பாடம் : 4 இரண்டு முஸ்லிம்கள் வாட்களால் சந்தித்துக்கொண்டால்...
5533. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அலீ (ரலி) அவர்களது காலத்தில் உள்நாட்டு அரசியல் குழப்பம் தலைதூக்கியிருந்த காலகட்டத்தில்) நான் இந்த மனிதரை (அலீ (ரலி) அவர்களை) நாடிப் புறப்பட்டேன். அப்போது என்னை அபூபக்ரா (ரலி) அவர்கள் எதிர்கொண்டு, "எங்கே செல்கிறீர்?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையின் மகன் -அதாவது அலீ (ரலி)- அவர்களுக்கு உதவப்போகிறேன்" என்று சொன்னேன். அப்போது அவர்கள், "அஹ்னஃபே! திரும்பிச் சென்றுவிடுங்கள். ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்(து சண்டையிட்டு மடிந்)தால் அவர்களில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குச் செல்வார்கள்"என்று கூறியதை நான் கேட்டேன்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! இவர் கொலைகாரர் (தண்டனை பெறுவது சரிதான்); ஆனால், கொல்லப்பட்டவரின் நிலை என்ன?" என்று கேட்கப்பட்டது. அல்லது நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொல்லப்பட்டவரும் தம் தோழரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருந்தார்" என்று பதிலளித்தார்கள்" என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5534. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்(து மடிந்)தால் அவர்களில் கொன்றவர்,கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குச் செல்வார்கள்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5535. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் பரஸ்பரம் தம் சகோதரருக்கு எதிராக ஆயுதமேந்தும்போது, அவர்கள் இருவருமே நரகத்தின் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட்டால், அவர்கள் இருவருமே நரகத்திற்குள் நுழைந்துவிடுகின்றனர்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5536. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பெருங்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை யுக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களிடையே பெரும் போர் நிகழும். ஆனால்,அவ்விரு குழுவினரும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.
அத்தியாயம் : 52
5537. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹர்ஜ் பெருகாதவரை யுக முடிவு நாள் வராது" என்று கூறினார்கள். மக்கள், "ஹர்ஜ் என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கொலை; கொலை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 5 இந்தச் சமுதாயத்தில் சிலரால் சிலருக்கு அழிவு ஏற்படும் (என்பது பற்றிய முன்னறிவிப்பு).
5538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன்.
மேலும், "அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்" என்றும் பிரார்த்தித்தேன்.
என் இறைவன், "முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்" என்று கூறினான்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். மேலும், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியாலான) இரு கருவூலங்களை எனக்கு வழங்கினான்..." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5539. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) "ஆலியா"விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம். பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, "நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான். நான் என் இறைவனிடம், "என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது" எனப் பிரார்த்தித்தேன். ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5540. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("ஆலியா" பகுதியிலிருந்து) வந்தேன். அப்போது அவர்களுடன் அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
பாடம் : 6 யுக முடிவு நாள்வரை நிகழவிருப்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு.
5541. அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான்,எனக்கும் யுக முடிவு நாளுக்குமிடையே நிகழப்போகும் குழப்பங்கள் குறித்து மக்களிலேயே நன்கு அறிந்தவன் ஆவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் குறித்து எனக்குச் சிலவற்றை இரகசியமாகச் சொல்லியிருந்ததே அதற்குக் காரணமாகும். மற்றவர்கள் அவற்றை அறிவிக்கவில்லை.
எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங்களை எண்ணிக் கணக்கிட்டபடி, "அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டுவைக்காது. அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்)காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன;பெரிய குழப்பங்களும் உள்ளன" என்று கூறினார்கள்.
(இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.
அத்தியாயம் : 52
5542. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நீண்ட நேரம் நின்று கொண்டு, யுக முடிவு நாள் ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் ஒன்றுவிடாமல் குறிப்பிட்டார்கள். அதை மனனமிட்டவர்கள் மனனமிட்டுக்கொண்டார்கள். அதை மறந்தவர்கள் மறந்து விட்டார்கள். இதோ இந்த என் தோழர்கள் அதை அறிந்துகொண்டனர். அவற்றில் ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை நேரில் காணும் போது, அது என் நினைவிற்கு வந்துவிடும்; தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரது முகத்தை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதை மறந்தவர்கள் மறந்துவிட்டார்கள்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 52
5543. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யுக முடிவு நாள்வரை ஏற்படும் (குழப்பங்கள்) அனைத்தையும் பற்றி எனக்குத் தெரிவித்தார்கள். அவற்றில் ஒவ்வொன்றைக் குறித்தும் அவர்களிடம் நான் கேள்வி கேட்(டுத் தெரிந்து கொண்)டேன். ஆனால், "மதீனாவாசிகளை மதீனாவிலிருந்து வெளியேற்றுவது எது?" என்பதைப் பற்றி அவர்களிடம் நான் கேட்கவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5544. அபூஸைத் அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு "ஃபஜ்ர்" தொழுகை தொழுவித்து விட்டு, சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி எங்களுக்கு உரையாற்றினார்கள். இறுதியில் லுஹர் தொழுகை நேரம் வந்தபோது (மேடையிலிருந்து) இறங்கி, தொழுவித்துவிட்டுப் பிறகு மீண்டும் மேடைமீதேறி "அஸ்ர்" தொழுகைவரை உரையாற்றினார்கள். பிறகு மேடையிலிருந்து இறங்கி (அஸ்ர் தொழுகை) தொழுவித்து விட்டு பிறகு மறுபடியும் மேடைமீதேறி சூரியன் மறையும்வரை உரையாற்றினார்கள். நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்குத் தெரிவித்தார்கள். எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை) நன்கு மனனமிட்டவர் ஆவார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 7 கடல் அலை போன்று அடுக்கடுக்காய் வரும் குழப்பங்கள்.
5545. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும்) குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை, அவர்கள் சொன்னதைப் போன்றே நினைவில் வைத்திருக்கிறார்?" என்று கேட்டார்கள். "நான் (நினைவில் வைத்திருக்கிறேன்)"என்றேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் "நீர் துணிவு மிக்க மனிதர்தான்" என்று கூறிவிட்டு, "எப்படிச் சொன்னார்கள்?" என்று கேட்டார்கள். நான், "ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்திலும் (அதாவது அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதன் மூலமும்), தனது செல்வம் விஷயத்திலும் (அதாவது அது இறைவனைப் பணிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து திசை திருப்புவதன் மூலமும்), தன் விஷயத்திலும், தன் குழந்தை குட்டிகள் விஷயத்திலும், தன் அண்டை வீட்டார் விஷயத்திலும் (நிறைவேற்ற வேண்டிய உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னா) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தானதர்மம், நன்மை புரியும்படி ஏவுதல், தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டேன் என்றேன்.
உமர் (ரலி) அவர்கள், "நான் (சோதனை எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (அல்லாஹ்வின் தூதரால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட "குழப்பம்"எனும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்" என்று சொன்னார்கள்.
நான், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கும் அதற்குமிடையே என்ன தொடர்பு? (அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.) உங்களுக்கும் அதற்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது (உங்கள் ஆட்சியில் அவற்றில் ஏதும் தலைதூக்கப் போவதில்லை)" என்று கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள், "அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை;அது உடைக்கப்படும்" என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "(அப்படியானால்) அது ஒருபோதும் மூடப்படாமலிருக்க ஏற்றதே ஆகும்" என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், "உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு (என்பது) யாரைக் குறிக்கும் என அறிந்திருந்தார்களா?" என்று கேட்டோம்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள், "ஆம்; பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்" என்று பதிலளித்தார்கள்.
அந்தக் கதவு என்பது யாரைக் குறிக்கிறது என ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே,அவர்களிடம் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களைக் கேட்கச் சொன்னோம். அவர் (அந்தக் கதவு என்பது யாரைக் குறிக்கிறது என்று) கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்கள்தான் அந்தக் கதவு" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5546. மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உமர் (ரலி) அவர்கள், "குழப்பங்கள்" (ஃபித்னா) பற்றி எமக்கு அறிவிப்பவர் யார்?" என்று கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5547. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவாசிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் நியமனம் செய்த ஆளுநரைத் திருப்பியனுப்பிய) "அல்ஜரஆ" தினத்தன்று நான் (கூஃபாவில் ஓரிடத்திற்கு) வந்தேன். அப்போது, அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார்.
நான், "இன்றைய தினம் இங்கு இரத்த ஆறு ஓடப்போகிறது" என்று சொன்னேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; (இரத்த ஆறு ஓடாது)" என்று சொன்னார். நான், "ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! (இரத்த ஆறு ஓடும்)" என்றேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை (ஓடாது)" என்றார். நான், "ஆம்;அல்லாஹ்வின் மீதாணையாக (இரத்த ஆறு ஓடும்)" என்றேன். அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை (இரத்த ஆறு ஓடாது). இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என்றார்.
நான், "இன்று முதல் நீர் எனக்கு ஒரு தீயநண்பர் ஆவீர். நான் உமக்கு மாறாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர். நீர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருந்தும் (ஆரம்பத்திலேயே) என்னை நீர் தடுக்கவில்லையே?" என்று சொன்னேன். பிறகு "ஏனிந்தக் கோபம்?" என்று (எனக்கு நானே) கூறிக்கொண்டு, அவரை நோக்கிச் சென்று அவரைப் பற்றி விசாரித்தேன். அந்த மனிதர் ஹுதைஃபா (ரலி) அவர்களாவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 8 யூப்ரடீஸ் நதி வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது.
5548. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மேற்காசியாவில் பாயும்) யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது. அதற்காக (உரிமை கொண்டாடி) மக்கள் சண்டையிட்டுக்கொள்வர். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவர். அவர்களில் ஒவ்வொருவரும் "உயிர் பிழைப்பவர் நானாக இருக்க வேண்டுமே!" என்று கூறுவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் தக்வான் (ரஹ்) அவர்கள், "அதை நீ கண்டால், அதை நெருங்க வேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கமலை ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5551. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், "உலகத்தைத் தேடுவதில் மக்கள் தம் கழுத்துகளை நீட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் (அல்லவா?)" என்று கூறினார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கமலை ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அதைப் பற்றி மக்கள் கேள்விப்படும்போது,அதை நோக்கிச் செல்வார்கள். அப்போது அந்த மலை அருகில் இருப்பவர், "அதிலிருந்து சிறிதளவை எடுத்துக்கொள்ளட்டும் என மக்களை நாம் விட்டு விட்டால், முழுவதுமாகக் கொண்டு போய்விடுவார்கள்" என்று கூறுவார். எனவே, அதற்காகச் சண்டையிட்டுக்கொள்வார்கள். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகாமில் ஃபுளைல் பின் ஹுசைன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நானும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் ஹஸ்ஸான் கோட்டையின் நிழலில் நின்று கொண்டிருந்தோம்" என (அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாக) ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 52
5552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இராக், தனது (நாணயமான) திர்ஹமையும் (அளவையான) கஃபீஸையும் (தர) மறுக்கும். ஷாம், (சிரியா) தனது (அளவையான) "முத்யு"வையும் தீனாரையும் (தர) மறுக்கும். மிஸ்ர் (எகிப்து), தனது (அளவையான) "இர்தப்பை"யும் தீனாரையும் (தர) மறுக்கும். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், "இதற்கு அபூஹுரைராவின் சதையும் இரத்தமும் சாட்சியமளிக்கின்றன" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52