752. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் மனைவியர் உங்களிடம் பள்ளிவாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவர்களைத் தடுப்போம் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கள். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதே இல்லை. பிறகு அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உனக்கு அறிவிக்கிறேன். ஆனால், நீயோ அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறுகிறாயே? என்றார்கள்.
அத்தியாயம் : 4
753. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் அடியார்க(ளான பெண்க)ள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
754. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அத்தியாயம் : 4
755. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் இரவில் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர்,பெண்களை வெளியே செல்ல நாங்கள் விடமாட்டோம். (அவர்கள் வெளியே செல்ல) இதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறேன். ஆனால், நீ அவர்களை நாங்கள் விடமாட்டோம் என்று கூறுகிறாயா?என்று கூறி, தம் புதல்வரைக் கண்டித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
756. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல நீங்கள் அனுமதியளியுங்கள் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அப்போது அவர்களுடைய புதல்வர் வாகித் (ரஹ்) அவர்கள் அவ்வாறு அனுமதி கொடுத்தால் அவர்கள் அதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் புதல்வருடைய நெஞ்சில் அடித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை உனக்கு அறிவிக்கிறேன்; ஆனால் நீ முடியாது என்று கூறுகிறாயே என்று (கடிந்து) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
757. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தபோது அவர்களுடைய புதல்வர் பிலால் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் கூறுகிறேன்; ஆனால், நீயோ அவர்களைத் தடுப்போம் என்று கூறுகிறாயே! என்று (கண்டித்துக்) கூறினார்கள்.
அத்தியாயம் : 4
758. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.
இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
759. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது;
நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
அத்தியாயம் : 4
760. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
761. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இன்று) பெண்கள் உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருப்பார்களேயானால் பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டதைப் போன்று இவர்களையும் தடுத்திருப்பார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு அம்ரா (ரஹ்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 31 சப்தமிட்டு (குர்ஆன்) ஓதப்படும் தொழுகைகளில், சப்தமிட்டு ஓதுவதால் இடையூறு ஏற்படும் என்ற அச்சமிருந்தால், (ஒரேயடியாகக்) குரலை உயர்த்தாமலும் (ஒரேயடியாகக்) குரலைத் தாழ்த்தாமலும் நடுநிலையாக ஓத வேண்டும்.
762. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் எனும் (17:110ஆவது) இறைவசனம் தொடர்பாகப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் தலைமறைவாக இருந்துவந்தார்கள். அப்போது தம் தோழர்களுடன் தொழும் வேளையில் சப்தமிட்டுக் குர்ஆனை ஓதிவந்தார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிட்டால், குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் அவர்கள் ஏசுவார்கள். ஆகவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ் தன் நபியிடம் நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தாதீர்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் ஓதுவதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடுவார்கள். (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களைவிட்டு ஒரேடியாக மறைத்துவிடாதீர்கள்; அவர்களது செவிக்கு எட்டுமாறு ஓதுங்கள். அதிகமாகச் சப்தமிட்டு ஓதாதீர்கள். இவ்விரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கைகொள்ளுங்கள் என்று கூறினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
763. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் எனும் (17:110ஆவது) இறைவசனம், பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றதாகும்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்கள் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 32 குர்ஆன் ஓதப்படும்போது காது தாழ்த்திக் கேட்க வேண்டும்.
764. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) இந்த வேதஅறிவிப்பை அவசரம் அவசராமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வேதஅறிவிப்பு (வஹீ) கொண்டுவரும் போது நபி (ஸல்) அவர்கள் தம் நாவையும் இதழ்களையும் (எங்கே இறைவசனங்கள் மறந்துவிடப் போகின்றனவோ என்ற அச்சத்தால் மனனமிடுவதற்காக) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. இது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே அல்லாஹ், (நபியே!) இந்த வேதஅறிவிப்பை அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் எனும் (75:16,17) வசனங்களை அருளினான்.
அதாவது உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும் என்று இறைவன் கூறினான். மேலும் நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் எனும் (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது நாம் (வானவர் மூலம் வேதவசனங்களை) அருளும்போது, அதைக் கவனத்துடன் கேளுங்கள் என்று கூறினான். பின்னர் அதை விளக்குவதும் எமது பொறுப்பாகும் எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது உங்கள் நாவினால் அதை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும் என்று கூறினான்.
(இந்த வசனங்கள் அருளப்பெற்ற) பின்னர் தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு) வரும்போது நபி (ஸல்) அவர்கள் தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை அமைதியாகக்) கேட்டுக் கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும்போது அல்லாஹ் வாக்களித்தபடி நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
765. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) இந்த வேதஅறிவிப்பை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
(வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வேதஅறிவிப்பு (வஹீ) கொண்டு வரும்போது) நபி (ஸல்) அவர்கள் தம் இதழ்களை, (எங்கே இறைவசனங்கள் மறந்துவிடப் போகின்றனவோ என்ற அச்சத்தால் மனனமிடுவதற்காக) அசைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் சிரமத்தை அனுபவித்தார்கள்.
-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இதழ்களை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன் என்று என்னிடம் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் மூசா பின் அபீஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் இதழ்களை அசைத்ததைப் போன்று நான் உங்களுக்கு அசைத்துக் காட்டுகிறேன் என்று சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, (அவ்வாறே) அசைத்துக் காட்டினார்கள்.
தொடர்ந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் தம் இதழ்களை அசைத்துக்கொண்டிருந்தபோது) அல்லாஹ் இந்த வேதஅறிவிப்பை அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் எனும் (75:16, 17) வசனங்களை அருளினான். அதாவது, உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வதும் (எமது பொறுப்பாகும்) என்று இறைவன் கூறினான்.
மேலும், நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் எனும் (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதைக் கவனத்துடனும் அமைதியாகவும் கேளுங்கள். பின்னர் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் என்று கூறினான்.
(இவ்வசனங்கள் அருளப்பெற்ற பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு) வரும்போது நபி (ஸல்) அவர்கள் கவனத்துடன் கேட்பார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வசனங்களை அருளிவிட்டுச்) சென்றுவிடும்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிக் காட்டியபடி அவற்றை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 33 சுப்ஹுத் தொழுகையில் (நபி (ஸல்) அவர்கள்) சப்தமிட்டுக் குர்ஆன் ஓதியதும் ஜின்களுக்கு ஓதிக் காட்டியதும்.
766. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(க் குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை. (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப் பட்டுவிட்டது. மேலும், (வானுலகச் செய்திகளை ஒட்டுக்கேட்கச் செல்லும்) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் (எரிகற்கள்) ஏவிவிடப்பட்டிருந்தன. ஷைத்தான்கள் தம் கூட்டத்தாரிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல் வெறுமனே) திரும்பியபோது உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கூட்டத்தார் கேட்டார்கள். அதற்கு ஷைத்தான்கள் நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது; மேலும், எங்கள்மீது தீப்பந்தங்கள் ஏவப்பட்டன என்று கூறினர். ஏதேனும் புதியதொரு நிகழ்ச்சி ஏற்பட்டதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்று, நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றார்கள். அவ்வாறே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை,மேல்திசை எங்கும் விரவிச் சென்றார்கள். அவர்களில் ஒரு குழுவினர் திஹாமா எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். உக்காழ் சந்தைக்குச் செல்லும் வழியில் நக்ல் எனுமிடத்தில் அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகை தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை ஷைத்தான்கள் செவியுற்றபோது நமக்கும் வானுலகச் செய்திக்கும் இடையே தடையாக இருப்பது இதுதான் என்று கூறிக்கொண்டு,தங்கள் கூட்டத்தாரிடம் திரும்பினர். அவர்களிடம், எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, அதை நாங்கள் நம்பினோம். நாங்கள் (இனி) ஒருபோதும் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம் என்று கூறினர். இதையடுத்து அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நிச்சயமாக ஜின்களில் சிலர் (குர்ஆனைச்) செவியேற்றனர் என எனக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக! எனும் (72:1ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 4
767. ஆமிர் பின் ஷரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அல்கமா (ரஹ்) அவர்களிடம், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அல்கமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உங்களில் யாராவது இருந்தீர்களா? என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: இல்லை; ஆனால், ஒரு நாள் இரவு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது திடீரென அவர்களைக் காணவில்லை. எனவே, பள்ளத்தாக்குகளிலும் மலைக் கணவாய்களிலும் அவர்களைத் தேடிப்பார்த்தோம். (அவர்கள் அங்கு கிடைக்காமல் போகவே) ஜின் அவர்களைத் தூக்கிச் சென்றிருக்கும்; அல்லது மர்மமான முறையில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று நாங்கள் பேசிக் கொண்டோம். பின்னர் அன்றைய மோசமான இரவை (ஒரு வழியாக)க் கழித்தோம்.
அதிகாலையில் நபி (ஸல்) அவர்கள் ஹிரா மலைக்குன்றின் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் காணாமல் நாங்கள் தேடினோம். நீங்கள் கிடைக்காமல்போகவே அந்த மோசமான இரவை (ஒருவாறு) கழித்தோம் என்று கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஜின்களில் ஒருவர் என்னை அழைக்க வந்தார். எனவே அவருடன் சென்று ஜின்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினேன் என்று கூறினார்கள். பிறகு எங்களை அழைத்துச் சென்று ஜின்கள் விட்டுச்சென்ற அடையாளங்களையும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் காட்டினார்கள். ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும் என்று கூறினார்கள்.பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் என்பது வரை இடம்பெற்றுள்ளது.
-ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் (தங்களது) உணவு குறித்து ஜின்கள் வினவினர். அவர்கள் (அரபு) தீபகற்பத்தைச் சேர்ந்த ஜின்கள் ஆவர்.
அத்தியாயம் : 4
768. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ்,மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அந்த அறிவிப்பிலும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் என்பது வரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
769. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருக்கவில்லை. அவர்களுடன் நான் இருந்திருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அத்தியாயம் : 4
770. அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்களும் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்? என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 34 லுஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல்.
771. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தும்போது லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தையும் (அதனுடன் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓர் அத்தியாயம் என) இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்கள் காதில் விழும் அளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். லுஹ்ர் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீளமாகவும், இரண்டாவது ரக்அத்தில் (அதைவிடக்) குறைவாகவும் ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4