681. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான் என்று தீர்மானித்துவிட்டான் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 17 (தொழுகையின் இறுதி அமர்வில்) அத்தஹிய்யாத்திற்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் ஓதுவது.
682. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களுடைய அவையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்கள்மீது ஸலவாத் கூறும்படி அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். எனவே, உங்கள்மீது நாங்கள் ஸலவாத் கூறும் முறை யாது? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) அமைதியாக இருந்தார்கள். அதனால் அவர்களிடம் அவர் (இதைக்) கேட்காமலிருந்திருக்க வேண்டும் என்றுகூட நாங்கள் எண்ணினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு ஸலவாத்) கூறும்படி சொன்னார்கள்:
அல்லாஹும்ம, ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம,வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் அளித்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சமளிப்பாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.)
பிறகு (எனக்கு) சலாம் சொல்லும் முறை, நீங்கள் (ஏற்கெனவே) அறிந்துவைத்திருப்பதைப் போன்றுதான் என்று அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 4
683. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது (அவர்களிடம்) நாங்கள், (அல்லாஹ்வின் தூதரே!) உங்களுக்கு நாங்கள் எப்படி சலாம் கூற வேண்டுமென அறிந்திருக்கின்றோம். ஆனால்,உங்கள்மீது நாங்கள் எப்படி ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்டோம். அப்போது அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம, பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
684. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 4
685. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், வ பாரிக் அலா முஹம்மதின் (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நீ சுபிட்சம் வழங்குவாயாக!) என்று (மட்டுமே) இடம்பெற்றுள்ளது. (அதன் ஆரம்பத்தில்) அல்லாஹும்ம (இறைவா!) என்பது இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 4
686. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள்மீது எப்படி ஸலவாத் கூற வேண்டும்?என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி, வ துர்ரியத்திஹி, கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி, கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம. இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
687. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 18 (தொழுகையில்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து கூறுவதும் ஆமீன் கூறுவதும்.
688. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாம், சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறும்போது நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று கூறுங்கள். எவருடைய இந்த வார்த்தை வானவர்களின் வார்த்தைக்கு (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் கருத்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம், (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதி முடித்து) ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில்,எவருடைய ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்.
அத்தியாயம் : 4
690. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னுஷிஹாப் (ரஹ்) அவர்களது கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
691. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் உங்களில் ஒருவர் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, அவற்றில் ஒன்று மற்றொன்றுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
692. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) உங்களில் ஒருவர் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, அவற்றில் ஒன்று மற்றொன்றுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
693. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓதக்கூடியவர்(இமாம்), ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று கூறும் போது, அவருக்குப் பின்னால் நிற்பவர் ஆமீன் கூறி, அவர் கூறும் ஆமீன், வானத்திலுள்ள (வான)வர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 19 இமாமை மஃமூம் பின்தொடர்தல்.
694. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே, நாங்கள் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே அவர்கள் எங்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்தவாறே தொழுதோம். அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தாச் செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் (குனிந்து நிமிரும்போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறினால் நீங்கள் ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். அவர் அமர்ந்தவாறு தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தவாறே தொழுங்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
695. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களுக்குச் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. பின்னர் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழவைத்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 4
696. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அனஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப்பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாகவும், மேலும் மேற்கண்ட ஹதீஸ்களிலுள்ள மற்றக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாகவும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
697. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களுடைய வலப்பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று காணப்படுகிறது. மேலும், இந்த அறிவிப்பில் இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவு)ம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
698. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் நபி (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் அவர்களது வலப்பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில், மேற்கண்ட அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள (இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் எனும்) அதிகப்படியான குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
699. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்தனர். அப்போது (தொழுகை நேரம் வந்துவிடவே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடி தொழுவித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றவாறு தொழுதனர். உடனே உட்கார்ந்து தொழுமாறு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இமாம் பின்பற்றப் படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் குனிந்(து ருகூஉசெய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் உட்கார்ந்தவாறு தொழுதால் நீங்களும் உட்கார்ந்தவாறே தொழுங்கள் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
700. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4