101. இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.
அதில் (ஹதீஸில் இடம்பெற்றுள்ள மூன்று விஷயங்களுடன்) “மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிப்பவன் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிப்பதில்லை “என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.” “மக்களின் மதிப்பு மிக்க செல்வம்“ எனும் வாசகத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து சயீத் பின் முஸய்யப் (ரஹ்),அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்(ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள இதைப் போன்ற ஹதீஸில் “கொள்ளையடித்தல்“ தொடர்பான தகவலைத் தவிர மற்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 1
102. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் கொள்ளையடித்தல் பற்றி இடம்பெற்றுள்ளது. “மதிப்பு மிக்க செல்வத்தை“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
103. மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
மற்றோர் அறிவிப்பில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களது மேற்கண்ட ஹதீஸைப் போன்ற எல்லாம் இடம்பெற்றுள்ளது.
ஆயினும் அல்அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்),ஸஃப்வான் பின் சுலைம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்க (கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்) “ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
ஹம்மான் பின் முஅப்பிஹ் (ரஹ்) அவர்கல் தமது அறிவிப்பில் “ இறைநம்பிக்கையாளர்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் அதை கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான் “என்று அறிவித்துள்ளார்கள்.மேலும், “மோசடி செய்பவன் செய்யும் போது அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை.(இவற்றிலிருந்து விலகிக் கொள்ளுமாறு) உங்களை நான் எச்சரிக்கிறேன்;உங்களை எச்சரிக்கிறேன்” “ என்றும் (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கல் என) அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
104. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரியும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்.(திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.(மது அருந்துகின்றவன்) மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான்.மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரல் பின்னர்தான் ஏற்படுகிறது.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
105. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம்:25 நயவஞ்சகனின் குணங்கள்.
106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார்.எவரிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டுவிடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
பேசினால் பொய் சொல்வதும்,ஒப்பந்தம் செய்து கொண்டால் (நம்பிக்கை) மோசடி செய்வதும்,வாக்களித்தால் மாறுசெய்வதும்,வழக்காடினால் நேர்மை தவறுவது தான் அவை (நான்கும்).
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இவற்றில் ஏதேனும் ஒரு குணம் அவரிடம் இருந்தால் நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவரிடம் இருக்கிறது“ என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்:அவன் பேசும்போது பொய் உரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று குணங்கள் நயவஞ்சகனின் அடையாளங்களில் அடங்கும்: பேசும்போது பொய் உரைப்பதும்,வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வதும், நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வதும்தான் அவை (மூன்றும்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
109. மேற்கண்ட அறிவிப்பாளர் தொடர் வழியாகவே யஹ்யா பின் முஹம்மத் (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.
அதில் நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்...அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் சரியே“ என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
110. வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 26 தம் சகோதர முஸ்லிமை நோக்கி “இறைமறுப்பாளனே!“ (காஃபிர்) என்று அழைத்தவரது இறைநம்பிக்கையின் நிலை.
111. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை “இறைமறுப்பாளர்“ (காஃபிர்) என்று கூறினால் நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்,
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து "இறைமறுப்பாளனே!" ("காஃபிரே!") என்று அழைக்கின்றாரோ நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அவர் சொன்ன சொல் அவரை நோக்கியே திரும்புகிறது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் தந்தை அல்லாத(ஒரு)வரை, அவர் தன் தந்தையல்ல என்று விவரம் அறிந்துகொண்டே "அவர்தாம் என் தந்தை" என்று கூறும் ஒரு மனிதன் நன்றி கெட்டவன் (காஃபிர்) ஆகிவிட்டான். தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைக் குறித்து "அது தனக்குரியதுதான்" என்று கூறிக்கொள்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும். ஒருவர் மற்றொரு (முஸ்லிமான) மனிதரை "இறைமறுப்பாளர்" என்றோ "அல்லாஹ்வின் எதிரியே!" என்றோ அழைத்தால் -அவர் (உண்மையில்) அவ்வாறு (இறை மறுப்பாளராக) இல்லையாயின்- சொன்னவரை நோக்கியே அச்சொல் திரும்பிவிடுகின்றது.
இதை அபூதர் (ஜுன்துப் பின் ஜுனாதா-ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 27 தெரிந்துகொண்டே தன் தந்தையை வெறுத்து (வேறொருவரை தன் தந்தை என்று கூறி)விடுகின்றவனது இறை நம்பிக்கையின் நிலை.
113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறொருவரைத் தம் தந்தை என்று கூறி)விடுகின்றாரோ அவர் நன்றி கொன்றவர் (காஃபிர்) ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
114. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸியாத் பின் உபைத் அஸ்ஸகஃபீ என்பார் (அபூசுஃப்யான் (ரலி) அவர்களுடைய புதல்வர் என்று) அழைக்கப்பட்டபோது, நான் அபூபக்ரா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் "ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்? சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் "யார் இஸ்லாத்தில் தம் தந்தையல்லாத வேறொருவரை -அவர் தம் தந்தையல்ல என்று தெரிந்துகொண்டே- தம் தந்தை என்று கூறுகின்றாரோ அவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற என் காதுகளால் கேட்டேன் எனக் கூறியுள்ளார்களே!" என்று சொன்னேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் "நானும் இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
115. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் "யார் தம் தந்தையல்லாத ஒருவரை (அவர் தம் தந்தை அல்ல என்பதை அறிந்துகொண்டே) தந்தை என்று கூறுவாரோ அவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறியதைத் தம் காதுகள் செவியேற்றதாகவும், மனம் நினைவில் நிறுத்திக்கொண்டதாகவும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அபூபக்ரா (ரலி) ஆகியோர் கூறினர்.
அத்தியாயம் : 1
பாடம் : 28 "ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது இறைமறுப்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற பாவச்செயல்) ஆகும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் "இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிப்பதை நீங்கள் செவியேற்றீர்களா?" என்று கேட்டேன். அபூவாயில் (ரஹ்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள்.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அபூவாயில் (ரஹ்) அவர்களிடம் ஸுபைத் (ரஹ்) அவர்கள் (மேற்கண்டவாறு) கேட்டது பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 1
117. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 29 "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்.
118. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜின்போது (உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்!" என்று கூறிவிட்டு, "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
119. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
120. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (உரையாற்றுகையில்), "உங்களுக்கு அழிவு தான் (வைஹக்கும்)" அல்லது "உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)". எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1