பாடம் : 1 குழப்பங்கள் நெருங்கிவிட்டதும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச்சுவர் திறந்துவிட்டதும்.
5520. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (திடுக்கிட்டுத்) தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
-அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) தம் கைவிரல்களால் (அரபி எண் வடிவில்) 10 என்று மடித்துக் காட்டினார்கள்.-
அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதா நமக்கு அழிவு ஏற்படும்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்; தீமை பெருத்து விட்டால்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5521. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் பதற்றத்துடன் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடு தான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப் பட்டுள்ளது" என்று கூறியபடி வெளியேறினார்கள்.
("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) பெருவிரலையும் அதற்கு அடுத்துள்ள (சுட்டு) விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்; தீமை பெருத்துவிட்டால்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5522. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்கள், ("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) தம் விரல்களால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 2 இறையில்லம் கஅபாவை நாடிவரும் படையினர் பூமிக்குள் புதைந்துபோவது பற்றிய முன்னறிவிப்பு.
5523. உபைதுல்லாஹ் இப்னு கிப்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸ் பின் அபீரபீஆ மற்றும் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) ஆகியோர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றனர். அப்போது அவ்விருவருடன் நானும் இருந்தேன். அவர்கள் இருவரும் உம்மு சலமா (ரலி) அவர்களிடம், பூமிக்குள் புதைந்துபோகும் படையினரைப் பற்றிக் கேட்டார்கள். -இது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் நடைபெற்றது.-
அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் இறையில்லம் கஅபா (எல்லை)க்குள் அபயம் தேடி வருவார். அவரை நோக்கிப் படையொன்று அனுப்பப்படும். அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது, பூமிக்குள் புதைந்துபோய் விடுவார்கள்" என்று சொன்னார்கள்.
உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! நிர்பந்தமாகப் புறப்பட்டு வந்தவரின் நிலை என்ன?" என்று கேட்டேன். "அவர்களுடன் சேர்த்து அவரும் புதைந்துபோவார். எனினும், மறுமை நாளில் அவரது எண்ணத்திற்கேற்ப அவர் எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள், "("சமவெளி" என்பது) மதீனாவிலுள்ள சமவெளி (பைதாஉல் மதீனா) ஆகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5524. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள், "நான் அபூஜஅஃபர் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, "பூமியில் ஒரு சமவெளியில் என்றே உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றேன். அதற்கு அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள், "அவ்வாறில்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அது மதீனாவிலுள்ள பைதா(சமவெளி) ஆகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 52
5525. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள், "இந்த இறையில்லத்தின் மீது போர் தொடுக்க எண்ணி ஒரு படையினர் நிச்சயமாக வருவார்கள். அவர்கள் பூமியில் ஒரு சமவெளியில் இருக்கும்போது, நடுவிலுள்ள அணியினர் பூமிக்குள் புதைந்து போவார்கள். முன்னாலுள்ள அணியினர் பின்னாலிருக்கும் அணியினரை அழைப்பார்கள். பிறகு அவர்களும் பூமிக்குள் புதைந்து போவார்கள். இறுதியில் அங்கிருந்து தப்பித்து வந்து, அவர்களைப் பற்றிய செய்தி அறிவிப்பவர் மட்டுமே எஞ்சியிருப்பார்.
(இதை அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது,) ஒரு மனிதர், "நீர் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் மீது பொய்யுரைக்கவில்லை என நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது பொய்யுரைக்கவில்லை என்றும் நான் சாட்சியமளிக்கிறேன்" என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5526. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த இல்லத்தை -அதாவது கஅபாவை- நோக்கி அபயம் தேடி ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களிடம் ஆதரவுப் படையினரோ ஆட்பலமோ முன்னேற்பாடோ இருக்காது. (அவர்களைத் தாக்குவதற்காக) படை ஒன்று அவர்களிடம் அனுப்பப்படும். அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது அவர்கள் பூமிக்குள் புதைந்து போய்விடுவார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் ஸஃப் வான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த போது) நான், "ஷாம் (சிரியா)வாசிகள் அன்றைய நாளில் மக்கா நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள்" என்று சொன்னேன். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! அது (பூமிக்குள் புதைந்துபோகும்) இந்தப் படையல்ல" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. ஆயினும், அதில் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறிய படையினர் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 52
5527. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உறங்கும்போது ஏதோ செய்துகொண்டிருந்தீர்கள். இவ்வாறு நீங்கள் எப்போதும் செய்வதில்லையே!" என்று கேட்டோம். அதற்கு, "ஓர் ஆச்சரியமான செய்தி(யினால் நான் அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்).என் சமுதாயத்தாரில் சிலர், இறையில்லம் கஅபாவில் தஞ்சம் புகுந்துள்ள குறைஷியரில் ஒருவருக்காக இறையில்லத்தை நோக்கி (படையெடுத்து) வருவார்கள். அவர்கள் ("பைதா எனும்) சமவெளியில் இருக்கும்போது பூமிக்குள் புதைந்துபோவார்கள்" என்று கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! சாலையில் பல்வேறு மக்களும் திரண்டிருப்பார்களே (அவர்கள் அனைவரும் புதைந்துபோவார்களே)?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவர்களில் பார்வையாளர்கள், நிர்பந்தமாக அழைத்து வரப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோரும் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள். பிறகு பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாய் அவர்கள் எழுப்பப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப அவர்களை அல்லாஹ் (மறுமை நாளில்) எழுப்புவான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 3 மழைத் துளிகள் விழுவதைப் போன்று குழப்பங்கள் (தொடர்ந்து) நிகழும் என்பது பற்றிய முன்னறிவிப்பு.
5528. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), "நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசாமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5529. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவர், (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவர், நடப்பவரை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவர், (அவற்றை நோக்கி) ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார்.
அவற்றில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அழிக்க அவை முற்படும். அப்போது யார் ஒரு புகலிடத்தைப் பெறுகிறாரோ, அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5530. மேற்கண்ட ஹதீஸ் நவ்ஃபல் பின் முஆவியா பின் உர்வா (ரலி) அவர்கள் வாயிலாக மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தொழுகைகளில் ஒன்று (அஸ்ர்) உள்ளது. அதைத் தவறவிட்டவர் தம் குடும்பத்தாரையும் சொத்துக்களையும் விட்டுத் தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்றவர் ஆவார்" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5531. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சில குழப்பங்கள் தோன்றும். அப்போது படுத்து உறங்கிக்கொண்டிருப்பவர் விழித்திருப்பவரை விடவும், விழித்திருப்பவர் (அவற்றுக்காக) எழுந்து நடப்பவரைவிடவும், அவற்றுக்காக எழுந்து நடப்பவர் (அவற்றுக்காக) எழுந்து ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார். அப்போது யார் ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ பெறுகின்றாரோ அவர் (அதன் மூலம்) தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5532. உஸ்மான் அஷ்ஷஹ்ஹாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஃபர்கத் அஸ்ஸபகீ (ரஹ்) அவர்களும் முஸ்லிம் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்களிடம் அவர்களது வசிப்பிடத்திற்குச் சென்றோம். அவர்களிடம் நாங்கள் சென்றடைந்து, "குழப்பங்கள் தொடர்பாக தாங்கள் தங்கள் தந்தை (அபூபக்ரா-ரலி) அறிவித்த ஹதீஸ் எதையேனும் செவியுற்றீர்களா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "ஆம்" (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அறிந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு குழப்பம் தோன்றும். அதற்கிடையே உட்கார்ந்து கொண்டிருப்பவர் (அதற்காக) எழுந்து நடப்பவரை விடவும், அதற்காக எழுந்து நடப்பவர் அதை நோக்கி ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார். கவனத்தில் கொள்ளுங்கள்: அந்தக் குழப்பம் நிகழ்ந்துவிட்டால் தம்மிடம் ஒட்டகங்கள் வைத்திருப்பவர், அவற்றிடம் சென்றடையட்டும். தம்மிடம் ஆடுகள் வைத்திருப்பவர், அவற்றிடம் சென்றடையட்டும். தம்மிடம் நிலம் வைத்திருப்பவர் தமது நிலத்திற்குச் சென்றுவிடட்டும்" என்று கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! தம்மிடம் ஒட்டகமோ ஆடோ நிலமோ இல்லாதவர் என்ன செய்யவேண்டும் எனக் கூறுகிறீர்கள்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் தமது வாள்முனையை ஒரு கல்லால் அடித்து முறித்துவிட்டு,(சண்டையிலிருந்து) தம்மைத் தற்காத்துக்கொள்ள முடிந்தால் அவர் தற்காத்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள். (பின்னர்) "இறைவா! (நீ தெரிவிக்கச் சொன்னவற்றை) நான் தெரிவித்துவிட்டேனா? இறைவா! நான் தெரிவித்துவிட்டேனா? இறைவா! நான் தெரிவித்து விட்டேனா?" என்று (மூன்று முறை) கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (குழப்பமான காலகட்டத்தில்) என்னைக் கட்டாயப்படுத்தி இரு அணிகளில் ஒன்றுக்கு, அல்லது இரு குழுக்களில் ஒன்றுக்கு நான் இழுத்துச் செல்லப்பட்டு, என்னை ஒரு மனிதர் தமது வாளால் வெட்டிவிட்டால், அல்லது எங்கிருந்தோ வந்த மர்ம அம்பு என்னைக் கொன்றுவிட்டால் (எனது நிலை) என்ன கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அ(வ்வாறு செய்த)வர், தமது பாவத்துடனும் உமது பாவத்துடனும் திரும்பிச் சென்று, நரகவாசிகளில் ஒருவராகிவிடுவார்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தம்மைத் தற்காத்துக்கொள்ள முடிந்தால் அவர் தம்மைத் தற்காத்துக்கொள்ளட்டும்" என்பதோடு ஹதீஸ் நிறைவடைகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெற வில்லை. இப்னு அபீஅதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்கள்) முழுமையாக இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
பாடம் : 4 இரண்டு முஸ்லிம்கள் வாட்களால் சந்தித்துக்கொண்டால்...
5533. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அலீ (ரலி) அவர்களது காலத்தில் உள்நாட்டு அரசியல் குழப்பம் தலைதூக்கியிருந்த காலகட்டத்தில்) நான் இந்த மனிதரை (அலீ (ரலி) அவர்களை) நாடிப் புறப்பட்டேன். அப்போது என்னை அபூபக்ரா (ரலி) அவர்கள் எதிர்கொண்டு, "எங்கே செல்கிறீர்?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையின் மகன் -அதாவது அலீ (ரலி)- அவர்களுக்கு உதவப்போகிறேன்" என்று சொன்னேன். அப்போது அவர்கள், "அஹ்னஃபே! திரும்பிச் சென்றுவிடுங்கள். ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்(து சண்டையிட்டு மடிந்)தால் அவர்களில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குச் செல்வார்கள்"என்று கூறியதை நான் கேட்டேன்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! இவர் கொலைகாரர் (தண்டனை பெறுவது சரிதான்); ஆனால், கொல்லப்பட்டவரின் நிலை என்ன?" என்று கேட்கப்பட்டது. அல்லது நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொல்லப்பட்டவரும் தம் தோழரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருந்தார்" என்று பதிலளித்தார்கள்" என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5534. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்(து மடிந்)தால் அவர்களில் கொன்றவர்,கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குச் செல்வார்கள்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5535. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் பரஸ்பரம் தம் சகோதரருக்கு எதிராக ஆயுதமேந்தும்போது, அவர்கள் இருவருமே நரகத்தின் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட்டால், அவர்கள் இருவருமே நரகத்திற்குள் நுழைந்துவிடுகின்றனர்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5536. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பெருங்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை யுக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களிடையே பெரும் போர் நிகழும். ஆனால்,அவ்விரு குழுவினரும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.
அத்தியாயம் : 52
5537. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹர்ஜ் பெருகாதவரை யுக முடிவு நாள் வராது" என்று கூறினார்கள். மக்கள், "ஹர்ஜ் என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கொலை; கொலை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 5 இந்தச் சமுதாயத்தில் சிலரால் சிலருக்கு அழிவு ஏற்படும் (என்பது பற்றிய முன்னறிவிப்பு).
5538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன்.
மேலும், "அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்" என்றும் பிரார்த்தித்தேன்.
என் இறைவன், "முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்" என்று கூறினான்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். மேலும், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியாலான) இரு கருவூலங்களை எனக்கு வழங்கினான்..." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5539. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) "ஆலியா"விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம். பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, "நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான். நான் என் இறைவனிடம், "என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது" எனப் பிரார்த்தித்தேன். ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52