5405. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்போது அந்த இறைமறுப்பாளனிடம், "நீ பொய் சொல்கிறாய். இதைவிடச் சுலபமான ஒன்றே உன்னிடம் கோரப்பட்டிருந்தது என்று கூறப்படும்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 11 (மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தனது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவான்.
5406. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (25:34ஆவது இறைவசனத்தின்படி) மறுமை நாளில் இறைமறுப்பாளர் தமது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இம்மையில் அவனை இரு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமை நாளில் அவனை அவனது முகத்தால் நடக்கச் செய்ய முடியாதா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், "ஆம் (முடியும்), எங்கள் இறைவனின் வல்லமை மீதாணையாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 12 இவ்வுலகில் சுகபோகமாக வாழ்ந்தவர் நரகத்தில் சிறிது நேரம் அமிழ்த்தப் படுவதும், இவ்வுலகில் கடுமையான சோதனைகளை அனுபவித்தவர் சொர்க்கத்தைச் சிறிது நேரம் அனுபவிப்பதும்.
5407. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, நரகத்தில் ஒருமுறை அழுத்தி எடுக்கப்படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருட்கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!" என்று பதிலளிப்பார்.
அவ்வாறே, இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு, சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை, என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை" என்று கூறுவார்.- இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 13 இறைநம்பிக்கையாளர் செய்த நற்செயல்களுக்கான நன்மைகள் இம்மையிலும் மறுமையிலும் வழங்கப்படும். இறை மறுப்பாளர் செய்த நற்செயல்களுக்கான நன்மைகள் முன்கூட்டியே இம்மையில் வழங்கப்பட்டுவிடும்.
5408. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த இறைநம்பிக்கையாளருக்கும் (அவர் செய்த நற்செயலுக்கான) நன்மையில் அநீதி இழைப்பதில்லை. அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும். அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும். (ஏக) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் (மட்டும்) அவருக்கு உணவளிக்கப்படும். அவர் மறுமையை அடையும்போது, அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது.- இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைமறுப்பாளர் நற்செயல் ஒன்றைச் செய்தால், அதற்குரிய பலன் இவ்வுலகிலேயே அவருக்கு வழங்கப்பட்டுவிடும். இறைநம்பிக்கையாளரின் நிலை என்னவெனில், அவர் செய்த நற்செயல்களுக்குரிய நன்மைகளை இறைவன் மறுமை நாளில் வழங்குவதற்காகப் பத்திரப் படுத்துகிறான். மேலும், அவர் கீழ்ப்படிந்து நடப்பதற்கேற்ப இவ்வுலகிலும் அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 14 ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலை (இளம்) பயிர் போன்றதாகும்; இறை மறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்தைப் போன்றதாகும்.
5410. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, (இளம்) பயிர் போன்றதாகும். காற்று அதைச் சாய்த்துக்கொண்டேயிருக்கும். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளருக்குச் சோதனைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும்.
நயவஞ்சகனின் நிலை, (விறைப்பாக நிற்கும்) தேவதாரு மரத்தைப் போன்றதாகும். (பலமாக வீசும்) காற்று அதை வேரோடு சாய்த்துவிடுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("சாய்த்துக்கொண்டேயிருக்கும்" என்பதைக் குறிக்க "துமீலுஹு" என்பதற்குப் பகரமாக) "துஃபீஉஹு" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலை, காற்றில் அசையும் இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அது முற்றிய பயிராகும்வரை அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும்.
இறைமறுப்பாளனின் நிலை, தனது அடித்தண்டின் மீது விறைப்பாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேடியாக வேரோடு சாய்ந்து விழும்வரை அதை எதுவும் சாய்ப்பதில்லை.
இதை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலை, காற்றில் அசையும் இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அதன் தவணை முடியும்வரை அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை விறைப்பாக நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும்வரை அதை(க் காற்று) எதுவும் செய்து விடுவதில்லை.- இதை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5413. மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பிஷ்ர் பின் அஸ்ஸரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறைமறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும்" என்று இடம்பெற்றுள்ளது. முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நயவஞ்சகனின் நிலை..." என்று காணப்படுகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 50
5414. மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா அல்கத்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறைமறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும்" என்று இடம்பெற்றுள்ளது. மற்றவர்களின் அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே ("நயவஞ்சகனின் நிலை" என்று) காணப்படுகிறது.
அத்தியாயம் : 50
பாடம் : 15 இறைநம்பிக்கையாளரின் நிலை பேரீச்ச மரத்திற்கு ஒப்பானதாகும்.
5415. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மரங்களில் ஒன்று உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு ஒப்பானதாகும். அது என்ன மரம் என்று எனக்குச் சொல்லுங்கள்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்களில் அது காட்டு மரம் என்றே தோன்றியது. என் மனதில் அது பேரீச்ச மரமாகத்தானிருக்கும் என்று தோன்றினாலும் வெட்கப்பட்டு(க் கொண்டு சொல்லாமல் இருந்து)விட்டேன். பின்னர், "அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று நீங்களே எங்களுக்கு அறிவியுங்கள்?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் "அது பேரீச்ச மரம்" என்றார்கள்.
பிறகு என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றி நான் சொன்னபோது, "நீ (வெட்கப் படாமல்) "அது பேரீச்ச மரம்தான்" என்று கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்" என்று சொன்னார்கள். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5416. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "ஒரு மரத்தைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள். அதன் நிலை இறைநம்பிக்கையாளருக்கு ஒப்பானதாகும்" என்று சொன்னார்கள். மக்கள், காட்டு மரங்களில் ஒன்றை நினைத்தனர். என் மனத்தில் அது பேரீச்ச மரம்தான் என்று தோன்றியது. அது பேரீச்ச மரம்தான் என்று சொல்ல நான் விரும்பினேன்.
ஆயினும், அங்கு வயதில் மூத்தவர்கள் இருந்ததால் நான் சொல்வதற்கு அஞ்சினேன். மக்கள் (பேசாமல்) வாய் மூடி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது பேரீச்ச மரம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகக் காணப்படுகிறது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் மதீனாவரை சென்றேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் கூறியதை நான் கேட்கவில்லை. ஒரேயொரு ஹதீஸை மட்டும் அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டு வரப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், "ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்" அல்லது "(அவரைப்) போன்றிருக்கும்" ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும் என்று சொன்னார்கள்.
அப்போது என் மனத்தில், "அது பேரீச்ச மரம்தான்" என்று தோன்றியது. அபூபக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் எதையும் பேசவோ, சொல்லவோ விரும்பவில்லை. பின்னர் (என் மனத்தில் தோன்றியதை நான் சொல்லாமலிருந்துவிட்டது குறித்து என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் சொன்ன போது), "நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 16 மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவர்களிடையே ஷைத்தான் பிளவை உருவாக்குகிறான்; அவன் தன் படைகளை அனுப்புகிறான் என்பதும், ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தானிய) கூட்டாளி ஒருவன் இருக்கிறான் என்பதும்.
5417. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்டா)ன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5418. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸின் சிம்மாசனம் கடலின் மீது அமைந்துள்ளது. அவன் (அங்கிருந்தே) தன் படைகளை அனுப்பி, மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரியவன் ஆவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்" என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை" என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, "நீதான் சரி(யான ஆள்)" என்று (பாராட்டிக்) கூறுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 50
5420. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷைத்தான்(களின் தலைவன்), தன் பட்டாளங்களை அனுப்பிவைக்கிறான். அவர்கள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5421. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை" என்று கூறினார்கள். அப்போது, "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "என்னுடனும்தான். ஆயினும் அல்லாஹ்,அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஜின்களிலுள்ள (ஷைத்தான்) கூட்டாளியொருவனும் வானவர்களிலுள்ள கூட்டாளியொருவரும் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5422. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, "ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். "ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?" என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "ஆம்" என்றார்கள். நான், "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும்,என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 17 எவரும் தமது நற்செயலால் (மட்டும்) சொர்க்கத்தில் நுழைந்துவிடுவதில்லை. மாறாக, அல்லாஹ்வின் கருணையால்தான் நுழைவார்.
5423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றாது (மாறாக,அல்லாஹ்வின் தனிப்பெருங்கருணையே காப்பாற்றும்)" என்று சொன்னார்கள். ஒரு மனிதர், "தங்களையுமா காப்பாற்றாது, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான் காப்பாற்றாது; அல்லாஹ் (தன்) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறிவிட்டு, "எனவே (வழிபாடுகள், நல்லறங்கள் ஆகியவற்றில் எல்லை மீறிவிடாமல்) நடுநிலையோடு செயல்படுங்கள்"என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ் தனது பேரருளாலும் தனிக்கருணையாலும் (அரவணைத்துக் கொண்டால் தவிர)" என்று காணப்படுகிறது. அதில், "எனவே, நடுநிலையோடு செயல்படுங்கள்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
5424. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்திற்குள் நுழைவிக்காது" என்று சொன்னார்கள். அப்போது, "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும்தான்;என் இறைவன் (தனது) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 50