1235. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களும், அபூபக்ருக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்கள் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் (இரண்டு ரக்அத்களே தொழுதனர்). பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் (சுருக்கித் தொழாமல்) நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள் (மினாவில்) இமாமைப் பின்பற்றித் தொழுதால் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்; தனியாகத் தொழும்போது (சுருக்கி) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1236. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மினாவில், பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத்) தொழுதார்கள். (அவ்வாறே) அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (தொழுதார்கள்). உஸ்மான் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) "எட்டு ஆண்டுகள்" அல்லது "ஆறு ஆண்டுகள்" (அவ்வாறே தொழுதார்கள்).(இதன் அறிவிப்பாளரான) ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு தமது படுக்கைக்கு வருவார்கள். அப்போது அவர்களிடம் நான், "என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (கடமையான) இந்தத் தொழுகைக்குப் பின் (கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் என்ன!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் (அவ்வாறு) தொழுவதாயிருந்தால் கடமையான தொழுகையை (நான்கு ரக்அத்களாகவே) முழுமைப்படுத்தியிருப்பேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "மினாவில்" என்ற குறிப்பில்லை. மாறாக, "பயணத்தில் (அவ்வாறு) தொழுதார்கள்" என்றே காணப்படுகின்றது.
அத்தியாயம் : 6
1237. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் (இரண்டு ரக்அத்களாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே எங்களுக்குத் தொழுவித்தார்கள். இது பற்றி (அத்தொழுகையில் கலந்துகொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டபோது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்புபவர்களாய் உள்ளோம்) என்று கூறிவிட்டு, "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். இப்போது நான் (உஸ்மான் (ரலி) அவர்களுடன் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத்தால் போதுமே!" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1238. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்புடனும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1239. ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகத்) தொழுதேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அதிகமாக இருந்தார்கள்; அதாவது "விடைபெறும்" ஹஜ்ஜின்போது (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.
முஸ்லிம் (ஆகிய நான்) கூறுகின்றேன்: (இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாஈ (ரலி) அவர்கள் உபைதுல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஆவார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 3 மழை நேரத்தில் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளலாம்.
1240. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது "அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்" (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு "(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் "ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்" என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்" என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1241. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் குளிரும் காற்றும் மழையும் நிறைந்த ஓர் இரவில் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பின் இறுதியில் "ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்; இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிரோ மழையோ உள்ள இரவில் பயணம் செய்யும்போது தொழுகை அறிவிப்பாளரிடம் "நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்" என்று அறிவிக்குமாறு கட்டளையிடுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 6
1242. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்கு அருகிலுள்ள) "லஜ்னான்" எனும் மலைப் பகுதியில் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், "ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்" என இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு முறை அறிவித்தார்கள். இரண்டாம் முறை அறிவித்ததாக அதில் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 6
1243. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்த போது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1244. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்... அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் "ஹய்ய அலஸ் ஸலாஹ்" (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், "ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்" (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!" என்றார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள். ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்). நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1245. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "சகதியுடைய ஒரு (மழை) நாளில் எங்களுக்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள்..."என்று ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் ஜுமுஆ பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. "என்னைவிடச் சிறந்தவர் இவ்வாறு செய்தார்" என்பதற்குப் பின் "அதாவது நபி (ஸல்) அவர்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அதாவது நபி (ஸல்) அவர்கள்" எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1246. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், "மழை பெய்த ஒரு வெள்ளிக்கிழமை அன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய தொழுகை அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்தார்" என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "சேற்றிலும் சகதியிலும் நீங்கள் நடந்துவருவதை நான் விரும்பவில்லை" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1247. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் தொழுகை அறிவிப்பாளரிடம் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு கூறினார்கள். அது மழை பெய்த ஒரு வெள்ளிக்கிழமை... என்னைவிடச் சிறந்தவர் -அதாவது நபி (ஸல்) அவர்கள்- இவ்வாறு செய்தார்கள்.
அத்தியாயம் : 6
1248. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மழை பெய்த வெள்ளிக்கிழமை அன்று இப்னு இப்பாஸ் (ரலி) அவர்கள் தம் தொழுகை அறிவிப்பாளரிடம் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியேற்கவில்லை என வுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 4 பயணத்தில் வாகனத்திலிருப்பவர், வாகனம் செல்லும் திசையில் கூடுதலான (நஃபில்) தொழுகைகளைத் தொழலாம்.
1249. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (ஒட்டகத்தின் மீதமர்ந்தவாறு) ஒட்டகம் செல்லும் திசையை நோக்கிக் கூடுதலான (நஃபில்) தொழுகை தொழுபவர்களாக இருந்தார்கள்.
அத்தியாயம் : 6
1250. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்து, அது செல்லும் திசையை நோக்கித் தொழுதுவந்தார்கள்.
அத்தியாயம் : 6
1251. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்" எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 6
1252. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல்லாஹ் பின் அல்முபாரக் மற்றும் இப்னு அபீசாயிதா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், "பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்" (2:115) எனும் வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு,இது தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1253. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுதையில் இருந்தவாறு தொழுவதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கைபரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 6
1254. சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஓர் இரவில்) மக்கா செல்லும் சாலையில் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து நான் அஞ்சியபோது (எனது வாகனத்திலிருந்து) இறங்கி "வித்ர்” தொழுதேன். பிறகு அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், "(இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர்?" என்று கேட்டார்கள். நான் "சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து அஞ்சினேன். எனவே (வாகனத்திலிருந்து) இறங்கி "வித்ர்” தொழுதேன்" என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம் (உள்ளது), அல்லாஹ்வின் மீதாணையாக!" என்றேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ர் தொழுதிருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6