக்காடி) மோத வருகின்றீர்களா? நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்..." என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 46 இஸ்லாத்துடன் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கு வழங்குவதும்,இறைநம்பிக்கை வலுவாக உள்ளவர்கள் (விட்டுக்கொடுத்து) பொறுமை காப்பதும்.
1910. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு "ஹவாஸின்" குலத்தாரின் செல்வத்தை (போரின்றி வெற்றிப் பரிசாக) அளித்தபோது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) சில குறைஷியருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானர்கள். அப்போது அன்சாரிகளில் சிலர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக் கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டுவிடுகின்றார்களே!" என்று (கவலையுடன்) சொன்னார்கள்.
அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலாலான ஒரு கூடாரத்தில் ஒன்றுதிரட்டினார்கள். அவர்கள் ஒன்றுகூடியதும் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்க, அன்சாரிகளிலிருந்த விவரமானவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடைய (தலை)வர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர்தாம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!" என்று பேசிக்கொண்டனர்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக இஸ்லாத்தில் அசையாத நம்பிக்கையையும் ஒட்டுறவையும் ஏற்படுத்தி) அவர்களது உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலகச்செல்வங்களை எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத்திரும்புவதே சிறந்ததாகும்" என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டுசெல்வதையே) விரும்புகிறோம்" என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விரைவில் (உங்களைவிடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்" என்று சொன்னார்கள். அதற்கு அன்சாரிகள், "நாங்கள் பொறுமையாக இருப்போம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வங்களை வெற்றிப் பரிசாக அளித்தபோது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. ஆயினும், இறுதியில் "ஆனால், நாங்கள் பொறுமையாக இருக்கவில்லை" என்றே இடம் பெற்றுள்ளது. மேலும், "இளவயதுடைய மக்கள்" என்றுதான் இடம்பெற்றுள்ளது. (எங்களில் இளவயதுடைய மக்கள்" என்று இடம்பெறவில்லை.)
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் மேற்கண்ட (1910ஆவது) ஹதீஸில் உள்ளதைப் போன்றே "நாங்கள் பொறுமையாக இருப்போம்" என்று அன்சாரிகள் கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1911. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒன்றுதிரட்டி, "உங்களிடையே உங்களுடைய கூட்டத்தார் (அன்சாரிகள்) அல்லாத மற்றவர்கள் எவரேனும் (இங்கு வந்து) இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், "எங்கள் சகோதரி ஒருத்தியின் புதல்வர் ஒருவரைத் தவிர (மற்றவர்) வேறெவருமில்லை" என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு சமுதாயத்தாரின் சகோதரி புதல்வர் அவர்களைச் சேர்ந்தவரே!" என்று கூறிவிட்டு, "குறைஷியர் அறியாமைக் காலத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இப்போது தான் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். (அதனால்தான் அவர்களுக்குக் கொடுத்தேன்.) மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திருமபிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால் நான் அன்சாரிகளின் கணவாயிலேயே செல்வேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1912. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரிடையே போர்ச்செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகள் (சிலர்), "இந்த விஷயம் எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. எதிரிகளின் இரத்தம் எங்களின் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, எங்களுக்குச் சேரவேண்டிய போர்ச்செல்வங்கள் (புதிய முஸ்லிம்களான) குறைஷியரிடையே திருப்பிவிடப்படுகின்றன" என்று பேசிக்கொண்டனர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அன்சாரிகளை (ஒரு கூடாரத்தினுள்) ஒன்று திரட்டி, "உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள் "உங்களுக்கு எட்டியது உண்மைதான்" என்று பதிலளித்தனர். -அன்சாரிகள் பொய் பேசாதவர்களாய் இருந்தனர்- அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்கள் உலகச்செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்துசென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலேயே அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலேயே செல்வேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12