பாடம் : 16 தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது.
672. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து தொழுகையில் (அமர்வில்) அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலா ஃபுலான் (அல்லாஹ்வுக்குச் சாந்தி உண்டாகட்டும்: இன்னாருக்குச் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறிவந்தோம். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம்,நிச்சயமாக அல்லாஹ்வே சலாம் (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையி(ன் இருப்பி)ல் அமர்ந்தால் அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல்,செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்!) என்று கூறுங்கள். இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள நல்லடியார்கள் அனைவருக்கும் சலாம் கூறியதாகும். மேலும், அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறுங்கள். பிறகு நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
673. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில் பிறகு நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
674. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பிறகு நீங்கள் நாடியவற்றை அல்லது நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
675. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்திருந்தால் என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. (அதன் இறுதியில்) பிறகு நீங்கள் (விரும்பிய) பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
676. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு கைகளுக்கிடையே எனது கை இருந்த நிலையில் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள்
மற்ற அறிவிப்பாளர்கள் அத்தஹிய்யாத் (ஓதும் விதத்)தை அறிவித்திருப்பதைப் போன்றே இந்த ஹதீஸின் அறிவிப்பாளரும் அறிவித்துள்ளார்.
அத்தியாயம் : 4
677. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் அத்தியாயம் ஒன்றைக் கற்றுத் தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எங்களுக்கு (பின்வருமாறு) கற்றுத்தந்தார்கள்:
அத்தஹிய்யாத்துல் முபாரக்காத்துஸ் ஸலவாத்துத் தய்யிபாத்து லில்லாஹி. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.
(பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் சுபிட்சங்களும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிகிறேன்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் குர்ஆனைக் கற்பிப்பதைப் போன்று என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
678. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகை இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எங்களுக்குக் கற்றுத் தருவார்கள்.
அத்தியாயம் : 4
679. ஹித்தான் பின் அப்தில்லாஹ் அர்ரகாஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமுசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களுடன் ஒரு தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தபோது ஒரு மனிதர் உகிர்ரத்திஸ் ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி (நன்மை,தானதருமம் ஆகியவற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டுவிட்டது) என்று கூறினார். அபூமூசா (ரலி) அவர்கள் தொழுகையை முடித்து சலாம் கொடுத்துத் திரும்பியதும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். மீண்டும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போதும் மக்கள் அமைதியாயிருந்தனர். பிறகு அவர்கள் (என்னிடம்), ஹித்தான்! நீங்கள்தாம் அதைக் கூறியிருக்க வேண்டும் என்று சொல்ல, அதை நான் கூறவில்லை. அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு என்னைக் கண்டிப்பீர்களென பயந்துவிட்டேன் என்றேன் நான். அப்போது மக்களில் ஒருவர் நான்தான் அவ்வாறு கூறினேன்.அதன் மூலம் நல்லதையே நாடினேன் என்று சொன்னார். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களுடைய தொழுகையி(ல் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றினார்கள். (அதில்) நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக்கொடுத்தார்கள்.
அப்போது அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு(தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். எனவே, இது (இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉச் செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், அவர் (இமாம்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான்.
மேலும், அவர் (இமாம்) தக்பீர் கூறி சஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி சஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் சஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் சஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் சஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு சஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய சஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு.
(பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் பாராட்டுகளும் வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.)
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
680. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் அவர் (இமாம்) ஓத ஆரம்பித்தால் நீங்கள் வாய்மூடி இருங்கள் என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான் எனும் வாசகம் அபூஅவானா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகாமில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் தகவலில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் பின் உக்தி அபிந் நஸ்ர் (ரஹ்) அவர்கள் அவர் (இமாம்) ஓத ஆரம்பித்தால் நீங்கள் வாய்மூடி இருங்கள் என்ற இந்த ஹதீஸ் தொடர்பாகக் கடுமையாக விமர்சித்தார்கள். அப்போது முஸ்லிம் (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் வரக்கூடிய) சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்களைவிடச் சிறந்த நினைவாற்றல் உள்ள ஒருவரை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் இருக்கிறதே! என்று பதிலளித்தார்கள். அப்போது முஸ்லிம் (ரஹ்) அவர்கள், அந்த ஹதீஸ் சரியானதுதான்; என்னிடம் ஏற்கப்பட்டது தான் என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரஹ்) அவர்கள், அப்படியானால் அவர்கள் அறிவித்த ஹதீஸை நீங்கள் ஏன் இடம்பெறச் செய்யவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு முஸ்லிம் (ரஹ்) அவர்கள் என்னிடம் சரியானதாக உள்ள எல்லா ஹதீஸையும் நான் இதில் இடம்பெறச்செய்து விடுவதில்லை; (என் பார்வையில்) ஒருமித்தக் கருத்துப்படி சரியாக உள்ள ஹதீஸையே இங்கு இடம்பெறச் செய்துள்ளேன் என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 4
681. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான் என்று தீர்மானித்துவிட்டான் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 17 (தொழுகையின் இறுதி அமர்வில்) அத்தஹிய்யாத்திற்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் ஓதுவது.
682. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களுடைய அவையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்கள்மீது ஸலவாத் கூறும்படி அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். எனவே, உங்கள்மீது நாங்கள் ஸலவாத் கூறும் முறை யாது? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) அமைதியாக இருந்தார்கள். அதனால் அவர்களிடம் அவர் (இதைக்) கேட்காமலிருந்திருக்க வேண்டும் என்றுகூட நாங்கள் எண்ணினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு ஸலவாத்) கூறும்படி சொன்னார்கள்:
அல்லாஹும்ம, ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம,வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் அளித்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சமளிப்பாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.)
பிறகு (எனக்கு) சலாம் சொல்லும் முறை, நீங்கள் (ஏற்கெனவே) அறிந்துவைத்திருப்பதைப் போன்றுதான் என்று அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 4
683. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது (அவர்களிடம்) நாங்கள், (அல்லாஹ்வின் தூதரே!) உங்களுக்கு நாங்கள் எப்படி சலாம் கூற வேண்டுமென அறிந்திருக்கின்றோம். ஆனால்,உங்கள்மீது நாங்கள் எப்படி ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்டோம். அப்போது அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம, பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
684. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 4
685. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், வ பாரிக் அலா முஹம்மதின் (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நீ சுபிட்சம் வழங்குவாயாக!) என்று (மட்டுமே) இடம்பெற்றுள்ளது. (அதன் ஆரம்பத்தில்) அல்லாஹும்ம (இறைவா!) என்பது இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 4
686. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள்மீது எப்படி ஸலவாத் கூற வேண்டும்?என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி, வ துர்ரியத்திஹி, கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி, கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம. இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
687. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 18 (தொழுகையில்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து கூறுவதும் ஆமீன் கூறுவதும்.
688. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாம், சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறும்போது நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று கூறுங்கள். எவருடைய இந்த வார்த்தை வானவர்களின் வார்த்தைக்கு (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் கருத்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம், (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதி முடித்து) ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில்,எவருடைய ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்.
அத்தியாயம் : 4
690. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னுஷிஹாப் (ரஹ்) அவர்களது கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
691. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் உங்களில் ஒருவர் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, அவற்றில் ஒன்று மற்றொன்றுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4