பாடம் : 17 மறைக்க வேண்டிய பிறருடைய உறுப்புகளைப் பார்ப்பது தடை செய்யப் பட்டுள்ளது.
565. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்;
ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மறைக்க வேண்டிய உறுப்பு (அவ்ரத்) எனும் வார்த்தைக்கு பதிலாக மற்றோர் ஆணின் நிர்வாணத்தை,மற்றொரு பெண்ணின் நிர்வாணத்தை(ப் பார்க்க வேண்டாம்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 18 தனிமையில் குளிக்கும்போது ஆடையின்றிக் குளிக்கலாம்.
566. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் பிறந்த மேனியுடன் ஒருவர் மற்றவரது மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்த்துக்கொண்டே குளிப்பார்கள். மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். (அன்னாரைக் கொச்சைப்படுத்த விரும்பிய) அந்த மக்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா குடலிறக்க நோயாளியாய் இருப்பதனால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என்று கூறினர். ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க் களைந்து) ஒரு கல்லின் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களது துணியுடன் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அதைப் பின்தொடர்ந்து கல்லே, எனது துணி! கல்லே, எனது துணி! என்று கூறியவாறு விரைந்து ஓடினார்கள். இறுதியாக (பனூ இஸ்ராயீல் மக்கள் பகுதிக்கு வந்தபோது அவர்கள்) மூசா (அலை) அவர்களின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்த்துவிட்டு,அல்லாஹ்வின் மீதாணையாக! மூசாவிற்கு எந்தக் குறையுமில்லை என்று கூறினர். மூசா (அலை) அவர்கள் (நன்கு) பார்க்கப்படும்வரை (ஓடிய) அந்தக் கல் (பின்பு) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக்கொண்டு அந்தக் கல்லை (தமது கைத்தடியால்) அடிக்கலானார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையிலிருந்த தடியால்) கல்லின் மீது அடித்த காரணத்தால் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்துவிட்டன.
அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்குப் பல ஹதீஸ்களை அறிவித்தார்கள். இந்த ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்.
அத்தியாயம் : 3
பாடம் : 19 மறைக்க வேண்டிய உறுப்பை (மறைத்து)க் காப்பதில் கவனம் செலுத்துதல்.
567. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களை நோக்கி கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்க! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு எழுந்து என் வேட்டி, என் வேட்டி என்றார்கள். வேட்டியை (எடுத்துக் கொடுத்த உடனே அதை) இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமது தோளில் என்பதற்கு பதிலாக உமது பிடரியில் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
568. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷிக் குலத்தார் கஅபாவைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களுடன் கஅபாவுக்காகக் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு வேட்டி அணிந்திருந்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்கள், என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் வேட்டியை அவிழ்த்து, தோள்மீது கல்லுக்குக் கீழே வைத்துக்கொள்ளலாமே!என்று கூறினார்கள். (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறே அதை அவிழ்த்துத் தமது தோள்மீது வைத்தார்கள். உடனே மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அவர்கள் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை.
அத்தியாயம் : 3
569. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு கனமான கல்லைத் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். அப்போது என் உடலில் ஒரு மெல்லிய வேட்டி இருந்தது. அது அவிழ்ந்துவிட்டது. என்னிடமோ பெரிய கல். எனவே, என்னால் அதை இறக்கி வை(த்துவிட்டு வேட்டியைப் பிடி)க்க முடியாமல் சேர வேண்டிய இடம்வரை போய்ச் சேர்ந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமது ஆடையை நோக்கிச் சென்று அதை எடுத்து (உடுத்தி)க்கொள்க! நிர்வாணமாக நடக்காதீர்! என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 20 இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்கான மறைவான இடங்கள்.
570. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு சென்றார்கள். அப்போது என்னிடம் இரகசியமாக ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்லும் மறைவிடங்களிலேயே மேடு அல்லது பேரீச்சந்தோட்டம் ஆகியனவே அவர்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அஸ்மா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ஹாயிஷு நக்ல் என்பதற்கு பேரீச்சந்தோட்டம் என்று பொருள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 21 நீர் (விந்து) வெளிப்பட்டால்தான் நீர் (குளியல்) கடமையாகும்.
571. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு திங்கள் கிழமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா எனும் இடத்திற்குச் சென்றேன். நாங்கள் பனூ சாலிம் கோத்திரத்தார் வசிக்குமிடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களது வீட்டு வாசலில் நின்று அவர்களைச் சப்தமிட்டு அழைத்தார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் தமது கீழங்கியை இழுத்தபடி (அவசர அவசரமாக) வெளியே வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் இம்மனிதரை அவசரப்படுத்திவிட்டோம் என்று கூறினார்கள்.
அப்போது இத்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (தாம்பத்திய உறவுகொள்ளும்போது) விந்து வெளிவருவதற்கு முன்பே தம் மனைவியைவிட்டு அவசரப்படுத்தப்பட்டு (விலக்கப்பட்டு)விட்டார். இந்நிலையில் என்ன சட்டம், (அவர்மீது குளியல் கடமையாகுமா) கூறுங்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தண்ணீர் (விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (குளியல்) கடமையாகும் என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
572. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தண்ணீர் (விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (குளியல்) கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
573. அபுல்அலா யஸீத் பின் அப்தில்லாஹ் பின் ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குர்ஆனின் ஒரு வசனம் மற்றொரு வசனத்(தின் சட்டத்)தை மாற்றுவதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் (பொன்மொழி)களில் ஒன்று மற்றொன்றை மாற்றி (காலாவதியாக்கி) வந்தது.
அத்தியாயம் : 3
574. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றபோது அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்கள். உடனே அந்த அன்சாரி (அவசர அவசரமாகக் குளித்துவிட்டுத்) தமது தலையிலிருந்து தண்ணீர் வழியும் நிலையில் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் உங்களை அவசரப்படுத்திவிட்டோம் போலும் என்றார்கள். அதற்கு அவர், ஆம், அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் (தாம்பத்திய உறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தால் அல்லது விந்தை வெளியேற்றாமலிருந்தால் நீங்கள் குளிக்க வேண்டியதில்லை; அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சொல் வித்தியாசம் காணப்படுகிறது.
அத்தியாயம் : 3
575. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒருவர் தம் மனைவியுடன் சிறிது நேரம் தாம்பத்திய உறவு கொண்டு,விந்தை வெளியேற்ற முடியாமற்போவது பற்றிக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,மனைவியிடமிருந்து தம்மீது பட்டதை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு தொழலாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
576. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். ஆனால் விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் தமது பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 3
577. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். ஆனால், விந்தை வெளியேற்றவில்லை. (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், அவர் பிறவி உறுப்பைக் கழுவிவிட்டுத் தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களும் செவியேற்றதாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 22 நீர் (விந்து) வெளிப்பட்டால்தான் நீர் (குளியல்) கடமையாகும் எனும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது; ஆண்-பெண் குறிகள் சந்தித்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும்.
578. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தனது வலிமையைக் காட்டினாலே அவர்மீது குளியல் கடமையாகிவிடும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ம(த்)தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் விந்து வெளியாகாவிட்டாலும் சரியே! எனும் வாசகமும் (அதிகப் படியாக) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்னர் அவர் முயற்சி செய்தால் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால், விந்து வெளியாகாவிட்டாலும் சரியே! எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
579. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா,அல்லது விந்து வெளிப்பட்டால் தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர். அன்சாரிகள், விந்து வெளியானால் தான் அல்லது துள்ளல் இருந்தால்தான் குளியல் கடமையாகும் என்று கூறினர். முஹாஜிர்கள், இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே!) என்று கூறினர்.
உடனே நான், இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அன்னையே! அல்லது இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம் என்றார்கள். நான், குளியல் எதனால் கடமையாகும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
580. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்துவிட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர்மீதும் குளியல் கடமையாகுமா என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம் என்றார்கள்.
இதை உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 23 சமைக்கப்பட்ட பொருளைச் சாப்பிட்ட பின் அங்கத் தூய்மை செய்வது.
581. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை) உண்ட பின் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டும்.
இதை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் உளூச் செய்துகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: (சமைக்கப்பட்ட) பாலாடைக் கட்டிகளை நான் சாப்பிட்டதால்தான் (இப்போது) உளூச் செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை) சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
- இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் காலித் பின் அம்ர் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது சயீத் பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டுமா?என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை)ச் சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 24 சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டும் எனும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது.
582. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஆட்டின் சப்பை இறைச்சியைச் சாப்பிட்ட பின் (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) இறைச்சி அல்லது இறைச்சியுள்ள எலும்பைச் சாப்பிட்ட பின் தொழுதார்கள். (புதிதாக)உளூச் செய்யவுமில்லை; தண்ணீரைத் தொடவுமில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
583. அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கரத்திலிருந்த) ஆட்டுச் சப்பையை (க் கத்தியால்) துண்டுபோட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன். பிறகு (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.
அத்தியாயம் : 3
584. அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியைப் போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள்; அவர்கள் (புதிதாக) உளூச் செய்யவில்லை.
இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப் பெற்றுள்ளது.
- நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் (வந்து) (ஆட்டுச்) சப்பையை சாப்பிட்டுவிட்டுத் தொழுதார்கள். ஆனால், அவர்கள் (புதிதாக) உளூச் செய்ய வில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 3