5594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாரசீக மன்னர்) "கிஸ்ரா" (குஸ்ரூ) இறந்துவிட்டார். அவருக்குப் பிறகு வேறொரு "கிஸ்ரா" வரமாட்டார். (ரோம பைஸாந்திய மன்னர்) கைசர் (சீசர்) இறந்துவிட்டால், அவருக்குப்பின் வேறொரு கைசர் வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்கள் இருவரின் கருவூலங்களும் நிச்சயமாக இறைவழியில் செலவிடப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5595. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தற்போதுள்ள) "கிஸ்ரா" அழிந்துவிட்டார். இவருக்குப் பிறகு வேறொரு "கிஸ்ரா" வரமாட்டார். (தற்போதைய) கைஸரும் அழிந்துவிடுவார். அவருக்குப் பின் வேறொரு கைஸர் வரமாட்டார். அவர்கள் இருவரின் கருவூலங்களும் இறைவழியில் பங்கிடப்படும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5596. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(தற்போதுள்ள) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு வேறொரு கிஸ்ரா வரமாட்டார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5597. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஸ்லிம்களில் அல்லது இறை நம்பிக்கையாளர்களில் ஒரு குழுவினர்,வெள்ளை மாளிகையில் இருக்கும் "கிஸ்ரா" மன்னருடைய குடும்பத்தாரின் கருவூலத்தை வெற்றி கொள்வார்கள்"என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "முஸ்லிம்களில் (ஒரு குழுவினர்)" என்றே ஐயப்பாடின்றி இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஒரு பகுதி கரையிலும் மற்றொரு பகுதி கடலிலும் அமைந்துள்ள ஒரு நகரத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின் மீது போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அவர்கள் வந்து (அந்நகரத்தில்) இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக் கொண்டும் சண்டையிட மாட்டார்கள்; அம்பெய்யவுமாட்டார்கள். அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றே கூறுவார்கள். உடனே அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீழ்ந்துவிடும்.
பிறகு அவர்கள் இரண்டாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள். உடனே அதன் மறுபகுதி வீழ்ந்துவிடும். பிறகு அவர்கள் மூன்றாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்கு வழி திறக்கும். அதில் நுழைந்து போர்ச்செல்வங்களைத் திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து உரத்த குரலில், "தஜ்ஜால் புறப்பட்டுவிட்டான்" என்று அறிவிப்பார். உடனே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு (தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5598. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்வீர்கள். எந்த அளவுக்கென்றால், (கல்லின் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துகொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ ஒரு யூதன். நீ வந்து, அவனைக் கொன்றுவிடு" என்று கூறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இதோ ஒரு யூதன் எனக்குப் பின்னால் (ஒளிந்துகொண்டிருக்கிறான்)" என்று அந்தக் கல் கூறும் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்களும் யூதர்களும் போரிட்டுக்கொள்வீர்கள். (யூதன் ஒருவன் கல்லுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்றுவிடு" என்று கூறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் உங்களுடன் போரிடுவார்கள். அப்போது அவர்கள்மீது உங்களுக்குச் செல்வாக்கு ஏற்படும். எந்த அளவுக்கென்றால், அந்தக் கல், "முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு" என்று கூறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5601. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அப்போது முஸ்லிம்கள் (பதிலடியாக) யூதர்களைக் கொல்வார்கள். எந்த அளவுக்கென்றால், யூதன் ஒருவன் அந்தக் கல்லுக்கும் மரத்துக்கும் பின்னால் ஒளிந்துகொள்வான். உடனே அந்தக் கல், அல்லது அந்த மரம், "முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியாரே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். உடனே நீ வந்து அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். பெரிய உடை மரத்தைத் தவிர. ஏனெனில், அது யூதர்களின் மரமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5602. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யுக முடிவு நாளுக்கு முன் பெரும் பொய்யர்கள் சிலர் வருவார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அபுல்அஹ்வஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உடனே நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் "ஆம்" என்றார்கள் என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சிமாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், என் சகோதரர் முஹம்மத் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள், ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள், "அவர்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்" என்று கூறியதை நான் கேட்டேன் எனத் தெரிவித்ததாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5603. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் பொய்யர்களான சுமார் முப்பது "தஜ்ஜால்"கள் அனுப்பப்படாமல் யுக முடிவுநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவரும் தம்மை இறைவனின் தூதர் என்று சொல்லிக்கொள்வார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 19 இப்னு ஸய்யாத் பற்றிய குறிப்பு.
5604. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றோம். அவர்களிடையே இப்னு ஸய்யாதும் இருந்தான். (எங்களைக் கண்டதும்) சிறுவர்கள் ஓடிவிட்டனர். இப்னு ஸய்யாத் (மட்டும்) அப்படியே உட்கார்ந்துகொண்டான். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்ததைப் போன்றிருந்தது. ஆகவே, அவனிடம், "உன் கரங்கள் மண்ணைத் தழுவட்டும்! நான் அல்லாஹ்வின் தூதர் என நீ உறுதிமொழி அளிக்கிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் சாட்சியமளிக்கிறீரா?" என்று கேட்டான்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் அவனைக் கொன்றுவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் கருதக்கூடிய ஒருவனாக (தஜ்ஜாலாக) இவன் இருந்தால், உம்மால் ஒருபோதும் அவனைக் கொல்லமுடியாது. (அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் ஈசா (அலை) அவர்களே)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5605. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துசென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதைக் கடந்து சென்றார்கள். அவனிடம், "நான் உனக்காக (என் மனதிற்குள்) ஒன்றை மறைத்துவைத்துள்ளேன் (அது என்ன?)" என்று கேட்டார்கள். அதற்கு அவன் "துக்" என்று சொன்னான். (அதாவது "துகான்" எனும் அத்தியாயத்தை (44) "துக்" என அரைகுறையாகச் சொன்னான்.) அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூரப்போ! உன்னால் உனது எல்லையைத் தாண்ட முடியாது" என்று சொன்னார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் அவனது கழுத்தை வெட்டிவிடுகிறேன்" என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனை விட்டுவிடுக. நீர் அஞ்சுகின்ற ஒருவனாக (தஜ்ஜாலாக) இவன் இருந்தால், இவனைக் கொல்ல உம்மால் முடியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5606. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) ஆகியோரும் மதீனாவின் வீதியொன்றில் அவனை (இப்னு ஸய்யாதை)ச் சந்தித்தார்கள். அவனிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைவனின் தூதர் என நீ சாட்சியம் அளிக்கிறாயா?"என்று கேட்டார்கள். அதற்கு அவன், "நான் இறைவனின் தூதர் என நீர் சாட்சியம் அளிக்கிறீரா?" என்று (திருப்பிக்) கேட்டான். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் நம்பிக்கை கொண்டேன். நீ என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், "தண்ணீரின் மீது சிம்மாசனம் ஒன்றைக் காண்கிறேன்" என்று சொன்னான்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ கடல்மீதுள்ள இப்லீஸின் சிம்மாசனத்தையே காண்கிறாய்" என்று கூறிவிட்டு, "இன்னும் என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அல்லாஹ்விடமிருந்து செய்திகளைக் கொண்டுவரும்) இரு உண்மையாளர்களையும் ஒரு பொய்யரையும், அல்லது இரு பொய்யர்களையும் ஓர் உண்மையாளரையும் நான் காண்கிறேன்" என்று சொன்னான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவனை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5607. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் வழியாகவும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் இருக்க, இப்னு ஸாயிதைச் சந்தித்தார்கள். அப்போது இப்னு ஸாயித் சிறுவர்களுடன் (விளையாடிக் கொண்டு) இருந்தான்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5608. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு ஸாயிதுடன் மக்காவரை பயணம் மேற்கொண்டேன். அப்போது அவன் என்னிடம், "நான் மக்களில் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் என்னை "தஜ்ஜால்" எனக் கருதுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தஜ்ஜாலுக்குக் குழந்தை இருக்காது" என்று கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?" என்று கேட்டான். நான், "ஆம் (கேட்டுள்ளேன்)" என்றேன்.
அவன், "எனக்குக் குழந்தை உள்ளது" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தஜ்ஜால் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழையமாட்டான்" என்று கூறியதை நீங்கள் கேட்டதில்லையா?" என்றான். நான் "ஆம் (கேட்டுள்ளேன்)" என்றேன். அவன், "நான் மதீனாவில் பிறந்தேன். இதோ நான் மக்காவுக்குச் செல்லப் போகிறேன்" என்று கூறினான்.
பிறகு இறுதியாக அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தஜ்ஜாலின் பிறப்பையும் அவனது வசிப்பிடத்தையும் இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நன்கறிவேன்" என்று கூறி, என்னைக் குழப்பிவிட்டான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5609. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸாயித் என்னிடம் பேசியபோது, அவனைப் பழிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அவன், "(விவரம் தெரியாத காரணத்தால், என்னை "தஜ்ஜால்" என்று நினைக்கும்) பொது மக்களை நான் பொருட்படுத்தவில்லை. (ஆனால்,) முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! உங்களுக்கும் எனக்குமிடையே என்ன பிரச்சினை? நபி (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) யூதன்" என்று சொல்லவில்லையா? ஆனால், நானோ இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்; "அவனுக்குக் குழந்தையேதும் பிறக்காது" என்று நபியவர்கள் சொன்னார்கள். எனக்குக் குழந்தை இருக்கிறது. "அவன் மக்காவுக்குள் நுழைவதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான்" என்று நபியவர்கள் கூறினார்கள். நான் ஹஜ் செய்துவிட்டேன்" என்று கூறினான்.
இவ்வாறு அவனது சொல்,என்னில் ஒரு மதிப்பை உண்டாக்கும் அளவுக்கு அவன் பேசிக்கொண்டேயிருந்தான். பிறகு அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்போது அவன் (தஜ்ஜால்) எங்கே இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவனுடைய தந்தையையும் தாயையும் நான் அறிவேன்" என்றான். அவனிடம் "அந்த (தஜ்ஜால் எனும்) மனிதனாக நீ இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாயா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், "அவ்வாறு என்னிடம் கோரப்பட்டால் அதை நான் வெறுக்கமாட்டேன்" என்றான்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5610. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் ஹஜ்ஜுக்கு, அல்லது உம்ராவுக்குச் சென்றோம். எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான். (வழியில்) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம். (ஓய்வெடுப்பதற்காக) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம். அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன். அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான்.
அப்போது நான், "வெயில் கடுமையாக உள்ளது. அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே" என்றேன். அவ்வாறே அவன் செய்தான். அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது. உடனே அவன் சென்று, ஒரு பெரிய கோப்பை (நிறைய பால்) உடன் என்னிடம் வந்து, "அபூசயீதே! பருகுவீராக" என்றான். நான், "வெயிலும் கடுமையாக உள்ளது. பாலும் சூடாக உள்ளது என்று -அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல்,அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல்- சொன்னேன்.
அவன், "அபூசயீதே! நான் ஒரு கயிற்றை எடுத்துவந்து அதை ஒரு மரத்தில் மாட்டி தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைத்தேன். என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம். அபூசயீதே! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும், அன்சாரிகளே! உங்களுக்குத் தெரியாமல் போகாது.
(அபூசயீதே!) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களில் ஒருவரல்லவா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) இறைமறுப்பாளன்" என்று சொல்லவில்லையா? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) குழந்தை பாக்கியமற்ற மலடன்" என்று கூறவில்லையா? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டுவந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழையமுடியாது" என்று கூறவில்லையா? நானோ,மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கிறேன்" என்று சொன்னான்.
இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன். பிறகு அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! தஜ்ஜாலை நான் அறிவேன். அவனது பிறப்பையும், இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன்" என்றான். அப்போது நான் "காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும்" என்று கூறி (சபித்து)விட்டேன்.
அத்தியாயம் : 52
5611. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு ஸாயிதிடம், "சொர்க்கத்தின் மண் எது?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "அபுல்காசிமே! அது (நிறத்தில்) வெண்மையான மாவும் (மணத்தில்) கஸ்தூரியும் ஆகும்" என்றான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சரிதான்" என்றார்கள்.
அத்தியாயம் : 52
5612. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸய்யாத், நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தின் மண்ணைப் பற்றிக் கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வெண்மையான மாவும் சுத்தமான கஸ்தூரியுமாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52
5613. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "இப்னு ஸாயித்"தான் தஜ்ஜால் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவதை நான் கண்டேன். நான், "அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்கள் "இப்னு ஸாயித்"தான் தஜ்ஜால் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே சத்தியம் செய்து கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52