பாடம் : 1 உலகப் பற்றின்மையும் தத்துவங்களும்.
5663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5664. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) "ஆலியா"வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, "உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?" என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல் வஹ்ஹாப் அஸ் ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இந்த ஆடு உயிருடனிருந்தால்கூட அதன் காதுகள் சிறுத்திருப்பதன் காரணமாகக் குறையுள்ளதாகவே இருக்கும்" என்று மக்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5665. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது" என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.
அப்போது அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்" என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 53
5666. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியான், "என் செல்வம்; என் செல்வம்" என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5667. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:
இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5668. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் கலந்துகொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, "ஜிஸ்யா" (காப்பு)வரி வசூலித்துக் கொண்டுவரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.
அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, "அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்" என்றார்கள்.
அதற்கு அன்சாரிகள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். "அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை.
ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச்செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அழித்துவிடுமோ" என்பதற்குப் பகரமாக) "அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் திருப்பி விடுமோ" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5669. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பாரசீகர்களும் ரோமர்களும் உங்களால் வெற்றி கொள்ளப்படும்போது, நீங்கள் எத்தகைய மக்களாய் இருப்பீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு என்ன கட்டளையிட்டுள்ளானோ (அதன்படியே நடந்துகொள்வோம்) அதன்படியே கூறுவோம் (அதாவது நன்றி கூறி அவனைப் போற்றுவோம்)" என்று விடையளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறொன்றும் செய்யமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். பின்னர் "நீங்கள் ஒருவருக்கொருவர் (சுயநலத்துடன்) போட்டி போட்டுக் கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் குரோதம் கொள்வீர்கள். அல்லது இவற்றைப் போன்றதைச் செய்வீர்கள்" என்று கூறிவிட்டு, "பிறகு ஏழை முஹாஜிர்களை நோக்கிச் சென்று, அவர்களில் சிலருக்குச் சிலர்மீது அதிகாரத்தை வழங்குவீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 53
5670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே அவற்றில் தம்மைவிடக் கீழிருப்பவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5671. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களுக்கு அல்லாஹ் புரிந்திருக்கும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5672. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.
அந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்க அவர், "நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் காரணமான இ(ந்த நோயான)து என்னைவிட்டு விலக வேண்டும்" என்று சொன்னார்.
உடனே அவ்வானவர் (இறைநாட்டப்படி) அவரைத் தம் கைகளால் தடவ அந்த அருவருப்பான நோய் அவரைவிட்டு விலகியது. மேலும், அவருக்கு நல்ல நிறமும் நல்ல தோலும் வழங்கப்பட்டன. பிறகு அவ்வானவர், "செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்க, அவர், "ஒட்டகம்தான்" என்றோ அல்லது "பசு மாடுதான்" என்றோ பதிலளித்தார்.
-தொழுநோயாளி மற்றும் வழுக்கைத் தலையர் ஆகிய இருவரில் ஒருவர் ஒட்டகம் என்றோ பசுமாடு என்றோ கூறினார் என இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.-
ஆகவே, பத்து மாத சினையுள்ள ஒட்டகம் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வானவர், "இதில் உனக்கு இறைவன் வளம் (பரக்கத்) வழங்குவானாக!" என்று பிரார்த்தித்தார்.
அடுத்து அந்த வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்று, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அவர் அழகான முடிதான். மக்கள் வெறுக்கும் இந்த வழுக்கை என்னைவிட்டு நீங்க வேண்டும்" என்றார்.
உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவினார்; வழுக்கை மறைந்தது; அழகிய முடியைப் பெற்றார். அவ்வானவர், "செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அவர், "பசுமாடுதான் (எனக்கு மிகவும் விருப்பமான செல்வம்)" என்று சொன்னார். உடனே அவ்வானவர் அந்த வழுக்கைத் தலையருக்குச் சினையுற்ற பசுமாடு ஒன்றைக் கொடுத்து, "அல்லாஹ் உமக்கு இதில் வளம் (பரக்கத்) புரிவானாக" என்று பிரார்த்தித்தார்.
பிறகு அந்த வானவர் குருடரிடம் சென்று, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்க, அவர் "அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும், அதன் மூலம் மக்களை நான் பார்ப்பதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)" என்று பதிலளித்தார். உடனே அவ்வானவர் அவரைத் தமது கரத்தால் தடவ, அவருக்கு அல்லாஹ் அவரது பார்வையைத் திருப்பித் தந்தான்.
பிறகு அவ்வானவர், "செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அவர் "ஆடு" என்றார். அவருக்கு அவ்வானவர், சினையுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். (ஒட்டகமும் மாடும் வழங்கப்பெற்ற) இருவரும் நிறைய குட்டிகள் ஈந்திடப்பெற்றனர். (ஆடு வழங்கப்பட்ட) இந்த மனிதரும் நிறைய குட்டிகள் ஈந்திடப்பெற்றார்.
தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப ஒட்டகங்களும், வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப ஆடுகளும் சேர்ந்தன.
பிறகு அவ்வானவர் தொழுநோயாளியாய் இருந்தவரிடம் தமது அதே தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, "நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்துபோய்விட்டது.) இன்று உதவிக்கான வழிவகை எனக்கு அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் நல்ல தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் மீது பயணம் செய்து நான் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச்சேருவேன்" என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர், "(எனக்குக்)கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)"என்றார்.
உடனே அவ்வானவர், "உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே! மக்கள் அருவருக்கின்ற தொழுநோயாளியாக நீ இருக்கவில்லையா? ஏழையாகவும் நீ இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தை)க் கொடுத்தான் அல்லவா?" என்று கேட்டார்.
அதற்கு அவன், "(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும்) இந்தச் செல்வத்தையும் வாழையடி வாழையாக (என் முன்னோரிடமிருந்து) வாரிசுச் சொத்தாகப் பெற்றேன்" என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், "நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால், நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றிவிடட்டும்" என்று சொன்னார்.
பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது அதே உருவத்தில் சென்று, முன்பு தொழுநோயாளியிடம் கேட்டதைப் போன்றே கேட்டார். அவரும் முதலாமவர் பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தார்.
வானவரும், "நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே அல்லாஹ் உன்னை மாற்றிவிடட்டும்" என்று சொன்னார்.
பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது அதே உருவிலும் அமைப்பிலும் வந்து, "நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் பயணத்தில் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக்கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் தந்த(இறை)வன் பெயரால் கேட்கிறேன்"என்று சொன்னார்.
(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், "நான் குருடனாகத்தான் இருந்தேன். அல்லாஹ் எனக்குப் பார்வையைத் திருப்பித்தந்தான். நீர் விரும்புவதை எடுத்துக்கொள்க; விரும்புவதை விட்டுவிடுக. அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நீர் எடுக்கின்ற எந்தப்பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்வுக்காக நான் சிரமப்படுத்தமாட்டேன்" என்று சொன்னார்.
உடனே அவ்வானவர், "உமது செல்வத்தை நீரே வைத்துக்கொள்ளும். இது உங்களைச் சோதிப்பதற்காகத்தான். உம்மீது திருப்தி கொள்ளப்பட்டது. உம்முடைய இரு தோழர்கள் (தொழுநோயாளி, வழுக்கைத்தலையர் ஆகியோர்)மீது சினம் கொள்ளப்பட்டது" என்று சொன்னார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5673. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் ஒட்டகங்களுக்கிடையே இருந்தார்கள்.அப்போது அவர்களுடைய புதல்வர் உமர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் வந்தார்கள்.
அவரை சஅத் (ரலி) அவர்கள் கண்டபோது, "வாகனத்தில் வரும் இந்த மனிதரின் தீமையிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறினார்கள். அவர் (வாகனத்திலிருந்து) இறங்கி, "நீங்கள் உங்களுடைய ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்குமிடையே தங்கிவிட்டீர்கள்; ஆட்சியதிகாரத்திற்காக மக்களைத் தம்மிடையே சண்டையிட்டுக்கொள்ள விட்டுவிட்டீர்கள்" என்று (குறை) கூறினார்.
உடனே, சஅத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் அடித்து, "பேசாமல் இரு! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5674. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் பாதையில் (இஸ்லாமியப் படையில்) அம்பெய்த அரபியரில் நானே முதலாமவன் ஆவேன். (உண்பதற்கு) எங்களுக்கு "ஹுப்லா" எனும் (முள்) மரத்தின் இலையையும் இந்தக் கருவேல இலையையும் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (சென்று) அறப்போர் புரிந்து வந்தோம். எந்த அளவுக்கென்றால் (அந்த இலைகளை உண்டு) நாங்கள் ஆடு கழிக்கின்ற (கெட்டிச் சாணத்)தைப் போன்றே மலம் கழித்தோம்.
(இத்தகைய தியாகங்கள் செய்த என்னை) பிறகு (கூஃபாவாசிகளான) பனூ சஅத் குலத்தார் (நான் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று கூறி எனது) மார்க்க ஈடுபாடு தொடர்பாக என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால் (இதுவரை) நான் செய்துவந்த நற்செயல்(கள் எல்லாம்) வீணாகி, இப்போது நான் இழப்புக்குள்ளாகிவிட்டேன் (போலும் என வருந்தினேன்).
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இப்போது" எனும் வார்த்தை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 53
5675. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "எந்த அளவுக்கென்றால் (அந்த இலைகளை உண்டு) நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணமிடுவதைப் போன்று எதிலும் ஒட்டாத வகையில் மலம் கழித்தோம்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5676. காலித் பின் உமைர் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உத்பா பின் ஃகஸ்வான் (ரலி) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
இறைவாழ்த்துக்குப்பின்! இந்த உலகம் விடைபெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, விரைவாகத் திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறது. பருகிக்கொண்டிருப்பவரின் கோப்பையின் அடியில் எஞ்சியிருக்கும் சிறிதளவு பானத்தைப் போன்றே இவ்வுலகின் தவணை எஞ்சியுள்ளது. நீங்கள் இங்கிருந்து புறப்பட்டு நிலையான உலகை நோக்கிச் செல்லப்போகிறீர்கள்.
எனவே உங்களிடம் உள்ள நற்செயல்களுடனேயே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், "நரகத்தின் விளிம்பிலிருந்து தூக்கிப் போடப்படும் ஒரு கல்லானது, எழுபது ஆண்டுகள் பயணித்தாலும் அதன் அடிப்பாகத்தை அடையாது" என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த நரகம் நிரப்பப்பட்டே தீரும். (இது உங்களுக்கு) ஆச்சரியமளிக்கிறதா?
மேலும், எங்களிடம் "சொர்க்கத்தின் நிலைக்கால்களில் இரு நிலைக்கால்களுக்கிடையேயான தொலைவு நாற்பதாண்டு பயணத் தொலைவாகும்" என்றும் சொல்லப்பட்டது. நிச்சயமாக ஒரு நாள் அந்தச் சொர்க்கம் மக்கள் திரளால் நிரம்பத்தான் போகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். அப்போது உண்பதற்கு இலை தழைகளைத் தவிர வேறு எந்த உணவும் எங்களுக்கு இருக்கவில்லை. (அதை உண்டதால்) எங்கள் வாயெல்லாம் புண்ணாகிவிட்டது.
அப்போது நான் சால்வை ஒன்றைப் பெற்றேன். அதை இரண்டாகக் கிழித்து நானும் சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களும் பங்கிட்டுக்கொண்டோம். அதன் ஒரு பகுதியை நான் கீழங்கியாக அணிந்துகொண்டேன். அதன் மற்றொரு பகுதியை சஅத் (ரலி) அவர்கள் கீழங்கியாக அணிந்து கொண்டார்கள்.
ஆனால், இன்று எங்களில் ஒருவர் காலைப் பொழுதை அடையும்போது நகரங்களில் ஒன்றுக்கு ஆட்சியராகவே காலைப் பொழுதை அடைகிறார். அல்லாஹ்விடம் நான் சிறியவனாயிருக்க, என் மனதில் (என்னைப் பற்றிப்) பெரியவனாக நான் கருதிக் கொள்வதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன். (உலகத்தின் மீது பற்றில்லாமல் இருந்த) நபித்துவ(க் கால)ம் முடிந்தே போய்விட்டது. அதன் இறுதிப்பகுதி ஆட்சியதிகாரமாகவே இருக்கும். (இனி) நீங்கள் எங்களுக்குப்பின் ஆட்சித் தலைவர்களிடமிருந்து (சோதனைகளை) அனுபவிப்பீர்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அறியாமைக் காலத்தைச் சந்தித்தவரான காலித் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உத்பா பின் ஃகஸ்வான் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள். அவர்கள் (அப்போது) பஸ்ராவின் ஆளுநராயிருந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 53
5677. காலித் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உத்பா பின் ஃகஸ்வான் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். உண்பதற்கு "ஹுப்லா" எனும் (முள்) மரத்தின் இலையே எங்களின் உணவாக இருந்தது. அதனால் எங்கள் வாயெல்லாம் புண்ணாகிவிட்டது" என்று கூறியதைக் கேட்டேன்.
அத்தியாயம் : 53
5678. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமைநாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேக மூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?" என்று கேட்டார்கள்.
மக்கள், "இல்லை" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.
இறைவன் அடியானைச் சந்தித்து, "இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி,உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா?உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச்செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்க வில்லையா?" என்று கேட்பான்.
அதற்கு அந்த அடியான், "ஆம்" என்பான். இறைவன், "நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?" என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். இறைவன், "அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்" என்பான்.
பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், "இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த்தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச்செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?" என்று கேட்பான்.
அதற்கு அந்த அடியான், "ஆம், என் இறைவா!" என்பான். இறைவன், "நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?"என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். இறைவன், "அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்" என்பான்.
பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், "என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன்.தானதர்மம் செய்தேன்" என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.
அப்போது இறைவன், "நீ இங்கேயே நில்" என்று கூறுவான். பிறகு அவனிடம், "இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்" என்று கூறுவான். அந்த மனிதன், தனக்கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து "பேசுங்கள்" என்று சொல்லப்படும்.
அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.
அத்தியாயம் : 53
5679. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் சிரித்துவிட்டு, "நான் சிரித்ததற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நாங்கள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று சொன்னோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் அடியான் தன் இறைவனுடன் (மறுமை நாளில்) உரையாடுவது குறித்(து நினைத்)தே (சிரித்தேன்)" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்: அடியான் (தன் இறைவனிடம்), "என் இறைவா! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா?" என்று கேட்பான்.
அதற்கு இறைவன், "ஆம்" என்பான். அடியான், "அவ்வாறாயின், எனக்கெதிராக (சாட்சியம் கூற) என்னிலிருந்து தவிர வேறெந்த சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன்" என்று கூறுவான்.
அதற்கு இறைவன், "இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர்(களான வானவர்)களுமே போதும்" என்பான்.பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப் படும். அவனுடைய உறுப்புகளிடம், "பேசுங்கள்" என்று சொல்லப்படும். உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும்.
பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும். அப்போது அந்த அடியான், "உங்களுக்கு நாசமுண்டாகட்டும்! தொலைந்துபோங்கள். உங்களுக்காகத் தானே நான் (இவ்வளவு நேரம் இறைவனிடம்) வழக்காடினேன்" என்று (தன் உறுப்புகளிடம்) சொல்வான்.
அத்தியாயம் : 53
5680. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைத் தணிக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 53
5681. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைப் போக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது. அதில் "போதுமான (உணவை வழங்குவாயாக)" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5682. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும்வரை, அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53