1275. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு எங்களிடையே (நீண்ட) உரையாற்றினார்கள். எந்த அளவிற்கென்றால் (வானில்) சூரியன் மறைந்து நட்சத்திரங்கள் தோன்றிவிட்டன. மக்கள் "தொழுகை, தொழுகை" என்று கூறலாயினர். அப்போது பனூதமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து (நின்ற இடத்தைவிட்டும்) நகராமல் இடையறாமல் தொடர்ந்து "தொழுகை தொழுகை" என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நீ எனக்கு நபிவழியைக் கற்றுத் தருகிறாயா, தாயற்றுப் போவாய்!" என்று (கடிந்து) கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்திலும் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்திலும் தொழுததை நான் பார்த்தேன்" என்று குறிப்பிட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு என் மனதில் இலேசான ஐயம் எழுந்தது. உடனே நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள்.
அத்தியாயம் : 6
1276. அப்துல்லாஹ் பின் ஷகீக் அல்உகைலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "தொழுகை(க்கு நேரமாகிவிட்டது)" என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் "தொழுகை(க்கு நேரமாகிவிட்டது)" என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் "தொழுகை(க்கு நேரமாகிவிட்டது)" என்று கூறினார். அப்போதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு "தாயற்றுப் போவாய்! எங்களுக்கே தொழுகைகளைக் கற்றுத் தருகிறாயா? நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுபவர்களாக இருந்தோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 7 தொழுது முடித்த பின் வலப் பக்கமும் திரும்பலாம்; இடப் பக்கமும் திரும்பலாம்.
1277. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தொழுது முடித்ததும்) வலப் பக்கம் திரும்புவதே கடமை என்று எண்ணிக்கொள்வதன் மூலம் உங்களில் எவரும் தம்மிடம் ஷைத்தானுக்குச் சிறிதும் இடமளித்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) பெரும்பாலும் தமது இடப் பக்கம் திரும்புவதையே நான் பார்த்திருக்கிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1278. சுத்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "நான் தொழுது முடித்ததும் எப்படித் திரும்ப வேண்டும்? என் வலப் பக்கத்திலா? அல்லது இடப் பக்கத்திலா?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "என்னைப் பொறுத்தவரை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) தமது வலப் பக்கம் திரும்புவதையே அதிகமாகக் கண்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1279. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) தமது வலப் பக்கம் திரும்புவார்கள்.
இதை சுத்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 8 இமாமுக்கு வலப் பக்கம் நிற்பது விரும்பத்தக்கதாகும்.
1280. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, "ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது "தஜ்மஉ") இபாதக்க" (இறைவா! உன் அடியார்களை "உயிர் கொடுத்து எழுப்பும்" (அல்லது ஒன்றுதிரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "எங்களை நோக்கித் திரும்புவார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
பாடம் : 9 முஅத்தின் (இகாமத் சொல்லத்) தொடங்கிவிட்டால் கூடுதலான (நஃபில்) தொழுகைகள் எதையும் ஆரம்பிப்பது விரும்பத்தக்கதன்று.
1281. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1282. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது இந்த ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். ஆனால், "இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அவர்கள் குறிப்பிடவில்லை.
அத்தியாயம் : 6
1283. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்;என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டோம். அவர், "உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்" என்று கூறினார்கள் என்றார்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் தந்தை மாலிக் அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள்.
அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல் ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகின்றேன்: இந்த ஹதீஸை அப்துல்லாஹ் தம் தந்தை மாலிக் அவர்களிடமிருந்து அறிவித்தார்கள் என்பது தவறாகும்.
அத்தியாயம் : 6
1284. இப்னு புஹைனா (அப்துல்லாஹ் பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது; அப்போது ஒரு மனிதர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுகொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்; முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), "சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 6
1285. அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகை (சுப்ஹுத்) தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்; பள்ளிவாசலின் ஒரு மூலையில் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும், "இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 10 பள்ளிவாசலுக்குள் நுழையும்போது என்ன சொல்ல வேண்டும்?
1286. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது "அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக" (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்; பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக" (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.
இதை அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகின்றேன்:
அறிவிப்பாளர் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை நான் அறிவிப்பாளர் சுலைமான் பின் பிலால் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் ஏட்டிலிருந்து எழுதினேன். அதில் சுலைமான் (ரஹ்) அவர்கள் "யஹ்யா அல்ஹிம்மானீ (ரஹ்) அவர்கள் "அபூஹுமைதும் அபூஉசைதும் அறிவித்தனர்" என்றே எனக்குச் செய்தி எட்டியது" என்று குறிப்பிட்டிருந்தார்கள். (அபூஹுமைத் (ரலி) அல்லது அபூஉசைத் (ரலி) அவர்கள் என்று ஐயப்பாட்டுடன் இடம்பெற வில்லை).
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 11 (பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும்) பள்ளிக் காணிக்கையாக இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத்தக்கதாகும்; அதைத் தொழுவதற்கு முன் அமர்வது விரும்பத்தகாதது ஆகும்; எல்லா நேரங்களிலும் அதைத் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.
1287. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்ததும் அமர்வதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1288. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே அமர்ந்திருந்தார்கள். எனவே, நானும் அமர்ந்துவிட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் அமருவதற்கு முன் ஏன் இரண்டு ரக்அத்கள் தொழவில்லை?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்களும் அமர்ந்திருந்தீர்கள்; மக்களும் அமர்ந்திருந்தார்கள் (எனவேதான் நானும் அமர்ந்துவிட்டேன்)" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1289. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. அதை அவர்கள் எனக்குத் தந்தார்கள்; மேலதிகமாகவும் தந்தார்கள். பள்ளிவாசலில் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் "இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 12 பயணத்திலிருந்து திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத்தக்கதாகும்.
1290. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள். அவர்கள் மதீனாவிற்குத் திரும்பியபோது, நான் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டுமென என்னைப் பணித்தார்கள்.
அத்தியாயம் : 6
1291. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்தபோது) எனது ஒட்டகம் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அது களைத்துப்போயிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு முன்னால் (மதீனா) சென்றுவிட்டார்கள். நான் காலை நேரத்தில் (மதீனாவிற்குச்) சென்று பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலின் நுழைவாயிலில் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இப்போதுதான் வருகிறீரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!" என்று கூறினார்கள். அவ்வாறே நான் சென்று (இரண்டு ரக்அத்கள்) தொழுதுவிட்டுப் பிறகு திரும்பினேன்.
அத்தியாயம் : 6
1292. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் சென்றால் முற்பகல் நேரத்தில்தான் (ஊர்) திரும்புவார்கள். அவ்வாறு திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு பள்ளிவாசலில் அமருவார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 13 முற்பகல் நேரத்தில் (ளுஹா) தொழுவது விரும்பத்தக்கதாகும்; அதில் குறைந்த பட்ச அளவு இரண்டு ரக்அத்களும், அதிக பட்சம் எட்டு ரக்அத்களும், நடுத்தர அளவு நான்கு அல்லது ஆறு ரக்அத்களுமாகும்; அதைப் பேணித் தொழுதுவருமாறு ஆர்வமூட்டப் பட்டுள்ளது.
1293. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் (ளுஹா) தொழுவார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை; அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தால் தவிர!" என்று கூறினார்கள்.
இதை சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1294. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் (ளுஹா) தொழுவார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை; அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தால் தவிர!" என்று கூறினார்கள்.
இதை கஹ்மஸ் பின் அல்ஹசன் அல்கைஸீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6